சனி, 28 டிசம்பர், 2013

மூன்றாவதாய் ஒரு உலகம்


 பள்ளி விடுமுறை..

                             மிக சில பெண்கள் மட்டும்தான் பள்ளி விடுமுறை நாட்களை மாமியார் வீட்டில் செலவு செய்கிறார்கள் .அந்த கணவன் மார்களும் அந்த குழந்தையும் வரம் பெற்றவர்கள் .எனக்கு அப்படி பட்ட வரம் கிடைக்க நாளாகலாம் .


எதிர் கட்சி எம்.எல்.ஏ
.
                         எப்போதுமே தன் அம்மாவுடன் போகும் எனது பையன் இந்த முறை தனித்தே எனது மாமியார் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறான் .பள்ளி நாட்களில் தூங்குபவனை எழுப்புவதிலிருந்து ,பிரஸ் பண்ணுவது,குளிப்பது ,சாப்பிட அடம் பிடிப்பது ,எல்லாத்தையும் அள்ளி போட்டுகொண்டு பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து தொடங்கி  அவனோடு மாலை வந்தவுடன் ட்ரெஸ் அழுக்கு ஆக்கியது ,டைரியில் சரியாக வீட்டு பாடங்களை குறிக்காதவரை மொத்த புகார்களும் எனக்காக அவன் மூலம் வீட்டுக்குள் நுழையும் முன்னும் சாப்பிட உட்கார்ந்த பிறகு அவன் அம்மாவிடமிருந்தும் எதிர் கட்சி எம்.எல்.ஏ புகார் போல சரமாரியாய் குவியும் .அந்த வகையில் அமைதி படுத்தியே வீட்டின் அமைதியை காக்கும் பல அப்பாகக்ளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது போல எனக்கும் கிடைக்கலாம் !



பாக்கேட்டுக்குள் ...

                      கடந்த நான்கு நாட்கள் இந்த மாதிரி எதுவுமில்லை.மனைவிக்கு ஒரே தவிப்பு .பாருங்கள் ஒரு நாள் இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டு ,அவன் பாட்டுக்கு அங்கேயே தங்கிட்டான் என்றதர்க்கு அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்ற என் பதிலில் எனக்குரிய நோபல் பரிசு பறிக்கப்பட்டு ,தாலிபான்கள் லிஸ்ட்டில் அப்போதே சேர்த்துவிட்டார்கள்.

                  ஆனால் எனக்கும் ஒரு கேள்வி ஓடிகொண்டே இருந்தது.எங்கிருந்தாலும் யார் போனிலாவது பேசுபவன் என்னிடம் பேச முயற்சி பண்ணவில்லை .எப்போதும் ஊருக்கு ஒரு நாள் அவனோ அல்லது நானோ போனால் கூட அவன் பொம்மைகளில் ஏதாவது ஒன்றை என் பாக்கேட்டுக்குள் திணிப்பவன் எப்படி இப்படி இருக்கிறான் ?



தொலைவுகளே குறையட்டும் .

                            அவன்  பிறக்கும் முன் எத்தனையோ கனவுகளை வைத்து கொண்டு இருந்தாலும் பிறந்த பிறகு வளர்ப்பதில் ,வேலையில் இருந்த சவால்களை சந்திக்கும் வேகத்தில் அவன் மேல்  இருந்த  கவனம் எனக்கு குறைந்த போது என்னை திருத்தி கொண்டேன் .அவனோடு பேசுவதை ,விளையாடுவதை கூட்டிக்கொண்டேன். அவனுக்கு காணாமல் போன பொறுள் கண்டு பிடிக்கும் தந்திரம் ,கதை சொல்வது ,சில பொறுள்களை பார்த்து கவிதை மாதிரி (அனேகமாக அது வசனமாகத்தான் அவன் சொல்லுவான் ) போட்டி போடுவது  இப்படியாக ...

                       அருள்புரத்திலிருந்து - சாமுண்டி புரம் வீடு மாறி வந்ததும் அதுவும் பத்தாது என்று இப்போது ராம் நகர் மாறியதும் அவன் பள்ளி தொலைவுகளை குறைப்பதர்க்கே. மூன்றரை வயதில் தனியார் யோகா பள்ளிக்கு சேர்க்க போனபோது 7 குறைந்தது 5 வயது ஆக வேண்டும் என்று மறுத்தார்கள்.அவன் பள்ளியில் கேட்டபோது பத்து வயதில்தான் சேர்க்க முடியும் என்று மறுத்தார்கள் .நாழு வயதில் இடது வலது இரண்டு கைகளிலும் கிரிக்கெட் விளையாடவும் , ஐந்து வயதில் செஸ் நகர்த்தல் ,கேரம் விளையாட்டு என்றும் ஆறு முடிந்தவுடன் இப்போது வாரம் ஒரு முறை என்னுடனே யோகாவும வருகிறான். 



 காசு செலவில்லாமல் ...

                              நான் ஏற்கனவே 7 ¼ வருடம் பணிபுரிந்த கம்பெனியிலிருந்து திடீரென விலகிய போது சட்டென நிதி பிரச்சனை .ஏற்கனவே எனக்கு பணம் சேர்த்து வைப்பதில் சாமர்த்தியம் பெரிதாய் இல்லாததால் ஸ்னாக்ஸ் வாங்க கூட புதிய  சம்பளம் போதவில்லை அப்போதைக்கு நான் தேவை இல்லாத  11 வருட புகை பிடிக்கு பழக்கம் கை விட்டு அதை ஸ்னாக்ஸ் தேவை பூர்த்தி ஆனது .ஆனாலும் அவ்வப்போது கனவில் காசு செலவில்லாமல் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்து போனது ..



 ஆஃபீஸ் மருத்துவம் !

                         ஒரு முறை பள்ளியிலிருந்து மனைவிக்கு ஃபோன் .உங்கள் பையனுக்கு அடிபட்டு இருக்கிறது வந்து அழைத்து போங்கள் என்று .அவன் வேதனைப்படும் எந்த விசயமும் என்னால் பார்க்க முடியாது .மனைவியை கூட்டி பள்ளிக்கு போனால், ஆஃபீஸ் வாசலில் சட்டை இல்லாமல் சேரில் அவன் .எங்களை பார்த்தவன் என்னிடம் ஓடி வந்தான் .நல்ல வேளை அவன் முன்னால் நான் அழவில்லை .வலது நெற்றி புருவத்திர்க்கு அருகே  இரண்டு 'இன்ச்' வெட்டு .சட்டை காயப்போட்டு இருந்தது.வெளியேறிய ரத்தத்தை மறைக்க செய்த முயற்சியில் இன்னும் ஈரம் மீதம் இருந்தது.

                         யாரோ ஒரு பையனுக்கு இப்படி முன்னர் நேர்ந்த போது யாரை கேட்டு இந்த மருத்துவமனை அழைத்து சென்றீர்கள் என்று பெற்றோர்கள் கேட்டார்களாம் அதனால் வீட்டார் வரும் வரை முதல் உதவி மட்டுமே அதுவும் பள்ளி நிர்வாக ஆஃபீஸ் மருத்துவம் மட்டுமே.

                        ரேவதி மருத்துவமனையில் பார்த்தவுடன் தையல் போட வேண்டும் என்றார்கள் .பெட்டில் வைத்து பிடித்து கொள்ள கூப்பிட்டார்கள் .அவனே என் தைரியம் தெரிந்து அவன் அம்மாவை அழைத்து கொண்டான் .



பணம்டா எல்லாம் !
                       
                  சென்ற வாரம் பள்ளிக்கு அழைத்துவர போன போது அவன் கேட்ட கேள்வி எனக்கு வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது.அவன் பள்ளி தோழியின் நண்பர்கள் இவனை மதிப்பதில்லையாம் .அது ஏன் என்று அவளிடம் கேட்டதர்க்கு, (மணிரத்தினம் ரசிகை போல அவள் ! ”) பணம்டா எல்லாம் பணம்”என்றாளாம் .



மூன்றாவதாய் ஒரு உலகம் 

                         எனக்கு உடனே புரியவில்லை .பணம இருப்பவர்கள் ஒரு அணியும் இல்லாதவகள் ஒரு அணியாம் .இன்னும் இரண்டாவது படித்து முடிக்காத இவர்கள் ,உலகத்தை புரிந்து கொள்ள முடியாத  ஆச்சரியமும் பயமும் தந்ததுஎனக்கு இந்த சம்பவம் .ஓடி, ஓடி எனக்கு இன்றும் புரியாத விசயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டானே ! 
                  குழந்தைகள் நம்முடனே அவர்கள் இருப்பதால் ,அவர்களை புரிந்து கொண்டோம் என்ற நம் கணக்கு முற்றிலும் முட்டாள்தனமாகி விடுகிறது .எனக்கு ஒரு உலகம் ,மனைவிக்கு ஒரு உலகம் என்று மட்டுமே புரிந்து கொண்டு இருந்த ஏராளமான அப்பாக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு என் வீட்டுக்குள் மூன்றாவதாய் ஒரு உலகம் இருப்பது அபோதுதான் தெரிந்தது .எப்போதோ படித்த ஓஷோ வின் புதிய குழந்தை புரிய துவங்கியது

இறைந்து கிடக்கும் ..

                    அவன் வீட்டில் இல்லை . அவன் இருப்பை எப்போதும் வீட்டில் உணர்த்த  முழுதும் இறைந்து கிடக்கும் ”லெகோ- டூப்லோ” (அடுக்கிகள்) கலைக்க ஆள் இல்லாமல் கோபமாக இருந்தது . போகோ சேனலும் ,ஜியோகிராப் சேனலும் ஒளிபரப்பை தொலைத்து விட்டது போல ! .  அவன் தன் செல்லாமாக தம்பி என்று சொல்லி கொள்ளும் மிக்கி மவுஸும், புலியும்  சோகத்துடன் இருந்தது  என்னைப் போல..




கலீல் ஜீப்ரானனின் கவிதை....

"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால 
வாழ்வின் மகன், மகள்கள் 
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்; 
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை 
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் - 
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று 
அழகான சிந்தனைகள் உண்டு 
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல 
ஏனென்றால் அவர்களின் ஆன்மா 
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; 
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது 
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்; 
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள் 
வாழ்க்கை பின்னோக்கியோ 
நேற்றைக்கோ செல்வதில்லை 
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும் 
வாழும் அம்புகள் அனுப்பபடும் 
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"




3 கருத்துகள்: