வியாழன், 3 செப்டம்பர், 2015

எதிரணிக்கும் நடுவர்



பொதுவா நம்ம லோக்கல் அணிகளில் கார்க் மற்றும் ரப்பர்ப் பந்துக் கிரிக்கெட்டுக்கு உப்புக்குச் சப்பாணியைத்தான் அம்பயரா நியமனம் செய்வது வழக்கம் .ஆறு கல்லைப் பெறக்கிக் கையில் வைத்துக் கொண்டு பௌலிங் கிரீஸ் கோடு போட ஒரு குச்சியை வைத்துக் கொண்டு,அதே குச்சியில் ஓவர் கணக்கும் எழுதிக் கொள்வதும் முக்கியமான வேலைகள் ! .ஆனால் கிரீஸ் நோ பால் கொடுப்பது அடிக்க முடியாத அல்லது அடிக்கத் தெரியாத பந்துக்கெல்லாம் வைடுப் பால் என்று கூச்சலிடும் பேட்ஸ்மேன்களை சமாளிப்பதும் ,சில சமயத்தில் லெக் அம்பயர்ன்னு ( எதற்கும் அணியில் பயன்படாத உப்புக்குக் கூட இல்லை ஒப்புக்குச் சப்பாணி ) இல்லாத போது அவன் வேலையும் சேர்த்துப் பார்த்து .நெஞ்சுக்கு வரும் சாதரண ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடித்து,அவுட் ஆனதும் நோ பால் கேட்டு வெளியே போக மறுக்கும் பேட்ஸ் மேன்களிடம் தாவுத் தீர்க்கும் வேலைதான் மிகக் கஷ்டமான நடுவர் வேலை .

 அந்த வேலையை நான் பார்க்கப் போனது கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டதை விடப் பெரிய விபத்து .ஒரு சமயம் நாங்கள் அதிகம் விளையாடும் அல்லது அனுமதிக்கப்படும் திண்டுக்கல் பப்ளிக் ஸ்கூல் கிரவுண்டில் எனக்குக் குறி வைத்து விக்கெட்டுக்கு அழகாக வீசப்பட்ட பந்தை ஏறி அடிக்கிறேன் என்ற பெயரில் முன்னேற, பந்துத் தாடையைப் பதம் பார்த்தது சாதாரண அந்தப் பந்தை வீணாகப் பாடி லைன் (Bodyline) பந்தாக்கி ஒன்றரை இன் சதைக் கிழிந்து ரத்தம் வந்து நிற்கவில்லை.ஃபேமிலி டாக்டரிடம் போனால் வீட்டுக்கு விசயம் போய் விடும் .மெனெக்கெட்டு டாக்டரே காரை எடுத்துக்கொண்டு நேரில் போய்ச் சொல்லிவிட்டுத்தான் அடுத்தப் பேசண்டைப் பார்க்கப்போகும் அளவுக்கு நல்ல மனுசன் அவர் .எனவே ஜி ஹெச் போனோம் .அங்கு நண்பர் வரிசையில் நின்றுச் சீட் வாங்கி ,டாக்டரைப் பார்த்து,அவர் இன்னும் கொஞ்சம் இழுத்துக் காயத்தை இரண்டு இன்ஞ்சாக மாற்றித் தையல் போட அனுப்ப (அங்கும் கெட்ட நேரம்) ஒரு ஆண் உதவியாளர் மிகச் சாவதானமாகப் பக்கத்திலிருப்பவரிடம் விலா வாரியாகப் பேசிக் கொண்டே வலிக்க வலிக்கத் தையல் போட்டார் .அசங்கதப்பா தையல் விழாது என்ற அலட்டல் வேறு வலியை விடக் கடுப்பேற்றியது .ஒரு வழியாய்த் திருப்பி அடுத்த வாரமும் விளையாடப் போனால் எல்லாப் பந்தும் தாவாங் கொட்டைக்கு வீசப்படுவதாக ஒரு பிரம்மை அடிக்கடி வந்தது .( எல்.பி.டபில்யூ இல்லாததால் ) எப்போதும் போல்டாகாமல் பட்டோடி நவாப்புக்கு இணையாக விளையாடும் நான் (!) அன்று பார்த்து விக்கேட்டே எடுக்காத ஒரு ஸ்பின்னரிடம் இரண்டடித் தூரம் ஸ்டிக் பறக்க, வெளியேற்றப்பட்டேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த வழியாகப் போன இன்னொரு டீம் மேட்ச் கேன்சலாகி எங்களோடு விளையாடக் கேட்க எங்கள் டீமில் நல்ல அற்புதமான ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும் இன்று திண்டுக்கல்லில் மாதா எலெட்ரானிக்ஸ் உரிமையாளரக இருக்கும் செல்வராஜ் ,ராபர்ட் சகோதரர்கள் ,எலும்பு மூட்டுச் சிகிச்சை மருத்துவர் ஐயப்பன் டாக்டரின் தம்பி கார்த்தி ,எல் ஐ.சி ஏஜென்ட்களின் செயலாளார்க் கணபதி ,வெங்கடேஸ் சைக்கிள் மார்ட் வெங்கடேஸ் ,சென்னையில் இப்போது சுகாதாரக் கண்காளிப்பாராகக் கோவிந்தராஜ் ,பின்னாளில் வெறும் கேட்டரிங் மட்டுமே படித்து அமெரிக்கக் கப்பலில் உலைகையே வலம் வந்த சதீஸ் போன்ற எல்லோரும் எங்கள் அணீயின் தூண்கள். ஆனால் பலரும் அணியில் ஒரு பொழுதுப் போக்குக்காக விளையாடுவதால் அடுத்த அணியுடன் சீரியஸாகப் போட்டியில் போராடுவதை விரும்பாதவர்கள் .அதிலும் முக்கிய இடங்களில் இருப்பதால் சின்னப் பையன்களுடன் போட்டியிட்டு முடிவு (சென்னை 600028 படத்தில் வருவது மாதிரி) ஊத்திக் கொண்டால் என்ன செய்வது என்று ஒரு பயமும் அப்புறம் எதாவது அழுகுனி ஆட்டம் ஆடிச் சண்டை வந்து விடும் போன்ற இத்யாதிக் காரணங்களால் வெளி அணிகளுடன் பொதுவாக ஒத்துக் கொள்வதில்லை ஆனால் அன்று அப்படி விட முடியவில்லை .காரணம் எங்கள் அணியிலே பலரும் வரவில்லை .எனவே பால் மேட்சுக்கு ஒத்துக் கொண்டோம் .

டாஸ் வெற்றிப் பெற்றுப் புது அணியுடன் மோதுவதாலும் எங்களுக்கு இது பழக்கபட்டப் பிட்ச் என்பதால் பந்து வீச்சைத் தேர்வு செய்தோம் பொதுவாக இடக்கைப் பந்து வீச்சாளனான எனக்கு இருபது ஓவர் மேட்ச்சுகளில், எட்டு ஓவருக்குப் பிறகுதான் பந்து வீசும் வாய்ப்பு வரும் அதுவும் முன்னனிப் பவுலர்கள் அல்லது டீம் கேப்படனுக்கு நெருக்கமான எதுக்கு வீசுகிறோம் என்று தெரியாத சில பவுலர்கள் எதிர் அணியிடம் அடி வாங்கி நல்ல ரன் கொடுத்துப் பேட்ஸ்மேன்களை ஃபாமுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு (அடி வாங்க) பந்து வீச்சுத் தருவது வழக்கம் .அன்று அதனால் என்னை நடுவராக அணி நிற்கச் சொன்னது என் அணி .கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது .பொதுவா நான் உலகக் கிரிக்கெட்டில் கூட எந்த நாடு விளையாடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள மாட்டேன் அவர்கள் எப்படி வியூகம் வகுத்து ஒருங்கிணைந்துப் போட்டியை நகர்த்துகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வேன் .அப்படி இருக்கும் நான் விளையாட்டு ஆர்வத்தில் எத்தனை பந்துகள் போடுகிறார்கள் ,மொத்தம் எத்தனை ஓவர் போடுகிறாகள் ,ஒரு ஆள் எத்தனை ஓவர் போடுகிறான் ,ரன் அவுட்டுக்குப் பக்கவாட்டுக்கு நகர்வது ,கையில் இருக்கும் பந்து வீசும் கணக்குக்குக் கை மாற்றிக் கல் வைத்துக் கொள்வது முடியுமா என்று தெரியவில்லை என்பதே என் பயத்திற்கான காரணம் .அதை விட என் அணி ஆள்களிடம் கெட்டப் பெயர் வந்து விடக் கூடாது என்ற சட்டச் சிக்கல் வேறு இருக்குதே.

ஆனால் Think Of the Devil and there He Appears என்ற வாஈயம் எனக்காக்காவே எழுதப்பட்டது போல ! ஐந்து ஓவர் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை .நானும் என்னை ஏதோ இரு அணிகள் விளையாடுவதாகவும் அதற்குத் தேர்வு ஆனால் ஆறாவது ஓவரில் அந்த டீம் எங்கள் பந்து வீச்சாளார்களைக் கணித்து விட்டது .அடித்து ஆடத் தொடங்கி விட்டார்கள்.ஏழாவது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த ஒரு பையனக்கு எங்கள் அணி ஒரு ரன் அவுட் கேட்க நான் மறுத்து விட்டேன் .ஒன்பதாவது ஓவரில் அந்த அணியின் ஸ்கோர் 43.விக்கெட் ஒன்று கூடப் போகவில்லை .எங்கள் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அதே நல்ல பேட்ஸ் மேன் தலைக்கு மேல் வந்த பௌன்சரைத் தூக்கி அடிக்க எல்லைக் கோட்டில் கேட்ச் ஆகும் முன்னே ,யாரும் கேட்க்காமல் நோ பால் என்று கூவி விட்டேன் .ஏதோ ஒரு அற்புதமான டைமிங் சென்ஸ் என்று என்னை நான் வியந்து கொண்டு இருக்கும் போது எங்கள் கேப்டன் என்னை முறைத்துக் கொண்டு இருந்த எங்கள் பவுலரைச் சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு , என் அருகே வந்து நோ பால் கொடுத்தது தப்பில்லை .அது அவர்களே கேட்க்கவில்லையே கிருஷ்ணா என்று மனசு நொந்தது போலக் கேட்டார் .அது தப்புதான் என்று என் புத்திக்கு உறைக்கும் முன் பத்தாவது ஓவரில் எனக்குப் பந்து வீசும் வாய்பு என்ற பெயரில் மெல்ல நடுவர் பதவியிலிருந்து கழட்டி விட்டு ஃபீல்டிங்கில் நிறுத்தி 13 ஆவது ஓவர் கொடுத்தார்கள் .

மன நிலைச் சரியில்லாமல் பந்து வீசப் போய் முதல் பாலுக்கு லெஃப்ட் ஆர்ம் அரவுண்ட் ஸ்டிக் என்று சொல்ல மறந்து விட்டேன்.கிரிஸ் நோ பால் கொடுத்து நானும் டேவிட் செப்பர்டுதான் என்று என் அணிக்காரர் நிரூபித்தார். நோ பாலுடன் ஏழு பந்து வீசி மூன்று ரன் கொடுத்தேன் .ஆனால் என் சகப் பந்து வீச்சாளார்கள் எட்டாவது வள்ளலாக ரன் கொடுத்தும் ,எனக்கு வாய்ப்புத் தரவில்லை .ஆனால் என் மீதான என் அணியின் கோபத்தை என் அணிக்காரகள் கவனித்தார்களோ இல்லையோ எதிரணியின் துணைத்தலைவன் கவனித்துக் கொண்டே இருந்து இருக்கிறான்.ஒரு ஆறுதலுக்காக எனக்கு 19 ஆவது வீச அழைத்தார்கள் .ஒரு விக்கெட் 7 ரன் கொடுத்தேன் .என் கேப்டன் செல்வராஜ் என் அண்ணனின் நண்பர் என்பதால் அந்தக் கோபத்தை மறந்து விட்டார்.ஆனால் சொந்த அணிக்கு விசுவாசம் இல்லாதவன் போலப் பலரும் என்னிடம் பேசவில்லை .மீண்டும் எதிரணிப் பந்து வீச வரும் முன் செல்வராஜ் ( எங்கள் கேப்டன் ) அவர்களிடம் என்னை மெயின் அம்பயராக நிற்க அனுமதிக் கேட்டார்கள் .அவர் அணியின் மற்றவர்களைப் பார்த்தார் .நம் பேட்ஸ்மேன்களுக்கு பேராபத்து என்பது போல அவர்கள் கண்களாலே வேண்டாம் என்றார்கள் .ஆனால் செல்வராஜ் அண்ணன் சரி என்று அனுப்பி வைக்கச் சம்மதித்தார் .ஆனால் நான் போகும் முன் என்னை அருகே அழைத்து , பயப்படாதீங்கக் கிருஷ்ணா , ஆனால் அப்பீலுக்கு அப்புறம் சரியா இருந்தா முடிவெடுங்க என்றார் .அது எனக்கு ஆறுதலாக இருந்தது .

நல்ல வேளை அந்தப் போட்டியில் நாங்களே ஜெயித்தோம் .எங்கள் அணியின் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டு இருந்த சுரேஸ் ( சின்னக் கவாஸ்கர் என்று அழைப்போம் ) நின்று நிதானமாக் 83 ரன் எடுத்துப் பிரித்து மேய , மூன்று விக்கெட் இழந்து 17 ஆவது ஓவரிலே வெற்றிப் பெற்றோம். .அந்த அணியில் நல்ல பவுலர்கள் இருந்தும் புதுப் பிட்ச் கைக் கொடுக்காததால் எங்கள் அணியிடம் எளிதாகக் கொஞ்சம் டஃப் கொடுத்துத் தோற்றுப் போனார்கள் .எனக்கும் முடிவெடுப்பதில் மிகப் பெரிய பிரச்சனை வரவில்லை. .எதிரணித் தோற்று விடைப் பெறும் போது அந்த அணியின் அத்தனை பேறும் எனக்குத் தேடித் தேடிக் கைக் கொடுத்தது, இன்னொரு பெரிய ஆறுதல் .பின்னாளில் எதிரணி அம்பயர் வேலைத் திருப்பூர் வந்த பிறகும் தொடர்ந்தது .நான் வேலைப் பார்த்தக் கம்பெனியின் மூன்று யூனிட்டிலும் அற்புதமான கிரிக்கெட்டர்கள் இருந்தார்கள் .ஆனால் வெறியர்கள் .விடிய விடிய வேலைச் செய்தப் பிறகும் (கல்யாணம் ஆனப் பலரும் இதில் இருந்தார்கள் ) கட்டாயம் விளையாட வருவார்கள் .ஒரு டோர்னமெண்ட்டில் நான் கேப்டனாக இருந்து ஃபைனலில் பாச்சாங்காட்டு அணியுடன் மோதி ரன்னர் கப் வாங்கி எனது அருள்புரம் யூனிட்டில் ( இப்போது சேடப் பாளையம் யூனிட்) வைத்து விட்டு வந்தோம்
.
என்னதான் இரண்டு அணிகளும் விளையாடும் வரை கால் வலிக்க நிற்கும் கோட் ஸ்டாண்ட் வேலை அம்பயர் வேலையாக இருந்தாலும் எனக்கு அம்பாயர் வேலையில் மிகுந்த ஈடுபாடு வந்து நானே விரும்பி ஒட்டிக் கொள்ள முக்கியக் காரணம் இருந்தது . முதலில் விளையாட்டை ரசிக்க முடிந்தது இரண்டு அணிகளுக்கும் அம்பயாராக இருக்கும் போது நம்மைப் பொதுவாய்ப் பார்த்தார்கள் அதனால் அவர்களின் வெளிப்படையான பேச்சுக்களில் அணிகளின் திட்டமிடல்கள் தெளிவாகப் புரிந்தது. எந்தப் பவுலருக்கு என்ன ப்ளேஸ்மெண்ட்டில் ஃபீல்டர்ப் போடுவது, எப்படிப் பேட்ஸ்மேன் ஆடினால் எங்கு மூவபிள் ஃபீல்டர்ப் போடுவது அவன் தகுதி ,அடிக்க ஆரம்பித்தால் மிக்ஸிங் பவுலர்களைக் கொடுத்துத் திசைத் திருப்புவது ,போன்ற உலகத்தர நுட்பங்கள் அருவி போல அந்த இடத்தில் கிடைத்தது .எந்த அணி எதில் பலம் எதில் பலவீனம் என்பது போன்ற கணிப்புகள் எப்படிச் செய்கிறார்கள் மிகச் சுலபமாகப் புரிந்தது. .நல்ல பேட்ஸ் மேன்களின் ஃபுட் மூவ் கிட்ட இருந்து பார்க்க வரப் பிரசாதமாகக் கிடைத்தது .நல்ல பவுலர்கள் எப்படிப் பால் வீசி விக்கெட் எடுக்கத் திட்டமிட்டுப் பந்தைப் பிட்ச்சில் வைக்கிறார்கள் என்பது போன்ற பல வெற்றி ரகசியங்கள் அம்பயர் ( என்ற கல் பொறுக்கி ) இடம் நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பில் கொட்டிக் கொடுத்தது .ரகசியமாக எல்லோரின் திறமையையும் ரசிக்கச் சிறந்த இடமாக இருந்தது .யார் நல்லா விளையாண்டாலும் ரன்னர் பக்கம் வரும் போது பாராட்ட முடிந்தது .முதல் தர கிரிக்கெட்டை இன்றும் நான் ரசிக்க,புரிந்து கொள்ள, விவாதிக்க அன்று எதிரணி நடுவராக நான் நின்றப் போதெல்லாம் கற்றுக் கொண்ட பாடம்தான் உதவுகிறது .அவ்வளவு ஏன் என் பையன் என் அப்பாவுக்குக் கிரிக்கெட் தெரியும் என்று அவன் வயது பசங்களிடம் சொல்லிக் கொள்ள இது உதவியது .

பேக் வாய்ஸ் !

யாருப்பா அது ,ஏதோ இண்டர் நேசனல் கிரிக்கெட் அம்பயர் ரேன்ஞ்சுக்கு அனுபவம் எழுதறயான்னு ?

பதிலுக்கு கூட்டத்தில் எந்த சத்தமும் இல்லை!

ஒரு வேளை எனக்கு மட்டுமே கேட்கும்  மனப் பிராந்தா ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக