செவ்வாய், 30 ஜூன், 2015

தலைக்கவசம் - உயிர்க்கவசம்தான்

 இன்று ஒவ்வொரு வீட்டில் சட்டி வைத்துத் தோசை வார்த்தார்களோ இல்லையோ எல்லோரின் தலையிலும் தலைக் கவசச் சட்டி கவிழ்க்கப்பட்டு இருந்தது .பெண்கள் எல்லாவிதத்திலும் ’மேட்சிங்’ போட்டு இருந்தாலும் பாவம் ட்ரெஸ்சுக்கு ஏற்ற கலரில் ஹெல்மெட் கிடைக்கவில்லைபோல ! மிகவும் சிரமப்பட்டு இன்றுதான் ஹெல் மெட் போட்ட பலர் ரோட்டில் இடமிருந்தும் சைடு வியூ தெரியாமல் மற்றவர்களை அணைத்தப்படி போய்க் கொண்டு இருந்தார்கள்.சிலர் ஹெல் மெட் சைஸ் தெரியாமல் வாங்கி அணிந்து கொண்டு ஃப்ரண்ட் வியூ கண்ணாடி வாய்க்கு வந்ததைச் சரி செய்து தூக்கி விட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருந்தார்கள் பாவம் !

யாரும் இனி ( ஒருமாதத்திற்கு) தமிழ்நாட்டில்
சட்டம் ஒழுங்குக் கெட்டு விட்டது என்று சதியமாய்ச் சொல்ல வாய்ப்பே இல்லை. உயிரை மதித்துத் தலைக்கவசம் அணிகிறார்களோ இல்லையோ சட்டத்திற்கும் அல்லது போலிசுக்கும் பயந்து 99 சதவிகித மக்கள் காட்டாயக் கவசமணிந்து அலைகிறாகள் அத்தனை பேருக்கும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி .என் கிருபாகரன் மேல் (அவர் பெயர்த் தெரியாமலேயே) கொஞ்சம் கோபமாக இருக்கலாம் .இன்று முதல் தமிழக மக்களை பாகுபலி சத்யராஜ் மாதிரி முடிசூடா மன்னர்களாக மாற்றி , மோட்டார் வாகனச் சட்டம் 1988 - பிரிவு 206 ன் 129 ப்படி இருந்த பழைய சட்டத்தைத் தூசித் தட்டி ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயத் தலைக்கவசத்துடன் ’சுத்த’ விட்டது அவர்தானே !

விபத்துக்களின் விளைவு தரும் பாடம்  ! 



தலைகவசம் நல்ல விசயம்தான். கடந்த ஆண்டுத் தமிழகத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 6419 பேர்க் கொல்லப்பட்டுள்ளனர் .எல்லோரும் ஹெல்மெட் இல்லாததால் மட்டுமே கொல்லப்படவில்லை அதுவும் ஒரு பாதிக்காரணம் .இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சந்திக்கும் விபத்துகளில் தலையில் அடிபடுவது மிகச் சுலபமாகச் சந்திக்க நேரிடுகிறது என்பது உண்மைதான் .இதற்கு அவசரச் சட்டம் கூடக் கொண்டு வரலாம்.ஆனால் சில விசயங்களில் இந்த விபத்துகளை இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் வேறு பல கேள்விகள் எழுகிறது ! சென்ற ஆண்டுச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் சராசரியாக நாளொன்றுக்குச் சாலை விபத்தில் 20 பேர்த் தலையில் மட்டுமே அடிபட்டு அனுமதிக்கப்பட்டார்களாம் .அதில் 15 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் 50 சதவிகிதமாம் .லைசென்ஸே 50 சிசி வரை 16 வயது வரைக்குட்பட்டவருக்கும் அதற்கு மேல் சிசி உள்ள வாகனம் ஓட்ட 18 வயது வேண்டும் என்கிறது சட்டம் ஆனால் நடைமுறையில் சென்ற ஆண்டு இந்தியாவில் 42453 இளைஞர்கள் மட்டுமே இந்தச் சாலை விபத்துக்களில் இறந்துள்ளதாகப் புள்ளி விவரம் வேறு பதில்களைத் தருகிறது. . இது எதனால் ? விபத்துக்குக் காரணமான அவர்கள் ஓட்டிய அதிகச் சிசிப் பைக்குகளின் புள்ளி விவரம் வெளிடப்படவில்லை என்பது வேறு விசயம்.

சரி இது ஒருபக்கம் .

சட்டம் நல்லதுதான், நல்லதுக்குத்தான். 

அரசாகட்டும் , நீதித்துறையாகட்டும் சட்டத்தை அமல் படுத்துவதில் காட்டும் அக்கறை ,வேகம் அது ஏன் போய்ச் சேரமல் பாதியில் கைவிடப்படுகிறது என்பதைக் கொஞ்சமாவது யோசித்தால் நல்லது.பல நன்மைகள் எல்லோருக்கும் போய்ச் சேர்வது இன்னும் சுலபமாகலாம்.
புதிய கார்ப்பரேசன் , நகராட்சி ,மாநகராட்சிச் சகல அந்தஸ்த்தும் ரியல் எஸ்டேடுக்கு வேண்டுமானால் அதிருஷ்டம். ( இன்னும் சில ஆண்டுகளில் இங்கு திருப்பூரை ஏதோ ரியல் எஸ்டேட் பெயரோடு அழைக்கும் கட்டயம் வந்து விடும் அபாயம் கூட இருக்கிறது ) ஆனால் வாகன ஓட்டிகளுக்குச் சாலை அமைப்புகள் அதற்கேற்றவறு , சாலைகளின் தரம் , சாலைகளின் விதி முறைகளை மீறி கடை கட்டிட ஆக்கிரமிப்பு ,எல்லா வேகம் மற்றும் ரக வாகனங்களும் ஒரே சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம், முக்கியச் சாலைகளில் வழிபாட்டுத் தளங்கள் , பள்ளிகள் ,கல்லூரிகள் ,பிரபல வியாபார ஸ்தளங்கள் எந்நேரமும் கையேந்திப் பவன்களைப் போலக் கூட்டம் வழியும்முக்கிய சாலைகளில் உள்ள மதுபான விற்பனைக் கூடங்கள் இதெல்லாம் விபத்துக்களுக்கு ஒரு சதவிகிதம் கூடவாக் காரணிகளாக அமையாதா ?
நம் சட்டம் இயற்றுபவர்கள் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் வேற்று மண்டலத்திலிருந்து சட்டெனெ குதித்தவர்களா என்பது மட்டும் தெரியவில்லை . இது நல்லதுதான் என்பது எல்லோரும் அறிந்ததை இதைச் சொல்ல வேண்டிய முறையை  நேரடியாக சொல்லவேண்டுமே தவிர சட்டம் என்ற நீதித்துறை பின்னால் ஒளிந்து கொண்டு மாய சதுராட்ட விளையாட்டை விளயாட வேண்டிய அவசியமும் இருக்காது.

சலிக்க வைக்கும் அரசுத் திட்டங்கள் .


சென்ற அரசு ஒரு ஆதார் என்றது - மக்கள் ஒருபக்கம் போட்டோ எடுக்க நாள் கணக்கில் வரிசையில் நின்றுச் சலித்தார்கள் .அடுத்த ஆட்சி வங்கிக் கணக்குக் கேஸ் மானியம் என்றது மீண்டும் ஓடினார்கள் .அப்புறம் பெண்களுக்குப் போஸ்ட் ஆஃபிஸ் இப்போது காப்பீடு ,நாளை வீட்டு லோன் இப்படி மத்திய மாநில அரசுகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களை அலைய வைத்து, ஆயுளைக் குறைத்துக் கொண்டு இருக்கிறது. இதைப் போலில்லாமல் இந்த ஹெல்மெட் விசயத்திலாவது நல்ல பல தரம் வாய்ந்த ஐஎஸ் 4151 எண்ணுள்ள வெள்ளை நிறத்தில் 4:3 அளவு ஐஎஸ்ஐ முத்திரையுடன் அதற்குக் கீழ் CM/L எழுத்துடன் ஏழு இலக்க எண்ணுடன் உள்ளத் தரமான ஹெல்மெட் தயாரிப்புக் கம்பெனிகளோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ரேசன் கடையில் ,சிறப்பு அங்காடிகளில் .மற்றும் தாற்காலிக விற்பனைக் கூடங்களில் , அரசே முன் நின்றுப் பெரியவர்களுக்குச் சிறுவர்களுக்கு எனத் தனித்தனியான அளவில் இந்த ஹெல்மெட் விற்பனையைத் துவங்கி இருக்கலாமே ? மக்களும் ஒரு மாத அவகாசத்தில் வாங்கி நிம்மதியாக அணிந்து செல்லும் வாய்ப்பைப் பெற்று இருப்பார்கள் இதை நீதி மன்றமே கூட வழிகாட்டல் செய்து இருக்கலாம்.சட்டம் பிழைக்குமோ இல்லையோ இம்மாதிரி அக்கறைகளால் எந்நேரமும் மருத்துவமனைகளை நோக்கி விரைந்து போய்க்கொண்டே இருக்கும் ஆம்புலன்ஸ் அவசரங்களைத் தவிர்க்கலாம் அதில் போகும் ஊசலாடும் உயிர் பயணம் குறையலாம் அல்லவா ?

நேர்மறை எண்ணங்கள் 


அதோடு முக்கிய இடங்களில் ஹெல்மெட் அணியாதவகள் கால் பரப்பி உடல் பிதுங்கிச் செத்துக் கிடக்கும் மோசமான எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைத் தவிர்த்துத் தலைக்கவசம் முறையாக அணிந்தால் தலை முடி உதிர்தல் கழுத்து வலித் தலைவலி வரும் வாய்ப்பைத் தவிற்கும் தலைகவசத்துக்கு உள்ளே மெல்லிய துணி ,பருத்தியிலான கைக்குட்டைத் தலையில் சுற்றி அணிவதால் தவிர்க்கலாம் என்பதையும்  தலைக்கவசம் ஒருவகையில் தலைப் பாதுகாப்புக்கு இருப்பது போல சாலைச் சத்தங்களிலிருந்து கொஞ்சம் காதுக்கும் மனதுக்கும் ஓய்வையும் கொடுக்கிறது . இது கவனத்தைச் சாலையில் செலுத்தி வாகனம் ஓட்டுவதற்கு வழிசெய்யும். குளிரிலிருந்து தப்பிக்கவும், தூசிலிருந்து தப்பிக்கவும், பூச்சிகள் போன்றவை கண்களையும், காதுகளையும் தாக்காமல் காக்கவும் கூட தலைக்கவசங்கள் பயன்படுகின்றன சொல்லலாமே.

அதோடு அலைபேசியை வெளியே தெரியாது என்பதால் உள்ளே வைத்துப் பேசுவது ப்ளுடூத் காதில் திணித்துக் கொள்வது காதின் ஆரோக்கியத்திற்குத் தவறு என்று, கொசு விளம்பதிற்குச் சூர்யாவை வைத்துப் பேசுவது போலத் தலைக்கவசம் உயிர்கவசமே என்று ஆர்யாவை வைத்துப் பேசலாமே ?. (இந்தத் தலைப்பு நல்லா இருந்தாச் சாலமன் பாப்பையாவுக்குச் சொல்லலாம்)
சரி இது அரசு விசயம் .

நம் கடமை 

சரியாகத் திட்டமிடாமல் நாமும் இனி வீட்டிலிருந்து ,ஆஃபிசுக்கு ,வேலைக்குப் பள்ளிக்குத் தாமதமாகக் கிளம்பி விட்டு நம் சொந்த அவசரத்தையெல்லாம் மூட்டையாய்க் கட்டிக்கொண்டு வந்து வேகமென்ற அவசரத்தில் சாலையில் கொட்டுவதைத் தவிர்க்கலாம் எப்போதும் நல்ல விசயம் வாசப்பக்கம் வரும் கெட்ட விசயம் கொல்லைப் பக்கம் வரும் என்பது யாரோ சொல்லி விட்டுச் சென்றது இந்த ஹெல்மெட் விசயத்திற்கு மிகப்பொருந்தும் ஹெல்மெட் அரசு கண்டுகொள்ளாத போது அதை அணிவதால் நமக்குப் பாதுகாப்பு என்ற எண்ணம் வருவதே நல்லது .சென்ற ஆண்டு இந்தியச் சாலை விபத்தில் பாதிப்பட்ட எண்ணிக்கை 67,232 பேரில் நாமோ நம் சொந்தமோ ,நட்போ கூட இருக்கலாம்.

இன்னும் சாலை விதிகளில் சொல்லப்படாத ஒரு தாரக மந்திரம் இருக்கிறது அது உங்களுக்கு மட்டும் ரகசியம் .

“உங்களுக்கு எதிரில் அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டி வரும் எவரும் புத்தித்தனமான முடிவு எடுப்பார்கள் என்று நம்பிவிடாதீர்கள் “ 

என்பதே அது . அதாவது உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .வேறு எதுவும் அப்புறம்தான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக