திங்கள், 27 மார்ச், 2017

அப்பாவின் கடைசி ஆசை .



                    ரவு நல்ல மழை .  மக்களும் சாலையும் ஒன்று போலவே எப்போதும் மழைக்கு மட்டும் பழக்கப்படவேயில்லை. வழியெல்லாம் சாலை எது தண்ணீர் எது என்பது தெரியாமல் நிரம்பி ஓடிக்கொண்டு இருந்தது . எப்படியோ மறக்காமல் ரெயின் கோட் அலுவலகத்தில் இருந்ததால் வீடு வந்து பத்திரமாகச் சேர்ந்தாகி விட்டேன்.தொலைக்காட்சியில் ,திருப்பூரில் தொடர் மழையென்ற செய்தியும் அதிகமாகப் பெய்து கொண்டு இருக்கும் பகுதிகள் காட்சியாக்கப்பட்டு ஒளிபரப்பிக் கொண்டு இருந்தார்கள் . 

                அப்பா இந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டு இருப்பார். எப்படியும் பத்து மணிக்குள் அலைபேசியில் தொடர்பு கொள்வார் .என்னப்பா அங்க மழையாமே ? பத்திரமா நனையாம வீடு வந்தூட்டியான்னு விசாரித்து முடிக்காமல் தூங்க மாட்டார் . 

                  ஆனால் தினமும் தொடர்புகொள்ளும் அப்பாவிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக அழைப்பே வரவில்லை .தூங்கும் முன் மனைவியிடம் கேட்டேன் அப்பா உனக்கு ஏதுவும் ஃபோன் பண்ணினாரா ? இல்லையென்றார் மனைவி . 

லைபேசி அழைத்தது ... 
மணி இரவு 2.30 . 
நான்காவது அண்ணன் பேசினார். 
அப்பாவுக்கு ரொம்பவும் முடியவில்லை.திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனைப் பெயர் சொல்லி அங்கே சேர்த்து இருப்பதாகவும் உடனே கிளம்பி வா என்றார். 
எனக்கு முதுகுத் தண்டுக்கள் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு.இனம் புரியாத பயம் கவ்விக்கொண்டது . 
          அம்மா இறந்து மூன்று மாதம் முடிந்து சில நாட்களே ஆகியிருந்தது அப்போது .இன்னும் முழுதாய் அந்த அழுத்தமான மன நிலையிலிருந்து யாரும் விடுபடக் கூட இல்லை. 

        நான் மொபைல் பேசுவதில் எழுந்து கொண்ட மனைவி ,என்ன என்றார் பதஷ்டமாகச் சொன்னதும், நானும் வரவா என்றார் .இல்லை போய்ப் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பிக் கொண்டு இருந்த அரை மணி நேரத்தில்  மீண்டும் அலைபேசி அழைப்பு . 
இப்போது இரண்டாவது அண்ணன் குரல் . 

கிருஷ்ணா , அப்பா போயிட்டாருடா . 

           என் நண்பர் ஆதியை அலைபேசியில் அழைத்தேன்.வந்தார் .என்னிடமிருந்த அலுவலகப் பணம் மற்றும் சில முக்கியத் தகவல்களைச் சொல்லச் சொல்லி விட்டு அவரிடம் கொடுத்தேன் .கார் ஏற்பாடு செய்யவா என்றார் அவர் வேண்டாம் என்று பையனை எழுப்பிக் கிளம்பினோம்.பையனையும் மனவியையும் அவரே பஸ் நிறுத்தம் வரை வந்து கொண்டு போய் விட்டு விட்டுப் போனார். 
பேருந்தில் ஏறி அமரும் வரை நான் இறுகப் பிடித்து வைத்து இருந்த என் ஆற்றாமை அதற்கு மேல் இருப்புக்கொள்ளவில்லை. 

என்ன செய்வதென்று தெரியாமல் நான் அழுவதை முதன் முறையாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான் என் எட்டு வயது பையன். 

         நான்காவது அண்ணன் வீட்டில், அப்பாவை வைத்திருப்பதாக மேலும் ஒரு அலைபேசி அழைப்பில் சொன்னார்கள் . 

           அண்ணன் வீடு போய்ச் சேரும் போது மெல்லச் சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியது . 

        இந்த உலகத்தில் நாற்பத்தி மூன்று வருடம் என்னைத் முழுவதுமாகத் தெரிந்த ஒரு மனிதர் அந்தக் கண்ணாடிப் பெட்டிகுள் படுத்திருந்தார். 

வாடாக் கிருஷ்ணா என்று சிரிக்கவில்லை . 

ப்ரணவையும் , புனிதாவையும் கூட்டி வந்தியான்னுக் கேட்கவில்லை . 

இந்த உலகிற்கு என்னைத் தந்த அந்த மனிதர் வெறும் உடலாகக் கிடந்தார். 


     எனக்கு முன்னே வந்திருந்த அந்த ஊரின் என் நண்பர்கள் வெகு வேகமாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள் . 

      அப்பாவின் உடலுக்கு இறுதி யாத்திரைக்குத் தேவையான சடங்கு சம்பிராதயக் காரியங்களுக்கான வேலைகளை நண்பன் மாரிமுத்துச் செய்து கொண்டு இருப்பதாகச் அண்ணன் சொன்னார். 

           அவனை அலைபேசியில் அழைத்தேன் .வந்து வந்துட்டியான்னுக் கேட்டு விட்டு வச்சுட்டான். 

          என் நண்பர்கள் அனைவருக்கும் அப்பா ரொம்பப் பரிச்சயம். என்னைத் தேடி வீட்டு வந்தாலும் அப்பாவுடன் புத்தகம் பற்றியோ அன்றைய செய்திகள் பற்றியோ பேசிக்கொண்டு இருப்பார்கள் . அந்த உரையாடல்களில் அப்பா தன்னைத் தன்னை மூத்தவர் என்று காட்டிக்கொண்டதே இல்லை .மிகவும் சகஜமாகப் பேசிப்பழகுவார்.எல்லோருக்கும் பிடிக்கும் .விடிய விடிய வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாலும் என்னப்பா தூங்கலையான்னுக் கேட்டு விட்டுப் போய் விடுவார் .அதனால் அப்பாவிடம் என்னை விடவும் நண்பர்கள் பிரியமாகவே இருந்தார்கள் .அதனால் அவருக்கும் செய்யும் இறுதி மரியாதை யார் சொல்லியும் அங்கு எந்த வேலையும் நடக்கவில்லை தானாகவே செய்துகொண்டு இருந்தார்கள்.நண்பர் சங்கர் சொல்லும் போது சில மாதம் முன்னே பேசிக்கொண்டு இருந்த போது கூட உங்க வீடெல்லாம் கோயில் மாதிரி கிருஷ்ணா .எந்த வீட்டிலும் அத்தனை சுதந்திரம் நண்பர்களுக்கு இருந்திருக்க முடியாது என்று நினைவுபடுத்திக்கொண்டார். 

கடைசிப் பையன் என்பதால் அப்பாவின் உடலுக்கு நெருப்பிட்டு இறுதி அஞ்சலி செலுத்த வைத்தார்கள் . எல்லாக் காரியமும் முடிந்து போனது . 

         அப்பாவுக்குச் சில ஆண்டுகளாகச் சிறு நீரக நீர் வெளியேற்றத்தில் தடை இருந்ததால் செயற்கைக் குழாய் மூலமே வெளியேற்றம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது .அம்மாவின் மறைவு நேரத்து நட்சத்திரத் தோசம் இருந்ததால் ஐந்து மாதம் தினமும் விளக்கேற்ற வேண்டியது இருந்தது. அப்பாதான் செய்து வந்தார்.அதையும் ஒரு மாதம் இறந்த வீட்டில் இருந்து செய்து விட்டுத் தனது நண்பர் வீட்டுக்கு எதிரில் குடிபெயர்ந்தார்.அடிப்படை வசதி குறைந்த வீடு இது ஏன் என்று கேட்ட எங்களுக்குத் தன் நண்பர் திரு.முனியாண்டி வீட்டுக்கு எதிரே இருப்பதைச் சந்தோசமாக நினைக்கிறேன் என்றார். கடைசிவரை அப்பா தனது நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் .அதை எங்கள் நண்பர்களுக்கும் செய்தார் . அப்பாவின் அந்த நண்பர் ஒரு இசைக் குழு வைத்திருந்தார்.முன்பெல்லாம் அப்பா வெகு நேரம் அங்கேதான் இருப்பார் .இத்தனைக்கும் அப்பாவுக்கும் சங்கீதத்திற்கும் எப்படி ஒரு ஈர்ப்பு அந்த வயதில் வந்தது என்று தெரியவில்லை .எந்த நண்பர் விட்டுக்கு எதிரே இருந்தால் சந்தோசம் என்று வந்தாரோ அந்த நண்பர் வீட்டுக்கு அப்பா அங்கிருந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூடப் போகவில்லை .அதைச் சொல்லித்தான் அவர் நண்பர் அப்பாவின் இறுதிப் பயணத்தின் போது சொல்லிச் சொல்லிக் கலங்க வைத்தார். 

               சில நாளுக்குப் பிறகு அப்பாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் இருந்ததால் அப்பா இருந்த வீட்டில் நான் தங்க வேண்டி வந்தது .சில ஆண்டுகளாக அவர் புத்தகம் வாசிக்கச் சிரமப்பட்டதால் அண்ணன் வாங்கிக் கொடுத்த பல புத்தகங்கள் புதிதாய் அலமாரியில் இருந்தது .அதில் பெரிய கனத்தப் புத்தகம் ஆறு இருந்தது. அது பாலகுமாரனின் - உடையார் . 

                            னக்கு வாசிக்கக் கற்றுத் தந்த இரண்டாவது அண்ணனுக்கும் ,என் அப்பாவுக்கும் ,எனக்கும் எப்போது புத்தகம் வாசிப்பதில் போட்டி உண்டு .முதல்ல யார் படிப்பதென்பதே அந்தப் போட்டி .அண்ணன் எப்போதும் கொடுத்து விடுவார் .அப்பா வேகமாக வாசிக்கும் பழக்கம் இருப்பதால் அவரால்தான் முதலில் வாசிக்கப்படும் .ஆனால் புத்தக விசயத்தில் நான் பேராசைக்காரன் முதல்ல நான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் வழக்கமிருப்பதால் எனக்குத் தெரியாமல் அப்பாவிடம் தான் கூடப் படிக்காமல் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் .அந்த ஆறு பாகத்தில் அப்பா தன்னுடைய உடல் உபாதையையுடனே இரண்டு பாகத்தை முழுமையாக முடித்து விட்டு மூன்றாவது பாகத்தில் படித்ததற்காக ஒரு அடையாளம் வைத்து இருந்தார்.அங்கிருந்த சில நாளில் அப்பா படித்து முடித்து அடையாளம் வைத்து இருந்த அதே இரண்டரை பாகம் அளவுக்குத்தான் என்னாலும் படிக்க முடிந்தது... 

                         தனக்கு உடல் சரியான பின் என்னுடன் இங்குத் திருப்பூர் வந்து பத்து நாளாவது தங்க வேண்டும் என்பதே அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. எல்லோரும் சொன்னார்கள் .அப்பா அவஸ்தைப் படக்கூடாது என்பதால்தான் அம்மா தான் இறந்த போன 104 ஆவது நாளில் அழைத்துக் கொண்டதாக. நல்லவிதமான இறப்பு என்றார்கள் . 

                 சில மாதங்களுக்கு முன் எனக்கு இரண்டாவது ஒரு பையன் பிறந்தான் .அவனுக்குப் பெயர் வைக்கப் பேசிக்கொண்டு இருந்த போது நண்பர் சுகுமார் ஒரு பெயர் சொன்னார் .அந்தப் பெயரின் இரண்டாவது பாதிப் பெயர் எதேச்சையாக அப்பாவின் பாதிப் பெயராக இருந்தது.அப்பா பத்து நாள் இங்கு வந்து தங்கிப் போக ஆசைப்பட்டார். இயற்கை இன்னொரு பையன் பெயரில் என் வாழ் நாள் முழுதும் தங்க வைத்து விட்டது . 

                     அப்பாவின் நண்பருக்கு எனக்கு இரண்டாவது பையன் பிறந்து இருக்கிறான் என்று அலைபேசியில் சொன்ன போது அவர் சந்தோசப்பட்டார்.அப்பா இருந்தா ரொம்ப  சந்தோப்பட்டு இருப்பார் என்றார். 

                கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீபாவளி , பொங்கல் , முப்பது நாள் கோட்டை மாரியம்மன் திருவிழா எதற்கும் பிறந்த ஊரிலிருந்து அழைப்பும் இல்லை . நண்பர்கள் மட்டும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . 


ன்று அமாவாஸை தினம் .
                  தாய், தந்தையரை இழந்தவன் என்ற முறையில் விரதம் கடைபிடிப்பது வழக்கம் . 

இந்த உடலைக் இந்தப் பூமிக்குக் கொடுத்த அப்பா அம்மாவுக்கு நினைவாகவும் என்னைப் போலத் தன் பிறந்த ஊரில் தனது முகவரியையும் அடையாளத்தையும் இழந்த அத்தனை பேருக்கும் இந்தப் பதிவு சமர்பணம் .

புதன், 15 மார்ச், 2017

அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !



            இன்னும் கொஞ்ச நேரம்தான்  இருக்கிறது . ஒருவேளை  நான் தாமதித்தால்   இன்ஸ்பெக்டர் இந்த கோவிலுக்கே தேடிவரலாம்.நான் பையனுடன் கடைசியாகக் கோவிலுக்குப் போக மட்டுமே அனுமதி கொடுத்தார்கள் .  கை விலங்கு பூட்டிக் கைது செய்யாமல் , ஜெயிலுக்கு அழைத்துப்போக இன்ஸ்பெக்டர் ஒப்புக்கொண்டார் . யார் எனக்காக கேட்டார்கள் என்று கூடத்தெரியவில்லை.ஆனால் அது தாற்காலிக தப்பித்தல்தான். ஏற்கனவே  முடிந்து விட்டது எல்லாம். இன்னும் பத்தாண்டு காலம் ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் .வீட்டுக்குப் போனவுடன் மஹரிசியின் எல்லாப் புத்தகங்களையும் கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெயிலுக்குள் இத்தனை புத்தகம் கொண்டு செல்ல அனுமதி தருவார்களாத் தெரியவில்லை .எனக்கு ஏதோ ஒரு சோகம் மனதைக் கவ்வியது . நான் வசித்த வீடு ,பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை , எடுத்துக்கொண்டு இருக்கும் தத்துவ வகுப்புகள் எல்லாமே  இன்றோடு எனது இந்த வாழ்க்கையில்  முடியப்போகிறது . நாளைக் காலை ஜெயிலுக்குள்தான் எனக்கு விடியல்.முகம் தெரியாத யாரோடு தங்க வைக்கப் போகிறார்களோ ? ஒருவருடனா இல்லை பல பேருடனா ? தெரியவில்லை . 

          பையனும் வேடிக்கை பார்த்துக்கொண்டே  வந்து கொண்டு இருந்தான்.அப்பா உங்கள் மொபைல் தாங்க என்றான். பையனை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கிறது.அவனிடம் எப்படிச் சொல்வது ? பதினோறு வயது பையனை விட்டு விட்டு ஜெயிலுக்குப் போக எந்த அப்பாவுக்குத்தான் நிம்மதி இருக்கும் .ஒரு வேளை அவன் என் கண்டிப்பிலிருந்து விலக்குக் கிடைத்து விட்டதால் சந்தோசமாக இருப்பானா ? ரெண்டு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம்தான் அவனை அடித்தேன் . அந்தக் கோபத்தில் அப்பா ஜெயிலுக்குப் போகட்டும் என்று விட்டு விடுவானா ? தினமும் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து நான் கூட்டி வரப் போகவில்லையென்றால் அவன் ஃபிரண்டுகளுக்குத் தெரிந்துவிடும்.எல்லோரும் ப்ரணவ் அப்பா ஜெயிலுக்குப் போய் விட்டார் என்று சொல்லி அவனைக் கேளி செய்யக்கூடும் .அது எனக்கு அவமானமாகத் தோணியது ! ஆனால் வேறு வழியில்லை ! .அப்பா இல்லாத அவன், யார் பராமரிப்பில் வளர்வான் ? . பாவம் அந்தப்பையன் குற்றவாளிக்கு மகனாகப் பிறந்து விட்டோமே என்று நான் திரும்பி வந்த பிறகு பேசுவானா ? புத்தி மனதைப் பிறாண்டியது .அழுது விடுவேனோ என்று உள்ளுக்குள் பதஷ்ட்டம் தொற்றிக்கொண்டது . 

            என மனைவி அவள் தம்பி வீட்டுடன் வசித்துக் கொண்டு இருக்கும் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து பையனின் பள்ளிக்கூடத்திற்கு அருகில் வீடு பார்த்துத் தங்கச் சொல்ல வேண்டும் .ஆனால் வாடகை எப்படிக் கொடுக்க முடியும் ?  என் வங்கி வைப்பு நிதியை வைத்துக்கொண்டு ஒரு வருடம் தாக்குப் பிடிக்கலாம் .அதற்குள் கைக்குழந்தைச் சின்னவனுக்கு ஒரு வயதாகிவிடும்.அவள் அம்மாவிடம் விட்டு விட்டு எதாவது வேலைக்குச் செல்வாள்.என்னிடம் வேலைக்குப் போகவா வேண்டாமா என்று ஒப்புக்குக் கேட்பாள் .ஆனால் நிச்சயம் போவாள்.அவள் அப்பாவின் பென்சன் தொகைப் போதாது .ஒருவேளை அந்தப் பள்ளியிலிருந்து அவனை நீக்கி விட்டு வேறு எதாவது பள்ளிக்கூடம் சேர்த்து விடுவார்களா ? அப்படியானால் சென்ற வருடம் கட்டிய அந்த பெரிய டொனேசன் தொகை வீணாகப் போய் விடுமே ? என்னால் அதற்கு மீறி யோசிக்க விருப்பமில்லை .எனக்குத் தெரியும் நான் யோசித்தால் மட்டும் அது நடந்து விடாது . என் குடும்பத்தில் நான் இல்லாது போனால் யார் யாரோ முடிவெடுப்பார்கள் .தனியே இருக்கப் போவதால் அவள் இரண்டு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பைப் பொருத்து ஒத்துக்கொள்வாளோ என்னவோ ? 

                  எனக்கு என்னவோ உள்ளே பிடுங்கித் தின்னுவது போல அசூகை வந்தது .  காலெல்லாம் நடுங்கியது . கையைப் பிடித்து இருந்த பையன் கையை விடுவித்து  அந்தக் கோவிலின் வெளி வளாகத்தில் தளர்ந்து உட்கார்ந்தேன். பையன் என் மாற்றத்தைக் கவனித்தான் .என்னப்பா ? என்றான். ஒன்றுமில்லைப்பா என்றேன் .இப்போது சொல்ல வேண்டாம். வீட்டிலிருந்து கிளம்பும்போது சொல்வோம் .ஆனால் என்னால் அவனைப் பிரிவதைத் தாங்கிக் கொள்ள முடியுமா தெரியவில்லை .ஏன் இப்படி ஒரு சோதனை என்ன தவறு செய்தேன் பத்தாண்டு ஜெயிலுக்குப் போகுமளவுக்கு ? தெரியவில்லை . 

                ஜெயிலுக்குள் எனக்குத் தியானமெல்லாம் தெரியும், தத்துவச் சிந்தனையில் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறேன் என்றால் என்ன சொல்வார்கள் ? அதெல்லாம் தெரிந்து என்னய்யாப் பிரயோசனம் ? அப்படினா நீ ஜெயிலுக்கு எதுக்கு வந்தேன்னு கேளி செய்வார்களா ? இதெல்லாம் சொல்லலாமா ? நான் ஜெயிலுக்குப் போய்விட்டேன்னு தெரிந்தால் இங்கு என் தத்துவ ஆசிரியர் தகுதியை இழந்து விடுவேனா ? ஜெயிலுக்குப் போனவன் திரும்பி வந்து தத்துவ வகுப்பு எப்படி எடுக்க அனுமதிப்பார்கள் ? சொல்லாமல் விட்டாலும் தெரியாமல் தவறுதான் . ஆனால் ஒரு ஆசிரியன் ஆக வேண்டும் என்ற கனவு பறி போய் விடுமே ? இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது ? சொல்ல வேண்டாம் என்று சொல்ல வேண்டும் .அதெப்படி அதுவே தவறுதானே ? பொய் சொல்ல குரு அனுமதிப்பாரா ? பொய் சொல்பவன் தத்துவ வகுப்பெடுத்தால் மற்றவர்களுக்கு உணர்வாய் போய்ச் சேராதே .இயற்கைப் பெயரில் பொய் சொல்லுபவனை இந்த உலகத்தில் எந்த உயிரும் மன்னிக்காதே . கடவுளே என்ன பாவம் செய்தேன் .ஏன் நான் தண்டிக்கப்பட்டேன் ? 

        வீட்டுக்கு வண்டியில் வந்தோம் . பையன் வழக்கம் போல வண்டியை நிறுத்தும் முன் என் பாக்கெட்டிலிருந்த செல் ஃபோனை எடுத்துக்கொண்டு கேம் விளையாட உட்கார்ந்து விட்டான் .அவனுக்குத் தெரியாது இனிமேல் அந்தச் செல்ஃபோம் அவனுக்கே சொந்தம் .ஜெயிலுக்கு எடுத்துப் போக அனுமதியில்லை . ஆயிரம் யோசனைகள் என்னிடமிருந்து கழன்று விடுவது போலத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது . என் இந்த வண்டியைக் கூட மனைவியின் தம்பியிடம் கொடுத்து விடுவார்கள். ஜெயிலிருந்து திரும்பி வரும்போது நிச்சயமாய் எனக்கு இந்த வண்டியை ஓட்டுவதற்குப் பிடிக்கப்போவதில்லை.அதற்கு என்ன செய்வது ஓட்டாமால் ஸ்டாண்டு போட்டா வைத்து இருக்க முடியும் ? 


             உள்ளே வந்தேன் இந்தத் துணி ஸ்டாண்டில் என் பீரோவில் இருக்கும் எந்த உடையும் இனி எனக்குப் பயன் படப்போவதில்லை.ஜெயிலில் என்ன உடைத் தரப்போகிறார்களோ அதுதான் இனியெல்லாம் . நான் ஜெயிலுக்குப் போவதால் ஒரு சந்தோசம் மட்டும் லேசாய் வந்தது .எப்படியாவது நான் சேர்த்து வைத்திருக்கும் மொத்தப் புத்தக்கத்தையும் படித்து விடுவேன். எப்படியாவது மாதமோ அல்லது அனுமதிக் கிடைத்து என்னைப் பார்க்க ஜெயிலுக்கு வருபவர்களிடம் இதையெல்லாம் ஒவ்வொன்றாயாவது எடுத்து வரச் சொல்லவேண்டும் .

             இது என்ன அற்பச் சந்தோசம் .குடும்பத்தை அனாதையாய் விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போய் இந்தப் புத்தகமெல்லாம் வாசித்து முடித்து விடுலாம் என்று யோசிக்கிறேனே ? சே ! என்ன ஒரு குரூர சுயநலம் ? புத்தகம் படிக்கவா ஜெயிலிக்குப் போகிறேன் .ஆனால் என்ன செய்வது வேண்டாம் என்றால் அந்த இன்ஸ்பெக்டர் மன்னித்து விட்டு விடுவாரா ? கோர்ட் ஏன் எனக்கு இந்தத் தண்டனை கொடுத்தது ? ஓடி விடுவோமா ?  முடியாது .மனைவி குழந்தையெல்லாம் ஸ்டேசன்ல வைத்து உண்மையைச் சொல்லச் சொல்லிக் கொடுமை படுத்துவார்கள் . இப்படித்தான் கம்பெனி விசயமாக ஒரு குற்றத்தைக் கண்டறியக் காவல் துறையை நாடிய போது என்னிடமே ஒரு ஏட்டு சொல்லியிருக்கிறார். குற்றவாளியுடைய பொண்டாட்டிப் பிள்ளைகளையும் அவன் அம்மாவை ஸ்டேசன்ல வைத்து அடிக்கிற மாதிரி செய்தால் கூடக் குற்றவாளித் தன் குற்றத்தை எப்படியாவது ஒத்துக்கொள்வானாம். அது பெரிய பாவம் . அவர்கள் என்னால் ஸ்டேசனல்லாம் போக வேண்டாம் .என் மீது இன்னும் வெறுப்பு வரலாம் .நான் போய்த்தான் ஆகவேண்டும் .

          அப்பா அம்மா ஒன்றாய் இருக்கிற ஃபோட்டோவையும் , மனைவி குழந்தை குடும்பம் இருக்கிற போட்டோ ஒன்றையும் எடுத்துப் பைக்குள் வைத்தேன்.அதில் புதிதாய்ப் பிறந்த மூன்று மாதக் குழந்தை போட்டோ இல்லை .யாரையும் ஜெயிலுக்கு வந்து பார்க்க கூடாது என்று சொல்லிவிடலாம் .இவர்கள் வந்தால் என் வேதனை கூடலாம்.சினிமாவில் பார்ப்பது போல ஜெயிலின் விசிட்டர் ரூம் கம்பி அடைப்புக்குப் பின்னால் நின்று கொண்டுதான் இனி இவர்களைப் பார்க்க வேண்டுமா ? முடியாது. என்னால் தாங்க முடியாது .எனக்கு எங்கிருந்து அப்படி ஒரு அழுகை வந்தது தெரியவில்லை .கேவிக் கேவி அழத்தொடங்கினேன். 
என் உலகத்தில் நான் மட்டும் தனியாக அனாதையாக உணர்ந்தேன்.
சட்டெனே கரைந்தது போல எல்லாம் மறைந்து விட்டது 

சட்டெனெ விழிப்பு வந்தது ... 
என்ன கனவிது ? 
ஜெயிலுக்கு நான் ஏன் போக வேண்டும் ?


பக்கத்தில் பையன் அவன் தலையணையிலிருந்து விலகி வந்து என் தலையணையில் தூங்கிக் கொண்டு இருந்தான் .

அவன் முகம் அந்த இரவு வெளிச்சத்தில் லேசாய்ச் சிரித்தபடி இருந்தது.

ஒருவேளை அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !

சனி, 11 மார்ச், 2017

பெண்ணியம் அப்படின்னா ? Feminism ?

 


                          முகநூலில், தோழி .சில்வியா பிளாத் ஏடா கூடமாக ’ஒரு சிறு குறிப்பு வரைக. பெண்ணியம் என்றால் என்ன? என்று ஆரம்பித்து வைத்தார் .. .எல்லோரும் உளறிக்கொட்டுபவராகத்தான் பதில் சொல்லிக்கொண்டு இருந்தோம் . நான் புத்திசாலியாக நினைத்துக்கொண்டு 'பெண்கள் பிடிக்காதுனு சொல்றவங்க ’ஹிப்போகிரிட்’ ஆகத்தான் இருப்பாங்க!’’ - என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் ஆனந்தவிகடன்.காம் கட்டுரையைப் பகிர, அதற்கும் அவர் கேள்விக் கேட்கவே நான் ஒரு நல்ல முடிவெடுத்தேன். காரணம் இது பொதுவெளி .கேள்விக் கேட்பது ஒரு பெண் தோழி. எல்லோரும் எதாவது சொல்லி இருக்கிற மானத்தையும் கப்பலேற்றக் கூடாது என்ற பாதுகாப்புணர்வு மேலோங்க ” ஆண்கள் பார்வையில் பெண்ணியம் எப்போதும் சரியாக வராது .நீங்களே சொல்லுங்கள் - Yes I surrender .” என்று நெடுஞ்சான்கிடையாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டேன். ( திருமணமாகி 11 வருசத்தில் இந்த மாதிரித் தோல்விகள் சகஜம்தானே ? ) 

                 ஆனால் உண்மையில் இந்தக் கேள்வியை என்னை நோக்கி நானே கேட்டுக் கொண்டால் மலுப்பலில்லாமல் பதில் வருமா என்றால் சத்தியமாய் இல்லை.இந்திய ஆண்களின் சாபமா இல்லை உலக அளவிலும் மொத்த ஆண்களுக்குக் கிடைத்த சாபாமாத் தெரியவில்லை மொத்த வாழ்க்கையுமே ஆண் பெண் பற்றிய புரிதல் துளியும் இல்லாமலே வாழப் பழகிக்கொண்டு விட்டான். பிறந்தது முதல் பாலூட்டிப் பெண் ஆணின் உடமைப் பொருள் போலவேதான் பார்க்கவும் நடத்தவும் படுகிறாள்.அவன் ஒரு கார் வைத்து இருந்தால் அதற்கு அவன் மட்டுமே முதலாளி.அவன் விரும்பியது போலத்தான் அது நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அசேதனப் பொருளுக்கு உள்ள மதிப்புதான் தன்னோடு இருக்கும் பெண்ணுக்கும்.என் அப்பா என் அம்மாவை நடத்தி விதமே நான் அவன் மனைவியையும் நடத்த வேண்டுமெனெ எதிர்பார்க்கிறான் . 

                  ஒரு ஆணின் பொதுப்பார்வையில் நான்கு வகைப்படுகிறாள் .ஒன்று பெண் சிறந்தவள் என்று சொல்லி எதுவுமே தெரியாமல் வரலாறுகளை உத்திரவாதம் காட்டி உயர்த்திப் பிடிக்க. இரண்டாவதாகப் பயன் படும் பொருளாய், அம்மா , தங்கை , மனைவி , மகள் , தோழி இப்படி உறவுகளின் தொங்கு பாலங்கள் பட்டியல் நீள்கின்றது . மூன்றாவதாகப் பொதுத்தளங்களில் பெண்ணுரிமை , பெண்ணியம் பேசிச் சமூகத்திடம் ஒரு வித்தைக்காரனிடம் மாட்டிய குரங்குக்கு இன்னும் போதைப் பொருள் கொடுத்து ஆட விடச் செய்யும் முயற்சி .அதாவது இந்தச் சமூகம் அதில் இருக்கும் ஆண்களும் சில பெண்களும் கூடப் பெண் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பற்ற சூழ்ச்சிக்குள் சிக்க வைக்க முயல்கிறது . ஆடு நனைகிறதே என்ற ஓநாயின் அக்கறை. 

                     ஆனால் பெண் எல்லாக் காலங்களிலும் பெண்ணாகவே இருக்கிறாள் .ஏன் பெண்களைப் பார்த்து இந்தச் சமூகம் பயப்படுகிறது என்று யாரும் அறியார்.பயப்படுவதால்தான் பெண்ணுக்கு இத்தனை நிபந்தனைகள் , இலக்கணங்கள் , விதிமுறைகள் , ஒழுக்கச் சட்டங்கள் , வரையரைகள் .இந்தனையிலுமே ஆணை விடவும் பெண் வளர்ந்துவிடுவாள் என்ற பயத்தை விட ஒட்டுமொத்த மனித குலமே சீரழிந்து விடும் என்ற பயமே தலைவிரித்தாடுகிறது .ஏன் பெண்கள் மேல் இத்தனை பயம் ? பெண்மைக்குள் வெளிப்படாத சக்தி ஏதோ ஒன்று இருக்கிறதா ? அப்படி இருப்பதில் இந்தப் பூமி உருண்டைக்கு என்ன பேராபத்துக் காத்து இருக்கிறது ? கடவுள் படைக்கும் போது முதலில் பெண்ணைப் படைக்கவில்லை என்றே பரிணாமத்திற்கு எதிராக மதங்கள் பிடிவாதம் பிடிக்க எதுவோ ஒரு காரணம் இருக்கிறதா ? ஒரு வேளை அவள் இந்தக்கிரகத்தைச் சார்ந்தவள் இல்லையா ? வந்தேறு குடியா ? 

          ஆண் சில உண்மைகள் பேச வேண்டும் .இந்த உடலைப் பெற்றவள் ஒரு பெண் . இந்த உடலின் வடிவம் அதாவது அச்சுக் கூட அவளிடம் பெற்ற இனாம் . ஆண் அவளின் தாய்ப்பாலோ , ஆட்டுப்பாலோ , மாட்டுப்பாலோ ஏன் பாக்கெட் பால் தந்தாவது இன்று இருக்கும் இந்த உடலை வளர்த்திருக்கிறாள்.பிறகு அவள் கொடுத்த உணவிலும் தொடர்ந்து மனைவி என்ற துணையால் செய்து கொடுத்த உணவாலும்தான் இந்த உடல் வளர்ந்திருக்கிறது .அப்படிப் பட்ட உடல் மேல் சத்தியம் செய்து ஒவ்வொரு ஆணும் தான் பெண்ணைப் புரிந்து கொண்டு இருக்கிறோமா ? தன்னைப் போலத்தான் அவளையும் அவள் உணர்வையும் மதிக்கிறோமா என்று சொல்ல வேண்டும் . நிச்சயமாய் இல்லை . சமூகம் இன்றும் ஆணை ஒரு மிகப்பெரிய மதிப்பாகவும் , பெண்ணை வேறு ஒரு இடத்திலும்தான் வைத்தே பார்க்கிறது . இன்றைக்கு இருக்கும் மனோதத்துவப் புத்தகங்கள் கூட ஆணை வேட்டைத் தொழில் புரியும் பொருள் அல்லது உணவு தேடிக் கொண்டு வருபவனாகவும் , பெண் வீடு ,குழந்தைகள் பெற்றுக் காப்பது , ஆணின் நலம் பேணுபவளாக மட்டுமே உரக்கப் பேசுகிறது .ஆண் காலச் சூழலில் வேட்டை என்ற இடம் தவிர்த்துப் பொறுள் சேர்ப்பவனாக மாறிவிட்டதாகச் சொல்லுகிறது .பெண் அன்றிலிருந்தே உணவு ,வீடு , குழந்தை , இப்படித்தான் விதிக்கப்பட்டதாகப் போகிறது .ஆணைப் பெற்ற பெண்ணுக்குள் மரபணு மாற்றமில்லையாம் , ஆண் மட்டும்தான் சூழலியலின் தரம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார்கள் .ஏன் ? 


          நிறைய ஏன்கள் குவிகிறது. அறிந்து கொள்ள உண்மைத் தெரிவுகளின் தொடக்கப் புள்ளி அவனவன் உள்ளத்தில் குவிந்து கிடக்கிறது .காரணம் நான் என் அப்பா என் அம்மாவை நடத்தியதை மனதில் வைத்துக்கொண்டுதான் என் மனைவியை எதிர்கொண்டு இருக்கிறேன் .பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை வளர்த்த போது சொல்லிக்கொடுத்தைதான் நானும் கிளிப் பிள்ளைப் போல எனப் பெண் குழந்தைகளுக்கும் சமூகச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருக்கிறேன்.பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் , திரைப்படங்களில் எல்லாவற்றிலும் விளம்பரங்களிலும் கதாநாயகன்கள் தங்கள் மனவியை (கதாநாயகிகளை) சென்சார் போர்டே கதறும் அளவுக்குத் தோல் உறித்து நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் போது எதுவும் சொல்லாமல் பார்த்து விட்டு அதை மட்டும் மறைத்து விட்டு விமர்சனம் பண்ணுகிறோம் .அதே பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்திக் காதலிகிறாள் என்று தெரிந்து விட்டால் ஆனவக்கொலை வரை அருவாள் தீட்டுகிறோம் .உடன் வேலை பார்க்கும் பெண் யாரிடாமாவது சிரித்து விட்டால் வேறு பெயர் வைக்கிறோம் .அதே பெண் நம்மிடம் வந்து பேசிப் பழக்கம் வைத்துக்கொண்டால் தப்பே செய்தாலும் காப்பாற்ற முன் நிற்கிறோம் வரிந்து கட்டிக்கொண்டு .சாலையில் கொஞ்சம் வேகமா ஒரு பெண் வண்டி முன் சென்று விட்டால் ஏதோ ஒரு கோபம் கௌரவம் லாரண்ஸ் முனியை விட நாக்கை விட உள்ளே கருவுகிறது .அவளிடம் ஏதோ ஒன்று குறை தேடி முத்திரைக் குத்திக்கிழிக்கிறது . 

                 வளர்ப்பால் , சமூகத்தால் , மத ஒழுக்கம் என்ற போர்வையால் , மீடியாக்கள் ,பத்திரிக்கைகளால்,பெண் எப்போதும் ஒரு சகஜீவியாக ஏன் பார்க்க முடியவில்லை .இது எங்கோ மாற வேண்டிய விசயமல்ல .இனியாவது என் வாழ்க்கைத் துணையை,மகளை,உறவை,நட்பை,தோழியை,உடன் பணி புரிபவரை ,ஏன் எதிர்படும் சகலப் பெண்ணையும் பெண்ணாகப் பார்க்க முயற்சிக்கத் தொடங்கினால் அடுத்தத் தலைமுறையாவது அவளைச் சகஜீவியாகப் பாவிக்கத் தொடங்கும் விடியல் வரலாம்.! 

இப்படிக்கு , 
மேற்படி  பாமரப் புத்தியுள்ள கூட்டத்தி  ஒருவன்தான்  ஆனால் திருந்த நினைக்கும் ஒருவன் !   

புதன், 1 மார்ச், 2017

குழந்தையை அடித்து விட்டேன் . #Kahlil Gibran's - On Children




               இது என்னப்பா உன் குழந்தையை அடித்து விட்டால் அதற்கு எங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது ? இதுக்கு ஒரு பதிவா ? அப்படி வருத்தமா இருந்தா ஓரமா உட்கார்ந்து அழுதுட்டு வந்திற வேண்டியதுதானே ? எல்லாமே சரிதான் .ஆனால் இந்தப் பதிவு பாவ மன்னிப்புப் பெறுவதற்கு இல்லை .அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை .நிச்சயமாய் எனக்குத் தண்டனை வரத்தான் செய்யும். 

           விசயம் இங்கே அது இல்லை  .ஏன் இந்த உலகத்தில் அப்பா ஸ்தானம் மட்டும் ஏன் இத்தனை பெரிய அனாதையாகத் தனித்து விடப்பட்டு இருக்கிறது என்பதுதான் ?  .அப்பா என்றால் பொறுத்துப் போக வேண்டும் அதற்கு எல்லையே இல்லை .ஏனென்றால் ஆம்பிளை .இந்த வெற்றுப் பந்தாவுக்குள் எத்தனை எரிமலைகள் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது அவனவனுக்கு மட்டும் வெளிச்சம் . 

               சொந்த அம்மா.அப்பா ஒரு பக்கம் முன் வைக்கும் விமர்சனங்கள் ,மாமனார் , மாமியார் வந்து போகும் போது கொடுக்கும் அழுத்தம் ,பக்கத்து ,எதீர் வீட்டுக்காரர்கள் கொடுக்கும் சோதனைகள் , பணிபுரியும் இடத்தில் நிருவனத்திற்குத் தவறான முடிவெடுப்பவன் முதலாளிக்கு ஜிங்,ஜக் என்றால் அதை ரெட் கார்பெட் போட்டி வரவைக்க வேண்டிய அவலம் , கேசியரா இருந்தாக் கடன் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் மாதத்தில் பாதி நாட்கள் லேட்டா வந்தாலும் சம்பளத்தில் கை வைக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்க வைக்கும் சகப்யணிகளின் கோபம் ,எத்தனை முறை ஸ்டேடஸ் கொடுத்தாலும் வாங்கிச் சீட்டுக்கடியில் போட்டுவிட்டுத் தரவேயில்லை என்று சாதிக்கும் ஆடிக்கெடுக்கும் ஆடிட்டர் அலுவலச் சித்திரக் குப்தன்கள் , நம் உடல் மன நலனுக்கென்று போகும் அமைப்புகளில் தினமும் ஒழுங்காகப் போவதால் கொடுக்கப்படும் பொறுப்புகள் என்ற தண்டனை , 

                வழக்கமாய் மாதத்திற்கு இரண்டு முறை எடுக்கும் நூலகத்தில் தானாக முன் வந்து ,உங்களைப் பார்த்தால் நல்ல வாசிப்பாளாராகத் தெரிகிறது ரெஃபரன்ஸ் புத்தகம் தருகிறோம் பத்திரமாப் படிச்சுட்டுத் தாங்கன்னு நான்கு மாதம் கொடுத்திட்டு இருக்கீற வேலையெல்லாம் ஓரம் கட்டி மொத்த ஓஷோ முடிச்சிறலான்னு ஆர்வமா அடுத்துப் போதித்தர்மரை முடித்து விடலாம்ன்னு எடுத்துட்டுப் பதிவு செய்யக் கொடுத்தால் ,இல்லைங்க இப்பெல்லாம் ரெஃப்ரன்ஸ் புத்தகம் வெளியிலக் கொடுப்பதில்லைன்னு சட்டுன்னு மூஞ்சியிலப் புத்தகத்தை வீசியது போலப் பதில் சொல்லும் கறுப்பான அழகான நூலகி , எப்பவுமே சரியான மைலேஜில் அல்லது காலத்திற்குள் வண்டிய சர்வீஸ் விட்டாலும் சந்தோசமாக எடுத்துக் கொண்டு போய்த் திரும்பி வந்து என்னப்பாப் பிக்கப் எப்படி என்றால் சூப்பரா இருக்குன்னு அதீதமாகப் பொய் மெக்கானிக் கேட்ட பணம் கொடுத்து விட்டு அப்படியும் மீறிக் கேட்டால் நான்கு வருசமாச்சு சார் அப்படியேவா இருக்கும்ன்னு சலவைக்காரி ஜோக்கைக் கண்டுபிடித்த நக்கல். சாலையில் முன்னாடி ஆயிரம் பேர்த் தவறு செய்து நாம் விட்டுச் சென்றாலும் ஒரே ஒரு முறை ஆளே வராத சந்திரமண்டல வீதியில் இண்டிக்கேட்டர்ப் போட்டுத் திரும்பாதற்குக் குறுக்கே வந்து திட்டி விட்டுப் போகும் வெகு ஜனப் பிரதிநிதிகள் 


                   நீங்களே சொல்லுங்கள் இப்படி எத்தனையோ சோதனைகளில் அடித்துச் சமாளித்து விட்டு வெந்தும் வேகாமலும் விட்டு அல்லது சமாளித்து விட்டு வீட்டுக்குள் வந்தால் - இங்க  பாருங்க  இவன் எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துகிட்டு இருக்கான் , ஹோம் ஒர்க் பண்ணவேயில்லை, ப்ராஜெக்ட் போன வாரமே கொடுத்தாங்களாம் இன்னைக்கு வந்து சொல்றான்,ட்ரெஸ் எல்லாம் அழுக்காக்கிட்டு வந்து நிற்கிறான், லாஸ்ட் மிட்டெர்ம் பேப்பர்ஸ் எனக்குக் காட்டாம உங்கள்ட்டக் கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டான் , இனி செஸ் கிளாஸ் அனுப்ப வேணாம் லேட்லாவே பொறான் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை போல, என்னங்க ஹிந்திக்கு மாசம் நாழாயிரம் ரூஃபா ஃபீஸா ? கொள்ளையடிக்கிறாங்களே இப்பயெல்லாம் வீட்டுக் குப்பையெல்லாம் நம்மீது கொட்டி விட்டு, அம்மா பாரு அம்மா பாருன்னு சின்னக் குழந்தைய கொஞ்சப் போய்விடுகிறார் . 

             அப்போது நம் இயலாமை நமக்கு முன் குதித்து நக்கலாய்ச் சிரிக்கிறது . ஆயிரம் சமாளிப்புகளையும் ஓரம் கட்டி அவமானப்படுத்துகிறது. அப்போது கலீல்ஜீப்ரானின் உங்கள் குழந்தைகள்  உங்களுடையவர்கள் அல்லர் “ என்ற வரிகள்கள் உங்கள் ஞாபகத்தில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
     அதை விட “ அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி உங்களிடமிருந்து அல்ல உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர் “ என்பது தோணாமல் போகிற இயலாமை வந்து விடுகிறது .இயலாமைப் பெருமையான விசயமல்ல. அவமானம்தான் . 
       கடந்த இரண்டு வருடமாக இனிமேல் என் மகன் அடிக்கமாட்டேன்னு குருவின் மேல் சபதமெடுத்து இந்த இயலாமைக்கு அணைக்கட்டி வைத்திருந்தேன் .இது அவனுடைய அம்மாவுக்குக் கூடத் தெரியாது .ஆனால் இன்று அந்த அணை ஒரு பக்கம் உள்ளே உருண்டு கொண்டு இருந்த  இயலாமை என்ற பலவீனத்தின் முன்  இரையாகிப்போனது . 

          அன்று அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கு அக்கறையாய்க் கிளம்பினான் . அவனை அடித்த வலி எனக்குள் காட்டேரி வெளவாலைப் போல அவமானமாய்த் தழைகீலாய்த் தொங்கிக் கொண்டு இருந்தது . எனக்கு அதைப்பற்றிப் பேச கூட மனம் வரவில்லை .வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும் போது அவனே பேசினான் . 
ஏம்ப்பா ஸ்கூல்ல டீச்சர் அடிக்கிறாங்க , வீட்ல அம்மா இல்லைன்னா நீங்க அடிக்கிறீங்க எதுக்குப்பா ? என்றான்.
 தப்புதான் ஆனா அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்திடுதே என்றேன்
 என் அவமானத்தை மறைச்சுக்கிட்டு ! 
ஆனா ஏன் அடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுதா ? 

என்னோட நல்லதுக்குத்தான்னு எல்லாரும் சொல்றீங்க .ஆனா அப்புறம் ஏன் என்னை அடிக்கிறப்ப எல்லாரும் உங்க முகத்தை அப்படிப் பார்க்க முடியாத அளவுக்குக் கோபமா வச்சுக்கிறீங்க ? 

அவனுக்கு பதில் சொல்லவில்லை .அதற்குள் ஸ்கூல் போய் விட்டோம்.இன்னும் சொல்லப்போனால் என்னிடம் பதில் இல்லை. 
அப்போது மீண்டும் #கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ யின் விட்டுப்போன மீதி  வரிகள் மண்டைக்குள் ஓடியது ...



அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று  சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப் படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழைய முடியாத
எதிர்காலக் கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை  உங்களைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை.
உயிர் கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்,
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லாத பாதையின்  இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகள்
துரிதமாகவும் , தூரமாகவும்    செல்லும் வண்ணம்
உங்களை  வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்,
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல………..
நிலைத்து நிற்கும் வில்லையும் அவர் நேசிக்கிறார். 


எத்தனை படித்தாலும் , என்ன பேசினாலும் உணர்ச்சிகள் உணர்வுகளாக மாற்றத் தெரியாவிட்டால் ஆறாவது அறிவு அவமானம்தான் !