செவ்வாய், 31 மார்ச், 2015

தவறான அழைப்பு ! ( Missed call )



சென்ற வாரம் கோபி நாங்கள் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது ஆளாகச் செல் வாங்கியிருந்தான் .நல்ல ஃபேன்சி நம்பர் கேட்ட போது எனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரிடம் வாங்கிக் கொடுத்தேன் .அந்த எண் ஆக்டிவேட் ஆன சில நாளில் அவனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது.கூப்பிட்டுப் பேசிய போது தான் இப்போது அவனைத் தேடி வரும் பெண் பேசினாள் .யாரையோ கூப்பிட இவனைக் கூப்பிட்டாளா அல்லது கோபியைப் போல அவளும் பொழுதை போக்க பேசும் பெண்ணா தெரியவில்லை.இரண்டு பேரும் சில சமயம் கடலை போடுவதை விடச் செல்லின் பேட்டரியை அவிந்து போகும் அளவுக்குக் கருகி விடுவார்கள் .ஆனால் அதர்க்கு சில நாள் முந்திதான் இந்த மாதிரி பெண்களைப் போனில் தவறாகத் தொடர்பு கொள்வது ஜீரோ க்ரைம் அளவுக்கு ஜல்லி அடித்துக் கொண்டு இருந்தார்கள் பத்திரிக்கைகளிலும் காவல் துறையிலும் . ஒரு வேளை கோபி எதாவது ஆபாசமாகப் பேசி சிக்க வைக்கும் முயற்சியா ? இந்த நேரில் சந்திப்பு என்பதுதான் என் பயம்.சரி பிரச்சனை கதவை தட்டி விட்டது இனி கதவை சாத்திக் கொண்டு அடுப்புக்குள் பதுங்க முடியாதே ? தனியே அவனை அனுப்பவும் முடியாது ( ? ) .எதாவது செய்ய வேண்டும் .

மீதியை சாப்பிட்டு விட்டு ,கம்பெனிக்குள் ஒரு சின்ன வேளை என்று புது மனைவிக்குப் பொய் சொல்லும் கணக்கை தொடங்கி வைத்து விட்டு ,அருள்புரத்திலிருந்து திருப்பூர் பஸ் நிலையம் வந்து விட்டோம் .வரும் போதே அவனிடம் தெளிவாய் சொல்லி விட்டேன் .நீ போய் முதலில் பேசு.நான் ஓரமாக இருந்து கவனிக்கிறேன் .ஒருவேளை ஆளை மாட்டிக் கொடுக்கும் வேளை என்றால் நான் வேறு மாதிரி எதாவது செய்கிறேன் .( அந்த வேறு மாதிரி என்பது அப்போதுவரைக்கும் எனக்கே தெரியாது ) ஒரே இடத்தில் நின்று பேசாதீர்கள் .இடத்தை மாற்றிப் பேசுங்கள் அப்போதுதான் யாராவது உங்களைக் கவனிக்கிறார்களா என்பதை நான் கவனிக்க முடியும் என்றும் சொன்னேன் .எல்லாத்துக்கும் சரியென்றான் கோபி .அவனுக்கு முதலில் இருந்த பயத்தை விடவும் இப்போது யாரோ ஒரு பெண்ண பார்க்கும் த்ரில்லும் பரபரப்பும் மட்டுமே பிடித்திருந்தது அதனால் எது கேட்டாலும் சரி என்று சொல்லும் மன நிலைக்கு அவன் போய் விட்டான் .ஒருவேளை அவன் இடத்தில் நான் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேனோ தெரியவில்லை ?

அந்தப் பெண் வந்த பேருந்து எண் சொன்னதும் அவன் சந்திக்கச் சிரமமும் இல்லை அதுதானே அலைபேசியின் இருப்பதன் வசதி.நான் சுமார் 100 அடி தொலைவில் நின்று கொண்டேன் .அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .தோளில் மருத்து கல்லூரி வெள்ளைக் கோட் இருந்தது .கையில் ஒரு சின்னச் சூட்கேஸ் .பேருந்து நிலைய மங்ளான வெளிச்சமும் , எனக்கும் அவர்களுக்குமான தூரமும் அந்தப் பெண் அழகா இல்லையா என்பதைக் கணிக்க முடியவில்லை .இப்போது இதுவா முக்கியம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு அவர்களைக் கவனிக்காத மாதிரி பஸ் நிலையத்துக்குள் வருவோர் போவோரை கவனிக்கத் தொடங்கிவிட்டேன் அல்லது அப்படி நடந்து கொண்டேன் .அவர்கள் பேருந்து நிலையம் விட்டு வெளியே வந்து ஒரு குளிர்பான கடைக்குள் போனார்கள்.எனக்கு தள்ளி இருந்து கவனிக்கு வசதியாக இருந்தது .யாரும் சந்தேகப்படும் படியாய் தொடரவில்லை.கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள் .அவர்கள் இருவரும் பேசும் தோரணையைப் பார்த்தால் ஏதோ போன ஜென்மத்துப் பழக்கம் மாதிரி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு , மிக அன்னியோன்யமாய் இருந்து .அது சரி அவர்களுக்கு என்ன ? பார்த்துக் கொள்ள ஆள் இருந்தால் பல்லவன் பஸ் கூடச் சேரன் பஸ் மேல் உரசி விட்டுத்தானே போகும் ( இதர்க்கு அர்த்தம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஏதோ டென்சன் எனக்குள் உளறிக்கொண்டேன். )

மீண்டும் பஸ் நிலயத்திர்க்குள் அழைத்துச் சென்றான் கோபி.நானும் சில நூறு அடிகள் இடவேளையில் தொடர்ந்து போனேன்.அந்தப் பெண் தண்ணீர் பாட்டில் வாங்கியது .அந்தப் பெண் கொடுத்த நோட்டுக்குச் சில்லறை இல்லை என்று கடைக்காரர் சொல்வது தெரிந்தது .கோபி செலவாளி .நிச்சயம் கையில் காசு இருக்க வாய்ப்பு இல்லை.இனி காத்து இருப்பது அவன் கௌரவத்திர்க்கு இழுக்கு .மெல்ல கிட்டப் போய் அப்போதுதான் கோபியை அங்குப் பார்ப்பது போலக் கோபி என்றேன் .திரும்பியவன் எதுவும் சொல்லி விடுவதர்க்கு முன்னே , எங்க இங்க ? என்றேன் புரிந்து கொண்டான் .இவங்க என் ஃப்ரண்ட் .டாக்டருக்கு படிக்கிறாங்க என்று அறிமுகப்படுத்தினான் .அந்தப் பெண் அழகாய்த்தான் இருந்தாள் .

அப்புறம் சில நிமிடங்களில் அந்தப் பெண் விடை பெற்றுக் கிளம்பினாள் .எனக்குத் தீபாவளி பட்டாசை கார்த்திகை மாதம் வரை வைத்து இருந்து வெடிக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிப் புஸ் என்று போய் விட்டது . இருந்தாலும் நான் கோபி மேல் இவ்வளவு அக்கறை இருக்கக் காரணம் அவன் ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கும்  .


திங்கள், 23 மார்ச், 2015

உத்தமன் ( கமல் ) வில்லனா ?


கடந்த ஞாயிறு ( 22, ஏப்ரல் ) உத்தம வில்லன் பாடல் வெளீயீடு நிகழ்ச்சி அல்லது எல்லாப் புகழும் கமலுக்கே நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.ஒருவகையில் விழாவில் கமலை புகழ்வது மட்டுமல்ல வேறு யாரயும் புகழ்ந்து விடக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டது போல் இருந்தது .இதர்க்காகத்தான் வேறு பிரபலங்கள் விழாவுக்கு அழைக்கப்படவில்லயா அல்லது வரவில்லயா என்பதுவும் தெரியவில்லை?


இப்படியெல்லாம் தொடங்குவதால் நானும் சாரு நிவேதிதா போல, உலகை சினிமாவை ரசித்து விட்டு, உலகச் சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் ஒரு நல்ல உலகத்தரமான படத்தைக் கூடத் தர முடியவில்லை என்று கேட்கத் தெரிந்தவனும் இல்லை. கருந்தேள் கண்ணாயிரம் போலக் கமலஹாசன் நிகழ மறுத்த அற்புதமா ? எனக் கேள்வி கேட்கும் உலகச் சினிமா மூளைக்காரனும் இல்லை ஆனால் ஒரு வேளை கமல் நடிப்பு தெரிந்து இருக்காவிட்டால் சொற்பமாக எனக்குத் தெரியும் சில மேல் நாட்டுப் படக் கதா நாயகர்களை , உற்றுப் பார்க்க எனக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இந்த உலகத்தில் எதுவும் மாறி போயிருக்காது நானும் இந்த பதிவை விட்டு இருக்கலாம் ! அது வேறு விசயம்.


கமல் நடிப்பின் அபிமானியாய் மாறக் காரணம் எவ்வளவோ இருந்தாலும் முதல் காரணம் எனது நான்கு அண்ணன்களும் கமல் ரசிகர்கள் அதிலும் முதல் அண்ணன் (1980 களில்) கமலைப் போலவே பெல்பாட்டம் பேண்ட்,ஸ்டெப் கட்டிங்' பாட்டு, டான்ஸ் கலக்குவார் .பீரோ ,புத்தகச் செல்ஃப் எங்கும் கமல் எதிலும் கமலாக இருக்கும் அடுத்தக் காரணம் வீட்டில் அப்பா வாங்கும் ஒரே வாரப் பத்திரிக்கை குமுதம். அதில் சுஜாதா கமலுக்காக எழுதிய விக்ரம் படத்தின் கதை ஆரம்பித்துக் கொண்டு இருந்த போதுதான் நான் வாசிக்கப் பழகிய காலமும் என்பதால் என்னையறியாமல் கமல் பக்கம் ஈர்க்கப்பட்டேன் .அப்போது கமல் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலா படமாக அள்ளிக் கொண்டு இருந்த காலம் .படத்தைப் பார்க்காமல் ரசிகனாய் மாறிய ஒருவகைக் காதல் கோட்டை பாணி ரசிகன் .இதெல்லாம் சொல்லிக் கொண்டு உத்தம வில்லனை விட்டு விட்டேனே நான் ?

எப்போதும் புதுமை என்று பேசிக் கொண்டு மட்டும் இருக்கும் பலரில் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் என ஆளுமையைக் காட்டுவேன் என்பதாய் இன்னும் வலம் வருவது உத்தம வில்லன் வரை சினிமாவில் தில் கமலுக்கு மட்டுமே உண்டு இந்த நிகழ்ச்சியில் அவரின் தன்னைக் பாலசந்தரின் சீடன் என்று ( கட்டாயமாகச் ) சொல்லிகொள்ள எடுத்த விழா அல்லது சாட்சியம் என்று கூடச் சொல்லலாம் அதென்ன சாட்சி அவரே மேடையில் ஓர் இடத்தில் , தன்னைப் பற்றிக் கே.பி சார் எழுதிய சில விசயங்கள் பற்றிச் சொல்லும்போது திருமதி கே.பி அவர்களைச் சாட்சிக்கு அழைத்தார் ஒரு வேளை அவரே எழுதி கொண்டதாக நினைக்க இடம் கொடுக்கக் கூடாது என்பதர்க்காக இருக்கலாம் .அதுதானே சினிமா உலகம் !


இங்குக் கே.பி சாரை பற்றிச் சிலவாவது பேச வேண்டும் இந்தப் படத்தில் நடிக்க வந்து முதல் இரண்டு நாள் பற்றி அவர் பேசும்போது இன்றைய சினிமா உலகம் மாறி போயிருப்பதாகவும் எங்கும் எந்தவித சத்தமும் இல்லாமல் மிகச் சிறந்த புரிதலுடன் படப் பிடிப்பு நடப்பதையும்,கடைசி காட்சியை முதல் ஷாட்டாய் எடுப்பதையும் வியந்து பேசினார் அதை விட முக்கியமாக டிஸிப்பிலின் இருக்கிறது என வியந்தார். தனது 84 வயதிலும் தான் மற்றவர்களைக் கவனித்துக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை இழக்காமல் இருந்து இருப்பதே அவரால் எப்போதும் புதுமையைப் புதிதாய் வைத்து இருக்கக் காரணம் என்பதைச் சொல்லியது .

விழாவில் தொகுப்புரை கொடுத்த அதுவும் சோலோவாக ஜோடி எதுவும் இல்லாமல் டிப் டாப்பாகக் கோட் சூட்டில் பார்த்தீபன் ஜொலித்தார் .அவரின் கிண்டல் தோரணம் மட்டும் குறையவில்லை .நன்றாகச் செய்தார் . கமல் நிகழ்ச்சி ஜாடிக்கு, மிக ஏற்ற மூடியாக இருந்தார் .ஆனால் பல இடத்தில் கமலே முகம் சுளிக்க , ’லிப் கிஸ்’ பற்றிப் புகழ் சாயம் பூசினார்.ஒரு இடத்தில் கேரள பெண்கள் அழகாக இருக்க எது காரணம் என்று ( மறைந்த எழுத்தாளார் ) சுஜாதாவிடம் கேட்ட போது தேங்காய் என்று சொன்னதாகச் சொல்லி இன்னொரு மெக்ஸிக்கோ சலவைக்காரி புதிருக்கு அழைப்பு விடுத்தார்.அனிருத்தை ஆண்டிரியா மறந்தாலும் மேடையில் பார்த்தீபன் மறக்கவில்லை.அது யார் என்பது போல ஆண்ட்ரியா எல்லோரையும் பார்க்க நிச்சயம் பார்த்தீபன் சட்டை கிழிந்திருக்கும் .அது சரி கிண்டல் பண்ணும் போது உடையாத மண்டை இருக்கவா போகிறது ? ( இதென்ன புதுசா இருக்கு ? )


வழக்கம் போல ரசிகர்களை மகிழ்விக்கக் கலை நிகழ்ச்சிகள் பளீரெனெ இருந்தது.அதிலும் மிகக் கவனமாகச் சிதறாமல் கமல் அங்கும் புகழ் பாடப்படுவது மேடைய விட்டு இறங்கவில்லை .கீழ் இருந்து சோலோவாக ரசித்தார் .ஒரு சமயம் மேடையில் கே.பி சார் படம் இரு கதவாகப் பிரிந்து கமல் மேடைக்கு வந்தார் .அவரில் நான் என்னில் அவர் என்பதைப் பலருக்குச் சூட்சுமமாகச் சொல்ல ஆசைப்பட்டு இருக்கலாம் ! அதர்க்கு ஏற்றார் போலப் பார்த்தீபனும் உங்களில் வாழும் கே.பீ சாருக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்கிறேன் என்று காலில் விழுந்தார். .இந்த நிகழ்ச்சிக்குப் பின் கே.பி சாரே நேரில் வந்து கமல் என் சீடனில்லை என்று மறந்து கூடச் சொல்ல முடியாது !


      கமல் அப்போது ,அவர் ( கே.பி ) இன்னும் இருப்பார் என்று இன்னும் பல விசயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று துக்கத்தில் நா தழு தழுக்கப் பேசினார்.ஒரு வேளை ரஜினி கூடக் கே.பி சாரால் அறிமுகப் படுத்தாமல் விடப்பட்டு இருந்தால் எப்படியும் முன்னேறி இருப்பார் ஆனால் நான் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை கொஞ்ச தூரத்தில் முடிந்து போயிருப்பேன் என்று அரங்கத்தை ஒருவித சோக மௌனத்தில் ஆழ்த்தினார் .அது போன்ற சில சமயங்களில் உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் கீழே இருந்த இந்தப் படத்தின் உடையலங்காரம் செய்த, கவுதமியும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதைத் தவிர்க்க முடியாமல் கேமிரா பதிவு செய்தது.


வாகை சூட வாவின் இசையமைப்பாளர் கிப்ரான் இந்தப் படத்தின் இசை நாயகன் அவருக்கும் கமலுக்காமான ஒரு வித இசை சங்கமத்தை கூச்சப்பட்டுத் தனது பேச்சில் இசைத்துக் கசியவிட்டார் ! எந்த ஒரு படத்தின் இசை வெளீயீட்டு நிகழ்ச்சியிலும் அதன் பாடல்கள் பற்றி மட்டும் பேச மாட்டார்கள் ஆனால் ( இசை வெளியீடுதானே ? ) எங்கும் இல்லாதது போல இந்தப் படத்தின் பாடல் வரிகள் பேசப்பட்டது பாராட்டும் படியாக இருந்தது .அதிலும் தமிழகக் கிராமீய இசைக்கலைகளில் “வில்லுப் பாட்டுக் கலை” ஒரு சிறந்த அங்கம் வகிக்கிறது. அத்தகைய கலை நம் தமிழ் நாட்டிற்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்து இன்று கவிஞர் சுப்பு ஆறுமுகம் இந்தப் படத்தில் பாடி இருக்கிறார் என்பது சொல்லப்பட்டது அப்போது அவரும் தான் மகாபெரியவரின் ஆசி மற்றும் அனுக்கிரகத்துடன் மீனாட்சி கல்யாணம், சீனிவாச கல்யாணம், வள்ளித்திருமணம், பார்வதி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினேன் என்றும் சொல்லவில்லை வேறு எவரும் ஏனோ இந்த வில்லுப் பாட்டுக்காரருக்காக எடுத்தும் கொடுக்கவில்லை. மதன் கார்க்கி ,விவேகா ( அவரும் கமல் முத்தம் பற்றிச் சிலாகித்தார் ) அதிலும் கு. ஞானசம்பந்தம். ( நன்றாகப் பேச்சை கேட்க எல்லோரும் காத்து இருக்க, ஏமாற்றி விட்டார்கள் இந்த மேடை அப்படிப் பட்டது ).இந்தப் படம் தயாரிப்பாளாருமான லிங்குசாமி எல்லோரும் கமழாரம் (கமல் + புகழாரம்) பாடினார்கள் !

இந்த மேடையில் எல்லோரையும் உணர்ச்சிப் பட வைத்தவர் நாசர் மட்டுமே . தனது மகன் விபத்தைச் சந்தித்த போதும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அந்தச் சோகத்தை மறக்க இந்தப் படம் உதவியதாகக் கண்களில் நீர் கசிய வைத்தார்.என் நடிப்புப் பயணத்தில் 500 படங்களில் இதுவே என்னால் மறக்க முடியாது என்று சொன்னவர் தனக்காகக் கமல் பல லட்சம் செலவு செய்து செட் போட்டு நடிக்க வைத்தார் ஒரு கலைஞனின் வலி இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லாமல் சொன்னார் .ஆனால் இந்தப் படத்தில் என் மன மாற்றத்திர்க்காக நடித்தேன் என்று உண்மை சொன்னார்..

திருப்பதி பிரதர்ஸ் படம் தயாரித்ததால் அதை லிங்குசாமி அவரின் சகோதர்களையும் மேடயேற்றி அழகு பார்த்தார்.இன்னும் அவர் சகோதர்கள் ஊரில் மளிகை கடை வைத்து இருப்பதாகச் சொன்னார் .இந்தப் படத் தாயாரிப்புக்காக இத்தனை பணம் போட்டு இருந்தாலும் முதல் ஒரு நாள் கை குழுக்கிய பின் இந்த நிகழ்ச்சியில்தான் லிங்கு சாமியை பார்க்கிறேன் என்று இயக்குனர் ரமேஸ் அரவிந்த் மேடையேறிச் சொல்லும்போது வேறு என்ன செய்யக் கமல் படமாச்சே ? என்று அவரைக் காட்டிய கேமிரா நமக்குச் சொல்லியது !


நம் படங்கள் கதையின் நாயகர்கள் ஏனோ படம் முழுவதும் தன்னைப் பற்றி மட்டுமே பேசப்ப படவேண்டுமாய்ப் பிடிவாதமாய் நினைக்கிறார்கள் .நீர்ச் சுழி போல அவர்களைச் சுற்றியே கதை வட்டமிட்டுப் பின்னப்பட வேண்டும் என்று அயராது உழைக்கிறார்கள்.இதுதான் சாருவின் கவலையாகக் கூட இருக்கலாம் .இது ஒரு நிகழப் படவேண்டிய மிகப் பெரிய மாற்றமாகத் தமிழ் சினிமாவில் இருக்கலாம் !

( விளம்பர நேரத்தை மட்டும் கழித்து விட்டுப் பார்த்தால் ) ஒரு முழுக் கமல் படம் பார்த்த திருப்தி இந்த நிகழ்ச்சி !

வியாழன், 19 மார்ச், 2015

ஜன்னலோரப் பயணம் - +2 தேர்வு .




                        பள்ளிக் கூடச் சுவரைச் சுற்றி ப்ளீச்சிங் பவுடர் வெள்ளையாய் கொட்டிக் கிடந்தது. காம்பவுண்ட் வெளி சுவர் சுத்தமாக்கி வைத்து இருந்தார்கள் . பள்ளியின் இரண்டு பெரிய கதவுகளில்,  ஒன்று லேசாய் திறந்து இருக்க மெல்ல தள்ளினேன் ...

ஏய் யாருப்பா அது ?
சந்தேகமே இல்லை அது பள்ளிக் கூடத்தின் வாட்ச் மேன் பன்னீர் அண்ணனின் குரலேதான் .

குரல் வந்த திசையில் கதவை தள்ளிக் கொண்டே உள்ளே பார்த்தேன் .

ஏய் யாருப்பா சொல்ல , சொல்ல கதவை தள்ளறது உள்ள வரக் கூடாது பன்னண்டாம் வகுப்புப் பரிட்சை நடக்குது ஓடு , ஓடு என்று சொல்லிக் கொண்டே கிட்ட வந்து விட்டார் .
பன்னீர் அண்ணா ,நானும் அதுக்குத்தான் வந்து இருக்கேன் என்றேன் .


              இந்தச் சம்பவம் இதே மார்ச் மாதத்தில் 28 வருடத்திர்க்கு முன்னால் அங்கு அப்படித் தேர்வுக்குப் போய்ப் பள்ளியிலிருந்து விரட்டப் பட்டது நான்தான். அதுவும் +2 முதல் தேர்வு எழுத போன முதல் நாள் அன்று.இப்பவும் .இந்தச் சம்பவம் நினைத்தால் எனக்கு இன்றும் சிரிப்பையும் அதோடு ஒரு விநோதமான வலியையும் வரவழைக்கும்..


             பொதுவாக அரசு பள்ளிகளில் படித்த எங்கள் மாணவர்களுக்கு ஒரு மோசமான செண்டிமென்டல் உண்டு . நீங்கள் முதல் பெஞ்சில் உட்காருபவராகவோ,நல்லா ட்ரெஸ் பண்ணுபவராகவோ ,வகுப்பு லீடராய் இருந்தாலோ ,அல்லது பொது அறிவாய் பேசுபவனாகவோ ,எதர்க்கும் முன்னால் பாய்ந்து உரிமைக் குரல் கொடுப்பவனாக , அப்புறம் ஆசிரியர்களோடு சகஜமாகப் பேசுபவனாக , கவிதை கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்பவனாக இப்படி இன்னும் சில தகுதி பட்டியல்களின் கீழ் நீங்கள் வந்தால் நீங்கள் நல்லா படிப்பவர் என்று ( முட்டாள் தனமாய் ) நம்பும் மாணவ கூட்டத்தில் நானும் ஒருவன்தான் இதில் ஒரு வேடிக்கை அப்படி நல்லா படிப்பதாக அவர்கள் துரதிருஷ்டவசமாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .இதில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங் - நான் முதல் பெஞ்ச் ஆள் இல்லை நான்காவது பெஞ்ச் பையன் ( அவ்வளவுதான் எங்கள் வகுப்பில் இருந்தது ) சுமாருக்குக் கீழ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிப்பாளி நான் . ஆனால் பாஸ் பண்ணும் குருட்டு !தைரியம் இருந்தது .


                ’ப்யூர் சைன்ஸ்’ அதுவும் அரசு பள்ளியில் எடுத்துப் படிப்பவர்கள் நாங்கள் அல்லது அந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பிலிருந்து படித்தவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்று கூடச் சொல்லலாம் .எங்கள் பள்ளியில் அப்போது படித்த எல்லோரும் ’c’ (காமர்ஸ் ) குரூப் கேட்டால் பள்ளி நிர்வாகம் என்னதான் செய்யும் ? +1 க்கு c குரூப் எடுத்துக் கல்லூரியில் மனோதத்துவம் படிக்க ஆசைப்பட்ட என் அப்துல் கலாம் கனவில் பல லோடு லோடாய் ,கல்லும் மண்ணும் கொட்டியவர்கள் இந்த ப்யூர் சைன்ஸ் ஆசிர்யர்கள்தான். .அப்போது ஒருத்தர் கூட அந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கவில்லை.அவர்களே தலைமை ஆசிரியர் அறைக்கு வந்து கட்டாயமாக இதில் சேர்த்து விட்டார்கள் .அந்த ( அப் ) பாவிகளில் நானும் ஒருவன் !


                     இப்படிச் சேர்க்கப் பட்ட நான் என்ன பண்ண ? ட்யூசன் சேர்ந்தால் மட்டுமே பாஸ் பண்ண முடியும் என்ற எழுதப்பட்ட விதி ! ( இது பற்றி என்னுடைய மற்றொரு பதிவான ”உயிர் காற்றில்” - http://myowndebate.blogspot.in/2015/03/blog-post.html விரிவாகவே பேசி விட்டேன்.) இப்படி மாற்றி எழுதப்பட்ட விதிக்கு ஒரு முடிவு இருப்பது போல முதலாண்டு உருண்டோடி இரண்டாவது ஆண்டின் இறுதி தேர்வும் வந்து விட்டது .ஏற்கனவே நான் நல்லா படிப்பேன் என்று நம்பியவர்கள் பலர் என்னருகே உட்கார தவித்துக் கொண்டு இருப்பதைத் தவிர்க்க கடைசி நேரத்தில் போக வேண்டும் என்ற திட்டமே அன்று தாமதமாகத் தேர்வுக்கு .9.35 க்கு போனேன் .எல்லோரும் தேர்வு பயத்தில் ஹாலில் உட்கார்ந்து எல்லா மதக் கடவுளையும் வேண்டிக் கொண்டு இருந்த நேரம் !.உள்ளே போனவுடன் ஹால் சூப்பர்வைசர் ஒரு முறை முறைத்து நீயெல்லாம் எங்க ? என்பது போலப் பார்த்தவாறே, அனுமதித்தார் .


         உள்ளே போனவுடன் என் இடத்தை அதுதான் கிருஷ்ணா உன் இடம் என்று காட்டிய இடத்தைப் பார்த்தேன் .இன்னும் சொல்லப்போனால் அந்த அறையில் என் இடம் மட்டுமே காலியாக இருந்து .நான் மட்டும்தானே லேட் .ஆனால் அவர்கள் காட்டிய இடம் இருக்கே அ அங்குதான் என் விதி தலைவிரித்துப் போட்டு ஜங்கு ஜங்கென்று குதித்து ஆடியது .


             ஆமாம் எப்படியாவது பாஸ் பண்ண வேண்டும் என்ற ’பிட்’ அடிக்கும் பேராண்மை மக்கள் விரும்பும் ஒரே இடம் ஜன்னலோர பென்ஞ் அதிலும் கடைசிப் பென்ஞ். நான் யாரயும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை . என் தேர்வு எண்ணை சரி பார்த்து உட்காந்தவுடன் நான் செய்த முதல் வேலை, உட்காரும் பெஞ்சுக்கடியில் மற்றும் எழுதும் டெஸ்க் உள்ளே எதாவது பிட் இருக்கான்னு செக் செய்யத் தொடங்க . இருந்தது .பின்னால் பெஞ்சிலிருந்து ஸ்,ஸ் என்று அழுத்தமான சத்தம் வந்தது அனேகமாக அதை வைத்தவனாக இருக்கலாம் ! நான் நிமிர்ந்தே பார்க்கவில்லை ஜன்னல் வழியாக வீசி எறிந்தேன் .இதை எப்படியோ ஹால் சூப்பர்வைசர் கவனித்து விரைந்து வந்து என்ன ? என்றார் எதோ பேப்பர் என்று சமாளித்தேன் .அதை அவர் நம்பவில்லை என்பது அதர்க்கு அப்புறம் பல தடவை என் மேல் இருந்து கொண்டே இருந்தது மூலம் நிரூபித்தார் .ஜாமெண்ட்ரி பாக்ஸில் பென்சில் எடுத்தாக் கூட நோட்டம் விட்டு அருகில் வரத் தொடங்கினார் .நானும் அதைத்தான் விரும்பினேன் சில சமயம் சந்தேகம் வந்து பார்த்துட்டு போய் விட்டால் அப்புறம் கேஸ் கிடைக்காத மாதக் கடைசி ட்ராஃபிக் போலிஸ் மாதிரி ஆகி விடுவார் நான் என்ன செய்தாலும் சந்தேகம் வராதல்லவா அதைப் பயன் படுத்தி நம் நண்பர்களுக்குப் பேப்பர் பாஸ் செய்து உதவலாம் என்பது என் எண்ணம் .அதுவும் நடந்தது. வந்து பார்த்தார் .நினைத்த மாதிரி எழுதி முடிக்கும் முன்னே பேப்பரை கேட்க தொடங்கி விட்டார்கள் .கொடுத்த பின் யாரிடம் மெயின் சீட் இருக்கு என்பதைக் கண்டு பிடிப்பதே பெரிய விசயம் ஆயிற்று .இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடத் தேர்வுக்கு நடந்த கூத்துக்கள்


                        அடுத்தச் சில நாளில் வேறு சில திட்டமிடல் அங்கு நடந்து கொண்டு இருந்தது எனக்குத் தெரியவில்லை .யார் கொடுத்த சிறப்புத் திட்டமோ தெரியவில்லை ஒவ்வொருவரும் கையில் முடிந்த அளவுக்குக் காசு கொண்டு வந்து தினமும் சூப்பர்வைசருக்கு கொடுத்து விலைக்கு (வருபவர்களை) வாங்க நினைத்து இருக்கிறார்கள் .அந்தத் திட்டம் முதல் நாள் நடந்து இருக்கிறது இதர்க்குத் தலைமை, ஒரு தோல் சாப் ஓனர் பையன் .இதர்க்கு யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை .சில ஆசிரியர்கள் மனசாட்சிப் படி வாங்கவில்லை ஆனால் பேப்பர் மாற்றி எழுத அனுமதித்தார்கள் .அவர்கள் திண்டுக்கல்லில் மிகப் பிரபலமான தனியார் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் பள்ளி மற்றும் படிப்பின் தரம் பற்றித் தெரியுமாதலால் அப்படி ஒருவேளை அனுமதித்து இருக்கலாம் ! ஆனால் ஆண்டவனையே சோதிக்கும் காலம் என்ற ஆயுதம் ஒரு நாள் வந்ததது.


                   குறுக்கு வழியை நம்பி, யாரும் படிப்பதை குறைத்து விட்டார்கள் போல ! அன்று தாவரவியல் தேர்வு . பலரும் கொண்டு வந்த பிட் வெளியே கிடக்கும் நோட்ஸ் எப்போது எடுக்கலாம என்று திட்டமிட்டுக் கொண்டு விழிகளை உருட்டி கொண்டு இருக்க , வெளியே நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது .ஹால் சூப்பர் வைசரிடம் யாரோ குடைபிடித்துக் கொண்டு வந்து சத்தமில்லாமல் ஏதோ சொல்ல அவர் முகம் மாறிய படி உள்ளே வந்தவர் ,
ஏம்ப்பா பறக்கும் படை வந்துருச்சு எதையும் வைத்து இருக்காதீங்க அப்புறம் நான் பொறுப்பில்லை என்றார் .

               என்னைக் கடந்து ஜன்னல் வழியாகப் பிட் குவியல்கள் சில நிமிடம் வீசப்பட்டுக் கொண்டே இருந்தது .வெளியே மழையில் நனைந்து விட்டால் மீண்டும் எழுத முடியாது ஆனால் வரும் பறக்கும் படை கையில் சிக்கினாலோ ( அப்போது ) மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது.அதனால் அவசர அவசரமாக அங்கு வீசப்பட்ட சுருட்டல்கள் ஜன்னல் கம்பியில் பட்டு விபத்துக் குள்ளாகி எனக் காலடியில் விழ, நானும் ஹால் சூப்பர்வைசரும் எடுத்து வெளியே போட்டோம் .


            ஆனால் வந்த பறக்கும் படையில் ஐந்து பேரில் மூவர் தேர்வு அறைக்குள்ளும் மீதி இருவர் குடையைப் பிடித்துக் கொண்டு ஜன்னல் பக்கம் வந்ததைப் பார்த்தேன் .நனைந்த நிலையில் ,பேப்பர் சுருட்டல்கள் , சில முழு ’நோட்ஸ்கள்’ கூட அவர்கள் உள்ளே வரும்போது இருந்தது .பெரும் பகுதி என் ஜன்னலோர வழியாக வீசப்பட்ட பந்து வீச்சுக்கள் கடைசியாக .வந்த இருவரும் உள்ளே நுழைந்தவுடன் நேரே என்னருகே வந்தார் ஒருவர் என் எழுதிய பேப்பரை எடுத்துச் சோதிக்கத் தொடங்க இன்னொருவர் என் பாக்கெட் பென்சில் ரப்பர் பாக்ஸ் வரை சல்லடை போட்டார் எதுவுமே கிடைக்காத சலிப்பில் ஃபேண்ட்டை அவிழ்க்கச் சொல்லி ஜட்டியின் எல்லாஸ்டிக்கை என் ஸ்கேல் மூலமே சோதித்தார் மொத்த தேர்வு அறையின் கண்களின் பார்வையுமே என் மேல் அவர்கள் நடத்தி கொண்டு இருந்த ஆக்கிரமிப்பு மேல் இருந்தது .பேப்பரை கையில் வைத்து இருந்தவர் இதெல்லாம் யார் வீசியது என்று கேட்டார் .தெரியாது என்றேன் .அப்புறம் எப்படி உனக்கு அருகில் கிடக்குது என்றார் மீண்டும் .பதில் பேசாமல் அவரை வெறுமெனப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.உட்காரச் சொன்னார் .


                 வந்தவர்கள் கடமை செய்தாலும் எனக்குப் படித்த கொஞ்சமும் ஞாபகத்துக்கு வராமல் மறை கழண்ட நட்டு போலச் சுற்றிக் கொண்டே இருந்தது அடுத்து எழுத முடியவில்லை.வேறு சிலரை ஓர் ஒப்பனைக்காகச் சோதித்து விட்டு , இப்ப கூடச் சொல்றோம் யாராவது எதாவது வைத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் என்று அறை முழுதும் சுற்றிப் பார்த்தார்கள்.அப்போது ஒரு மாபெரும் தவறை ஒருவன் பண்ணினான் .தான் ஒளித்து வைத்து இருந்த முழு நோட்ஸை எடுத்துக் கொண்டு நின்றான் இத்தனைக்கும் அவன் டெஸ்க் பென்ஞ் ஏற்கனவே சோதிக்கப்பட்டு இருந்தது ,அப்போது எதுவும் கைப்பற்றப் படவில்லை .அவனிடமிருந்து அதைக் கைப்பற்றிக் கொண்டு விட்டுவிடுவேன் என்று சொல்லியவர்கள் வெளியே அழைத்துக் சென்று, தலைமையாசிரியர் அறைக்குப் படியேறியதைப் பார்த்தோம் ஒருவேளை முழு நோட்ஸ் வைத்து இருந்தது அவர்கள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் ! .அடுத்த இரண்டு தேர்வுக்கும் அவன் வரவேயில்லை ( அல்லது அனுமதிக்கப் படவேயில்லை போல) தேர்வு எழுதிய 38 பேரில் எட்டு பேர் மட்டுமே பாஸ் .


                  அந்த தேர்வில் தோற்றுப் போனவர்கள் பலரின் வாழ்க்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை .தந்தை தொழில் அல்லது , ஊருக்குள்ளே எதாவது ஒரு தொழில் என்று காணாமல் போயிருப்பார்கள்  .அவர்களில் 90 சதவிகிதம் கிராமத்தை சார்ந்தவர்கள்  என்பது இன்னொரு விசயம் .இந்தப் பள்ளியில் படித்த ரமணர் திருவண்ணாமலை போனது போல ஒருவேளை எல்லோரும் இமயமலைப் பக்கம் போய் விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை.ஆனால் அங்குப் படித்துச் சுயமாய் முன்னேறியவர்கள் வெகு சிலரே ! ஒரு பள்ளி சரி இல்லையென்றால் பல சிறைச்சாலைகள் திறக்க வேண்டி வரும் என்பதை இப்போது உணர்கிறேன் .வசதி இல்லையென்ற ஒரே குற்றத்திர்க்காகக் கல்வி மறுக்கப் பட்டு தகுதியெனும் முகவரியை ஏற்பபடுத்திக் கொள்ளப் பல ஆண்டுகள் ஆனது
.

           இன்றும் பயணம் பண்ணும் போது பஸ்ஸில் காரில் ஏன் ரெயிலில் கூட எல்லோரும் விரும்பும் ஜன்னலோரப் பயண இருக்கை எனக்கு மட்டும் ஏனோ பிடிப்பதில்லை !

சனி, 14 மார்ச், 2015

எழுத்தாளன் – ஆழ்ந்த நீரோடை


ஒருமுறை, திரு.என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் திரு.கல்கியிடம், “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை. எப்படி எழுதுவது?” எனக் கேட்டார்.
“அதற்கு, நான்கு மை வேண்டும்.” என்றார் கல்கி.

“ஒ அப்படியா…? சரி எந்தெந்த நிறத்தில் மை வாங்க வேண்டும்”என்றார் என்.எஸ்.கே.

“திறமை, தனிமை, பொறுமை, இவற்றுடன் பேனா மை” என்றார் கல்கி.
இதைகேட்ட என்.எஸ்.கே., “அருமை அருமை” என்றார்.

     சமீபத்தில் ,எனக்குள் எழுத்தாளன் பற்றி ஒரு வித கரிசனம் அல்லது
அக்கறை பூத்தது .எப்போதும் பாய்ந்து கொண்டு இருக்கும் நதி போல் இல்லாமல் இன்றைய பல எழுத்தாளார்கள் ஏதோ ஒரு பணியில் இருந்து கொண்டு மிகச் சாதரண நிகழ்வுகளுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொண்டு ஆனாலும் தனக்குள் நிகழும் விசாரணகளை அனுமதித்துக் கொண்டும் புற விசயங்களுடன் தன் தொடர்புகளை நிச்சயபடுத்திக் கொண்டும் பூமி பந்தின் மேல் புற பகுதிக்குள் பல் வேறு திசைகளில் பிரிந்து பரவும் நீரோடையெனெ ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் …
         
    எனக்கு இங்கு எப்படி ஓர் எழுத்தாளன் ஆகத் தகுதி வேண்டும் அல்லது எழுத்து எத்தனை யுக்தியாக எழுதப்படுகிறது பற்றிக் கட்டாயமாக இங்குப் பேச வரவில்லை அதெல்லாம் எனக்கும் தெரியாது .ஆனால் எழுத்தாளான் சக மனிதனாக நடந்து போகும்போது, பஸ்ஸில் பிராயணம் பண்ணும் போது,நீங்கள் வழக்கமாகப் பொருள் வாங்கும் கடையில் உங்கள் எதிரில் வந்து போகும் மிகச்சாதரண மனிதனா மட்டுமே தெரிகிறான் ஆனால் அங்கு அவனுக்குள் உணரும் ஒரு விசயத்தின் பரிணாமம் வேறு !   நம்மில் சில பேர் காட்டாறு போலச் சந்திக்கும் விசயங்களை அப்படியே எடுத்து ஆவேசமாய் நம் சக்திக்கு தகுந்தவாறு ஏதோ ஒரு தொலைவில் வீசி எறிந்து விடுகிறோம் .மறக்க நினைக்கிறோம்

                 ஆனால் எழுத்தாளன் எங்கோ நுகர்ந்த சந்தன மணத்தையும்
,சாக்கடை வீச்சத்தையும் ,சரிந்த கூந்தலையும் ,சந்திக்கும் பெண் பார்வையையும் ,சிரிக்கும் குழந்தையின் கன்னக் குழியையும் ,தவறி போய் மாட்டிகொண்டதையும் தானே தேடி கொண்ட சிக்கலையும் நல்ல மனிதர்களின் கெட்ட செய்கையையும் கெட்ட மனிதர்களின் நல்ல குணத்தையும் இனம் பிரித்து மனதின் மூன்றடுக்குகளுக்குள் அடுக்கி வைத்து தனது உணர்வில் தோய்த்து இடம் பார்த்து பொருத்துகிறான்.எங்கோ ஒரு முகத்தின் அழகை இன்னொரு குணத்துக்குப் பொருத்தி தன் உணர்வு மொழியை அங்கு அந்தப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் பேச
நினைக்கிறான் .ஆனால் அதெல்லாம்  இவனுக்குள் திட்டமிட்டு நடப்பதில்லை .ஒரு பூவின் மொட்டு விரிவது போலத் தானே சில இயற்கை அதீத உணர்வுகளுடன் எற்படும் கண உரசலில் நிகழ்கிறது இன்னும்
சொல்லப்போனால் இந்த உரசலின் விளைவு எல்லோருக்குள்ளும் தீராத காற்றின் சுவாசம் போல உணரப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.அதை ஓர் எழுத்தாளன் தனது மூன்றடுக்குள் விதைத்து வைக்கிறார்கள். நாம் நமது மூன்றடுக்குள் புதைத்து வைக்கிறோம் எடுத்து பார்ப்பதர்க்குள் சில சமயம் நம் வாழ்க்கை சக்கரம் இந்தப் பக்கம் ஓட பெட்ரோல் இருந்தும் ஓடாத வண்டி போல இயங்க மறுக்கிறது ஆனால் இப்படிப் புதைத்து வைத்த வெளியில் கண்ணுக்கு தெரியாத பெரிய பல கோடி பிரகாசமான நட்சத்திரங்களைப் போலப் பல எழுத்தாளார்கள் இங்கு இன்னும் எழுத்து மேடைக்கு வந்து அரங்கேறாமல் பின்னுக்கு நடமாடிக்கொண்டு இருப்பது என்பது வேறு விசயம் .சரி நாம் இங்கு எழுத்தை ஆள்பவனைப் பற்றித்தானே இங்குப் பேசிக்கொண்டு இருக்கிறோம் .
           
  ஒரு முறை திண்டுக்கல் பாரதி பிரிண்டர்ஸ் திறந்து வைக்கக் கவிஞர் வைர முத்துவும் ,என் ஆதர்ச எழுத்து ஆசான் பால குமாரனும் வந்து இருந்தார்கள் நான் அந்த எழுத்தாளரின் தீவிர வாசிப்பாளி என்பதால் அவரைப் பார்த்துக் கைக் குழுக்க மிகப் பிரயர்த்தனப்பட்டு நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள் இதோ இன்னும் சில நிமிடங்களில் மேடையின் பின் புறம் வழியாக யாரோ என்னைப் பால குமாரனிடம் அழைத்துச் சென்று என்னை இவர்தான் உங்கள் தீவிர ரசிகர் எனச் சொல்ல போகிறார்கள்.ஆனால் அது நிகழ வேண்டாம் என்று நான் முடிவெடுத்தான் .அதைச் சொன்ன போது நண்பர்கள் கிறுக்கனாய் என்னைப் பார்த்தார்கள் .எனக்கும் பால குமாரனுக்கும் இடயில் ஓடிக்கொண்டு இருக்கும் அற்புத எழுத்துணர்வு புரிதலின் நீண்ட உறவு இந்தக் கைக் குலுக்கலில் எதுவும் செய்யப் போவதில்லை என இதன் மூலம் ஒரு அலங்கோலம் மட்டுமே அரங்கேறும் எனபதான என் உள்ளுணர்வின் அவசர மறுதலிப்பை ஏற்றுக்கொண்டேன் அப்படிச் சந்திக்காததாலோ என்னவோ இன்னும் என்றென்றும் பாலாகுமாரன் என்று அவர் எனக்கு எழுதிய கடிதம் போல அவர் மேலுள்ள மதிப்பும் பத்திரமாய் அச்சு அசலாக இருக்கிறார் என்று தோன்றுகிறது !

                 அதனால் ஓர் எழுத்தாளனிடம் வெளியில் தெரியும் யோக்கிதை
என்பது எதுவுமில்லை என்பதாக எனக்குப் படுகிறது .உள்ளே நிகழும்
இடியையும் ,மழையையும் ,புயலையும் தென்றலையும் தேவைப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் ஓர் தோட்டாத்தரணி வேலை எழுத்தாளனுடையது .நாம் பார்க்கும் குடும்ப டாக்டர் போல எப்போதும் அவன் ஸ்டெத்தாஸ் கோப்போடு திரிய வேண்டும் என்பது அவனுக்குக் கிடைத்த சாபமும் அல்ல கிடைக்காத வரமும் அல்ல .

              எனது நண்பர்களில் ஒருவரான அனந்த கிருஷ்ணன் அப்போதுதான்
பாலகுமாரனை படிக்க ஆரம்பித்து இருந்தார் .பாண்டிச்சேரிக்கு ஒரு நண்பரை பார்க்க போன போது எதேச்சையாக அங்குச் சண்டே பஜார் பழைய புத்தகம் விற்கும் பகுதியில் பாலகுமாரன் புத்தகம் இருக்கிறதா என்று அதை அங்கு விற்பனையாளாரிடம் கேட்டுக் இருக்கிறார்.அவர் சில புத்தகம் எடுத்து கொடுத்து விட்டு இப்போதான் இங்கு வந்திட்டு அங்க பாருங்க அந்தக் கடையில் நிற்கிறார் என்று சில கடைத் தள்ளி நின்று கொண்டு இருந்த பால குமாரனைக் காட்ட, என் நண்பர் தெறித்து ஓடி வந்து திண்டுக்கல்லில்தான் நின்றார் . அதர்க்கு நண்பர் சொன்ன அவர் சொன்ன காரணம் இன்னும் தெறிக்க வைத்தது .

   ஏம்ப்பா அவரை நான் பார்க்க அவர் என்னுடைய எந்தப் புத்தகம் படித்து இருக்கீங்கன்னு கேட்டா எதைச் சொல்வது என்று அவசரமாகச் சொன்னார் .ஓர் எழுத்தாளன் சந்திக்கபட வேண்டியவனா என்பதில் எனக்குக் கருத்து இருந்தாலும் ஓடி வருவதை விட அங்கு நின்று , நண்பர் பாலகுமாரனை எப்படி இருக்கிறார் என்று ரசித்து இருக்கலாம் .ஆனால் நண்பர் அதோடு விடவில்லை.சில புத்தகங்கள் படித்த பிறகு சென்னைக்குப் போகும்போது பாலகுமாரனை நேரில் வீட்டுக்குப் போய்ப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கியதாகச் சொன்னார் .ஒருவேளை நண்பர் அனந்த கிருஷ்ணனனுக்கு எழுத்தாளர் ஆகும் ஆசை இருந்ததா என்னவோ ?

         “ தனக்கும் சமூகத்துக்குமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவன் எழுத்தாளன். அதே சமயம் அவனது நோக்கம் அனுபவங்களைப் பகிர்ந்து

கொள்வதான புரிதலுடன் மட்டுமே இருக்க வேண்டும். பகிர்தல் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லேன்னா எதையும் எழுத வேண்டிய அவசியமே இல்லை. சமூக ப்ரதிபலிப்புகளையும் அனுபவங்களையும் நன்றாகப் பகிர்ந்து கொள்பவன் நல்ல எழுத்தாளன். நன்றாகப் பகிர்ந்துகொள்ள இயலாதவன் நல்ல எழுத்தாளன் அல்ல ”.
-- அசோகமித்திரன். (அப்பணசாமிக்கு அளித்த நேர்காணல், காலம் பத்ரிக்கை. )
ஆனால் இன்றைய மிகப் பலர் இந்த எண்ணங்களுடன்தான் எழுத வருகிறார்கள் .அப்புறம் மெல்ல ஏதோ ஒரு கட்சி , ஓர் இயக்கம் என்ற ஏதோ ஒன்றை தொற்றிக்கொண்டு வாழ்வில் பிழைக்கு வரவேற்பு கொடுக்கப் போகின்றனர் . அவர்களின் அற்புதமான எழுத்தை ஆளும் திறம் மங்கி ஏதாவது ஒரு சில மேடைகளை நிரப்பிக்கொண்டு பிற்பாடு வருந்துகிறார்கள். கட்சிக்கு கொடி பிடிக்கப் போன பல எழுத்தாளர்கள் வர வர மாமியா கழுதை போன கதைதான் இங்கு மிஞ்சி இருக்கிறது .
         


சில பேர் சமூகமாவது ஒன்றாவது எனக்குள் சில ரகசியங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதை மொழி பெயர்கிறேன் .அதனால் நான் எனக்குள் ஒருவகை சமாதானத்தைப் பெறுகிறேன்.என்று சொல்கிறார்கள் இதனால் பல இலக்கியங்கள் பிறந்துள்ளன.




”உங்களுக்காக அல்ல. எனக்காகவும் அல்ல. எழுதுகிறேன் -- அவ்வளவே ! இங்கே 'நான்' என்பது நான் அல்ல. அது எழுதப்படுவதைப் பொறுத்தது. 'நான்' நீங்களாகக் கூட இருக்கலாம். அல்லது அவளாக அல்லது அவனாக.. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் கற்பனை சார்ந்தவை. எவருடனும் எதனுடனும் ஒப்பிடும்படியாக இருப்பின் அது தற்செயலான நிகழ்வே. என் எழுத்துக்களைக் கொண்டு என்னை மதிப்பிட முயலாதீர்கள். அவை பெரும்பாலும் உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் நிறுத்த கூடும்”. இங்கு எழுத்தாளர் Paul Arockiam அப்படித்தான் சொல்கிறார்


             என் நண்பர் ஓரு எழுத்தாளர் ,ஒரு சமயம் நண்பர் ஒருவர் தன்னுடைய

தவறான பெண் உறவு சம்பந்தமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தது முதல் அங்கு நடந்தது வரை விலாவாரியாக அவர்கள் வீட்டு நாய் வரை சாதனையாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் .நாங்கள் மிகச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். ,ஆனால் அவர் சொல்லிக் கொண்டு இருந்த போது இடைமறித்து யாராவது வந்தால் எப்படித் தப்பி ஒடி வருவீர்கள் என்று கேட்டார் ? சொல்லிக்கொண்டு இருந்தவருக்கு இவர் எழுதுபவர் என்பது தெரியும் இருந்தாலும் கோபித்துக் கொண்டார் ஒருவேளை அந்தக் கேள்வி பயமுறுத்தி இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர் சொன்னது பொய்யாகவும் இருந்து இருக்கலாம் .எப்படியோ அன்று எங்களுக்குக் கிடைக்க இருந்த ஒரு கற்பனை சந்தோசம் போச்சு .அவர் பாதியிலேயே நிறுத்தி விட்டார் . சுஜாதா கடைசி வரை மறைத்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை தவற விட்ட அதே ஆர்வத்தில் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது கேட்டேன்.அவர் தவறு செய்யப் போன சரியான வீட்டுக்குப் பின் கதவு இல்லையென்றார் .நான் கேட்க வந்தது அதல்ல என்பதை எப்படிச் சொல்வது? விட்டு விட்டேன் .

             என்னதான் உங்களோடு சுற்றிக் கொண்டு இருந்தாலும் எழுதுபவன் ஒரு தனி வலியோடு அதுவும் (எழுதும் வலியோடு) அலைகிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் அவனுக்கு அங்கீகாரம் கொடுப்பதே அந்த எழுத்துக்கு தரும் மரியாதை. உங்களில் ஒருவன்

யாராவது இருந்தால் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் இணைய
வாய்ப்புகளை சொல்லுங்கள் ..
                   
சமீபத்தில் கூட எனக்கு உயிர்மை நடத்தும் வலைப்பூக்கான ’சுஜாதா அவார்டு’ போட்டிக்கு தயக்கத்துடன் அனுப்பிவைத்தேன் . நானும் இந்த போட்டிக்கு பத்து பதிவுகள் அனுப்பி இருக்கிறேன். அதற்காகவாவது ஒரு அழைப்பிதல் அனுப்பி வையுங்கள்  கடைசி வரிசையில்  நிற்க ஒரு இடம் கொடுங்கள் என்ற  விண்ணப்ப ஆசைதான் !.
என்னவோ தெரியவில்லை இந்த பதிவை முடியாத பயணம் போல நிறுத்துகிறேன் .எழுத்து என்றுதான் ஓய்ந்து இருக்கிறது  ?

செவ்வாய், 3 மார்ச், 2015

உயிர் காற்று


                        பொதுவாக நாமெல்லாம் நேரடியாக உதவி செய்பவர்களைத்தான் நம்புகிறோம் கொண்டாடுகிறோம் .ஆனால் நமக்குக் கண்ணுக்குத் தெரியாமல் உதவி செய்யும் சக்திகளினால்தான் வாழ்வே சந்தோசமாகச் செல்கிறது .அதில் முக்கியமானது காற்று ,நீர் இரண்டுக்குமான ஆதார சக்தியாக இருப்பது நம்மைச் சுற்றி உள்ள மரங்கள் . அவை நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதைப் பற்றி நாம் அக்கறை படுகிறோமோ இல்லையோ பிள்ளையைப் பெற்ற அன்னை எப்படிப் பெற்ற மக்கள் திருப்பிச் செய்வார்கள் என எதிர்பாரமல் செய்கிறார்களோ அது போல நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு புல்லும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு நன்மையே தருகிறது நம்மவர்கள் அதனால்தானோ என்னவோ ஸ்தல விருட்சம் என இயற்கையைப் பிற்காலத்தில் கடவுளுடன் சேர்த்து வைத்து விட்டர்கள் போல ?


             வெகு நாள் நான் விரும்பும் ஆராய்ச்சிகளில் ஒன்று வெயில் (காலங்களில்) நம்மைச் சுட்டெரிக்கும் போது அதே வெய்யிலை வாங்கும் பூமி நீர் சத்துள்ள தற்பூசனியைத் தருவது எப்படி ? .மழைக்காலத்தில் காளன்கள் ,இதைப்போல எண்ணற்ற மருத்துவச் செடிகள், கொடிகள்,மருந்தாக வளர்வது எப்படி ? கோள்கள் எப்போதுமே மனிதனுக்குத் தீமைகள் செய்வதே இல்லை .எதாவது ஒரு விதத்தில் ஒரு பேலன்ஸ் பண்ணவே போராடுகின்றன .எனக்குத் தெரிந்த மருத்துவர் மிக எளிமையாக – ’ என்ன சீசன்ல என்ன காய்,கனி விளையுதோ அதுவே போதும் நம்மைக் காப்பாற்ற என்று சொல்வார்’ . ஆனால் நாம் சிம்லா ஆப்பிளும் அமெரிக்காப் பேரிக்காவுக்கும் துபாய் பேரிச்சைப் பழத்துக்கும் ஆசைப்பட்டும் கொண்டு இருப்பது வேறு விசயம் .ஆனால் இயற்கையுள் உலாவும் கோள்களுக்கும் - மனித உயிருக்கும் எப்போது ஒரு ரகசிய ஒப்பந்தம் இருகிறது .அதைப் புரிந்துக் கொண்டவன் சித்தர்கள் என்பார்கள் வாழ் நாளில் எப்படி நிகழ்கிறது என்பதை நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றதை அவர்கள் பாதம் பின் பற்றி ஆராய வேண்டும் .


                     இப்படி ஒரு மிகப் பெரிய ஆர்வத்தை 16 வயதில் எனக்குத் தந்தவர் என் +1 மற்றும் +2 வின் ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் ஐயா அவர்கள்தான். .நான் எடுத்த ப்யூர் சைன்ஸ் ( Pure Science ) பாடத்தில் தாவரவியல் (Botany) ஆசிரியர் அவர் .மிகக் கடின உழைப்பாளி .தாவர ,மரங்கள் செடி மற்றும் கொடி என எல்லாவற்றின் மீதும் ஒருவித கட்டாயக் காதலைக் கொண்டவர் .மிகவும் போராடி அவரின் சோதனைக் கூடத்தில் பல தாவரச் செல்களின் சேகரிப்பு வைத்து இருந்தவர்.மிகவும் கண்டிப்பானவர்.அவர் +2 வில் எனக்கு வகுப்பு ஆசிரியரும் கூட .நான் முதல் மதிப்பெண் எடுத்ததே இல்லை ஆனால் என்னை லீடராக்கி வைத்து இருந்தார்.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வாரத்தில் இரண்டு நாள் எங்களுக்குப் பாட்டனி லேப் .எப்படியும் நான் வரிசையாக வகுப்புத் தோழர்களைப் பாட்டனி லேப்புக்கு அனுப்பி விட்டு ,வகுப்பு அறை பூட்டி விட்டு வருவதர்க்குள் வகுப்பு ஆரம்பித்து விடும் .அவர் வகுப்புக்கு யார் தாமதமாக் போனாலும் வாசல்தான் கதி .அதுவும் அந்த வாசல் ஆறடி உயரம் .அந்தப் பகுதியில் வருவோர் போவெரெல்லாம் என்னைப் பார்த்துக் சின்னதாய் ஒரு நக்கலை உதிர்த்து விட்டுப் போவார்கள் லேப் வகுப்பு ஒரு மணி நேரம் நாற்பது நிமிடம் நடக்கும் அவ்வளவு நேரமும் நின்றே பாடம் கவனிப்பேன்..


அவர் வகுப்பில் எல்லாருக்கும் மைக்ராஸ்க்கோப் வழங்கி சோதிக்கப் பழக்குவார்,அது மட்டுமல்ல நீங்கள் கண்ணில் படும் எந்தத் தாவரமும் கொண்டு போய் ஆராய வாய்ப்பு உண்டு.இத்தனைதான் பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர் என்றாலும் என்னையும் சில மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து உணவு வழங்கி மரியாதை செய்வார் .அவர் வீட்டில் உள்ள புத்தகங்கள் பார்த்துப் பொறாமை படாத நாளே இல்லை அத்தனையும் கலிக்கோ பைண்டிங் செய்து கண்ணாடிப் பீரோக்குள அழக்காக அடுக்கி வைத்து இருப்பார் .இன்றைக்கு இப்போதும் இங்கு” பையர் ஹாலில் ”ஆடைகளை அணிவித்துப் பார்க்கும் டம்மிகளை (Dummy ) பார்த்தால் அந்த ஞாபக நிழல் வந்து போகும் ! என்ன ? அவர் வைத்து இருந்த அத்தனையும் ஆங்கிலப் புத்தகங்கள்.அரசு பள்ளியில் எட்டாவது படிக்கும் வரை என் பெயரே ஆங்கிலத்தில் எனக்கு எழுத தெரியாது .அப்படி இருக்கும் போது அவரின் ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி எப்படிப் படிப்பேன் அதனால் ஆசைத்தீர தடவி பார்ப்பேன் அதைத் தவிர வேறு என்ன செய்ய ?


எங்களுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் விலங்கியல் ,தாவரவியல் எடுத்தவர்கள் எங்களுக்குக் கிடைத்த வரம் .ஆனலும் இங்கும் மேலும் இருவரை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.ஆம்.அவர்கள் கெம்ஸ்ட்ரி ஆசிரியரும் , ஃபிசிக்ஸ் ஆசிரியரும். சம்பாதிக்க மட்டுமே வந்தவகள் போல நடந்து கொள்வார்கள்.அரசு பள்ளியில் படிக்க வைக்கும் எந்த அப்பனும் காசு பணம் வைத்துக் கொண்டு படிக்க அனுப்ப மாட்டன் அதைப் புரிந்து கொள்ளாத அவர்கள் எங்கள் பள்ளிக்கும் ,அந்தப் புனிதமான தொழிலுக்கும் சாபங்கள் என்றே சொல்வேன் .ஆம் அந்த ஆசிரியர்களும் இருவரையும் ! தேர்வில் பாஸ் பண்ண எடுக்க வேண்டிய 70 மார்க்கில் ப்ராக்டிக்கல் என்ற பிரமாஸ்த்திரம் போன்ற 50 மார்க் அவர்கள் கையில் என்பதால் டியூசன் வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் .இதில் டியூசன் போக முடியாதவர்கள் பலர் வாழ்வை எதிர்காலத்தை இவர்களால் கேள்வி குறியாக்கி விட்டு இருக்கிறார்கள் இதில் பாதிப்பட்டவர்களில் .என் சீனியர் உதயசங்கர் என்பவர் பிராக்டிக்கல் மார்க் (டியூசன் போகவில்லை) இல்லாததால் இறுதித் தேர்வில் தோல்வி .அப்போது ( 1986 ல் ) அவர் ஒரு மிகப் பெரிய கோபத்தின் உச்சத்தில் அந்த ஆசிரியரின் Hero majestic வண்டியின் பெட்ரோல் டேங் மூடியைக் கழட்டி ஜீனியைக் கொட்டினார் ( எஞ்சின் இயக்கத்தைக் கெடுப்பதர்க்கு ) .அவ்வளவு கோபம் .அந்த இரு( சாபங்களும் ) ஆசிரியர்களும் எங்களிடம் அடிக்கடிச் சொல்லும் மிகப் பெரிய சொற்தொடர்

“ நீங்க படிச்சா படிங்க ,நீங்க பாஸானாலும் ஃபெயிலானாலும் எனக்கு  மாசா மாசம் வரவேண்டிய  என் சம்பள கவர் வந்துக்கிட்டேதான் இருக்கும் “


    இப்படிச் சொல்லும்  ஒரு தொழில் துரோகம் வேறு இந்த உலகில் இருக்கா என்ன ? சரி நல்லதை பேசிட்டு இருக்கும் போது சாபங்கள் பற்றி அதிகம் பேசிவிட்டோம் .ஏதோ ஓர் ஆழத்தில் கிடந்த கோபம்  ! Postmodernism த்தின் தேடல் கதைகள் போல  வழியை மாற்றிக்  கொஞ்சம் விலகி பயணிக்க வைத்து விட்டது ! போகட்டும் .


         சுந்தர மகாலிங்கம் ஐயா பொதுச் சேவையில் மிக அக்கறையுள்ளவர் .அவர்தான் மரம் நடும் விசயத்தை எங்கள் பள்ளிக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவர் .அப்போது முக்கியமாகப் பார்த்தீனியச் செடியின் (Parthenium hysterophorus) வளர்ச்சி அதிகம் இப்போது யுரேனிய குப்பைக்கு இந்தியாவைப் பயன்படுத்திகொண்டு இருக்கும் அமெரிக்கா அப்போது கடலில் கொட்டி மீன்வளத்தைப் பெருக்க வைத்து இருந்த கோதுமை மாவுகள் போன்ற உணவுப்பொருட்களை இங்கு இறக்குமதிச் செய்த போது நமக்குத் தந்த அன்பளிப்புப் பார்த்தீனியம் (பார்த்தீனியத்தின் பூர்வீக நாடு அமெரிக்கா) என்பது எல்லோரும் அறியப்பட வேண்டிய விசயம் .எங்கள் பள்ளிகளின் மிக அடர்ந்து வளர்ந்த இருந்த பார்த்தீனியம் செடியை அடியோடு அழிக்க முயற்சி எடுத்தவர் சுந்தர மகாலிங்கம் ஐயா .அது மட்டுமல்ல திண்டுக்கல்லின் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ’கேம்ப்’ போட்டு உப்புத்தண்ணிக் கரைசலைக் தெளித்து அழிக்கத் திட்டமிட்டுக் கொடுத்தவர்.அது மட்டுமல்ல Nature Club என்ற ஓரு அமைப்பை ஆரம்பித்து நகர் முழுதும் சேவை செய்ய வாய்ப்பை கொடுத்தார் .அதில் முக்கியமாகச் செய்தது இரண்டு .ஒன்று இன்றைய திண்டுக்கல் ’ஒடுக்கம்’ பகுதியில் மரம் வளர்ப்புத் திட்டத்தில் பங்கு பெற்று ,மொத்தப் பள்ளியின் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று சுமார் லட்சம் மரம் நட காரணமாக இருந்தார்..இதை ஹிந்து ( ஆங்கில) பத்திரிக்கையின் முதற் பக்கத்து பெட்டி செய்திகளில், பள்ளியின் பெயரும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம் ஐயா பெயரும் தலைவர் ( president ) என்ற இடத்தில் என் பெயரும் வந்து இருந்தது .அதர்க்குப் பின்னும் பல பத்திரிக்கைப்[ பெட்டி செய்திகளில் நாங்கள் வந்தோம் !அப்போது இருந்த கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் தோழர் முத்துலக்கையன் ஐயா மற்றும் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் ( வாணி விலாஸ் ஹோட்டல் ) ஹரிஹரன் ஐயாவும் மிகவும் உதவினார்கள் .


இன்னொரு முக்கியமான சுந்தர மகாலிங்கம் ஐயாவின் சாதனை திண்டுக்கல்லிலிருந்து - குஜராத்திலுள்ள வடோடரா ( vadodara ) மாவட்டத்தின் எல்லயோர ஊரான கெவேடியா ( Kevadiya ) நர்மதை ஆறு பாயும் மலைக்குப் பக்கத்தில் நடத்தப்பட்ட Antar Bharathi National Integaration and Environmental Camp என்ற மரம் நடும் மாநில அளவிலான திட்டத்திர்க்கு ( 24.101988 - 02.11.1988 ) அழைத்துச் சென்றார்.முழுக்க முழுக்க அவரின் திட்டமிடலும் ,உழைப்பும் ,மெனக்கெடலும் அபாரம் . மொத்தம் இந்தியாவிலிருந்து ஐயாயிரம் பேரும் தமிழத்திலிருந்து 350 பேரும் கலந்து கொண்ட மாபெரும் மரம் நடும் விழா அது . 

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஓர் ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. 

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் 

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் 

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் 

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் 

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் 

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் 

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம் 

இது சற்றுப் பழைய கணக்கீடு. தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஓர் ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப் படுகின்றன என ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.( நன்றி http://www.muthukamalam.com/muthukamalam_manam%20thiranthu50.htm) 

       சரி இங்குப் போய் மரம் நட்டு விட்டு சும்மா வந்தோமா ? இல்லை ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தை அங்குச் சந்தித்தோம் .ஆம் கேம்ப்க்கு அருகில் அழகிய நர்மதை ஆறு பாயுந்து செல்லும் இடம்.அழகிய ஆறு மட்டும் அங்குப் பாயவில்லை அதர்க்குள் ஓர் அபாயம் காத்து இருந்தது அதன் பெயர் ஆற்றில் வாழும் முதலைகள் . 
    எங்கள் மரம் நடும் கேம்ப் மரம் நடவேண்டிய மலைச் சறிவிர்க்கு மிகப் பக்கமாக இருந்தது .கேம்பிர்க்கும் மலைக்கும் நடுவே நர்மதை ஆறு திருமணம் ஆன பெண் போல மிகப் பவ்வியாமாகக் கடந்து சென்று கொண்டு இருந்தது .நாங்கள் இரவு நேரம் ஆன பிறகு மெல்ல ஆற்றுப் பக்கம் ஒதுங்க போனோம் இன்னும் நூறடி இருக்கும் போது பின்னால் ஏதோ சத்தம் திரும்பினால் இரண்டு உயரமான குதிரைகளில் இரண்டு பேர் ஒரு வித ராணுவ உடை மாதிரி அணிந்து இருந்தார்கள் .ஹிந்தியில் ஏதோ கேட்டார்கள் .அங்கு எதர்க்குப் போகிறீர்கள் என்பதாகப் புரிந்து கொண்டோம் .திரும்பிப் போகக் கட்டளையிட்டர்கள். ஏற்கனவே ஹிந்தி மொழிக்கு (ஹை ஹை என்பதால் ) குதிரைக்காரன் பாஷை என்ற பெயருண்டே .குத்து மதிப்பாகத் திரும்பி விட்டோம். .அவர்கள் போகும்போது கேம்ப் இன்சார்ஜிடம் நாங்கள் வந்து போன விசயத்தையும் எப்போதுமே அந்த நதி பக்கம் போகக் கூடாது அங்கு முதலைகள் நிறைய இருப்பதாகவும் சொல்லி விட்டுப் போய் இருக்கிறாகள்.அதற்காகத்தான் நாங்கள் பகல் இரவு என்று டெண்ட் போட்டுப் பாதுகாப்பில் இருக்கிறோம் என்றும் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள் . .இரவு சுமார் ஏழுமணிக்குக் கேம்ப்பில் ,நன் நடத்தை ஒழுங்கு முறைக் கூட்டம் போடப்பட்டது .அதில் இந்த அறிவிப்பு கண்டிப்பாகப் பின் பற்ற வேண்டுமென்று சொல்லப்பட்டது . 



                  அந்த அறிவிப்பு வந்த பின் பலநாள் யார் கண்ணிலும் முதலை எதுவும் கண்ணில் படவில்லை .அதனால் சில பேர் மதியம் மரம் நடுதல் மூன்று மணிக்கு முடிந்தவுடன் திரும்பி வரும்போது டெண்ட்டில் உள்ள ராணுவ உடை ஆசாமிகளுகளின் கண்ணில் மறைந்து குளித்து  இருக்கிறார்கள்.அப்படியே அந்த விசயம் மெல்லப் பரவி, எல்லோருக்குள்ளும் நதி நீராடல் ஆசைப் பற்றிகொண்டது .ஆனாலும் ஒவ்வொரு நாள் மாலை நடக்கும் இருமணி நேர மாநில கலை நிகழ்ச்சிகளிலும் அந்த அறிவிப்பில் மட்டும் சொல்லபட்டுக் கொண்டே இருந்தது . அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை மரம் நடும் வேலை இல்லை .நமது சென்னையைச் சேர்ந்து ஐந்து மாணவர்கள் மட்டும் மதியம் மூன்று மணிக்கு நதியில் குளிக்கப் பாதுகாப்புக் கேம்ப் தாண்டி யார் கண்ணிலும் குளித்து இருக்கிறார்கள் நதியின் நடுப்பகுதிக்குப் போன ஒருவன் திடீரெனெக் கத்திச் கொண்டே உள்ளே இழுக்கப்பட்டு இருக்கிறான் .இன்னொருவனை ஏதோ கையைப் பற்றி இழுத்து இருக்கிறது .கரையை ஒட்டி நீச்சல் தெரியாத மூவர் இதைப் பார்த்துக் கத்த டெண்ட் ராணுவம் உதவ ஓடிப் போய் இருக்கிறது .கையைப் பற்றியவனை ஒரு கையை மட்டும் பிய்த்து விட்டது ஒரு முதலை இன்னொன்று இழுதுக்கொண்டு போய் விட்டது.சில மணி நேரத் தேடுதலில் சுமார் அரைக் கி.மீ தள்ளி இடுப்புவரை அவன் பாதி உடல் கரை ஒதுங்கியது.வெகு சிலரே அதைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். அதில் சுந்தர மகாலிங்கம் ஐயாவும் ஒருவர் அன்று கேம்ப் முழுவதும் மிகப் பயங்கர அமைதி நிலவியது இறந்தது தமிழ் நாட்டு மாணவன் ஆனாலும் எந்த மாநில டெண்ட்களிலும் இரவு உணவு எடுத்துக்கொள்ளபடவில்லை உணவுக் கமிட்டியிலும் நான் இருந்ததால் எல்லாம் மாநில டெண்டும் போவேன் எல்லா உணவும் கீழே கொட்டப்பட்டது அதுக்கு முந்த நாள் வரை சப்பாத்திக்குக்’ சப்ஜி’ சண்டை அனேகமாக எல்லா டெண்டிலும் இருந்தது ஆனால் அன்று வாலி வாலியாகக் கீழே கொட்டப்பட்டது .சப்பாத்திகளும் வீசப்பட்டது . 


அந்தச் சம்பவம் நடந்த சில நாளில் கேம்ப் முடிந்து விட்டது .ஆனலும் நான் பார்க்காத முதலை விட்டுச்சென்ற அந்த இடுப்புவரை உடல் மட்டும் என் நினைவுக்குள் மிதந்து கொண்டே இருந்தது. .ஏனோ பல நாள் கரை ஒதுங்கவே இல்லை…