புதன், 26 அக்டோபர், 2016

90 வயது ஆனந்த விகடனும் & அதில் எங்கள் பரிசல்காரரும் !



                                  வெகு நாளைக்குப் பிறகு காதலித்த பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது ஆனந்த விகடனை நான் மீண்டும் வாசிக்க நேர்ந்தது .என்னப்பா ஊர்ல ஆயிரம் விசயம் இருக்கறப்ப இது ஒரு விசயமா ? இல்லைதான் .ஆனால் 90 வருடங்களாக வெளிவந்து கொண்டு இருக்கும் ஒரு மூத்த பத்ரிக்கையில் உங்களுக்கு வெகு நாளாகப் பழகித் தெரிந்தவர் வேலைக்கு அங்குப் பணி புரிய நேர்ந்தால் நீங்கள் காதலித்த பத்ரிக்கை மேல் ஒரு மறு ஈர்ப்பு நிகழத்தானே செய்யும் அதுதான் நடந்தது இங்கு ! 

                                 திருப்பூருக்குள் முதன் முதலாகப் பணிக்குச் சேர நுழைந்த போது ஆயத்த ஆடைப் பற்றிய எந்த முன் அபிப்ராயமும் எனக்கு இல்லை .எனது ஒன்று விட்ட சகோதரர் இங்கு இருந்தார் .அவருக்கு எனக்குப் பெண் பார்த்து எனக்குத் திருமணம் செய்து, ஆயிரம் காலத்துப் பயிரை என் மூலம் நட்டு வைத்து வளர்க்க மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் சொந்த ஊரில் டெக்ஸ்மோ ஷோரூமில் பார்த்துக்கொண்டு இருந்த கணக்காளர்ப் பணியை உதறி விட்டு அவர் ஆசையை நிறைவேற்ற வந்திருந்தேன்.சகோரரின் நண்பர் மூலம் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக் கிடைத்து அதன் கிளைப் பிரிவில் பணிபுரிய ஒரு காலை அருள்புரத்தில் உள்ள அந்தக் கம்பெனிக்குள் நுழைந்தபோது எதிர்பட்ட ஒருவரைப் பார்த்து, நான் ரசீது பாயைப் பார்க்க வேண்டும் என்றேன்.அவர் ஏற இறங்கப் என்னைப் பார்த்தவிதமே சரியில்லை ! ஆனால் பதில் உடனே வந்தது .ஒன்பது மணிக்கு வந்திடுவார் . 

               அப்புறம் பணிக்குச் சேர்ந்த சில நாளுக்குப்பிறகுதான் தெரிந்தது நான் ரசீதுபாய் என்ற குற்ப்பிட்ட நபர் அந்த யூனிட்டில் எல்லோரும் பயப்படும் மேலாளரின் பெயரை .சரி அவரை விடுங்கள். நான் கேட்ட போது பார்த்தவிதமே சரியில்லாத அவர்தான் இப்போது இங்குப் பதிவிற்குக் காரணம் .அவர்தான் K.B.கிருஷ்ணகுமார்.இப்போது ஆனந்த விகடனில் பரிசல்(காரன்) கிருஷ்ணா(குமார்) என்ற பெயரில்- சப் எடிட்டர் அவதாரம் எடுத்து இருக்கிறார் .இதில் என்ன பெருமை இருக்கிறது ? இருக்கிறது . 

                                 கால நேரமில்லாமல் சக்கரமாய்ச் சுழலும் இந்த ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்த ஒருவர் சுவாரசியமான ஒரு பத்ரிக்கைக்குப் போவது அவ்வளவு சுலபமில்லை .எழுத்து என்பது ஒரு சூட்சுமமாய் ஓயாது உள்ளே ஓடிக்கொண்டு இருக்கும் நதி போல! .தன்னில் ஓடும் நதியை விட்டுவிட்டு அடுத்த நாள் கப்பலேறவிருக்கும் ’ஷிப்மெண்ட்’ என்று சதா மண்டையைப் போட்டுப் பிறாண்டிக்கொண்டு இருக்கும் வேலை பார்ப்பவர் தன்னுள் அந்த நதியைக் கவனிக்க முடியாது. அப்படியே பாயும் நதியெல்லாம் பாலைவனத்தின் அடியில் மறைந்து போன சரஸ்வதி நதி போலாகி விட்டது. 
ஆனால் அதற்கும் தீனி போட்டுக்கொண்டு தன்னையும் அதே யூனிட்டில் மேலாளராக வளர்த்துக்கொண்டு உயர்ந்தவர்தான் இந்தப் பரிசல்காரர்.அது மட்டுமல்ல அந்த நிறுவனத்தில் அவர் வகிக்காத பதவிகளே இல்லை என்ற அளவுக்கு முக்கியமான A to Z பதவிகளிலும் முத்திரைப் பதித்தவர் என்பது வேறு விசயம். 

           அவருடைய மேற்பார்வையில்தான் என் பணித் துவங்கியது .சில வாரத்திற்குப் பிறகு ஒரு காண்டிராக்டர்தான் அவர் ஆனந்த விகடனுக்கெல்லாம் எழுதுபவர் என்று சொன்னார்.அன்றிலிருந்துதான் ,அவரோடு நெருக்கமாகப் பின்பற்றி நடந்தேன்.எழுதுபவர்களோடு பயணிக்கும் சுகமே தனிதான்.அது நம்மை இயற்கையோடு கைகோர்த்துக்கொள்வதற்குச் சமம். 


                      அவரோடு சுமார் ஐந்து வருடம் இருந்து இருக்கிறேன் .அவர் கம்பெனியின் எல்லாத் தளங்களில் உள்ள பணியாளார்களோடும் நெருங்கிப் பழகுவார்.சாதாரண லைன் பீஸ் கணக்கு எழுத பணியில் அமர்த்தப்பட்ட என்னை, ஆயத்த ஆடைத் தயாரிப்பின் பல்முகங்களிலும் நனைத்து எடுத்தவர்.அவர் எப்போதும் எனக்குச் சொல்லித்தரும் ஒரு வாக்கியம் - இங்குத் திருப்பூரில் நிர்வாகத்திற்குக் கடினமான வேலைகளை விடக் கவனம் மிகுந்த முக்கியமான வேலைகளைச் செய்தால்தான் நமக்கான சம்பள உயர்வு பொறுப்பும் பதவியும் தேடி வரும் என்பதுதான் அது .அப்படித்தான் கடைசிவரை என்னை வழி நடத்தினார்.எதிலும் ஒரு தெளிவானப் பார்வை வைத்து இருப்பார். அதைவிடவும் பணிபுரிந்த நிர்வாகத்தின் எந்தப் புதிய திட்டமிடலில் இவர் கைதான் ஓங்கியிருக்கும் .இதனால் பல பேரின் பகையையும் பெறுவதில் தப்பவில்லை . 

                         வேலை நேரம் போக வெளியில் அவர் முகம் வேறு .மிக எளிமையாகப் பழகுவார் .அற்புதமாகப் பைக் ரைடிங் பண்ணுவார்.சாலையில் யாராவது இண்டிக்கேட்டர்ப் போடாமல் திரும்பி விட்டால் போச்சு . அவனைத் துரத்திப் போய் அந்நியன் பட அம்பியாக மாறி வம்பு செய்வார் . செஸ் விளையாட்டில் பட்டையைக் கிளப்புவார் .கிரிக்கெட் அதைவிட அபாரம் .அவர் ஒரு ஆல்ரவுண்டர். 
                                           இது வேறு யாருக்காவது நடந்து இருக்கா என்று எனக்குத் தெரியாது.ஒருக் கம்பெனியில் நீங்கள் பணியில் சேரச் சிபாரிசுத் தேடுவீர்கள் .ஆனால் ஏழு வருடம் வேலைப் பார்த்த இடத்தை விட்டு வெளியேறச் சிபாரிசுத் தேடியிருக்கிறீகளா ? நான் தேடியிருக்கிறேன் .அதையும் செய்து தந்தவர்களில் இருவரில் பரிசல்காரரும் மிக முக்கியமானவர். 

                             பணி புரிந்த இடத்தில் சில இடமாற்றம் நடந்தது.கிருஷ்ணகுமார் சார் அப்போது முதலாளிக்குப் பி.ஏ அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டுத் தலமை அலுவலகம் போய் விட்டார்.நான் பணிபுரிந்த யூனிட்டின் ஆரசியல் மூச்சுத்திணறலில் முங்கித்தவித்தேன் .இதிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க அவரிடம் உதவி தேடிக் கம்பெனிக் குடியிருப்பில் இருந்த அவர் இல்லத்தில் சந்தித்து, நிலைமையைச் சொன்னேன் .புரிந்துகொண்டு ஒரு நல்ல சமயத்தில் வெளியேற உதவினார் .அவர் அப்போது எங்கள் சென்று எப்படி என் முதல் பணியில் சேர்ந்த போது அவரிடம்தான் முதல் வார்த்தைப் பேசினேன் .அதே போல என்னை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறும் போதும் அவரோடு பேசி நன்றி சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சில வருடங்களில் அவரும் வேறு நிறுவனம் போய் விட்டார். 

                  பிறகு அவரோடு தொடர்பு குறைந்து போனது .அடுத்து அவர் எழுதிய ’டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ கதைத்தொகுப்புக் கூட இப்போதுதான் அறிந்துகொண்டேன் . மீண்டும் சில முகநூலில் அவரைச் சந்தித்தேன் .அவர் வாழ்வில் மாறாத தழும்பாய் ஒரு அசம்பாவிதம் நடந்தபோது அவர் வீடு எங்கு இருக்கிறது என்று கூடத்தெரியாது .மிகத்தாமதமாகத் தெரிந்துத் தேடிப்போனபோது பெருமாநல்லூர்ப் போய் அங்கிருந்து வீட்டு முகவரிக்காக அலைபேசியில் அவரைத் தொடர்புக் கொண்டபோது , வீட்டில் இருக்க வேதனையாக இருக்கிறது ,அதனால் கோவை வரை போகிறோம் என்ற மனம் உடைந்து போன பதில் வந்தது.ஆனாலும் வீடு போனேன் அவர் சகோதரர் அம்மாவைச் சந்தித்து விட்டு வந்தோம் .... 

                            அதற்குப் பிறகு ஒரு நாள் அவர் விகடனில் சப் எடிட்டராக இணைந்து விட்டதாக அறிந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன்.நதிகளின் தேடல் கடல்தானே ? இப்போது விகடனின் 90 ஆவது இதழில் அவரின் பங்கு இருப்பதால் அவரோடு நான் பணிபுரிந்தப் போது உடன் இருந்தவர்களைத் தொடர்புகொண்டு படிக்கச்சொன்னேன்.சந்தோசப்பட்டார்கள். உடனே அலைபேசி எண் கேட்டார்கள் கொடுத்தேன். இன்னும் நிறையப் பேர்க் கேட்பார்கள் ....அன்புத் தொல்லைகள் தொடரும் ! 

இனி தலைப்புக்கு வரலாம் .. 

விகடனுக்கு வயது 90. 



                                     வெகு நாள் கழித்துக் காதலித்த பெண்ணைச் சந்தித்தால்,முதலில் பரவச மேலிட பேசிக்கொள்வோம் அது சில மணி நேரத்தில் ஊடலாய் மாறுவது வியப்பேதுமில்லை .காரணம் முடிந்த இடத்தில் மீண்டும் தொடங்குவது போல இருவரின் பிரிவுக்கு யார் காரணம் என்று விவாத பந்தயம் வைப்போம் .அது போல .ஆ.வித் தன்னுடைய அழகான இமேஜைத் தொலைத்ததோடு அதன் என்னைப்போல வாசகர்களைத் தொலைத்தற்கு முக்கியக் காரணம் சில இருந்தது .அதன் வடிவம் மாறி அதன் விலையேற்றம் கட்டாயமான போது என்னைப்போலப் பல வாசகர்கள் சுனாமியின் சிக்கியக் கரையோரத்துக் குடிசை வீடுகள் போலக் காணாமல் போனோம் .இரண்டாவது இவ்வளவு விலைக் கொடுத்து வாங்கும் ஒரு இதழில் இளமை ,புதுமை,நடப்பு , ஆன்மீகம் என எல்லாமும் இருப்பதையே விரும்புவோம் .ஆனால் ஆ.வி அதைத் தனக்குள் பிரித்துக்கொண்டது .இன்னும் பிரித்துக்கொண்டேயும் போகிறது .

  இது வாசிப்பு உலகின் வியாபார வெற்றியா ,தந்திரமா ? இல்லை ஆழமாக ஒரு விசயத்தைச் சொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சியா ? தெரியாது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதழ் வாங்குமளவிற்கு இன்னும் என்னைப்போல வாசகன் முன்னேறவில்லை . சரி. இது ஒரு வாசிப்பவனின் ஆதங்கமாக இருக்கட்டும் . 
                     

பொக்கிஷத்தில் விடுபட்ட முத்துக்கள்  !

                          விகடன் 90 வயதுக்காரர் .மூத்தவர்கள் தன் வாழ்வின் இளமை எப்படி இருந்து இருந்தாலும் அதை மறைத்துச் சொல்ல மாட்டார்கள். 

                           # பொக்கிஷம் ஆனந்த விகடனின் (பக்.197-212) பகுதியில் 50 நிகழ்வுகள் அழியாத சுவடுகளாக , மாறாத அழகோடு பதிவுச் செய்யப்பட்டு .ஆனால் அதில் ஒரு முக்கியமான வரலாற்று விசயம் இருந்து இருந்தால் நன்றியாக இருந்து இருக்கும் .1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் நடத்திவந்த ‘ஆனந்த விகடன்’ இதழைத்தான் எஸ்.எஸ்.வாசன் ரூ. 200 விலைக் கொடுத்து வாங்கி அந்த இதழைத் தானே நடத்த ஆரம்பித்தார். அப்படியே பெயரைக்கூட மாற்றாமல் அதை நடத்திக்கொண்டு இருக்கும் போது அதைச் சொல்லியிருக்கலாம்! அந்த இதழ்களும் 1835-ல் தொடங்கி ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). அரிய புத்தகங்களைச் சேகரிப்பில் பத்திரமாக இருக்கிறது.வரலாறு கவனிக்கப்படும்போது நதிமூலமும் ரிசிமூலமும் பேசியினால் தவறேதும் இல்லை .(ஆனால் விகடன் விக்கிப் பக்கம் https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_விகடன் - ஆனந்த விகடன் என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது என்ற பதிவு செய்கிறது.) 

இரண்டாவது விட்டுப்போன ஒரு முக்கிய நிகழ்வு


                 எனக்கு அப்போது பதினேழு வயது நன்றாக ஞாபகம் இருக்கிறது .அந்த நிகழ்விற்குப் பிறகுதான் தமிழ் வாசகர்களிடம் மிகவும் முக்கியமாகக் கவனிப்பட்டப் புத்தகமாக ஆனந்த விகடன் மாறியது என்றால் தவறில்லை.அது எதுவும் ஆனந்த விகடன் பொக்கிஷத்தில் குறிப்பிடப்படவில்லை . 

                1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களைக் கைதுசெய்துச் சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்குத் தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். வழக்கில் வென்ற இவருக்கு ரூ.1000 நஷ்டஈடு வழங்கப்பட்டது.சிறையில் இருந்து இவர் கம்பீரமாக நடைபோட்டு வருவதுபோல ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கார்ட்டூன் வரைந்தார் ஆர்.கே.லஷ்மண். அது இவருக்கு மிகவும் பிடித்துவிடவே ஒரிஜினல் கார்ட்டூன் ஓவியத்தைக் கேட்டு வாங்கினார். ஆர்.கே.லஷ்மண் கையெழுத்துடன் கூடிய அந்தக் கார்ட்டூனையும், நஷ்டஈடாகக் கிடைத்த 1000 ரூபாயையும் ப்ரேம் போட்டு தன் அலுவலகத்தில் மாட்டினார்.( https://ta.wikipedia.org/wiki/எஸ்._பாலசுப்பிரமணியன் .) 

        இதைப்பற்றி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது கடைசிப் பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார் . 
விகடன் அட்டைப் பட ஜோக்குக்காக அதிமுக அரசுச் சிறைத் தண்டனை விதித்தபோது, எம்ஜிஆரிடம் நீங்கள் பேசுவீர்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எது உங்களை எதிர்த்துப் போராட வைத்தது? 

                   விகடன் ஒரு புரட்சிப் பத்திரிகைக் கிடையாது. எல்லோரும் வாசிக்கக் கூடிய, ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகைதான் அது. ஆனா, அன்னைக்கு எம்ஜிஆர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை என் மீதானத் தாக்குதலாகவோ, விகடன் மீதானத் தாக்குதலாகவோ பார்க்கலை. ஒட்டுமொத்தப் பத்திரிகைச் சுதந்திரத்து மேலேயும் நடத்தப்பட்ட தாக்குதல். அதைத் தனிப்பட்ட வகையில, குறுக்குவழியில அணுகினா, இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கே நான் வந்திருக்க வேண்டியதில்லை. 

முடிவாக....

                 எல்லாம் சரிதான் .இதற்குப்பிறகும் நீ விகடன் வாசிப்பாயா மாட்டாயா ? என்ற கேள்வி உங்களிடமிருந்து வருகிறது .சரிதானே ? பழைய காதல் அப்படி விட்டு விட முடியுமா ? அதுவும் பரிசல் கிருஷ்ணா சார் அங்கு இருக்கும் போது  !....

செவ்வாய், 11 அக்டோபர், 2016

நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்” .

நூல் விமர்சனம்.

lao tzu

பாதை சரியாக இருந்தால் - ஒஷோ .
தமிழில் - வரலொட்டி ரெங்கசாமி .
கவிதா பப்ளிகேசன்ஸ். 

                      சீனாவின் பிரபலமான ஞானிகளில் ஒருவர் லாவோ ட்சுவின் புகழ் பெற்ற சீடர் ஷீவாங் ட்சு .அவரின் போதனைகளை, ஓஷோவின் நீண்ட ஆழமான பார்வையில் சொற்பொழிவாற்றிய பதிவின் நூலாக்கம்தான் இந்த ’பாதை சரியாக இருந்தால்’ தொகுப்பு . ..

               ஓஷோ ஷீவாங் ட்சுவை , இயேசுவையும் ,புத்தரையும் விட அபூர்வமானவர் என்கிறார் .காரணம் அவர்கள் அதைச் செய் இதைச் செய் என்று செயலின் மேல் கவனம் செலுத்தினார்கள் .ஆனால் ஷீவாங் ட்சுவோ செயலின்மையை வலியுறுத்துகிறார்.மெய்ஞானத்தின் திறவுகோலாகச் செயலின்மை ஒரு தீர்க்கமான வழி என்கிறார். உங்களுக்குள் இயல்பாக இருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீங்கள் மெய்ஞான மலர்ச்சி அடைவீர்கள் .இதற்கு அவர் புத்தரின் வாழ்வையே உதாரணமாகச் சொல்கிறார். 

                              சித்தார்த்தராக இருந்த புத்தர் சுயஞானம் பெற ஆறு ஆண்டுகள் முயற்சி செய்து ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட வெறுப்பிலிருந்தார் .தன் நம்பிக்கையை முற்றிலும் இழந்தார்.அந்த நிலையில் எல்ல முயற்சிகளையும் கைவிட்டார்.மெய்ஞான மலர்ச்சிப் பெறும் நாளுக்கு முந்திய நிலையில் சித்தார்த்தர் எல்லா முயற்சிகளையும் கை விட்டார்.முழுச் சூன்ய நிலையில், அன்று இரவு செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற செயலின்மையை உணர்ந்து, கனவுகளே இல்லாத எந்த இயக்கத்தினாலும் தூண்டுதலே இல்லாத அன்றைய இரவு தூக்கம் அமைந்தது.அதை ஜென் தத்துவம் சடோரி நிலை என்கிறது .                                                                                                                                                                   மனமற்ற  நிலை என்பதன் முதல் அனுபவம் – சடோரி என்று இதைக் கூறுவார் ஓஷோ இதையே சமாதி நிலை என்று நமது ஞானமார்க்கம் சொல்கிறது .அன்றைய இரவில்தான் சித்தார்த்தர்ப் புத்தராக மலர்ந்தர்.மறுநாள் காலை ஞானம் பெற்றார் .ஆதலினால் செயலின்மைதான் புத்தரின் ஞானத்தின் விளைவு என்று தீர்காமாகப் பேசுகிறார் லாவோ ட்சு. 

இதயம் சரியாக இருந்தல் நேர் - எதிர் 
வாதங்களை மறந்து விடுவோம் . 

                    உந்துதல் இல்லை .வற்புறுத்தல் இல்லை .தேவைகள் இல்லை. ஈர்ப்புகள் இல்லை.இவைகள் யாவும் இல்லாத இடத்தில் உங்கள் விவகாரங்கள் உங்கள் அதிகாரத்தில் நீங்கள் சுதந்திர மனிதர் என்கிறார் லாவோ ட்சு. 

                         இதை வாசிக்கும் நமக்கு ஒரு நெருடல் மோதுகிறது .அதெப்படி சித்தார்த்தர் என்ற பெயரின் பொறுளே லட்சியத்தை அடைந்தவர் என்பதாக இருக்கும் போது செயலின்மையை எப்படி நம்புவது ? சித்தார்த்தர் தான் ஞானம் பெற வேண்டும் என்ற அக மனத்தூண்டுதலினால்தான் ஞானம் பெற்றார் என்று நம்புகிறோம் .ஆனால் லாவோ ட்சு நம் ஞானம் என்பது செயலின் விளைவு அல்ல. நம் உள்ளே உறைந்து கிடக்கும் இயல்பை வெளியே இறைந்து கிடக்கும் இறைத்தனமையுடன் இணைத்துக்கொள்ளும் தன்மை என்று உணர்த்த முயற்சிக்கிறார். 

                           லாவோ ட்சு பற்றிய ஓஷோவின் பார்வயில் இன்னொரு அழகான அதே சமயம் வித்தியாசமான விசயம் ,”உங்களிடம் எது அழகாக இருக்கிறதோ அதை மறைத்து வையுங்கள் ”என்று சொல்லும் லாவோ ட்சுவின் போதனை .மேலும் அவர் சொல்லும் போது நாம் அதற்கு மாறான செயலில்தான் பெரும்பாலும் ஈடுபடுகிறோம் .நம்மிடம் உள்ள தவறுகளை மறைக்கிறோம் .எப்போதும் உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதால் இன்னும் அதிகமாக வளர்கிறது .உங்கள் அசிங்கம் ,அவலம் ,தவறுகளை வெளிப்படுத்தினால் ஒத்துக்கொண்டால் அது நீர்த்துப் போய் விடும்.இது ஒரு ஆச்சர்யமான போதனையாக் உணரவேண்டியதிருக்கிறது.

Gurdjieff 

                   இந்த நமது ஆச்சர்யத்தின் முடிச்சுகளை ஓஷோ ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப் மூலம் அவிழ்க்கிறார்.”நீங்கள் குரங்காக இருப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மனிதனாக வாழ முடியாது .காரணம் குரங்கின் குணம் அடுத்தவர் செய்வதை அப்படியே செய்வது -Aping .

மூன்றாவது காது.

                           ஒரு குருவின் வேலை உங்களைத் தியானத்தின் மூலம் உங்கள் இருப்பைக் கவனிக்க வைப்பது மட்டுமல்ல உங்களுக்கு உள்ளே வைத்து இருக்கும் அப்பா சொன்னார் ,அம்மா சொன்னார் குரு சொன்னார் இன்னும் யார் யாரோ சொன்னக் குரல்களின் பதிவைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கிறது .அந்த வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்கச் செய்கிறார் குரு.அந்த வெற்றிடத்தை இயற்கைத் தன்னைக்கொண்டு நிலை நிறுத்தும் .அப்போது உங்கள் மூன்றாவது காது உருவாகும் அதன் மூலம் இயற்கையின் குரல் கேட்கும் .இவர் சொன்னார் அவர் சொன்னார் என்ற குரல்களை விரட்டி விட்டு அந்தக்குரல் மூலம் உங்கள் வாழ்வின் முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள் .அதை நம் வேதங்கள் அசரீரி என்கிறது .

            இந்த மூன்றாவது குரலைக் கேடுக்கும் காதுடன் இயற்கையாகப் பிறப்பதால்தான் தாவரங்கள், பறவைகள் ,மிருகங்கள் ,புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் இவர்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ்கின்றன என்கின்றார் லாவோ ட்சு.ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என்ற வசனம் இப்படித்தான் பிறந்தது என்று சொல்லலாம்!

தேவைகள் - ஆசைகள்

                      அடுத்து ஒரு அற்புதமான நடைமுறை சிக்கலுக்கு வழி காண்பதில் லாவோ ட்சு முயல்கிறார்.சுவாசிப்பது ,உணவு ,நீர்,இவைகள் உலக உயிர்களபொதுவானவை எளிமையானவை .தேவையை இயற்கை ஏற்படுத்துகிறது .தேவைப் பூர்த்திச் செய்யப்படுகிறது .ஆனால் அதே தேவை வெறியாகும் போது ஆசையாகிறது. ஆசை வருங்காலத்தின் பொருட்டு மனம் ஏற்படுத்தும் சிக்கலான தந்திரம்.இந்தக் குணம் இருப்பதால்தான் மனிதன் தனது ஆசைகளைக் கூட்டிக்கொண்டே போய் ஒரு நாள் அதற்குள் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டு பிறவி யின் நீட்சியைத் தொடர வேண்டியதாக இருக்கிறது.

                     இதைத் தெளிவு படுத்த ஓஷோ, கன்ஃபூசியசுக்குப் பின் வந்தவருள் மிகவும் முக்கியமானவர் சீனத் தத்துவஞானியான மென்சியஸ் அவர்களின் இறக்கும் தருவாயில் அவரிடம் ஒரு கேள்விக் கேட்கப்பட்டதை நினைவுப் படுத்துகிறார் .மென்சியஸ் அவர்களே உங்கள் வாழ்க்கையினை முதலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்த்தால் என்ன செய்வீர்கள் ? .அதற்கு மென்சியஸ், என் தேவைகள் மெல் கவனம் செலுத்துவேன் என் ஆசைகள் மேல் இல்லை என்றாராம் .

Mencius

         ஆனால் ஓஷோ சொல்லும் போது நம் தேவைகளைக் கண்டிப்பதே மதங்களின் நோக்கமாக இருக்கிறது .இயற்கை உடலின் செயல்பாடுகளுக்குத் தேவைகளை உருவாக்குகிறது.ஆனால் மதங்கள் நீங்கள் உண்பதையும் ,உறங்குவதையும் கண்டிப்பதோடு வரப்போகும் சுவர்க்கம் ,நரகம் ,முக்தி,மோட்சம்,பேரின்பம் என்ற ஆசைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது .அதனால்தான் இந்த உலகம் அசிங்கமாக்கப்பட்டு விட்டதாக ஓஷோ ஆதங்கப்படுகிறார்.

குருவுக்கு - சிஷ்யர்களின் தேவை

                                    ஒரு அபூர்வமான உண்மை இங்கு லாவோ ட்சு மூலம் ஒஷோவால் பேசப்படுகிறது .போதிதர்மர்த் தனது சீடன் வருகைக்காக ஒன்பது வருடம் சுவற்றைப் பார்த்துத் தீவிரமாக அமர்ந்து இருந்தவரலாறு நமக்குத்தெரியும் .அதோடு புத்தர் ,இயேசு தங்கள் வாழ்வில் சீடர்களைப் பெறுவதில் பெறுமதிப்புக் காட்டியதாகச் சொல்கிறார்.காரணம் அவர்கள் பெற்ற அந்த மெய்ஞானம் என்பது ஏற்கனவே புதைத்து வைத்து இருக்கும் புதையல் அல்ல.ஒவ்வொருவரும் தனக்குள் கண்டுபிடித்துக்கொள்ளும் ரகசியம் என்கிறார் அதாவது புத்தரோ , போதி தர்மரோ ,இயேசுவோ ,நபிகளோ தான் பெற்ற ஞானத்தை , மலர்ச்சியை என்ற உணர்வை ஒரு சீடன் மூலம் அறியப்பட வேண்டும் என்பதாலேயே சீடர்களைத் தேடுவதில் அவர்கள் அனைவரும் அக்கறை காட்டினார்கள் என்கிறார் .ஞானம் என்ற பூட்டின் சாவி நம் ஓவ்வொருவருக்குள்ளும் இயல்பிலேயே படைக்கப்பட்டு இருப்பதாகவும் அதை அவரவர் உணர வைக்கும் போதனைதான் ஞானிகளின் சீடர்களைத் தேடுவதில் இருந்து இருக்கிறது .

              சமரச சன்மார்க்கம் பேசியவர் வள்ளலார் , கடை விரித்தேன்.. கொள்வாரில்லை, இதனால் கடையைக் கட்டிவிட்டேன் என்று வேதனைப்பட்டது கூட இந்த வெளிப்படுதான் என்ற வார்த்தைகள் மூலம் அறியலாம்.இன்றும் கூட நாம் உலத்தில் பல மெய்ஞானிகளின் வார்த்தைகளை விட அவர்கள் உருவச் சிலைக்கும் ,அவர்களின் போதனைகளடங்கிய புத்தக்கங்களுக்கும் அவர்கள் பெயரில் பின்பற்றபடும் வழிமுறைக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.புத்தர் கூடத் தனக்குப் பின் தன்னை வழி படக்கூடாது என்பதைக் கட்டளையாகச் சொல்லியிருந்தார் .நாம் கேட்கவில்லை.எனவே ஞானமடைந்தவர்களுக்குக் கோவில் கட்டுவதும் ,யாத்திரைப் போவதும் ,வழிபாடு நடத்துவதும்,புனித நூல்களில் தேடுவதும் , பூசாரிகள் ,மேதைகள் இவர்களிடம் தேங்கியிருப்பதாக நம்புவது , கடலுடன் கலந்த ஒரு ஆற்றை வழிபடுவதை விட்டு விட்டு அந்த ஆறு பாய்ந்து சென்ற வற்றிப்போன ஆற்றுப்படுகையை வழிபடுவதற்குச் சமம் என்று நெற்றிப் பொட்டுக்குள் தீ மூட்டுகிறார் ஓஷோ.


பாதை சரியாக இருந்தால் - நூல் வாசிப்பு , ஒரு பாய்ந்து கொண்டு இருக்கும் நதியின் தரிசனமாக உணர முடிகிறது. 

திங்கள், 3 அக்டோபர், 2016

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ - விளையாட்டும் , பந்தயமும் .


                      உங்கள் காலில் சின்னதாக ஒரு கட்டி வந்துவிட்டது .அட்டா நான் எவ்வளவு நல்லவன் எனக்குப் போய் இந்தக் கட்டி வந்துவிட்டதே என்று வருத்தப்படுவீர்கள் .ஒரு கட்டத்தில் காய்ச்சல் அளவுக்கு வந்து விட்டால் வீட்டில் இருப்பவர்கள் அல்லது வெளியே இருப்பவர்கள் என்னங்க இது இப்படி விட்டுடீங்கன்னு ஆதங்கப்பட்டதற்குப் பிறகு மருத்துவரிடம் போவீர்கள் .அவர் அந்தக் கட்டியின் தன்மைப் பொறுத்து உங்களுக்குச் சிகிச்சையளிப்பார்.சில சமயம் நாளாகிவிட்டால் சின்னதாக ஒரு அறுவைச் சிகிச்சை நடக்கும் . 

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ 

                      அப்படிப்பட்ட சின்ன அறுவைச் சிகிச்சைதான் நமது சிறப்பு ராணுவப்படை Parachute Regiment Special Forces மூலம் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு ஹெலிகாப்டர்கள் வீரர்கள் மூலம் பாராசூட் உதவியுடன் இறங்கித் தீவிரவாதிகளின் முகாம்களைக் குறிப்பிட்ட நேரத்தில் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு அங்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்கோ சேதம் ஏற்படாமல் அதே சமயம் துல்லியமான தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்காமல் தாக்கி நிலைகுலையச் செய்து விட்டு மீண்டும் நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள் . இந்த ‘துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) மூலம் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

எங்கு நடந்தது ? 

                      இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த இராணுவப் போர் நிறுத்த கோடு Line of Control - LoC நமது இந்தியக் காஷ்மீர எல்லைப்பகுதியில் ஏழு இடங்களில் உள்ள முகாமிலும் எல்லைமீறி ஊடுறுவல்களுக்கான வழிகாட்டிகள் மற்றும் தீவிரவாதிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுப் பதுங்கியிருப்பதாகவும் உளவுத் துறையினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அதை முறியடிக்கவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ம் தேதி அதிகாலை 4 பாகிஸ்தான் தீவிர வாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும்விதமாகத் தளபதி தல்பீர் சிங் கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலின் மூலம் நம் இந்திய எல்லைப் பகுதியிலிருந்து 500 மீட்டர் முதல் 3 கி.மீ. தொலைவுவரையுள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்டப் பகுதிகள் மிகவும் சிக்கலான மலைப்பகுதியில் அமைந்திருந் தீவிரவாத முகாம்களைத்தான் இந்தியச் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களால் செய்யப்பட்ட ரகசிய ராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டு இருக்கிறது . 

               பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் நள்ளிரவில் வான்வழியாகத் தரையிறங்கித் திடீர்த் தாக்குதல் நடத்துவது அவ்வளவு சுலபமா ? 

இல்லை ஆனால் நம் நாட்டின் சிறப்புப் படையின் துல்லியமான தாக்குதல் மூலம் இது சாதிக்கப்பட்டு இருக்கிறது .உலகின் ராணுவச் சிறப்பு அதிரடிப் படையில் நாம் 7ஆவது இடத்தைப் பெற்றது ராணுவம் . நம்மிடம் ஒன்பது வகைச் சிறப்புப் படைகள் இருக்கிறது .

1.MARCOS - Marine Commandos 
2.Para Commandos- Parachute Regiment 
3.Ghatak Force - 'killer' in Hindi 
4.COBRA -Commando Battalion for Resolute Action 
5.Force One 
6. Special Frontier Force 
7. National Security Guard 
8. Garud Commando Force 
9. The Special Protection Group 

             

                       அதில் இரண்டாவது வகை  Para Commandos பாகிஸ்தான் முப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவி ஹெலிகாப்டர்கள் மூலம் பாராசூட் வீரர்கள் ஆக்கிரமிப்புக் காஷ்மீரின் 7 இடங்களில் தரையிறங்கி 7 பகுதிகளில் அமை கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தாக் குதல் நடத்தியதன் மூலம் 7 முகாம் களும் முழுமையாக அழிக்கப் பட்டன. சுமார் 4 மணி நேரச் சண்டைக்குப் பிறகு வியாழக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் தாக்கித் திரும்பியிருக்கிறார்கள் .காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்திய ராணுவத் தாக்குதல் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை எப்போது, எங்கு வெளியிட வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். உரிய நேரத்தில் வீடியோ வெளியிட இருக்கிறது. 

                   இங்கு நடத்தப்பட்டது போல்தான் அல்கொய்தாத் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமாப் பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசியத் தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படைச் செய்தது. 

 ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட அரசு - பாக் !

                 அதே போலதான் இந்தியா ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் செய்துள்ளது .இது முழுக்க முழுக்கத் தீவிரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கை மட்டுமே .பாகிஸ்தான் அரசு ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாக இருந்தாலும் அது ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட அரசுதான் .சில சமயம் அங்குத் தளபதி அசிம் பஜ்வா போன்ற ராணுவத் தளபதிகள்தான் பிரதமரைக் கட்டுப்படுத்துகிறார்கள் .அந்த ராணுவத்தின் தளபதிகள் ஏதோ பல காரணங்களுக்காக அப்பாவி மக்களைக்கொல்லும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் மற்றும் வழிகாட்டிகளை நியமித்து இப்போது நாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா போன்ற உயரமான பகுதிகள் மூலம் எல்லைப்பகுதிக்குள் ஊடுறுவுகிறார்கள் . சும்மாவாவது துப்பாகிச் சூடு நடத்தி எல்லைப்பகுதியில் நம் ராணுவத்தின் கவனத்தைத் திசைத் திருப்பி விட்டு இளம் வயது இளைஞர்களை மூளைச் சலவைச் செய்து தீவிரவாதத்தை மனதில் புகுத்தி அனுப்பி வைக்கிறார்கள் . கடந்த ஓராண்டில் மட்டும் காஷ்மீர் எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகளை முறியடித்துள்ளோம்.பல பேர்க் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகள். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற் றவில்லை. இந்தியா மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.. 

தாக்குதலின் விளைவு ! 

          இந்திய ராணுவத் தாக்குதலால் இரு நாடுகளிடையேயும் தற்போது போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. இந்தியத் தரப்பில் பஞ்சாப், காஷ்மீர் எல்லையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் வெளியேற்றம் 

         எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுவதால் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிச் சுமார் 10 கி.மீ. வரை உள்ளக் கிராமங் களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்’

               பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரு வதையும் உடந்தையாய் இரு பதையும் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கைச் செய்துள்ளார் .ஆனால் இதோடு போகாது .தீவிரவாதிகள் முதுகில் குத்திப்பழகியவர்கள் .அதனால் மெல்ல மெல்ல ஊடுறுவித் தங்கள் தாக்குதலுக்குத் தயாராவர்கள் .இந்தியாவும் காத்துக்கொண்டு இருக்கிறது …



இங்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது . 

ஹஸ்வான் என்ற சீன மன்னனுக்குச் சேவல் சண்டயில் விருப்பம் அதிகம் அவன் தன்னுடைய சேவல் சண்டைப் பயிற்சியாளனாக ஷி ஷ்ஸிங் என்ற தாவோ ஞானியை வேலைக்கு வைத்து இருந்தார் .அவரிடம் சேவல் கொடுக்கப்பட்டதாம்.
சேவலைக் கொடுத்த முதல்நாளிருந்து மன்னன் தினமும் சேவல் சண்டைக்குத் தயாரா எனக் கேட்க ஆரம்பித்து விட்டாராம்..
முதல் நாள் வந்தவுடன் அரசனின் சேவல் மற்ற சேவலுடன் சண்டையிடத் துடித்துக்கொண்டு இருந்ததாம்.அடுத்த சேவல் கூவினால் தன் சிறகுகளைச் சிலுப்பிகொண்டு சண்டைக்குத் தயாராகுமாம் .
அதனால் இன்னும் சேவல் தயாராகவில்லை என்று சொல்லி அனுப்பினாராம் அந்தத் தாவோ பயிற்சியாளர்.
இப்படியே பத்து நாளுக்குப் பிறகு அடுத்தச் சேவலைக் கண்டால் கோபப் பார்வையுடன் தாக்கத் தயாராகுமாம்.
இன்னும் சேவல் தயாராகவில்லை என்று சொல்லி அனுப்பினாராம் .
இன்னும் பத்து நாளாகிவிட்டது பிறகு மற்றொரு சேவல் கூவினாலோ எதிரே வந்தால் கூடக் கண்களைக்கூட இமைப்பதைத் தவிர்த்ததாம்.மேலும் தன்னுடைய அசைவை ஒரு மரக்கட்டையைபோல அசைவற்று வைத்து இருந்ததாம். அப்போதுதான் அந்தப் பயிற்சியாளான் அரசனுக்கு இந்தச் சேவல் சண்டைக்கு ஏறக்குறையத் தயாராகி விட்டது என்று கொடுத்து அனுப்பினாராம் !.

           பயிற்சியாளனுக்கு அது விளையாட்டு .ஆனால் மன்னனுக்கு அது பந்தயம் . அதாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மூலம் ஜெயிக்க விரும்பும் மன்னன்.நாம் தீவிரவாதத்திலிருந்து பாகிஸ்தானையும் அதன் மக்களைக் காப்பாற்றும் தாவோ பயிற்சியாளன்.