புதன், 25 ஏப்ரல், 2018

காதல் அசடுகள் !



மனைவி ஊருக்கு போன பின்  குக்கரும் சொன்ன பேச்சை கேட்பதில்லை .
எதிர்பாராமல் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
முக்கா டம்ளர் அரிசி,ஒன்னேகால் சொம்பு தண்ணீர்,நாழு விசில் மனப்பாடம் பண்ணி வைத்து இருந்தேன்.
அடுப்பில் வைத்த சில நிமிடத்தில் அறுபது வயசு கிழவன் மூச்சு  போல விசில் பலவீனமாக வந்தது . எட்டு பலவீனமான விசிலுக்கு அப்புறம்தான் இறக்கினேன்.
திறந்து பார்த்தால் பத்தியகாரனுக்கு கஞ்சி சோறு ரெடியாகி இருந்தது .
வீட்டுக்கார அம்மாவ ஊருக்கு அனுப்பிய முதல் நாளே இப்படியா ?
அப்புறமென்ன திருப்பி அடுப்பு..நாழு விசில்..இறக்கினால்
 பாதி சாப்பாடு அடிப்பிடித்து போய்விட்டது.
முதல்ல கஞ்சி சோறாக இருந்தது ஃப்ரை ட்ரை ரைஷ் ஆகி விட்டது
சுரண்டி எடுத்து  தின்று தீர்த்தாகிவிட்டது .
பாவம் நண்பர் முகம் கோணாமல் சாப்பிட்டு விட்டு நடையை கட்டிவிட்டார் .
இனி வருவாரா இந்தப்பக்கம் ?
கவுளுக்கே வெளிச்சம் .


நான் இங்கு சொல்ல வந்தது சொந்த ஊரில் நடந்த ஒரு மலரும் (அவஸ்தை) நினைவு ..

இது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .
அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்குத் தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .

பெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லச் சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .

நாங்கள் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தோம் . அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று சொல்லித்தான் நண்பர் இங்கு வந்தார் இருந்தாலும் தர்மசங்கடமாக நெளிந்துகொண்டே பேசி காலத்தை ஒப்பேற்றிக் கொண்டு இருந்தோம்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .
ஒருவேளை அந்தப் பெண் வந்து வண்டியைக் கொண்டு வந்து விட்டதா என்ற சந்தேகம் வரவே வெளியே வந்து பார்த்தேன்.
நான் வருவதற்காகவே காத்து இருந்தது போல அவர்கள் வீடு சில அடிகள் தள்ளி நின்று கையசைத்து அழைத்தாள் .வண்டியும் அவளிடம் இல்லை. 
அவள் முகம் பார்ப்பதற்குக் களேபரமாக இருந்தது.

என்ன என்று விசாரித்தபோது ,இந்தப்பெண் வேகமாக ஓட்டிச் சென்று யாரோ ஒருவரின் வீட்டுக் கதவில் முட்டி உடைத்து இருக்கிறாள் . அது காம்பவுண்ட் சுவருக்குள்ள மரக்கதவு .
அவர்கள் வண்டியைப் புடுங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு வாவெனெ அனுப்பி விட்டார்கள்.
இதைச் சொல்லி விட்டு வீட்டில் அப்பாவிடம் சொல்லிடாதீங்க அங்கிள் என்று கெஞ்சுவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால்.
நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு நண்பருக்கு விசயம் சொல்லி வெளியே அழைத்து வந்தேன் .
வந்த காரியமும் தோல்வியென்பதால் அவரும் எப்படா என்று இருந்தார் போல !
நூலகம் போக வேண்டும் என்று கொஞ்சம் மதிப்பாக சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கழன்று கொண்டோம்.

அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு கதவை உடைத்த வீட்டுக்குப் போனோம்.
அது ஒரு ஹவுசிங்போர்டு ஏரியா - சி கிளாஸ் ரக வீடு.

கதவைத் தட்டினோம்.அந்த வீட்டிலிருந்து ஒரு முப்பத்தி ஐந்து மதிக்கத் தக்க மனிதர் வெளியே வந்தார் .
அந்தப் பெண்ணோடு எங்களைப் பார்த்தவுடம் புரிந்துகொண்டார் போல ? 
ஏன் சார் இந்த மாதிரிச் சின்னப் பிள்ளைகளிடம் வண்டி கொடுத்து விடறீங்க ? 
கதவுக்கு ஏதாவது ஆச்சுப் பரவாயில்லை .
அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க என்றார் .

அவர் பேச்சில் ஒரு நேர்மை இருந்தது.இப்போது சசிகுமார் வசனம் கேட்கும்போதெல்லாம் அவர்  ஞாபகம்தான் வருகிறது .
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்க வேண்டும் .அப்பொதெல்லாம் அந்த மாதிரி இருந்தால்தான் ஹவுசிங்போர்டில் வீடு கிடைக்கும்.
அவர் என்னையையும் நண்பரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பேசினார்.
எனக்குப் புரிந்துவிட்டது .
சாதுர்யமாக யார் கதவைச் சரி செய்யும் பொறுப்பெடுத்துக் கொள்கிறீர்கள் என்ற பதிலை எதிர்பார்கிறார்.
நண்பர் என்னைப்பார்த்தப் பார்வையிலேயே தன்னை இதில் மாட்டி விடாதே என்று சொல்லாமல் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
அவர் உடைக்கப்பட்ட அந்தக் கதவைக் காட்டினார்.
இரண்டு கதவில் ஒன்று மட்டும் தனியே காம்பவுண்டின் உள்புற சுவரோரம், குறுக்கு ரீப்பரெல்லாம் உடைந்த நிலையில் சாத்தி வைத்து இருந்தது.
அவர் சொன்ன மாதிரி, என்ன வேகத்தில் மோதி இருந்தால் இப்படி உடைந்து இருக்கும் ?
இதில் இந்த அசட்டுப் பெண்ணின் அக்காவை நண்பர் உருகி உருகிப் பார்த்து வருகிறார் .அது எப்படியோ ?
சரி எப்படி இருந்தால் என்ன ? விதி யாரை விட்டது ?

அவர் வழிக்கு வரும் வரை மெல்லப் பேசினேன் .
அப்போது கொஞ்சம் குருட்டுத் தைரியம் எனக்கு அதிகம் .
சரி செய்து கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் கேட்டேன்.அவருக்கு நம்பிக்கைக் கொஞ்சம் வந்த மாதிரி இருந்தது .

அந்தப் பெண்ணின் வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டு மெல்லக் கழன்று  வந்தோம் .

ஒருவழியாய் வண்டியை மீட்டுக்கொண்டு வரும் வழியில், நண்பர் அந்தப் பெண்ணிடம் உனக்கு ஒன்றும் அடிபடவில்லையே என்று அக்கறையாய் விசாரித்துகொண்டு இருந்தார் .
நான் முறைத்தேன் அவரைப் பார்த்து .

எங்களுக்குத் தெரிந்த ஐடிஐ சீனியர் நண்பர் வேல்முருகனுக்கு மரத்தச்சு வேலை நன்றாகத் தெரியும் .இத்தனைக்கும் அவர் ஒரு மெசினஸ்ட்.அவரிடம் போய்ச் சாஸ்டாங்கமாகச் சரணடைந்து உதவி கேட்டோம்.

அவர் வீட்டில் கிடந்த சில மரக்கட்டைகள்,ஆக்சா பிளேடு,கொஞ்சம் ஆணிகள் ,சுத்தியல் சகிதமாக அந்தக் கதவை உடைத்த வீட்டில் போய் இறங்கினோம்.

எங்கள் வரவைப் பார்த்த அந்த மனிதர் தன் நம்பிக்கை வீண் போகவில்லையென்று முகமெல்லாம் பிரகாசமானார் .
ஏறக்குறைய மூன்று மணிநேரம் போராடி சரி செய்து கொடுத்து விட்டுத் திரும்பினோம்.

வரும் வழியில் நண்பர் வேல்முருகன் கேட்டார் ,
ஏண்டா நொங்கு தின்னவிங்க நீங்க, என்னை ஏண்டா இதுல மாட்டிவிட்டீங்க ? .
நான் என் நண்பரைத் திரும்பிப் பார்த்தேன் .
அவர் அப்போதும் வழக்கம் போல இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி முகத்தை அசடு வழிய என்னைப் பார்த்துச் சிரித்தார் .
காதல் பண்ணத் தொடங்கிவிட்டாலே இப்படி முகத்தில் அசடு கேட்காமலேயே வழியத் தொடங்கிவிடுமா என்ன ?

ஆனால் அந்தக் காதல் காதலாகவே முடிந்துவிட்டது .அந்தப் பெண்ணின் குடும்பமே சில சூழலால் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது .


அடுத்தப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பருக்கு வேறு பெண்ணுடன் பேசி முடித்தார்கள்.

நண்பரின் திருமணத்தின் போது சீனியர் நண்பர் வேல்முருகன் வந்த போது அதைச் சரியாக ஞாபகம் வைத்து ஏண்டா அந்த நொங்கு என்னடா ஆச்சு ? என்றார் .

இப்போதும் மணமேடையில் நின்று கொண்டு இருந்த  நண்பர் என்னைத்தான் பார்த்தார்.

நான் மெல்ல அவருக்கு மட்டும் கேட்கும் அளவில் பதில் சொன்னேன்
அந்த நொங்கு திங்க இவன் லாயக்கில்லை !.




வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாலகுமாரனின் - புருஷவதம்.



இன்று திரைப்படங்கள் ,நாடகங்கள் எங்குப் பார்த்தாலும் பேய்க்கதைகள் பிடித்து ஆட்டும் சூழலில் பாலா சாரின் புருஷவதம் வாசித்தேன் .முற்றிலும் ஒரு சூட்சும வாழ்வில் சஞ்சரித்த அனுபவத்தை இந்த வாசிப்பு நிகழ்த்துகிறது.பாலாசாரின் புத்தகங்களுல் முதன்முறையாக ஆங்கிலத்தில் WILL FULLY EVIL ( Zero Degree Publishing ) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்பதும் இந்த நாவலின் புதிய பலம்.

சென்னைக்கும் - திருவள்ளூருக்கும் நடுவேயுள்ள திருவாலங்காட்டில் பழையனூரில் இன்றும் வட்டார வழக்கத்தில் இருக்கும் பழையனூர் நீலி என்ற உண்மைக்கதைதான் புருஷவதம் என்று அவதாரமெடுத்து இருக்கிறது. இன்றும் இதன் ஆதாரமாகத் தீப்பாய்ந்த வேளாளர்கள் படைப்புச் சிற்பமாகச் தீக்குண்டம் அங்கு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் பழையனூரின் காவல் தெய்வமாக நீலியை வழிபாடு செய்து வருகிறார்களாம்.

கதை இதுதான் - பேராசைக் கொண்ட புவனபதி என்ற வேதமும் சகல சாஸ்திரமும் கற்றுத் தங்கள் குலச்சொத்தாகக் கருதும் வேதத்தை மனனம் செய்து அர்த்தம் தெரிந்து அடுத்தத் தலைமுறைக்கு மாற்றித்தரவேண்டும் தன் பிறப்பு ,உயிர்வாழ்தல்,திருமணம்,பிள்ளைப்பேறு,உண்ணுதல்,உடுத்துதல்,உறங்குதலும் இதன் பொருட்டே என்னை விட என் வேதம் முக்கியம் என்ற ஒரு பிரமாண இளைஞன் வாழ்வைப் பற்றித் தொடங்கும் கதை இது .



புவனபதிப் புண்ணியப் பயணம் செய்ய வந்த காசியில் சமணர்களிடம் பலகலைகள் கற்றுத் தேர்ந்து எதிர்பாராவிதமாகக் காசியின் பிரச்சனைக்குரிய நிரஞ்சனர்கள் என்ற ஒரு கூட்டத்தை எதிர்க்க வேண்டி வருகிறது. அப்போது அங்கு ஆதரவு தந்தவரின் மகள் நவக்கினியை ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்துத் தன் சுயநலத்திற்காகத் திருமணம் செய்துகொள்கிறான்.அவளை ஏமாற்றிக் காசியிலேயே விட்டு விட்டுத் திரும்ப முடியாமல் அழைத்துக்கொண்டு வரும் வழியில் புவனபதி நவக்கினியை இரும்பு உலக்கையால் அடித்துக்கொள்கிறான்.இறந்த நவக்கினியின் மேல் அளவு கடந்த பாசம் தம்பியும் இதனால் தற்கொலை செய்துகொள்கிறான்.புவனபதியால் கொல்லப்பட்ட நவக்கினியும் அவள் தற்கொலை செய்துகொண்ட அவள் தம்பியும் திருவாலங்காட்டில் சூட்சும சக்தியாய்ப் பழிவாங்கக் காத்து இருக்கிறார்கள்.

அந்த ஜன்மத்தில் புவனபதி சர்வ சக்தியும் பொருந்தியவனாய் வாழ்ந்ததால் அவனைக் கொல்ல முடியாமல் அடுத்த ஜன்மத்தில் தரிசனன் செட்டியாராகப் பிறக்கும் புவனபதியைக் காத்து இருந்து வதைத்துக் கொல்கிறாள் நவக்கினி.அதோடு மட்டுமில்லாமல் சிவனின் வரத்தால் மறு பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்த பின் இப்போதும் பழையனூர் நீலியாகப் பெண்களைக் காப்பவளாக வலம்வருகிறாள் என்று கதை முடிகிறது .

இந்த நாவல் மூலமாகப் போரில் இறந்தவர்கள் ,கொலை செய்யப்பட்டவர்கள் மேலும் அசம்பாவிதமாக அகால மரணமடைந்த நம் புறக்கண்களுக்குத் தெரியாத துக்கப்பட்டு இறந்தவர்கள் வாழ்வு பேசப்படுகிறது ...

மனிதனின் மனோசக்தி உடம்பை வளர்க்கிறது செயலைத்தூண்டுகிறது.கோபமோ ,ஆத்திரமோ மனோ சக்தியால் நிகழ்கிறது. எல்லா உணர்வுகளும் மனோசக்தியின் வெளிப்பாடே .மனம் வாழ்க்கையை நடத்துகிறது அந்த மனதை நடத்துவது எது ? எந்தச் சக்தி ? அந்தச் சக்தி உடலை விட்டுப் பிரியும்போது பழக்கத்தினால் மனதை இழுத்துப்போகிறது .நடந்த (வாழ்வியல்) நிகழ்ச்சிகளை மனம் ஆழ்ந்து பற்றிக்கொண்டு இருக்க அந்த உயிர் திரும்பத் திரும்ப நடந்தவைகளோடேயே இருக்கிறது.

சாகும்போது இருந்த மனோசக்தியைப் புறகணிக்க முடியாமல் உயிரை உடம்பாக நினைத்து வாழ்பவர்கள் பைசாசமாக அலைகிறார்கள் உடம்பிலிருந்து வெளியேறிய உயிர்சக்தி பெரும் சக்தியோடு இணைய ஒப்புக்கொடுத்தால்தான் பெரும் சக்தியின் வென்னீர் ஆறான வைதரிணியைக் கடந்து குளுமைப் பெற்று சாந்தியடைய முடியும் என்ற சூட்சும உலகையும் அதில் வாழ்பவர்கள் பற்றியும் விவரிக்கிறது நாவல்


இந்த நாவல் மூலம் முக்கியமான ஒரு செய்தியை முன்வைக்கிறார் நாவலாசிரியர் .

பெண்களை இம்சிப்பவன் அவன் தாக்கியதைப் போலப் பல நூறு மடங்குத் தாக்கப்படுவான்.கைகால்கள் சிதைக்கபட்டு ,கழுத்து அறுக்கப்பட்டுச் சாவான் .பல ஆயிரம் பேர்களுக்கு முன் அவமானப்படுத்தப் படுவான் .கசையால் அடிக்கப்படுவான்,உண்ணவும் உறங்கவும் முடியாமல் தவிப்பான்.பயமும் திடுக்கிடுதலும் எந்நேரமும் அவனிடம் இருக்கும் வாய்விட்டுச் சிரிக்க முடியாத பாவியாய் கண் மூடித் தியானம் செய்ய முடியாத கேவலனாய் வாழ்வான் இப்போது பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கும் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைக்கு என்ன தண்டனை என்பதை இந்த நாவலில் விவரித்து எச்சரிக்கிறார்.



வரலாற்றின் பின்னோக்கிய காட்சிப்படுத்துதலில்  புவனபதி காசிக்குப் போகும் முன் காட்டு மிருகங்களிடம் தற்காத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் பயிற்சிகளின்நுணுக்கம்,சூக்கும சரீரத்தோடு உலவும் அமானுஷ்ய உலகின் நடத்தைகள் போன்ற நாம் தேடியும் கிடைக்காத பலஆழமான விசயங்களைச் சொல்லுவதன் மூலம் ஒரு கதை காலத்தின் பின்னோக்கி நிகழும்போது ஒரு நாவலாசிரியன்தரவேண்டிய மெனெக்கெடல்களைச் சொல்லித்தருகிறார் பாலா சார் .


.எப்போதும் போலவே  தன்  மிகச்சிறந்த எழுத்தாளும் திறனை வெளிப்படுத்தி இந்த நாவல் முழுதும் பிரமிப்புக் களையாது கட்டி வைக்கிறது அவர் கதை சொல்லும் விதம் .