திங்கள், 23 டிசம்பர், 2013

அது பாலகுமாரன் காலம் ..


                திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக  பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் பாரதி பிரிண்டர்ஸ்திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

               உற்சாகமானோம். எங்கள்  கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்பும் இருந்தது. உடனடியாக நண்பர் சங்கர் திட்டமிட்டார் .விழாவை நடத்துபவர் யார் அல்லது இந்த பிரிண்டர்ஸ் ஓனர் யார் அல்லது யாரை பார்த்தால் பாலகுமாரனுடன் பேச முடியும் என்ற முயற்சியில் அரை மணி நேரத்தில்  வெற்றியும் கண்டார் .விழா நடந்துகொண்டு இருக்கும் மேடையின் பின் வழியாக உள்ளே போய் அவருடன் கைகொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக  சந்திக்க உதவியவர் சொன்னார்.என்னை முன் அனுப்பினார்கள்.


      அப்போது சட்டென உள்ளே ஒரு பொறி தட்டியது .இத்தனை ஆராவாரங்களுக்கிடயே எனக்கு பிடித்த அந்த எழுத்தாளனுடன் பின் பக்கம் வழியாக மேடையேறி என்ன பேச முடியும்? நான் உங்கள் வாசகன் அல்லது உங்கள் எழுத்தில் மேல் தீராத காதலும் வெறியும் உள்ளவன் ,என் இளமை முழுவதுவும் உங்கள் எழுத்துக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று பேசுவதா ?அப்படியே பேசினால் அவர் கேட்கும் நிலையில் இருப்பாரா ?அவரை தொந்தரவு படுத்தும் விசயம் ஆகிவிடாதா என்ற போராட்டம் மனசுக்குள் ஓட ,பார்க்கும் எண்ணத்தை கைவிட்டேன் .எனக்கும் அவர் எழுத்துக்கும் இடையே உள்ள மவுனமான காதலை இந்த சந்திப்பில் மூலம் காயப்படுத்தி கொள்ளும் நிலை வந்து விட்டால் ? இதை நான் சொன்னதும் உடனே நண்பர் சங்கர் உஷ்ணமாகிவிட்டார் .என்ன இவ்வளவு மெனக்கெட்டு பிறகு நீ சாதரணமாக வேண்டாம் என்கிறாய் ? என்றார் .இதர்க்கு என்னிடம் பதில் இல்லை .வேண்டாம் என்பதை மட்டும் புரிந்து கொள் என்றேன் .அவர் முகத்தை திருப்பி சென்று விட்டு சில நாள் என்னிடம் பேசவே இல்லை .



             இது நடந்த போது எனக்கு இருபது வயதுக்குள் இருக்கும் .என்னை பொறுத்தவரை எழுத்தாளானுக்கும் - வாசிப்பவனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருக்கவேண்டும் என்பதை நம்புகிறேன்.அவர் எழுத்தை வாசிப்பதால் மட்டுமே எழுத்தாளான் நமக்கு சொந்த ஆகிவிடமுடியாது .அவரை எனக்கு தெரியும் என்பதால் எதுவும் நிகழ போவதில்லை என்று நினைத்தேன் .

                       சுஜாதா,ஜானகிராமன்,வையவன்,டெல்லாபுரூஸ்,கண்ணதாசன் இன்னும் பலரை படித்தாலும் பாலகுமாரன் எழுத்தின் மேல் இருந்தது, ஈடுபாடு என்பதையும் தாண்டி, ஒருவித கர்வமே வந்து விட்டது அப்போது .எனக்கு மட்டுமே பாலாவின் எழுத்து மிகவும் புரிகிறது என்ற கர்வம் . என் வயதுக்கே உரிய பெண்கள் பற்றிய பிரமிப்பு ,காதல் பற்றிய வித்தை ,அவரின் எழுத்தில் தவம் தியானம் போல, ஆழ்ந்து இழுத்து செல்லும் சூட்சுமம் இருந்தது .வெளியுலகம் ஒருவித வெளிச்சதுடன் புரிந்தது .வாழ்வின் தந்திரம் மெல்ல புரிய அவிழ்வதாக பட்டது .,அவரின் எழுத்தோடு என் இளமை முழுதும் பயணப்பட்டது.பாலா பெண்களை பற்றிய புரிதலை  நிறைய எழுதினார் .ஆனால் நான் படிக்க கொடுத்த  பாலாவின் புத்தகங்கள் அவர்களிடமிருந்து படிக்கபடாமலேயே அவசரமாக திரும்பி வந்தது. எனக்கு ஆச்சர்யாமாகிவிட்டது .சில பேர் தான் படிப்பதையே வெளியே சொல்ல மறுத்தார்கள் .அவர் புரிந்து கொள்ள முடியாத பகவான் ரஜனீஸ் போல அவரை பார்த்தார்கள்.பாலாவை அதிகம் மோசமாக விமர்சிப்பவர்கள் என்னை விட அவரை அதிகம் தேடித் தேடி படிப்பவர்களாக இருந்ததுதான் எனக்கு தீராத ஆச்சர்யமாகவே இருக்கிறது.
      

          யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால் அரை மணி நேரம் பாலாவின் ஏதோ ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியை படித்து விட்டுத்தான் எழுதி இருக்கிறேன் .சமீபத்தில் நண்பர் சங்கரின் ( திண்டுக்கல்லில் பாலாவை பார்க்க ஏற்பாடு செய்து பின்னால் நொந்து போனவர் ) +2 படிக்கும் பையன் விக்கி, நான் சங்கருக்கு, 22 வருடத்திர்க்கு முந்தி அவர் சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதத்தை பழையபெட்டியில் பார்த்து என்னப்பா இந்த அங்கிள் கட்டுரை மாதிரி இத்தனை பக்கம் எழுதி தள்ளி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு மானசீகமாக அப்பாவின் நட்பை யோசித்து இருக்கிறான். கவிதை,கட்டுரை ,கடிதம், விமர்சனம்  எது எழுதினாலும் அதில் பாலாவின் வாசனை இருக்கும் அளவுக்கு ஊறிபோய்விட்டேன் .  என் இளமை காலங்களை திரும்பி பார்த்தால் பாலாகுமாரன் என்ற எழுத்தாளானை சுவாசித்த வாசம் மட்டுமே இருக்கிறது . 


     பாலாவை படிக்க எனக்கு 13 வயதில், எனக்கு” பச்சை வயல் மனதை”  அறிமுகப்படுத்திய மூத்த சகோதரர் செல்வம் இந்த என் ஈடுபாட்டை ஒரு சமயம் எச்சரிக்கை செய்தார் .ஒரு எழுத்தாளனே கதி என்று நின்று விடாதே உலகமும் பெரியது, இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் படி .ஒரே ஆளை படிக்கும்போது மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று தோணிவிடும் ஆபத்து இருக்கிறது  என்று சொல்லி சாண்டில்யனையும் , கல்கியையும் கொடுத்தார் .அவர்களின் எழுத்தின் மேல் கவனம் செல்லவில்லை .இன்று கூட அந்த கவலை பற்றி நிற்கிறது .


ஆனால் பாலகுமாரன் வேறு யாரயும் படிக்க வேண்டாம் என்பதாக சொல்லவில்லை .அவர் சொல்லித்தான் மேலும் பலரை படித்தேன் .யோகிசுரத் குமாரிடம் இரண்டு முறை  ஆசீர்வாதம் அவரால்தான் பெற்றேன் .இருந்தாலும் இன்னும்  பல பேரை சகோதரர் செல்வம் சொல்லிய மாதிரி பாலகுமாரன் கிறுக்கு எனக்கு பிடித்து இருந்ததை இல்லை என்று இப்போது  எத்தனையோ எழுத்தாளார்கள் படித்த பிறகும் கூட சொல்ல முடியவில்லை .



         அதே போல திரைப்பட உலகத்திர்க்கு முந்திய அவரின் எழுத்தில் உள்ள சம்பவ விவரிப்புக்கும் ,அதர்க்கு பிறகு எழுதிய எழுத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.அது போலத்தான் ஆன்மீக முழு ஈடுபாட்டுக்கு பிறகு அவரின் எழுத்தின் ஆழம் இன்னும் மாறு பட்டது.அவரின் எழுத்தோடு பயனம் செய்தவர்களுக்கு இது புரியும் .


       இப்போது கடந்த பத்து ஆண்டுகளாய் அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு குறுகிவிட்டது .ஆனாலும் அவருக்கு முதல் கடிதம் எழுதி பதில் வராமல் தவித்த உணர்வை இன்று அவரின் ”முக நூலுக்கு” நட்பின் அனுமதிக்கு காத்து இருக்கும்போதும் அனுபவிக்கிறேன் .தமிழ்  மட்டுமே அதிகம் வாசிக்க தெரிந்த எனக்கு இன்னும் வேறு எழுத்துக்களை படிக்கும்போது உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள அவரின் எழுத்து இன்னும் உதவத்தான் செய்கிறது.  


    சமீபத்தில் எங்களை விட அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள என் அப்பா , உடையார் தொகுப்பை வாங்கி தரமாறு சொல்லி இருக்கிறார். அடுத்து கங்கை கொண்ட சோழன் வாங்க சொல்வார்.அவர் படித்த பிறகு நாங்கள் படிப்போம் !         

6 கருத்துகள்:

  1. தொடக்க நிலையில் நான் உங்களைப் போன்று இத்தனை தெளிவாக அழகாக கற்றுக் கொண்டதில்லை என்பதை இந்த பதிவை முழுமையாக வாசித்த போது உணர்ந்து கொள்ள முடிந்தது. என் இன்றைய எழுத்துப் பயணத்தில் அடித்தளமே பாலகுமாரன் தான். இன்று அவரை விட்டு முழுமையாக ஒதுங்கிய போதிலும் அவர் பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் அதன் பிறகு திருப்பூர் வந்து சேர்ந்த முதல் ஒரு வருடம் என்று ஏறக்குறைய பத்தாண்டுகள் அவர் எழுத்து கற்றுத் தந்த வாழ்க்கை தான் உண்மை என்று கருதி வாழ்ந்த காலங்கள் உங்கள் எழுத்தை வாசிக்கும் போது நானே எழுதுதியது போல இருக்கின்றது. ஆனால் நீங்க கட்டுரைகள் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தி மேற்கொண்டு நிறைய படிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. குடும்பத்தில் அனைவரும் வாசிப்பாளர்களாக இருப்பது குடும்பம் கோடீஸ்வரர்களாக வாழ்வதற்குச் சமம். உங்கள் தந்தைக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி .இந்த ஒற்றை வார்தை உங்கள் ஆழமான கருத்துக்கு முன் மிக சாதரணம்.”நிறைய படிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்பதை நான் கட்டளையாக எடுத்து கொள்கிறேன்.இப்போது வேதாத்திரி மஹரிசியின் பாதையில் சில ஆழ்ந்த உள்வாங்களில் இருக்கிறேன் அதோடு ஓஷோ .அதனால் உங்களை போன்றவர்களின் ஆசிர்வாதம் இன்னும் பெற வருவேன் .நன்றி

      நீக்கு
  2. வாசிப்பின் சுகத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. ungal valai thalaththai aanmmegasudar valaipoovil parthen. mikka nandri.yeluththu siththar ayya balakumaranin vasagar nan ....!

    பதிலளிநீக்கு