வெள்ளி, 23 ஜனவரி, 2015

அமானுஷ்யச் சிலிர்ப்புக்கள்


  
வாழ்க்கையில் சில விசயங்கள் புரிந்து கொள்வதர்க்கு அநுபவத்தை விட வயது தன் முக்கியத்துவத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது .எப்போதோ படித்த ,கேட்ட விசயங்கள் வயதின் பக்குவத்தின் வாசலை தொடும்போதுதான் விழித்துக்கொள்கிறது .நான் இத்தனை பீடிகை போட்டு நுழைவதர்க்குக் காரணம் சில சமயத்தில் எல்லோருக்கும் அநுபவமும் வயதும் விலகி கொண்டு வேறு சில அமானுஷ்ய அநுபவங்கள் வாழ்வில் வந்து சில காலம் தங்கி போகின்றன.அது பற்றிப் பேச அல்லது தூண்டி விட ‘சிக்த்சென்ஸ் பப்ளிகேசன்’ வெளியிட்ட ”வெளிச்சத்தின் நிறம் கருப்பு ” ஆசிரியர் முகில் (தொகுத்து வழங்கிய) மர்மங்களின் சரித்திரம் படிக்க நேர்ந்தது .அதன் 19ம் பாகத்தில் நமக்குள் ஒரு நாஸ்டராடாமஸ் பற்றி ஒரு கருத்துதான் எனக்குள் ஒரு பின்னோக்கிய ஒரு நழுவிய தடத்தைப் பற்றி இங்கு பதிய செய்தது .



             ஏதோ ஒரு பிரயாணத்தின் போது ரூ.4.50 க்கு பொழுது போக வாங்கிய ஒரு எண் கணித ஜோதிட புத்தகம் அது.எண் கணித நிபுணர் சி.வி மோகன் எழுதிய ”1996ல் உங்கள் அதிருஷ்டம்  நியுமரலாஜி - ஜாதகமின்றி பிறந்த தேதி அல்லது பெயர் மூலம் பலன் அறியலாம்”   அதில் மற்றெல்லா எண் கணிதப்படித்தான் பிறந்த நாள் மற்றும் மாதம் ,வருடம் கூட்டிவரும் மொத்த கூட்டி வரும் எண் பலன் இருந்தது.அதோடு இன்னொரு புதிய விசயம் இருந்தது .மேற்படி மூன்றையும் கூட்டி அதனோடு அவர்களின் பெயர் எண்ணுக்கு வரும் மொத்த பதிப்பையும் கூட்டினால் வாழ்வின் மொத்த பலனும் அடங்கிவிடும் என்பதாகச் சொல்லப்பட்டு இருந்தது . 



            சரி எல்லாரையும் போல எனக்குத்தான் முதலில் பார்த்து கொண்டேன்.சரி அதோடு நிறுத்தி கொண்டு இருந்து இருக்கலாம் .என் நிறுவனத்தில் என்னோடு பணிபுரியும்  என்னை விடச் சில வயது மூத்த எனக்கு சீனியர் ஒரு பெண் அவரிடம் சொன்னதுதான் தாமதம் – தாமதம் கூட இல்லை உடனே தன்னுடைய மற்றும் இரண்டு பையன் ,கணவர், அத்தனை பேரின் தேதி குறிப்புகளை  ஒரு் பல சரக்கு கடை பட்டியல் போல  எழுதி நீட்டி விட்டார் .பெண்களுக்கு எதிர்காலம் பற்றி அதிக அக்கறை இருப்பது எனக்கு இவ்வளவு இருக்கும் என்பது அப்போத்துதான் நான் தெரிந்து  கொண்டாலும் என் நிகழகாலம் அப்போது கேள்விக்கு உரியதாகிவிட்டது. சரி காசா பணமா என்று் அந்த மளிகை லிஸ்டை வைத்து  என் பலன் சொல்லும் ஆபத்தான பகடையை உருட்ட தொடங்கினேன்...

     முதலில் எல்லாம் சரி என்று சொல்ல தொடங்கியவர் .மெல்ல ஆழமான கேள்விகளைத் தொடங்கிவிட்டார் .எனக்குக் காசு கொடுத்தாலும் வராத பதில்களை நான் எங்குப் போய்த் தேடுவேன் ? என்னிடம் நாஸ்டராடாமஸ் படித்துணர்ந்த யூதத்தின் கபாலா (Kabbalah) குறிப்புகள் கிடைத்தாலும் பரவாயில்லை இருந்தாலும் மெல்ல நானும் யோசிக்க, யோசிக்க ஒரு சில பதில்களை என் சுய அறிவு அல்லது சிந்தனை இல்லாமல் பேசுவதை உணர்ந்தேன் .அந்தப் புத்தகத்திர்க்குச் சம்பந்தமில்லாமல் இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் குருட்டுதனமாக இருந்தது ஆனால் என் சீனியர் பெண் தொடர்ந்து சரியாகச் சொல்கிறேன் என்று உற்சாகப் படுத்திக் கொண்டு இருந்தார் 
                 

 
                   அதை எனக்கு நானே தெரிந்து கொள்ள அடுத்த நாள் வாய்ப்புக் கிடைத்தது . அதே என் சீனியர் பக்கத்து வீட்டுக்கார பெண் தேதிகளை எப்படியோ பிடித்துக் கொண்டு வந்தார் .(எல்லா பக்கத்து வீட்டு பெண்ணையும் போல அவரையும் அவருக்கு பிடிக்காது போல !) அதன் பலன் சொல்லும்போது எனக்குத் தோணிய விசயமெல்லாம் பேச தொடங்கினேன்.அதாவது நியுமராலஜி தாண்டி ..அப்படி  நான் சொன்ன விசயத்தில் ஒன்று அவர் கொண்டு வந்த பக்கத்து வீட்டுப் பெண்  அவர் கணவர் இல்லாத நேரத்தில் , அவர் கணவரின் சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஆடுவார் என்றேன் .இதை எப்படிச் சொன்னேன் என்று எனக்கே ஆச்சர்யம் .  அதைசொன்னவுடன் அவர்களுக்கு ஆச்சர்யம். எப்படி பார்த்த மாதிரி சொல்றீங்க என்றார் ?  அது சரி அதை இவர்கள் எப்படி எட்டி பார்த்தார்கள் என்று கேட்க தோணியது ஆனால் அவர் எனக்கு  சீனியராச்சே ?      



             இதில் எனக்கு நெருங்கிய அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கும் பலன் சொல்ல வரவும் இல்லை அப்படிச் சொன்னது பொருந்தவும் இல்லை என்பது எனக்கு் ஏன் புரியாத புதிராகவே தொடர்ந்தது.அப்போது  என் நிறுவனத்தில் எலெட்ரிக்கல் செக்சனில் நண்பர் ஆறுமுகம் இருந்தார் அவர் துறையில் மிகச் சிறந்த புத்திசாலி .எனக்கு எப்போதும் ஏதாவது ஒரு வகையில் புத்திசாலிகளிடம் தொடர்பு வைத்து கொள்வேன் ஆனால் அவர் சட்டென கோபப் படுபவர் .ஒருநாள்.அவர் தனது  என்னை பற்றி சூப்பர்வைசரிடம் சொல்லி இருக்கிறார்.அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை எனவும் அவர் மனைவி பல முறை கருவுற்று கலைந்து போவதாகவும் சொன்னார் .இத்தனைக்கும் அவர் மனைவி ஒரு அரசு பொது மருத்துவ மனையில் இருக்கும் அந்தப் பகுதியில் வசிக்கும் அனேக பேருக்கு தெரிந்த சீனியர் நர்ஸ். 



           அவருக்குப் பார்க்கும் போது நான் கேட்ட முதல் கேள்வி உங்களுக்குத் தந்தை இருக்கிறாரா என்பதுதான் .இல்லை என்றார் .அவருக்குத் திதி அல்லது திவசம் செய்கிறீர்களா என்றேன் .சட்டெனக் கோபப் பட்டு அவன் செத்த அன்னைக்கு எங்கு இருந்தாலும் கட்டாயம் கறி சாப்பாடு சாப்பிடுவேன் என்றார் கொஞ்சமும் தயக்கமில்லாமல் .நான் யோசிக்காமால் ,அவருக்குத் திதி செய்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் . 



                சில நாள் கழித்து மிண்டும் என்னைச் சந்தித்தார் .தன் மனைவியிடம் பேசினேன் .அதையும் செய்து பார்க்கலாம் என்கிறார் என்றார் .அதாவது தனக்கு உடன்பாடி இல்லையென்பதை சூசகமாகச் சொன்னார் .அதர்க்கு என்ன செய்ய வேண்டும் என்றார் .எனக்கு என்ன தெரியும் ? யாராவது இதைப் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னேன் .அதைத் தொடர்ந்து அப்போது எனக்குள் ஒரு கேள்வி அவரின் உள்ளுணர்வே தூண்டி கேட்க சொன்னது போல இருந்தது .அது உங்க அப்பா போட்டோ அல்லது பயன் படுத்திய பொருள் எதாவது ஒன்றை வைத்து இந்த ’காரியம்’ பண்ணுங்கள் என்றேன் அந்த ஆள் இருக்கிற போட்டாவும் இல்லை பயன் படுத்திய எந்தப் பொருளும் இல்லை என்றார் தீர்மானமாக. 



    இருக்கும் என்றேன் நான் .என்னைக் கூர்மையாகப் பார்த்து எங்கு? என்றார் . ஏதோ ஒரு உங்கள் உறவுக்கார பெண் கல்யாண போட்டோவில் பின்னால் மூன்று நபர்கள் இருக்கிறார்கள் அதில் அவரும் இருக்கிறார் என்றேன் தீர்மானமாக .அதோடு அவர் பயன்படுத்திய மரப் பொறுள் உங்கள் சொந்த ஊரில் உள்ள வீட்டில் இருக்கிறது என்றேன் .அவர் என்ன மீண்டும் உற்றுப்பார்த்தார் .எனக்கு நான் சொல்வது சரியா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை ஆனால் அவர் விச்யத்தில் அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.காரணம் அவர் ஏதோ சோதிப்பது போல என் உள்ளுணர்வு சொன்னது . 

             அவர் இரண்டு மாதம் கழித்து என் வந்த் போது எலெட்ரிக்கல் செக்சனில் நண்பரிடம் , காரியம் எல்லாம் செய்து விட்டதாகவும் அதர்க்குப் பின் தன் மனைவி கருவுற்று இருப்பதாகச் சொன்னார் . 



              இதர்க்கு இடையில், மே 1 ஆம் தேதிக்கு இரண்டு நாள் தொடந்து விடுமுறை கிடைத்ததால் கமபெனியில் வேலை பார்க்கும் ஒரு படுகர் இனத்தைச் சேர்ந்த பையனுடன் அவன் சொந்த ஊரான நீலகிரி மாவட்டத்தின் மஞ்சகோம்பைக்கு அழைத்துச் சென்றான் அங்கு மூன்று நாள் திருவிழா.அங்குள்ள நாகராஜா என்ற பாம்பு சாமி கோவில் விழா அப்போதுதான் கொண்டாடுவார்கள் .அங்கு ஆண்கள் எல்லோரும் போதை திருவிழாவாகக் கொண்டாடினார்கள் .பெண்கள் அவர்கள் பாரம்பரிய நடனத்தோடு வெகு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் . அன்று இரவு எல்லோரும் சுமார் 10 மணி சுமாருக்கு தூங்க போகும் முன் என்னை அழைத்துப் போன பையன் எனக்குத் தெரிந்த குறி சொல்லும் ! வேலையைச் சொல்லி விட்டான் .அங்கு இருக்கும் படுகு இன மக்கள் நம்மைப் போன்று பிறந்தவுடன் ஜாதகம் எழுதும் பழக்கம் இல்லாதவர்கள்.இயற்கையை மிகவும் நம்புவதால் இருக்கலாம் . வேறு காரணம் தெரியவில்லை . 

      அங்கு எனக்கு என் வேலை ஒருவிதத்தில்சுலபமாக இருந்தது .அவர்கள் பெயர்களின் எண் பலனே போதுமானதாக இருந்தது .மேலும் குறி சொல்லும் வேலைக்கு அது போதாதா என்ன ? 



              சுமார் இரண்டு மணி வரை பலன் சொலும் வேலை தொடர்ந்தது .அதில் புதிதாய் திருமணம் ஆனவர்கள் நகரத்தில் எந்த வேலை எப்படி அமையும் ,ஒரு பெண் 13 வயது ஆகியும் வயதுக்கு வரவில்லை எப்போது வருவாள் எப்போது என் முட்டி வலி சரியாகி நான் சாய்பாபவுக்குச் சேவை செய்வேன் ,குடிப்பதை எப்போது என் வீடடுக்காரர் நிறுத்துவார் , எப்போது கல்யாணாம் ஆகும் ,இந்த வீடு ராசியா ,எனக்கு என்ன விதமான் நோய் ,மீண்டும் கணவர் ஒன்று சேருவார் என இப்படிப் பல கேள்விகள் முன் வந்து கொட்டினார்கள் அத்தனைக்கும் பதில் சொன்னேன் ஆனால் யாருக்கு என்ன சொன்னேன் என்று ஞாபகம் இல்லை . 



   திரும்பி வேலைக்கு வந்த சில மாதங்களில் கல்யாணம் அன் புது ஜோடிக்கு சொன்ன மாதிரி வேலை கிடைத்ததாகச் சொல்லி ஒரு விருந்து வைத்தார்கள் .அடுத்து ,சாய் பாபா சேவைக்குத் தயரானவர் , வயதுக்கு வராமல் இருந்து வந்த பெண் வீட்டார் இப்படிச் சிலர் மட்டும் சொன்ன மாதிரி நடந்ததாக நேரில் வந்து என்னை அங்கு அழைத்துச் சென்ற பையன் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சொன்னார்கள் .அதெல்லாம் நான் சொன்ன மாதிரி ஒரு தடயமில்லாத சான்றுகள் ,அதே போலக் கம்பெனி எலக்ட்ரிக் சூப்பர்வைசர் மனைவிக்குக் குழந்தை பிறநதது.அடுத்து அவர் வீடு கட்டவும் ஏதோ கேட்டார் .ஆனால் எனக்கு எதுவும் பெரிதாகச் சொல்ல தெரியவில்லை . 




         சில பேருக்கு இப்படி பலன் சொல்லும்போது அவர்கள் விசயம் அவர்கள் வழியே காட்சியாக விரிவது போலவும் மேலும் அவர்களுக்கான விசயத்தை அவர்களே என்னிடம் சொல்ல தூண்டுவது போலவும் எனக்குள் தொன்றும் .சில ஆண்டுகள் என் இந்த விசயங்கள் மெல்ல என்னை விட்டுப் போகத் தொடங்கியது அதர்க்குக் காரணம் இந்த  பற்றித் தெரிந்தவர்கள் வேலையை விட்டுப் போனதும் ,அதே நிறுவனத்தில் வேறு பொறுப்புகளுக்கு நான் மாறிப்போனதும் இது தொடரமல் போனது காரணமாக இருக்கலாம் .இதெல்லாம் உண்மைதானா என்று கூட சந்தேகம் வருகிறது .ஆனால் அந்த உள்ளுணர்வு தடம் எல்லோருக்கும் சில சமயம்  வந்து போகும் .ஆனால் எனக்கு தொடர ஆர்வமில்லை .சிலிர்ப்புகள் எப்போதாவது மட்டும் வருவது்தானே  நல்லது  ? 

3 கருத்துகள்:

  1. பலன் கணிப்பவர் முன் நாம் உட்கார்ந்ததும் நம் முக்காலமும் தண்ணீரில் எண்ணெய் போல மிதக்க ஆரம்பிச்சுரும்.

    கணிப்பவர் மனதில் "ஈகோ" இல்லாது இருந்தால் அப்படியே ரீச் ஆகும்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு நன்றி .இந்த உள்ளுணர்வு பற்றிய எனக்கு இருந்த சந்தேகத்தை பதிய தயங்கினேன் ஆனால் சுகு ( https://www.facebook.com/caricaturist.sugumarje) உற்சாகம் கொடுத்து எழுத சொன்னதும் வெளியிட்டேன் .அதர்க்கு நீங்கள் மதிப்பு கொடுத்து விட்டீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா தாங்களை நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
    தங்கள் தொலைபேசி எண்னை கொடுங்களேன்
    என் பெயர் சசிகுமார் sasideckelmaho@gmail.com

    பதிலளிநீக்கு