சனி, 30 மே, 2015

எலி வேட்டை


             
வேட்டைக்குப் போகும் காலத்திலிருந்து ஆண்களுக்கு ,பெண்களை விடச் சில பாதுக்காப்புப் புலனறிவுக் கொஞ்சம் தூக்கலாக இருப்பதாக இருப்பதாகச் சொன்னாலும் சொன்னார்கள் தான் மட்டுமே ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாப்புப் பிரதிநிதி என்பது போலச் சில பேர்க் களத்தில் இறங்கும் புத்தி மேலோங்கி விட்டதைத் தவிர்க்க முடியவில்லை.இப்படிப் பட்டப் பிரதிநிதிகளில் ஒருவராய் என் சின்ன அண்னன் ஒரு முறைக் கிளம்பி விட்டார் .அவர் திருமணம் செய்யப் போகும் பெண் ( வருங்கால அண்ணி ) ணின் சகோதரித் திண்டுக்கல் ஐடிஐ யில் ரேடியோ மெக்கானிக் கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்தார் .அவர்கள் தினமும் நத்தம் அரசு ஐ.டி.ஐ க்குப் பஸ்ஸில் போகும் வழியில்தான் இண்டஸ்டிரியல் எஸ்டேட்டுக்குள் டூல் & டை டிப்ளமோ இன்ஸ்ட்யூட்டும் இருக்கிறது . இந்தப் பஸ்ஸில் இரண்டு மாணாவர்களும் ஏறக்குறைய ஆரம்ப ஒரே நேரம் என்பதால் ஒரே பஸ் பயணம்தான்.சிக்கல் இங்குதான் .யாரோ அண்ணியின் சகோதரியைத் தொடர்ந்து கேளி செய்கிறார்களாம் என்பதுதான் குற்றத்தாக்கல் .வழக்கமாகவே அண்ணன் கோபக்காரர் .சட்டெனெக் கை நீட்டுவதில் தேர்ந்தவர் .அதிகம் படிப்பு இல்லாததால் அந்தத் தாழ்வு  மனபான்மையும்,சமூகத்தின் மீது ஏதோ ஒரு கோபமுமே சேர்ந்த குணமானவர் .

 அவருக்கு இப்படி ஓர் அல்வா மாதிரிக் கோபப் பட விசயம் கிடைக்கும் போது கோபம் வராமல் போகாதுதானே ? ஆனால் அவருக்கு ஒரு விசயம் தெரியாது .இது பசங்கப் பிரச்சனை .பசங்க - பிள்ளைகள் விசயம் எப்போதுமே சீண்டப்படும் போதுதான் கொளுந்து விட்டு எரியும் . அதுவும் அரை மணி நேரப் பஸ் பயணத்தில் நடக்கும் விசயம் இதில் மிகப் பெரிய முக்கியத்துவம் இருப்பதாக எனக்குப் படவில்லை ஒருவேளை அப்படியே இருந்தாலும் அது அவர் பாணியில் அணுகினால் எதிர்காலத்தில் தொடர் பிரச்சனையைச் சந்திக்க வேண்டுமே .இந்தச் சிந்தனையுடன் அவரைச் சமாதானபடுத்த போக அவர் ,என்னை அவனை விட எதிரி போல என்னைப் பார்த்தார் .உனக்குப் பயமாய் இருந்தா வராதே .நாளைகுக் காலையில் நான் பஸ் ஸ்டாண்ட் போய்கிறேன் என்ற ஒற்றைச் சொல்லில் அந்த விசயத்தில் என் கணக்கை முடித்து விட்டார் .இவர் வேலைப் பார்க்கும் கம்பெனிக்கும் , பஸ் ஸ்டாண்ட்டுக்கும் 300 அடித் தூரம்தான் .
                         
    அதனால் காலையில் எட்டரை மணிக்குக் அந்தப் பஸ் கிளம்பும் என்பதால் நான் அண்ணனிடம் சொல்லாமல் எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டில் ஆஜரானேன்.வழக்கமாக அந்தப் பெண் நிற்கும் இடம் ,கிளம்பும் இடம் .பஸ் எண் எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் ,அந்தப் பெண் அழகாய் இருந்ததால் இதற்கு முன்னரே மட்டும் இந்த விசயத்தைத் தெரிந்துக் கொள்ளவில்லை நானும் அதே ஐ.டி.ஐ யில் இரண்டு வருடத்திற்கு முன்தான் வெல்டர் ட்ரேடு படிக்கப் போய் ஒரு வருட குப்பைக் கொட்டி இருக்கிறேன். மன்னிக்கவும் . படித்து இருக்கிறேன் அதனால் அந்தப் பஸ்ஸில் சில சமயம் போன அனுபவமும் இருக்கிறது.

           நீண்டக் காம்பஸ் ஸ்கேலுடனும் மற்றும் சோல்டர்ப் பேக் வைத்திக் கொண்டு நிற்கும் பசங்கள் டூல் & டை பாய்ஸ் எனவும் நீண்டப் பெரிய லாங் சைஸ் நோட்டும் ஒரு டிஃபன் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் ஐ.டி.ஐ எனவும் இனம் பிரிப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பெண்கள் பசங்கள் வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள் . .நானும் ஓர் ஓரமான இடத்தைத் தேர்வு செய்து காத்து இருந்தேன்.எப்படி ஆரம்பிப்பது என்பதாக என்னிடம் எந்த ப்ளானும் இல்லை .இந்த மாதிரி விசயம் எனக்கு ஏற்கனவே பல சந்தர்ப்பத்தில் சந்தித்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவம்தான்.இது எல்.ஐ. சி போல வரும் முன் காப்போம் இல்லை வந்த பின் பார்ப்போம் என்ற கதைதான் . மணி 8.20 .டூல் & டை பாய்ஸ் கூட்டம் அதிகரித்தது .அதில் யாரையாவது ஒருவனைத் தேர்வு செய்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் .

                மெல்ல கூட்டத்தில் ஒதுங்கிச் சென்று நெருங்கிய போதுதான் ஒரு விசயத்தைக் கவனித்தேன் அவர்கள் ஏதோ ஒரு பதஷ்டமாக இருந்த மாதிரித் தெரிந்தது .அவர்களுக்கு இந்த மாதத்தில் எக்ஸாம் இருக்க வாய்ப்பில்லை. நான் மெல்ல அந்தக் கூட்டத்தில் அதிகம் பேசும் ஒரு பையனைத் தேர்வு செய்து மெல்ல ஏன் பசங்கள்லாம் ஒரு டென்சனா இருக்கீங்க என்றேன் .அதுவரை அவனுடன் அருகில் பேசிக் கொண்டு இருந்த சிலர் பேச்சை நிறுத்தி என்னைக் கூர்மையாகப் பார்த்தார்கள்.அவர்கள் வேறு எதற்கோ காத்து இருப்பது தெரிந்தது .

ஆமா சார். எங்களுக்கும் இன்னொரு இன்ஸ்டியூட் பசங்களுக்கும் ஒரு
பிரச்னை.நீங்க சார் என்றான் .எனக்கு அவன் மரியாதை என் தேர்வை உறுதிப்படுத்தியது .இல்லை ஒரு சின்ன விசயம் பாஸ் நம்ம பிள்ள ஒன்னு உங்க பஸ்ல வருது , ஏதோ ஒரு சின்னப் பிரச்சனைன்னது .அதான் நம்ம பசங்க நீங்களே இருக்கும் போது நாங்க எதுக்குன்னு கேட்டா பயப்படுது அதான் உங்க கிட்ட சொல்லி பார்துக்கச் சொல்லலாம்ன்னு வந்தேன் லேசய்க் கொஞ்சம் இழுத்த மாதிரிச் சொன்னேன் .அவன் புருவம் லேசாய் உயர்ந்தது. வேட்டைப் புத்தி அவனுக்குள் வெளி வரத்தொடங்கியது.யாரு அவங்க ? என்றான் அந்தப் பையன் .சட்டெனெ அவன் பக்கத்தில் எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டு இருந்தவன் கை குலுக்க நீட்டினான் .அண்ணா என் பெயர் சுரேஸ் .நானும் சொன்னேன் .இன்னும் சில பேர் கை கொடுத்தார்கள் .எனக்குச் சரியான திசையில் என் கப்பல் போய்க் கொண்டு இருக்கும் தைரியம் வந்தது .ஆனால் யாரோ பின்னாளிருந்துத் தோளைத் தொட்டார்கள் .திரும்பினால் அண்ணன் .அடப்பாவிகளா என் கப்பல் தண்ணீரில் மூழ்கிடும்போல ?

        என்னடாப் பண்ற யாரு என்றார் .நான் மெல்ல இங்க வா ஒரு நிமிசம் என்று கையைப் பிடித்துக் கொண்டு ஏறக்குறைய இழுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் நிற்கும் பகுதிக்கு வந்து விட்டேன் .அதற்குள் அந்த என் வருங்கால அண்ணியின் சகோதரியும் வந்தாகி விட்டது . அந்தப் பெண் சிரித்தது . இங்கு நடப்பதற்கும் \எனக்கும் சத்தியமாய் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல இருந்தது. அந்த அவசரத்திலும் அந்தப் பெண் சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தை விட அழகாகத் தெரிந்தாள் .ஒருவேளை எனக்கு அப்போது அப்படித் தோணியதா என்பது தெரியவில்லை..

என்னடாச் சொல்றாய்ங்க ? அண்ணன் .
ஏகமாய்க் கேட்டார்.
பேசிக்கிட்டு இருந்தேன் அதற்குள் நீ வந்துட்டே நீ இங்கே இரு பேசிட்டு வந்தறேன் .அவர் பதில் சொல்வதற்குள் நகர்ந்து விட்டேன்
மீண்டும் பசங்களிடம் . வந்தேன்.நான் பேசிய பசங்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து ஆறேழுப் பேர்க் கூடி விட்டனர் .நல்ல வேளை அவர்கள் போகும் பஸ் இன்னும் வரவில்லை .

                         முதலில் சுரேஸ் என்ற பையன் பேசினான் ,யாருண்ணே அது ? உங்க பிரதரா ? ஏதோ கோபமா இருப்பார் போல ? அவன் கேள்வியின் முடிவில் ஒரு கேளி இருந்தது .அது கூட்டமாய் இருக்கும் போது வரும் முட்டாள்தனமான வீரம் .ஆனால் அவன் பேச்சு மூலம் இவர்களுக்குள் ஏதோ நடந்த அடையாளம் இருப்பதை உணர்ந்தேன் .என் வந்த வேலை சுலமானது போலத் தெரிந்தது .இனி சுற்றி வளைத்துப் பேச வேண்டியது இல்லை  ஆமாம் சுரேஸ் .அவருகிட்டத் தப்பாச் சொல்லியிருக்காங்க .அதெப்படி எல்லோரும் நம்மப் பசங்க மாதிரி இருக்கிறீங்க நீங்க எப்படி ..இதை முடிப்பதற்குள் சுரேஷ் , நீங்க என் வருங்கால் அண்ணியின் சகோதரியின் பெயரைச் சொல்லி நீங்க அவங்களுக்கு என்ன (உறவு ) வேணும் ? என்றான் மாமா .என்றேன் .அண்ணே ஒன்னுமில்லாத விசயம் உங்க அவங்கதான் பெரிசு படுத்தறாங்க .என்றான் சுரேஷ் .அவங்க ஃபிரண்ட் பேர் சொல்லி இவன் கூப்பிட்டானாம் இது ஒரு பிரச்சனைன்னு அவங்க ரெண்டு நாள் பேசலை ஏன் பேசலைன்னு இதா இங்க இருக்கானே ராம்ஜிதான் கேட்டான் .அதுக்குப் போய் உங்கள் கூட்டீட்டு வந்துட்டாங்கப் பாருங்க என்றான் .அவன் காட்டிய ராம்ஜி சிவப்பாய் ஒல்லியாய் அமராவதிப் படத்தின் அஜீத் முகத்தை லேசாய் ஞாபகப் படுத்தினான் .ஆனல் கலையாத முடியை அடிக்கடிச் சரி செய்து கொண்டே இருந்தான்

             எனக்குப் புரிந்து விட்டது .இது சுண்டைக்காய் விசயம் .இந்தப் பெண் விவரம் புரியாமல் தன் தோழிக்கு உதவி செய்யத் தன் மாமாக்களைத் தாயம் விளையாட்டுக் கட்டைப் போல உருட்டுகிறது .இனி நாம் பரமபதத்தில் பாம்பிடம் கொத்துப்பட்டது போல இறங்கிவிட வேண்டியது தான் எனத் தீர்மானித்தேன் .சட்டெனெத் திரும்பி அண்ணனைக் கைக் காட்டி வரச்சொன்னேன் .வந்தார் .நான் சொன்னேனில்லை .நம்ம பசங்க இதுக எதாவது பண்ணிட்டுக் கையைக் காமிச்சுருச்சுப் பாரு என்றேன் மேலும் கொஞ்சம் விளக்கினேன் .அவர் முகம் மாறியது .

       
அங்கிருந்தவாறே என் உறவு பெண்ணையும் அழைத்தேன் .வந்தது .இங்க பாரு இவங்கதான் உனக்கு எப்போதும் பாதுகாப்புத் தப்பா நினைக்காதீங்க.என்றதுப் புரியாமக் கண்ணை அகலத்திறந்து என்ன என்பது போல எதுவும் புரியாமல் பார்த்தது .டக்கென்று பசங்கப் பக்கம் திரும்பிச் சரி பாஸ் நாம் பாக்கலாம் முடிந்தா விட்டுக்கு வாங்கன்னுக் கைக் குடுத்தேன் .அத்தனை பசங்களும் அண்ணனுக்கும் கைக் கொடுத்தார்கள் .

       பஸ் வந்து விட்டது .எல்லோரும் சொல்லி விட்டுக் கிளம்பும் போது ராம்ஜி மட்டும் (அதான் அமராவதி அஜித் ) இன்னொருவனைப் பார்த்து மாப்ளச் சீட் போடு வரேன் என்று சொல்லிவிட்டு அவர் போகட்டும் நீங்க வாங்க என்று சைகைச் செய்தான் .பஸ்ஸை நோக்கி அவன் போக நான் அண்னனிடம் இரு வரேன் என்று சொல்லிவிட்டு அவனுடன் நகரும் போது திரும்பி அண்ணன் விலகிப் போனதை உறுதிப்படுத்தி விட்டுச் சொன்னான் .சொல்லவில்லை அது ஒரு அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தது போல இருந்தது .அவன் சொன்னது இதுதான் .

      நல்லவேளை உங்க ப்ரதர் மட்டும் வந்து
இருந்தார்ன்னா பிரச்னைதான்.எங்களுக்கும் _______ பால்டெக்னிக்கும் நேற்று ஓர் ஈவெண்ட்லச் சண்டை வந்துருச்சு .சமாதானப் படுத்னாங்க நாங்க வந்துட்டம் .ஆனாச் சில பசங்கள அடித்து இருக்காணுக .இன்னைக்கு அவனுகள அடிக்கனும்ன்னுதான் பெரிய காண்ட்ல இருந்தோம் .விசயம் தெரிஞ்சு எஸ்கேப் ஆயிட்டானுக .பஸ் ஸ்டாண்டே. வரல அவனுக .ஆனா ஒரு நாள் சிக்குவானுக அன்னைக்கு இருக்கு . உங்ககிட்டப் பேசினான்லச் சுரேஸ் அவன் பேக்ல அவங்க அப்பாவோட நகைக் கடைல இருக்கிற சல்ஃப்யூரிக் ஆசிட் வச்சுருக்கான் இன்னைக்குக் கிடைச்சுருந்தானுக ?
அவன் சொல்லி முடிப்பதற்குள் பஸ் கிளம்பிவிட்டது .



    ஓடி ஏறிக்கொண்டு கையைக் காட்டினான் . நான் திரும்பி வரும்வரை காத்து இருந்த அண்ணன் ,என்ன சொல்றான் ? என்று கேட்டார் .நான் அவர் முகத்தைப் பார்த்து .
நாங்களே பார்த்துக்கிறேன்னு சொல்லிடானுக என்றேன் .
பார்த்தியா நான் சொல்லல சின்னப் பசங்கப் பயந்துருவானுகன்னு என்றார் ! 

சனி, 16 மே, 2015

களவுதான் கற்று(ம்) மறக்க வேண்டும்

புதுவையில் (1995 சமயம் ) தங்கியிருந்த போது நண்பர்கள் இருவருடன் காலை 7 மணிக்கு பேசிக் கொண்டேயும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் நடந்து வந்து கொண்டு இருந்தோம் .அப்போதுதான் சாலையில் கிடந்த ”அது” என் கண்ணில்தான் முதலில் பட்டது.பேச்சுச் சுவாரசியத்தில் நண்பர்கள் கவனிக்கத் தவற விட்டு இருக்கலாம் .சந்தேகமே இல்லை அது தங்க குருமாத்துதான் (சங்கிலி) !.

காரைக்குடி செட்டி நாட்டு நகை வகையில் சொல்லப்படும் குருமாத்து - கைசங்கிலி புதுச்சேரியில் கொஞ்சம் வேறு மாதிரியாகக் கைசங்ங்ங்கிலி ( நீளமாக ) கையிலிருந்து கழன்று விழுந்து விடும் அளவுக்குப் பெரிதாய் இருக்கும் .வெள்ளியில் செய்தால் நூறு கிராம் என்பதெல்லாம் சும்மா .அதர்க்கு மேல்தான் இருக்கும் .தங்கமாக இருந்தால் வசதிக்குத் தகுந்தது போல இருக்கும் .பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை  அணிவது  புதுவையில் வழக்கம் .

                 அப்படிப் பட்ட தங்கத்தில் செய்யப்பட்ட குருமாத்துதான் என் கண்ணில் அந்த வீதி வழியே நடந்து வரும்போது பட்டது .அதுவும் திறந்து இருக்கும் ஒரு பாத்திரம் முலாம் பூசும் கடை வாசலில் கிடந்தது .நண்பர்களிடம் சொன்னேன். உடனே என்ன மிசே (Monsieur) எங்க ? அந்த ஊர்க்கார நண்பர் அதிர்ந்தார். இப்படிக் கேட்ட புதுவை நண்பரின் தந்தை காவல் நிலையத்தில் ஏட்டு .(இன்னும் சில ஆண்டில் ஓய்வு பெறும் நிலையில்  இருப்பவர் .) தயங்கித் தயங்கி பேசிக் கொண்டே  சுமார் நூறு அடி அது கிடந்த இடத்திலிருந்து கடந்து, அந்த வீதியின் சந்திப்புக்கு வந்து நின்று விட்டோம்.

 சரியா பாத்திங்களா ஜீ ? இதைக் கேட்டது என் ஊர்க்கார நண்பர் . ஆம் என்றேன் .மீண்டும் இடத்தை உறுதி படுத்திக் கொண்டதும் அவசரமாக அவர்கள் கேட்ட முதல் கேள்வி எப்படி எடுப்பது ? அந்தக் கடைக்காரனுக்குத் தெரிந்தால் பேஜாரயிடும் என்றார் புதுவை நண்பர் .சில திட்டம் போட்டோம் கடைசியில் ஒரு திட்டம் பட்டை தீட்டப் பட்டது ( எடுக்கப் போவது தங்கமல்லவா ? ) நல்ல விசயத்துக்குத்தானே திட்டம் போடுகிறோம் என்பதால் ஒரு சுவாரசியமும் அதே சமயம் பதட்டமும் தொற்றிக் கொண்டது . நல்ல விசயத்துக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்றார் புதுவை மிசே .அது சரி !

       சரி ஒரு எண்ணம் பிறந்து விட்டது இனி நான் வேண்டாம் என்றாலும் அவர்கள்  விட வாய்ப்பு இல்லை என நன்றாகத் தெரிந்தது ,நான் அப்போது அதே குருமாத்து மாதிரி  வெள்ளியில் அணிவது பழக்கம் ஆனால் அது 30 கிராமுக்குள்தான்  இருக்கும்  .அதை எடுத்துக் கொண்டு எங்களில் யாராவது ஒருவர் கையில்  சுற்றிக் கொண்டே போவது போல போய் ,அந்த இடம் போகும் போது எதேச்சையாய் தவற விட்டு விடுவது போல தவற விட்டு  குனிந்து   எடுக்கும் போது அந்தத் தங்க குருமாத்தையும் சேர்த்து எடுத்து வந்து விட வேண்டும்.இதில் பயன் படுத்தும் நபர் அடையாளம் காணப் பட்டு விட்டாலும் அடுத்த முறை பார்க்கும் போது தெரியக் கூடாது .அப்படி எங்கள் மூவரில் என் ஊர்க்கார நண்பரை தேர்வு செய்தோம் .காரணம் அவர் இன்னும் மூன்று நாளில்

திருப்பதிக்கு மொட்டை போடப் போகிறார் .திரும்பி வந்தால் எனக்கே அவரை அடையாளாம் தெரியாத மாதிரி இருப்பார் !. அவரைப் போகவிட்டு விட்டு நான் பின்னாலேயே சைக்கிளில் போய் அவர் எடுத்தவுடன் அந்தத் தெரு முனையின் மறு பக்கம் போய்ச் சங்கிலியை எடுத்த நண்பரை அழைத்துக் கொண்டு, புதுவை நண்பர் தந்தை பணிபுரியும் காவல் நிலையம் போய் விட வேண்டும் இதுதான் திட்டம் .புதுவை நண்பர் தவற விட்ட சங்கிலியை தேடுவது போல எங்கள் நாங்கள் போன பின் அந்தக் கடை முன்னால் போய் அந்தக் கடைகாரரிடம் விசாரிக்க வேண்டும்  .காரணம் ஒருவேளை கடையில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் சங்கிலியை எடுத்த எங்கள் நண்பரை பார்த்து இருந்தால் எந்த அளவுக்கு ஆள் அடையாளம் உள் வாங்கி இருக்கிறார்கள் என்பது அறியவே .இந்த நாடகம் !

                   இதைப் படிக்கும் போது ஏதோ திருட்டு விளையாட்டுப் ( professional thief game) போல உங்களுக்கு இருக்கலாம் எங்களைப் பொறுத்தவரை உரியவரிடம் அந்தச் சங்கிலிப் போய்ச் சேர வேண்டும்.சில சமயம் நல்ல விசயத்தைச் சரியாகக் கொண்டு செல்வதுதான் கஷ்டம் என்பது அங்கு அந்தத் திட்டம் போடும் போதுதான் தெரிந்தது .

                    இதே போல 5 ஆவது படித்து கொண்டு இருக்கும் போது, உணவு
இடைவேளை முடித்து வரும்போது  நானும் நண்பனும் நடு ரோட்டில் கிடந்த வெள்ளிக் கொலுசு   எடுத்துப் போய் பள்ளியின்  வகுப்பாசிரியரிடம் கொடுக்க, அவர் அதை தலைமையாசிரியரிடம் கொடுத்தார். நாங்கள் பள்ளி அசம்பிளியில் வைத்து பொதுவில் பாராட்டப்பட்டோம் .ஆனால் அதை இழந்தவர்கள் நிச்சயமாய் எங்கள் பள்ளிக்கு தேடி  வந்து    கேட்கப் போவதில்லை   அது அறியாத வயசு .ஆனால் இங்கு கதையே வேறு .

யோசித்த படி  அவர் எடுத்து சென்று விட்டார் . நான் அந்தக் கடையைச் சைக்கிளில் கடந்து அவரை அழைத்துச் செல்லும் போது கவனித்தேன் கடையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் எந்தச் சலனமும் இல்லை .அப்போது அங்கு மூன்று பேர் கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள் .ஒரு வேளை நண்பர் எடுக்கும் போது கவனித்து இருந்தால் வெளியே வந்தாவது என்ன என்று பார்த்து இருப்பார்களே ? கடைசியாக தேடிக் கொண்டே புதுவை நண்பரை நேரே காவல் வரச் சொல்லியிருந்தோமே அதுவும் நடந்து விட்டது.

                  காவல் நிலையத்தில் , புதுவை நண்பரின் தந்தை கோர்ட் வரையிலும்  சென்று விட்டதாக சொன்னார்கள் .வரும் நேரம் என்பதுவும் சொன்னார்கள் . காத்து இருந்தோம். அப்போது புதுவை நண்பரிடம்  அந்தக் கடையில் யாராவது பார்த்து விட்டார்களா என்று  கேட்ட போது , ஆமாம் நல்லாவே கவனித்து இருக்கிறார் அந்தக் கடை ஓனர் . கடை திறந்து  அரைமணி நேரமா உட்கார்ந்து இருக்கிறோம் நாங்கள் யாரும் கவனிக்கவே இல்லை. ஒரு குள்ளமாத் தடிப் பய இங்க கிடந்த பவுனுல செஞ்ச குருமாத்துன்னு நினைக்கிறேன் அதை எடுத்துட்டுப் போயிட்டான் பாரு மிசே ? சரி அவனுக்கு அதிருஷ்டம் என்றும் புலம்பினாராம் .அடப்பாவி நல்லா கவனிச்சுட்டானே அந்த ஆள் என்று நண்பர் பயந்து விட்டார்  .நண்பரின் தந்தை வந்தவுடன் கொடுத்து விட்டு வந்து விட்டோம் .

 சங்கிலியை எடுக்கும் போது அடையாளம் காணப்பட்ட என் நண்பர்
அதற்குப் பிறகு புதுவையிலிருக்கும் வரை நண்பர் (மொட்டை போட்டு திரும்பி வந்த பிறகும்) குருமாத்து எடுத்த அந்த வீதி வழி மறந்தும் கூடப் போனதேயில்லை ! நல்ல விசயங்கள் செய்யும்போதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டியாய் இருக்கிறது .அல்லது பயப்பட வேண்டியதாக இருக்கிறது ..
      

சனி, 9 மே, 2015

சண்டையிலக் கிழியாத சட்டை இருக்கு !


எல்லாத் தனியார் நிறுவனத்திலும் அதிகாரம் பண்ண வாய்ப்புத் தேடுபவர்கள் அதிகம் .அவர்களை வைத்துக் கொண்டு சில நிறுவனங்கள் சில வேலைகளைச் செய்து கொள்ளும் .அதிகம் பிரச்சனை வந்தால் அவரை ஊறுகாயாக்கி விட்டு நிறுவன மேலாளர் அல்லது முதலாளிகள் கூடக் கைகலுவி விட்டுத் தப்பித்துக் கொள்வது வழக்கம் அப்படி அதிகார விரும்பியாக ஆசைப்பட்ட என்னை ’இதற்காகத்தானே ஆசைப் பட்டாய் ’ என்பது போல நான் முன்பு வேலைப் பார்த்தப் பஸ் கம்பெனி நிர்வாகம் ஒரு கூடுதல் அதிகாரம் தந்தது.அது உசிலம்பட்டி வண்டிக்குச் செக்கிங் இன்ஸ்பெக்ட்டர் வேலை .

                       விசயம் இதுதான் நான் மேற்பார்வையாளரகப் பணிப் புரிந்தப் பஸ் கம்பெனியில் ஆறு பஸ்கள் + ஒரு ஸ்பேர்ப் பஸ் இருந்தது . நான்கு பஸ்கள் திண்டுக்கல் to காரைக்குடி.மற்றொன்றுத் திண்டுக்கல் to மதுரை கடைசி ஒன்று, திண்டுக்கல் to உசிலம்பட்டி.இந்தக் கடைசிப் பஸ்தான் என் அதிகாரப் போதையைத் தூண்டியது .காரணம் இந்தப் பஸ் அதிகாலை எங்கள் கம்பெனி விட்டு கிளம்பி இரவு பத்துக்கு மேல் தான் திரும்பிக் கம்பெனிக்கு வரும் .முதலாளியின் கண்ணில் படும் வாய்ப்புக் குறைவு .எனவே மேற்பார்வையாளர்களுக்கு அந்தப் பஸ் மீது அதிக அக்கறையும் பொறுப்பும் இருந்தது அதிக நாள் அந்த நிறுவனத்தில் நான் இரவு பணியில் மட்டுமே இருந்து இருக்கிறேன் .அதனால் அந்தப் பஸ் பற்றிய அத்தனை தேவைகளும் .குறைபாடுகளும் ,பிரச்சனைகளும் என்னை மட்டுமே சார்ந்தவை .எனக்கு இந்தச் சவாலான வேலை மிகவும் பிடித்து இருந்தது.காரணம் பேருந்தின் மீது இருந்த காதல் .

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் . எவ்வளவு பெரிய வாகனம் எத்தனை மக்களைச் சலிக்காமல் ஏற்றிக் கொண்டு போகிறது , எத்தனையோ மக்களின் ஊர்களை, மனங்களை ,பயணங்களை இணைக்கிறது ? அந்தப் பெரிய வாகனத்தின் ஒவ்வொரு பாகமும் உங்களுக்கு அத்துப்படியானால் சும்மா காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளத் தோணாது ?      எனக்கும் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும் கொஞ்சம் இருந்தது  காரணம் பஸ் பாடிக் கட்டும் ஒரு தனியாரிடம் மூன்று மாதமும், ITI வெல்டர் என்பதால் அரசுப் போக்கு வரத்தில் அப்பரண்டிஸ் (வேலைப் பழகுனர் ) என்பதாக ஒரு வருடத்தில் பாதி என்ஞ்சின் செக்சனில் வேலை ,மீதிப் பராமரிப்புப் பணி ( மெயிண்டனென்ஸ்) என அந்த அனுபவமே எனக்கு மிகப் பெரிய பஸ் ஒரு காதலனாக உருவெடுக்க வைத்தது.ஆனால் இதெல்லாம் விட என்னுடைய ஜீன்களிலும் அந்தக் காதல் அறிமுகம் இருந்தது .நான் பிறந்த வருடம் அப்பா சொந்தக் காரை விற்று விட்டு  (என் அதிருஷ்டமா ?) LGB , பஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறார் .எனவே என் ரத்ததிலும் ஆயில் வாடைத் தாக்கம் ஒட்டிக் கொண்டது போல !

                    சரி அதற்குள்   திண்டுக்கல் to உசிலம்பட்டிப் பஸ் போய்விடப் போகிறது அதைப் பற்றிப் பேச வேண்டும் .இரவு பணியிலிருப்பதல் நடத்துனர்களிடம் கணக்கு வாங்குவதும் . இன்வாய்ஸ் செக் பண்ணுவதும் நிறுவனம் கேட்காமாலேயே செய்து என் அதிகார எல்லையைக் கூட்டிக் கொண்டேன் கண்டக்டர்ளுக்கு இன்வாய்ஸ் செக் பண்ணும் செக்கருக்கு அடுத்து இன்வாய்ஸ் திருத்தும் எங்கள் மேல் தான் ஒரு பயம் இருக்கும். அப்படி உசிலம்பட்டி வண்டி இன்வாய்சில் ஒரு குறிப்பிட்டக் கண்டக்டர்ப் பணியிலிருக்கும் போது மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது , ஒவ்வொரு முறையும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது.இந்தப் பஸ் அங்குக் கடக்கும் நேரம் கூலித் தொழிளாலர்கள் வேலைகளுக்குச் செல்லும் நேரம் .அதைக் கண்டு பிடித்து அந்த நேரத்தில் செக்கிங் செய்யச் சிறப்பு அனுமதி ! பெற்று அந்த ஏரியாவில் அதிகாலைப் போய்க் காத்து இருந்தேன்.பொதுவாய் அந்த இந்த மாதிரித் தனியார் பஸ்சில் போகச் செக்கர் என்று சொல்லிக் கொண்டு இலவசமாக ஏறிக்கொள்ளலாம் .ஆனால் அந்தச் சிறப்பு அனுமதி அந்தப் பகுதி ஜெய விலாஸ் போக்கு வரத்தில் இல்லையென்பது அந்தப் பஸ் கண்டக்டர்க் கட்டாயமாக டிக்கெட்டை என் கையில் திணிக்கும் போதுதான் தெரிந்தது.திருட்டைக் கண்டு பிடிக்க வந்த காவல் துறைக்கே அபராதமா ?

அந்த ( திருடப்படும் ) குறிப்பிட்ட ஸ்டாப்பிங்குக்கு ஒரு ஸ்டாப் முன்னாடிக் காத்து இருந்தேன் தலையில் மஃப்ளர்ச் சுற்றி இருந்ததாலும் என்னை எதிர்பார்க்காததாலும் பஸ் ஏறும் போது எங்கள் பஸ் கண்டக்டர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை ( அப்படித்தான் முட்டாள் தனமாய் நம்பிவிட்டேன் ) .நானும் சுமாரான கூட்டம் மட்டுமே பஸ்சுக்குள் இருந்ததால் டிக்கெட்டும் எடுக்காமல் இருந்தேன்..அந்தக் குறிப்பிட ஸ்டாப்பிங் வந்தது .சுமார் 40 லிருந்து 50 பேருக்கு மேல் கையில் மம்பட்டி ,கடப்பாரை ,கொத்து , கூந்தாளம் , கூடை, இரும்புச் சட்டிச் சாப்பாட்டு வாலிச் சகிதமாக ஏற, பஸ் நிரம்பி வழிந்தது அடுத்த ஐந்து கி.மீட்டரில் இதே மீண்டும் கூட்டம் ஏறி இறங்கிக் கொண்டது .அவர்களோடு நானும் மெல்லப் பின் வழியாய் இறங்கிக் கொண்டேன் . நேரே வீட்டுக்கு போய் விட்டு இரவுப் பணிக்கு வந்தேன் .அன்றைய வசூலில் குறையவே இல்லை .சில நாள் விட்டு விட்டோம் .மீண்டும் வேறு இடத்தில் அதே கண்டக்டர்த் தன் தவறைத் தொடர .பகலில் வேட்டைக்குப் போனேன் ! அங்கு வைத்தார்கள் எலிக்கு வைப்பது போல எனக்கான பொறியை.!

                         அந்தக் குறிப்பிட்ட உசிலம்பட்டி ஏரியாவில் பஸ் போக்குவரத்து நிகழ்த்துவது கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போலத்தான் வேற்று ஊர்க்காரக் கண்டக்டரோ ட்ரைவரோ அந்த ரூட்டில் போகலாம் ஆனால் வர முடியாது கதைதான் !! .ஒருமுறை அப்படி அனுப்பியக் கண்டக்டர்க் குறுக்கே நின்று கொண்டு இருந்த ஒரு பெரிய மீசைகார நண்பரின்  காலைத் தெரியாமல் மிதித்ததற்காக ஓங்கி ஓர் அறை விட்டுப் பஸ் நிறுத்தப்பட்டது .அடுத்து ஒருமுறை வழக்கமான ட்ரைவர் கொழுந்தியாவின் கல்யாணத்திற்குப் போனதால் அசலூர் ட்ரைவர் போய் , ஓர் ஆட்டின் மேல் இடிக்க ,பஸ் ஒரு ட்ரிப்பைக் கட் பண்ணி அந்த ஊர்க் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது .வழக்கம்போல, ஒரு குயர்ப் பேப்பர் ,(வயர்லெஸ்) பேட்டரிக்கு டிஸிலெரி வாட்டர் பாட்டில் , ரெண்டு ரெனாட்ஸ் பேனாவோடு மேற்படி அந்த ஊர்க் காரகளைப் போலப் பெரிய மீசை வைத்து இருக்கும் காவல் துறையைக் கவனித்து விட்டு வர வேண்டியதாக இருக்கும் .

              சட்டெனெ உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த மக்களின் நேர்மை எனக்குப்
ரொம்பவே பிடிக்கும்.வாழ்வைச் சந்தோசமாகக் கொண்டாடுவதில் அவர்கள் ஊர் விசேசங்களே சாட்சி , அவர்களைப் போல மிகவும் பாசக்காரர்களை எங்கும் பார்க்க முடியாது . நட்புக்கு இலக்கணம் அவர்களேதான் .எதையும் முகத்துக்கு முன் கேட்பவர்கள்.நான் போன இடத்திலெல்லாம் அவர்கள் நட்பு உடனே கிடைத்து விடும் .அந்தக் கம்பீரமே எனக்கு அவர்களை அடையாளம் காட்டி ஈர்த்து விடும் தன்னை மதிக்க வேண்டும் என்பதை விடத் தன்னைத் தாழ்த்திப் பார்ப்பவனிடம் தனது கை வரிசையைக் காட்டாமல் வருவதே இல்லை . இந்தக் கடைசிப் பாயிண்ட்தான் அந்த மக்களுக்கு எதிராக எனக்கான பொறியை வைத்தார்கள்

                               நல்ல கூட்டம் .ஸ்டாப்பிங்கில் என்னைப் பார்த்ததும் அத்தனை கூட்டத்திலும் வணக்கம் சொன்னார் (அந்தத் தப்புச் செய்யும்) கண்டக்டர் எனக்குக் கெத்தாக இருந்தது சிலர் வேடிக்கைப் பார்த்தார்கள் யாரோ ஒருவரை எழுப்பி விட்டு முன் பக்கம் எனக்குச் சீட் கொடுத்தார் .அவர் விசாரித்ததர்க்கு மானேஜர் என்றார் .பஸ் நிரம்பி வழிந்தது .எந்த ஸ்டாப்பிங்கில் நின்றாலும் முதுகில் வியர்வைப் பூத்தது .சில நிமிடங்களில் கடைசிச் சீட்டில் சலசலப்புக் கேட்டது .பின்னால் திரும்பி பார்த்தேன் யாரோ இருவர் மடியில் பழைய டி.வி வைத்துக் கொண்டு அதெல்லாம் உன் சௌகரியத்துக்கு டிக்கெட் போட்டால் நாளைக்கு வண்டி நம்ம ரூட்ல வராது அப்பு ,பார்த்துக்க என்றார்ப் பஸ் எல்லோரின் கவனமும் அவர் மேல்தான் மாறியது …
கண்டக்டர் , எனக்குத் தெரியாது ,கம்பெனியில என்ன வாங்கச் சொல்றாங்களோ அதைத்தான் கேட்கிறேன் என்று சொல்லி நிறுத்தி இருந்தால் பரவாயில்லை .வேணும்ண்ணா எங்க மேனேஜர் அங்க உட்கார்ந்து இருக்கார்க் கேட்டுக்க என்ற கொக்கியப் போட்டு விட்டதோடு நிற்காமல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு என்னருகே வந்து நின்று கொள்ள , டி.விக்காரர்ச் சத்தம் என்னை நோக்கித் திரும்பியது.யாருயா மேனேஜரு உங்க இஷ்டத்துக்கு ரெண்டு டிக்கெட் கேட்டா உடனே தூக்கி வீசறதுக்கு எங்கப் போறது .?

எனக்குப் புரிந்து விட்டது .கோர்த்து விட்டு விட்டார்க் கண்டக்டர் .விசயம் இதுதான் பஸ்ஸில் டி.வி எடுத்து வர அந்த வாரம் முதல் இரண்டு டிக்கெட் வசூல் செய்யச் சொல்லி நிர்வாகம் சொல்லி இருந்தது .அதைக் கச்சிதமாய் எனக்கு எதிராக இந்தக் கண்டக்டர்ப் பயன் படுத்திக் கொண்டார் .மேலும் சில பேர் டிவிக்காரருக்கு ஒத்துழைப்புக் குரல் கொடுக்க ,நான் சரி வேண்டாம் பழைய டிக்கெட் போடுக்கங்கப் பஸ்சுக்குள்ள இதை எழுதி ஒட்டுங்க என்றேன் .ஆனாலும் சீட்டு மீசைக்காரக் குரல் ஓய்வதாக இல்லை..நல்ல வேளை இதற்குள் நான் செக்கிங் செய்ய வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது .கீழே இறங்கி நின்று கொண்டு இறங்குபவர்களீடம் டிக்கெட் கேட்டேன் .அது வழக்கம் .இரண்டு பேர்க் காசு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் டிக்கெட் தரவில்லை .சில பேர் முறைத்துக் கொண்டு கையில் திணித்து விட்டுப் போனார்கள் .ஒருவர் நின்று நிதானித்து ,என் முகத்தைப் பார்த்து - நாங்க ஒன்னும் ஓசியிலப் பயணம் பண்றவனுகக் கெடையாது இந்தா ஒ டிக்கெட் பெறக்கிக்க என்று சொல்லியதோடு டிக்கெட்டைக் கீழே வீசினார் . எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .குனிந்து எடுக்க மனம் வரவில்லை .கண்டக்டரைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஏதோ ஒரு திருப்தித் தெரிந்தது .

         இரவுப் பணிக்கு வந்து முதலாளியிடம் சொன்னேன் .அந்த கண்டக்டருக்கு
டூயுட்டி போடாதிங்க  காலைல என்னை வந்து  பார்க்கச் சொல்லுங்க என்றார். .அதற்குள் எல்லாப் பஸ் கண்டக்டர்களுக்கும் விசயம் போய் விட்டது .எங்க ரூட்ல எப்ப வருவீங்கன்னு விசாரணை வேற ! (தப்பித்து வந்தது எனக்கல்லவா தெரியும் ! சட்டை கிழியாம விட மாட்டாங்களே ?) .ஆனால் அடுத்த நாள் எனக்கு இன்னொரு அதிர்ச்சி ரகசியமாக  வந்தது  .அது அந்த ரூட்டில் போய் விட்டு வேண்டாம் எனக் காரைக்குடி ரூட்டுக்கு மாறிக் கொண்ட ஒரு டிரைவர் மூலம்  வந்தது .நான்  அந்தச் செக்கிங் போகும் முன்னே எங்கள் நிர்வாகத்தில் என்னுடன் பணிபுரியும் பகல் ஷிஃப்ட் சூப்பர்வைசர் இந்தச் செய்தியைக் கம்பெனிச் செக்கருக்குச் சொல்லி,அதை அவர்  அந்தத் திருட்டுக் கண்டக்டருக்கு, அதற்கு எதிரே அந்த ரூட்டில் வரும் இன்னொரு நிறுவனப் பஸ் மூலம் விசயம் போய்விடுமாம்  .ரூட் கிளியர் .

நல்ல நெட் ஒர்க்!

.இதில் இன்னொரு ’ஹைலைட் ’இது நிர்வாகத்துக்கும் தெரியுமாம் !! .

பலே !!!                                                  

வியாழன், 7 மே, 2015

இயற்கையின் அழகிய விதிகள் .


சில பேருக்கு நயன் தாராவைப் பிடிக்கவே இல்லை .நித்யா மேனனைப் பிடிக்கிறது. எனக்கு இருபத்தி ஐந்து வயது இருக்கும் போது ஒரு தனியார் Switch and Gear பயிற்சி வகுப்பில் ஒரு பயிற்சி அளிப்பவர் சும்மா எல்லோரையும் அவர் மேல் கவனம் வர வைப்பதற்கு எந்த நடிகை நடிகர் பிடிக்கும் என்றார்  .( அனேகமாக அவர் அப்போதுதான் டேல் கார்னகியின் The Art of Public Speaking வாசித்து இருப்பார் போல ! ) நான் சாவித்ரியும் ,கமலஹாசனும் பிடிக்கும் என்றேன் .அதற்குப் பிறகு அவர் என்னைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை . இது பரவாயில்லை இன்னும்  சில பேருக்கு எல்லா நடிகையும் பிடிக்கும்  அதில் குறிப்பாய்ச் சில அம்சங்களை மட்டும் மிகவும் பிடிக்கலாம் !

சரி இதற்கு மேல் வீட்டில் இதைப் படிக்கும் அபாயம் இருப்பதால் ….

உங்களுக்கு ராஜா ரவி வர்மா ஓவியம் பிடிக்கலாம் நம் நண்பருக்கு எம்.எஃப்
ஹூசைன் ஓவியம் மட்டுமே பிடிக்கும் இன்னும் சில பேருக்கு ஓவியம் வரையும் Lady Gaga போன்ற ஓவியரையே பிடிக்கலாம் . 

   எனக்கு இளைய ராஜாவை விட ஏ.ஆர் ரகுமானைப் பிடிக்கும் .என்பார்கள் 
கவிதைகளில் நா.முத்துக்குமாரையும் பா.விஜையை ஏன் தனுஷின் கவிதைகள் கூடப் பிடிக்கத் தொடங்கி இருக்கலாம்.. 

   சுகி சிவம் பேச்சுக்களை நூலகமாகத் தொகுத்து வைத்து இருப்பவர்களும்
தமிழருவி மணியனையும் ஆர்வமாகப் பேசும் இடமெல்லாம் தேடி விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள் .

எனக்கு இந்தக் கலர் பிடிக்கும். இந்தப் பிராண்ட் பிடிக்கும் .
இந்த வண்டியைப் பிடிக்கும் ஓட்டவில்லையென்றாலும் வாழ் நாளில் ஒரு நாளாவது ரோல்ஸ் ராய்சும் , ஃபார்முலா 1 ஃபெராரி SF15 –T தொட்டாவது பார்த்து விட வேண்டும் என  ஆசை இருக்கலாம் !
சில பேருக்கு மல்லிகைப் பூ பிடிக்கும். சிலர் ரோஜா பைத்தியம் ..
ஐஸ் க்ரீமில் வெண்ணிலா .ஸ்ட்ராபெர்ரி  சென்னைக்காரர்களுக்கு  இரவில் அதிகம் குல்ஃபி பிடிக்கிறது ! 
இன்னும் பல ( பிடிக்க ) லாம்.. ஏன் இதெல்லாம் பிடிக்கும் என்பதை உங்களுக்கு தெரிந்து கொள்ளப் பிடித்து இருந்தால் நாம் தொடர்ந்து போகலாம் ..

     ஆனால் அவ்வளவு பெரிய கடலில் குதிக்கும் முன், ஏன் நமக்கும் கலைக்கும் இயற்கைக்கும் உள்ள ஒரு வித உடன்பாட்டு கணிதம் மட்டுமே இருக்கிறது என்பதைத்தான் இங்கு புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம் ... நாம் இதை புரிந்து கொள்ள வடிகட்டிய அறிவியலை மட்டுமே துணைக்கு அழைத்துக் கொள்ளப் போகிறோம் .(பதஞ்சலி யோகச் சூத்திரங்களும்  அறிவியல் பாதைதான்) .

” படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்துக்கும் ஒருவித ’கணித’ அடிப்படைதான் காரணம்” .        

              மனம் ஏன் ஒன்றை அழகாக கற்பித்து கொள்கிறது ? இதற்கு டக்கென்று போட்டுடைக்கும் என் பதில், இயற்கைக்கும் மனிதனுக்கும் அல்லது அவன் மனதுக்கும் எப்போதும் ஒரு கணிதவியல் சமன்பாட்டியல் இருக்கிறது .அதனோடு இயற்கையோடு ஒத்துப்போகும் எல்லாச் சமாச்சாரமும் அழகாக நாம் உணர்கிறோம். நாம் இப்போதும் பேசிக் கொள்ளும் இயற்கை விஞ்ஞானம் , இ. மருத்துவம் ,இ.உணவு ,இ.சிரிப்பு இ.அழகு இ.சாயங்கள் இன்ன பிற ....

                   இந்த ( விஞ்ஞானத்தின் ) அணு எண் 1 (ஹைட்ரஜன் ) முதல் 118 (அன்அன்ஆக்டியம் - Ununoctium ) வரை தொடங்கி அதன் மூலம் உருவான சூரியன்கள் அண்ட வெளி அத்தனையும் , இயற்கையின் கடைசிக் கைவண்ணத்தில் உருவான மனிதப் பிறப்பு வரை எல்லாமே சில கணித விதிகளுக்கு உட்பட்ட இயக்கமே.இதை ஒத்துக் கொள்ள யாரும் தயங்க மாட்டோம் .கோள்கள் இந்தத் தூரத்தில் இவ்வளவு வேகத்தில் இந்தப் பாதையில் இப்படித்தான் சுற்ற வேண்டும் என்ற எந்த விதி சொல்கிறதோ அந்த விதியே மனிதனையும் ஆள்கிறது.

இங்கு இயற்கை என்பதைக் கடவுள் என்று ஒருபோதும்  குழப்பிக் கொள்ளக் கூடாது.இயற்கையுடன் மனிதன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவே கடவுள்.இரண்டாவது கடவுள் கோட்பாட்டில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால் விதிகள் அடிபட்டுப் போய்விடும் ( அந்த விதிகளுக்குக் கர்த்தா கடவுள் எனக் கொள்வது கூட ஒரு நியாயம் ) ஆமாம் விதிகளே இல்லாமல் கடவுள் கோட்பாடு மட்டுமே இருந்தால் நயன்தாராவைச் சிம்புவிடம் இருந்து (மீண்டும்) பிரித்து உங்களைக் கூட விரும்பச் செய்யலாம் எனென்றால் கடவுள் கோட்பாட்டில் மனம் என்ற மாபெரும் கருவி இருக்கிறது . அங்குக் கணித விதிகள் அதனால்தான் அதே சகலத்துக்கும் காரணமானக் கணிதவியல் கோட்பாட்டில் மனம் இயற்கையின் தூதுவனாக மனிதனுக்குப் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது .மனிதன் தனது மனதின் மூலம் இயற்கையை அணுகலாம் என்பதுவும் ( சில கணித ) விதியே .( மேற்கொண்டு இன்னும் உள்ளே போனால் மனதை பற்றிய அறிவியல் அணுகு முறை கொண்ட பதஞ்சலி யோகச் சூத்திரங்கள் விளக்குகிறது.)


அந்தக் கடைசி வரிதான் இங்கு எல்லா நமக்கு ’பிடிக்கலாமையும்’ இங்கு என்னைப் பேசச் சொல்கிறது .நம்மோடு பல மனதின் - எண்ண வேர்கள் எப்போதும் நாம் காணும் காட்சிகளை அர்த்தப்படுத்திகொண்டே இருக்கிறது .ஏற்கனவே பதியப்பட்ட இயற்கை - மனச் சமன்பாட்டு உத்திகளே ஆளுமை செய்கிறது . இங்கு எனக்கு, அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாகச் சிந்தனையாளர்கள் பித்தாகரஸ் ,ப்ளேடோ நம்பியதோடு “நல்லது எப்போதும் அழகாகத் தான் இருக்கும். அழகானதோ ஒரு போதும் விகிதத்தில் குறைவுப் படாது”என்றுச் சொல்லி என்னோடு ஒத்துப் போகிறார்கள் .இங்கு ஒரு மனம் இதமாக (மன + இதம் ) வாழவே மனிதன் படைக்கப்பட்டதாகவும் அழகுணர்வின் சந்தோசமே கணிதக் கோட்பாடே தவிர உங்களுக்கும் அதர்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் பார்வையாளன் என்பது கொஞ்சம் ஒத்துக் கொள்ளக் கஷ்டம்தான் .

                அது எப்படி எனக்குள் ஏற்படும் ஒரு  நடிகையின் அழகு கிளர்ச்சியும் ரசயான   மாற்றமும், வெறும் கணித விதிக்கு கட்டுப்பட்டதாகும் ? எல்லாம்  ஹம்ப்பக் ,பேத்தல் என சொல்லிக் கொண்டுதான் இருந்தேன் இப்படி யோசிக்கும் முன் நானும்  . ஆனால் இதிலும் ஒரு சௌகரியம் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.அடுத்த முறைக் ஓ.கே கண்மனி  போன்ற பாடல்களில் வரும் நித்யா மேனனை வீட்டில் உட்கார்ந்து  ரசித்துப் பார்க்கும் போது நமது சொந்த நித்திய மேனன் ( மனைவி  ) ஏதாவது கேட்டால்  எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நம்முடைய மார் தட்டியல்ல அவர்கள் மண்டையில் தட்டிக் கூடச் சொல்லிக் கொள்ளலாம்.! (அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு எங்காவது வாய்ப்பு இருந்தால் )

சனி, 2 மே, 2015

ஒரு சீஸரும் , ஏழு ப்ரூட்டஸ்களும் !



எங்கள் வீட்டுக்கும் செல்லப் பிராணிக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை .ஏன் என்பது இதுவரை தெரியவில்லை .முதன் முதலில் அப்பாதான் எங்கோ ஒரு நாட்டு நாய் ( லோக்கல் ) குட்டியைத் தூக்கி வந்தார் .வெள்ளை வெளேரென்று மிகப் பெரிய வெள்ளைத் தேவனாய் எங்கள் ஐவரின் ( சகோதர்கள் ) அன்பையும் அள்ளிக்கொண்டது .என்ன பெயர் வைக்கலாம் என்ற போது அதையும் அப்பாதான் முடிவு செய்தார் - சீஸர் .

                           எங்களைப் போல அம்மாவின் கட்டளைக்குக் கீழ் படிந்துதான் வளர்ந்தது சீஸர் .எங்குப் படுக்க வேண்டும் ,எங்கு ’கக்கா’ போக வேண்டும்,வீட்டுக்குள் வராந்தாத் தாண்டி வரக்கூடாது,தட்டில் உணவு வைத்துச் சாப்பிடு என்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் .மண்ணில் விளையாடக் கூடாது இன்னும் பல கட்டுபாடுகளைச் சீஸர் வளர ,வளர மீறாமல் எங்களை விடச் சமர்த்தாய் எல்லோரின் அன்புக்குறியதாய் ஆகிவிட்டது .

மொத்தம் ஐம்பது குடும்பங்களே வாழும் அந்தச் சிறு கிராமத்தில் மின்சார இணைப்பு இருந்த சில வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று .சுற்றி ஒரு கிலோ..மீட்டருக்கும் மேல் வயல் வெளி மட்டுமே .வீட்டைச் சுற்றி முள்வேலிகள் இருந்தாலும் முன் பக்கம் கம்பி வேலியும் மூங்கில் கதவும் போட்டு இருந்தோம் .அந்த எல்லை இந்தியப் பாகிஸ்தான் எல்லை விடச் சீஸருக்கு முக்கியம் அதற்குள் எந்த ஒரு கோழி ,ஆடு ,மாடு ,பாம்பு ,தேள் அணில்,எலி , நாய் , அன்னிய மனிதர்கள் யாருக்கும் அனுமதி சீஸர் எப்போது தராது .அப்படி வந்தால் அவர்கள் வீடுவரைத் துரத்திச் சென்று வழியனுப்பி விட்டு உள்ளே சென்று விட்டதை ஊர்ஜிதம் செய்தப் பிறகே திரும்பும் .. .எங்கள் வீட்டுக் கோழிகள் கூடவே அலையும் .பல முறைப் பாம்புத் தொல்லைகள் வரும்போது அதை வழி மறித்துப் போராடிக் கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்றித் தந்துள்ளது ..எங்கள் பகுதியில் சுருட்டைப் பாம்பு மிகச் சாதரணமாகத் திரியும்.அதோடு ரசித்து விளையாடும் சீஸர் . கிணறுகளில் தண்ணீர் எடுக்க எப்போது போனாலும் கிளம்பிவிடும் .சில ஆண்டுகளுக்கு முன்வரை ,தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் திண்டுக்கல் பெயர் ’போன’ ஊர்.இந்த ஒரு காரணத்தினாலேயே பல ஊர்களிலிருந்து திண்டுக்கல்லுக்குப் பெண்ணே கொடுக்கமாட்டார்கள் அப்போதெல்லாம்.,

இதர்க்கு முன் ஒரு முக்கியமான விசயம் சொல்ல மறந்து விட்டேன் .சீஸர்க் குட்டியாய் வளர்க்கத் தொடங்கிய சில தினங்களுக்குள் ,தாத்தா இறந்து போனார் .அவர் பழைய ஆள் என்பதால் ஜாதிக்கு முக்கியத்துவம் தருவார் .அவர் ஆவி -  சீசருக்குள் புகுந்து விட்டதாக அப்போது நம்பினோம் ! ( அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்பது பின்னாளில் தெரிந்தது ) அதனால்தான் அவருக்கு ஊரில் யாரையும் பிடிக்காது அதைப் போலவே அதுவும் நடந்து கொள்ளும் ,ஆனால் அந்த ஊர் மக்கள் எங்களோடு மிகப் பிரியமாக இருப்பார்கள் .அங்கு இருந்த ஒரே மாரியம்மன் கோவிலுக்கு எங்கள் தலைமையில்தான் கூட்டம் விசேசம் எல்லாம் .அந்தக் கோவிலுக்கு எங்கள் வீட்டிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது .அவர்கள் எல்லோரும் விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் படிக்காத மக்கள் .ஒரு சிறு தலைவலி முதல் அத்தனை உடல் கோளாருகளுக்கும் அம்மாவிடம் மருந்து வாங்கிப் போவார்கள் .அதெல்லாம் விட எங்கள் வீட்டு வாசல்தான் மிகப்பெரிய களம் .அவர்கள் முற்றிய நெல் அறுத்து எங்கள் வாசலில் போட்டுத்தான் மாடுகளை மிதிக்க விட்டு நெல் சேகரிப்பார்கள் .அன்பான மக்கள் .மரியாதைக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

சீஸர் ஐந்து அல்லது ஆறு வயது ஆன போது , அந்தப் பயங்கர அத்தியாத்தின் முதல் பக்கம் வாசிக்கப்பட்டது.ஆம் ஆது ஒரு மழைக்காலம் நாங்கள் சகோதரர்கள் ஐவரும் செழித்து வளர்ந்துத் தொங்கும் செவப்புக் கொடிக்காப்புளிப் பறித்துக் கொண்டு இருந்தோம் வழக்கம் போல எங்களுடன் சீஸரும் இருந்தது .அப்போது கீழே விழுந்த கொடிக்காப்புளியை அந்த ஊர்ப் பையன் எடுத்தான் ,என்ன நினைத்துச் சீஸர் என்று எங்களுக்குப் புரியும் முன்னே அந்தப் பையன் இடது காலின் ஆடு சதையைக் கவ்வி பிடித்தது அவன் கத்திக் கதறியும் விடவில்லை .அண்ணன்கள் ஓடிச்சென்று சீஸரிடமிருந்து அவனைப் பிரித்தார்கள் அது கடித்த இடத்திலிருந்து ரத்தமும் வெள்ளையாய்ச் சதைப்பகுதியும் பொத்துக் கொண்டு வந்தது .அவ்வளவு ஆழமாய்க் கடித்து வைத்து விட்டது .எல்லோரும் வயல் வெளியில் இருந்ததால் நாங்களே அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைப் போனோம்.அப்போது தினமும் ஒன்றாய் பதினாறு ஊசிகள் தொப்புளில் போட வேண்டும் .அந்த நிகழ்வு நடந்து சில மாதங்கள் ஆன பின் மறந்துப் போனோம் .

அன்று வழக்கத்திற்கு மாறாகச் சீஸர்க் கொஞ்சம் அமைதியற்றுக் காணப்பட்டது.ஞாயிறு மட்டுமே அதைக் குளிக்க வைக்கும் அண்ணன் அன்று அது இருந்த நிலையைப் பார்த்துக் குளிக்க வைத்தார் ஏதோ பொருமல் மாதிரிச் சத்தம் அதனிடமிருந்து வந்து கொண்டே இருந்தது.மதியம் அதன் வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளவில்லை அண்ணனின் நண்பர் ஒருவர் வழக்கமாக வீட்டுக்கு வருபவர் நாயுடன் கொஞ்சி விளையாடுவார் .அன்றும் அது மாதிரி ஏதோ முயற்சிக்க மூக்கைக் கடித்து விட்டது லேசானக் காயம்தான் ஆனால் இது மெல்ல எல்லோருக்கும் அதிர்ச்சி தந்தது .பழக்கம் உள்ள ஆள் .இதனால் அம்மா கோபத்தில் அடித்து விட்டார்கள் .சீஸர் அன்றைய இரவும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை .கட்டப்பட்டு இருந்தது .காலை அவிழ்த்து விடப்பட்டவுடன் எங்கோ ஓடியது .மீண்டும் மதியம் ஒரு அதிர்ச்சி .ஊருக்குள் ஒருவரைத் துரத்தி இருக்கிறது அவர் புதிதாய் நெல் நடவு செய்யப்பட்ட வயலுக்குள் விழுந்து ஓடி நின்றுக் கொண்டதால் .தப்பி இருக்கிறார் .நிரந்தரமாகச் சீஸர்க் கட்டப்பட்டது ..எங்களிடமே அதன் பார்வை இப்போதெல்லாம் சற்று விரோதமாக மாறியிருந்தது. எங்கள் கவலை அதிகரித்து

அப்போது ,அப்பா தெரிந்தவகளிடம் கேட்டு முனிசிபால்ட்டியில் நாய்கள், கருத்தடை ஆபரேஷன் செய்யும் போது மட்டுமே, வெறிப் பிடிக்காமல் இருக்கத் தடுப்பூசிப் போடப்படுகிறது என்பதை அறிந்து அது எடுத்துச் சென்று போட்டு வந்தார் .சில நாள் ஆனது மீண்டும் ஒருவர் ஊருக்குள் கடிபட்டார் இந்த முறை அப்பா கவலைப் மிகவும் பட ஆரம்பித்தார் .அருகே செல்ல நாங்களே பயப்படத் தொடங்கினோம்.மீண்டும் ஏதோ ஒரு தனியார் நாய்ப் பராமரிப்பு நிலையத்தில் ஊசிப் போடப்பட்டது.வீட்டில் தனித்து விடப்பட்ட மன நோயாளி மாதிரிச் சீசர் ஆனது .அப்பா வீட்டில் மிகவும் சீசர் மேல் பாச வைத்ததை யாரிடமும் காட்டாமல் உள்ளே புழுங்கினார் .யாரிடமும் சொல்லாமல் அண்ணனிடம் சொல்லி வெகுதூரம் கொண்டு போய் விடச் சொன்னார்.காலையில் நண்பரின் பைக்கில் கொண்டு போய் விட்டு,விட்டு வந்தார் அண்ணன் .மாலை இருட்டும் போது வீட்டுக்குத் திரும்பித் தானே வந்த வந்த சீஸர் உடலெல்லாம் காயம் எங்கெங்கோ போராடித் தப்பி வந்து இருக்கிறது .அம்மா கட்டிக் கொண்டு அழுதார்கள்.ஏன் இப்படிப் பண்ற ? உன்னை நான் ஆறாவது பிள்ளை மாதிரிதானே பார்த்துக்கிறேன்.இப்படிப் பண்ணாதே என்று புலம்பினார்கள் வாலை மட்டுமே பதிலுக்கு ஆட்டியது சீஸர்.

அடுத்து இன்னொரு பிரச்சனை  சீஸர் இரவில் ஊளையிடத் தொடங்கியது இது, ஊரின் அதன் மேல் மறைமுக உள்ளே இருந்த கோபம் மேலே வரத் தொடங்கியது.ஆளாளுக்கு அப்பாவின் வெந்த புண் மனநிலையில் இருப்பதை அறியாமல் - தன்னையும் கடித்து விடும் என்ற பயத்தில் முதிர்ச்சியற்ற யோசனைகளை வாரி இறைத்தனர்.இது ஊருக்கு அபசகுணம்,கெட்ட விசயத்தை வர வழைக்கும் அறிகுறி என்றார்கள் .கடவுள் குற்றம் என அடுக்கினர். அப்பா யோசித்து கொண்டே இருந்தார்  .மதியம் வெளியில் போனவர் மாலை இருட்டும் போது சில தடியான ஆட்களோடு வந்தார் .எங்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார் அம்மாவுக்கு விசயம் தெரிந்து விட்டது .உப்புத் தண்ணி போரிங் அருகே நின்று முகம் பொத்தி அழுது கொண்டு இருந்தார் .வந்தவர்கள் விட்டுக்குள் போனார்கள் .ஒரு பயங்கரமான  குரல் கேட்டது.அதுதான்  சீஸரின் கடைசிக் குரல் எங்களை நம்பி வாழ்ந்த ஒரு ஜீவன் எங்கள் முன்னாடியே யாரோ பறித்துக் கொள்கிறார்கள் .எல்லோரும் அழுதோம் . 

வீட்டுக்குப் பின்னால் சுமார் அரைக் கிலோமீட்டர்த் தூரத்தில் ரயிவே லைன்.அது வரை மூட்டையாய்க் கொண்டு செல்லப் பட்ட சீசர், இறக்கி வைக்கப்பட்டது .அதுவரை எல்லோரும் கண்ணில் நீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.அங்கு   அவர்கள் மிக மோசமான ஒரு கொலையை அங்கு செய்தார்கள் .ஆம் அப்பாவிடம் ஊசி மூலம் கொல்வோம் என்று சொல்லி விட்டு, பாவிகள் சீஸரைக் கொண்டு சென்ற மூட்டை மேல் கல்லைக் கொண்டு , ஓங்கி ஓங்கி மேலே போட்டார்கள் .அழுது கொண்டு இருந்த அம்மா , இதைப் பார்த்த மாத்திரத்தில் , கத்தியே விட்டார் . என்ன சொன்னீங்க ? என் பிள்ளைய இப்படியாக் கொல்லுவீங்க ? என்று கதறினார் .அப்பாவும் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என்பதால் பலவீனமாய் உளறியபடியே ,இல்லை ,இல்லை அவர்கள் அப்படிச் சொல்லவில்லை,இப்படிப் பண்ணிவிட்டானுக என்றார் .

அன்று, அந்தச் சீஸருக்கு எதிராக எங்கள் வீட்டில் ஏழு ப்ரூட்டஸ் இருந்தோம் என்பது இன்னும் எங்கோ வலிக்கிறது !