சனி, 24 மார்ச், 2018

அம்மா எனும் மாயநதி !




வாடகைக்குச் சுமார் மூன்று மாதங்களாய்த் தேடி அலைந்த பிறகு மனைவிக்கும் பையனுக்கும் அந்த வீடு பிடித்திருந்தது

இப்போது தங்கியிருக்கும் வீட்டில் அட்வான்ஸ் திருப்பித்தர ஒரு மாதம் கூட ஆகலாம்.திருப்பூரில் நாம் நினைக்கும் ஏரியாவில் வீடு கிடைப்பது மழைவரும் போது பாத்திரம் வைத்துத் தண்ணீரைச் சேமித்துக் கொள்வது போல உடனடியாகச் செய்து விடவேண்டும் .இல்லாவிட்டால் யாராவாது ஒரு வீட்டுப் புரோக்கர் அதிகம் வாடகைக் கொடுப்பத்தாகக் காய் நகர்த்தி நம்மால் யாரோ ஒருவருக்கும் வாடகையைக் கூட்டி விடுவார்.

வீட்டுக்கு அடவான்ஸ் கொடுக்க உடனடியாக ஐந்து மாத வாடகைத் தொகை வேண்டும் .அந்த அளவுக்குத் உடனே வேண்டும் என்ற ஞாபகத்தோடு மனதுக்குள்ளே மனைவியின் கழுத்தில் அணிந்திருக்கும் அம்மாவின் செயின்தான் முதலில் மனக்கண் முன் வந்து அசைந்தாடியது

அம்மாவின் செயினை வாங்கி ஹேண்ட் பேக்கில் வைக்கும் போது, மனசு கனத்தது .

இந்தத் தேசத்தின் என்ன சாபமோ என்னவோ தெரியவில்லை. எந்த ஒரு மகனும் அம்மா என்ற ஆன்மாவப் புரிந்து கொள்ளும் முன்னே அவள் இந்த உலகத்திலிருந்து இயற்கை மீட்டு அழைத்துக்கொள்கிறது .  
நாற்பது வயதுக்கு மேல் சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் தாய்த் தந்தை ஞாபகம் தவிர்க்க முடியாத நிழலாய்த் தொடர்கிறது .

அம்மா இறந்து போவற்கு இரண்டாடுகளுக்கு முன்னால் கடைசி முறையாகத் திருப்பூர் வந்து திரும்பிச் செல்லையில் வாசல் வந்து வழியனுப்பும் போது , அப்பாவுக்குத் தெரியாமால் சுருட்டிய காகிதச்சுருளைப் போலப் பணத்தை என் கைக்குள் திணித்து விட்டு, யாருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்.எனக்கு ஏதாவது ஆச்சுன்னாக் கூட யாரிடமும் ஏதுவும் கேட்காதே என்று நான் வேண்டாம் என்று மறுத்தும், வச்சுக்க என்று ஒரு சின்ன அதட்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அம்மா சுருட்டிக்கொடுத்த பணத்தை விரித்து எண்ணியபோது எட்டாயிரம் இருந்தது. ரெண்டு வருடம் கழித்து அம்மா இறந்த போது அம்மாவின் கடைசிக் காரியத்திற்கான மூன்று அண்ணன்களோடு செய்த செலவு மொத்தத்தில் என் பங்கு ஏழாயிரத்து ஐநூறு .

அது மட்டுமில்லை அப்பா மாதிரி சேர்த்து வைக்கும் தந்திரம் எனக்கு இல்லை என்பதுவும் அம்மாவுக்குத் தெரியும். அம்மா இறப்பிற்குப் பிறகு இருந்த நகைகள் பிரிக்கப்படும்போது அண்ணன்களும் அண்ணிகளும் என் மனைவிக்குச் செயினை விட்டுகொடுத்தார்கள். கழுத்தில் செயின் இல்லாத அம்மாவின் ஒரே மருமகள் என் மனைவிதான் என்பதால் .

ஆனால் எனக்கு அப்போது கூட அம்மாவின் செயின் அப்படி எங்கள் பங்குக்கு வந்ததன் காரணம் இப்படிச் செலவுக்குக் காத்து இருந்ததால் தானோ என்னவோ ! இறந்த பிறகும் தன்னைத் தேடிவந்தவருக்குக் கொடுத்தார் சீதக்காதி ( செய்தக்காதி ) என்ற 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' பற்றிப் படிக்காசுப்புலவர் பாடிய வரிகளில், “ ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்என்ற வரி தேடி வந்து மனதுக்குள் வந்து முன் நின்றது

 

ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/
ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/
மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.


அம்மாவை எரித்த சாம்பல் குவியல் கூடுதுறை ஆற்றில் கரைந்து கலந்து போனது உண்மைதான் . முக்கூடல் என்று பேசப்படும் அந்த ஆற்றில் காவிரி, பவானியும் வெளியே கண்ணுக்குத் தெரிந்த ஆறுகள் இரண்டுதான் ஆனால் வெறும் கண்ணுக்குப் புலப்படாத மாயநிலையிலான அமுதா என்ற இன்னொரு ஆறு இரண்டு ஆற்றுக்கும் கீழே ஓடிக்கொண்டு இருப்பதாக ஆன்மீக வரலாறு பேசுவது போல, அம்மா இன்னும் எங்களைச் சுற்றி அரூபமாக ஏதாவது ஒரு பொருள் வடிவத்தில் கலந்து நின்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் .


அடுத்த முறை என் அமராவதி அம்மா வயிற்றில் நான் மகனாகப் பிறக்கும் வாய்ப்புக் கிடைத்தால், என் மனதில் யாருக்கும் தெரியாமல் அடைந்து கிடக்கும் பல தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதற வேண்டும் என்று மனம் ஏங்குகிறது !

அந்தப் பிரபலமான கேரள அடகுக் கடையின் செயினை எடையிட்டு மதிப்பிடுபவர் ,ஏன் சார் செயின் ஈரமாக இருக்கிறது என்று கேட்டார் .

ஒருவேளை கழுத்தில் அணிந்து இருந்ததால் அதை அப்படியே கொடுக்காமல் எனது மனைவி தண்ணிரில் கழுவிக் கொடுத்து இருக்கலாம்.ஆனால் அதன் எடை மதிப்புக் கூட்டுவதற்கானத் தந்திரமாகச் செய்து கொண்டு வந்து இருக்கலாமோ என்ற எடை மதிப்பீட்டாளர்த் தன் தொழில் முறையில் சிந்தித்து அப்படிக் கேட்டு இருக்கலாம் .


ஆனால் ஆந்தப் பணத்தைக் கையில் வாங்கி வந்து படியிறங்கும் போது என்  

கண்களின் கண்ணீரால் நனைந்தது .


அம்மாக்கள்  இருக்கும் போதும் இல்லாத போதும் தன் குழந்தைகளுக்குத்  

தேவை ஏற்படும்போதேல்லாம் சுழ்ந்து நின்று உதவும் மாய நதிகள்தான்...



வியாழன், 22 மார்ச், 2018

சிஸ்டம் நல்லாத்தான் இருக்கிறது ! .



            நேற்று மாலை அலுவலக மெயின் செர்வரிலிருந்து யாருக்கும் மெயில் வரவில்லை .சிஸ்டம் கேர் ஆட்களிடம் விசாரித்த போது அலுவலகத்திலிருக்கும் ஏதோ ஒரு சிஸ்டம் ஹேக் செய்ப்பட்டுள்ளது தெரியவந்தது.யாரோ ஜான் பிரிட்டோவாம் அந்தப் பிரகஸ்பதிதான் செய்து இருக்கார்(ன்) என்றார்கள் எந்த மெயில் ஐடி என்று கேட்டபோது அலுவலகத்தின் இருபதுக்கும் மேற்பட்ட சிஸ்ட்டத்தில் என்னுடையது ஐடி என்றார்கள் .உடனே போர்க்கால அடிப்படையில் எல்லாச் சிஸ்டத்தின் பாஸ்வேர்டுகளும் சிஸ்டம்கேர் நபர்களால் சில மணி நேரத்தில் மாற்றப்பட்டது

           கம்பெனி பாஸ் இத்தாலி ட்ரிப்பில் இருக்கிறார் .எங்கள் சர்வலிருந்து மெயில் போகவில்லையென்றால் இத்தாலி அரசிடம் கடன் வாங்கியாவது Aster 30:Long range anti-aircraft and anti-missile missile .வாங்கி என் தலைக்குக் குறி வைத்து அனுப்பி விடுவார்.நல்லவேளை தலைக்கு வந்தது , தொப்பியை மட்டும் தூக்கிக்கொண்டு போய்விட்டது .





          இந்தப் பிரச்சனை ஓய்வதற்குள், சென்னை SBI க்ரெடிட் கார்டிலிருந்து பேசுகிறோம் .உங்கள் சென்ற மாதத்திற்கான பயன்பாட்டுத் தொகை நிலுவையிலிருக்கிறது  இருபத்தி நாழு மணி நேரத்திற்குள் குறைந்த பட்ச குறிப்பிட்ட தொகை செலுத்த சொன்னார்கள் . அந்தப் போன் கால் நபரிடம் நான் அப்படி ஆள் இல்லை யோக்கியன் கடந்த 13 அன்றே செலுத்தி விட்டேன் என்ற என் வாதம் எடுபடவில்லை .கட்டி விட்டு மறு வேலை பார் என்றார்.பேசி முடிக்கும்போது உங்களுக்கு வேறு எதாவது உதவ வேண்டுமா என்ற ஆளிடம் நீயே அதைக் கட்டிவிடு என்று நாக்கு வரை வந்த பதிலை அடக்கிக் கொண்டேன்.

            இன்று எனது வங்கியில் சீரியஸாக விசாரித்தால் . அடடா அது உங்கள் செக்கா என்ன காரணமோ தெரியலை நேற்றுக் மாலைதான் ஆதரைஸ் செய்து அனுப்பி இருக்கிறோம் .பார்ப்போம் என்றார் வங்கி அதிகாரி மிகக் கூலாக. நான் ( கடுப்போடு ) நன்றி சொல்லிவிட்டு , குறைந்த பட்சத் தொகைக்குச் செக் போட்டு கொடுத்து விட்டு வந்தேன் .தலை விதியல்ல வங்கி விதிகள் அப்படிச் சாதாரணமாகி விட்டது !


           சில நாட்களாகவே எனக்கு ரேசன் கடைப் பக்கம் போகாமலேயே DZ-TNEPDS நமது நியாய விலைக்கடையிலிருந்து சுகர் , ஆயில் வாங்கியதாகத் தெளிவாக PDS Bill _________ எண்ணோடு வந்துகொண்டே இருந்தது.நேரில் சென்று விசாரித்தேன் .எதுவுமே தெரியாதது போல அந்த நியாய விலைக்கடை அலுவலர் அப்படியா என்றார்.வெளியே வரும்போது நியாய விலைக் கடைக் காம்பவுண்ட் மீது கடையில் பொருள் அளந்து போடுபவர் சாய்ந்துகொண்டு பீடி பிடித்துக்கொண்டு இருந்தார் அவரை மெல்ல விசாரித்தேன்.( எங்கள் கம்பெனி டி சர்ட் ஒன்று கொடுத்து அவரைப் பழகி வைத்து இருக்கிறேன் ) சார் உங்க ஸ்மார்ட் கார்டு இங்க இருக்கும் என்றார்.என்னங்க சொல்றீங்க அது என்னிடம் வீட்ல இருக்குன்னேன் அதிர்ந்து போய் .உங்களுக்கு இங்க வரலைன்னுத் தாலுகா ஆஃபிஸ்ல வாங்கி வந்தீங்களா என்றார் .ஆமாம் என்றேன் .அப்படின்னா இங்க ஒன்னு வந்திருக்கும் அதை வச்சு நீங்க வாங்க வரலைன்னா நாங்களே போட்டுக்குவோம் என்றார் மிகச் சாதாரணமாக .எப்படி ரெண்டு வரும் என்றேன் அதிர்ச்சி நீங்காமல் .உள்ள கேளுங்க என்றார் .

              மீண்டும் உள்ள போனேன் அதே (நியாய) கடை அலுவலர் . எப்படிச் சார் நான் வாங்க வராம பில் போட்டு மெசேஜ் வருதுன்னு எனக்கு வந்த மொபைல் மெசாஜ் காட்டினேன்.அதற்கு அவர் சார் அதுவா நீங்க உங்க கோட்டாவ ( வாங்க வேண்டியதை ) வாங்காம விட்டா அடுத்த மாதம் அதை இருப்புல (லெட்ஜர்) காட்டி எங்களுக்குத் தர வேண்டியதைக் குறைத்து விடுவார்கள் அதனால நாங்களே பில்ல போட்டுக்குவோம் .இப்பவும் நீங்க ஒன்றும் கவலைப்படாதிங்க , உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் உடனே வந்து வாங்கிக்கங்க என்றார் மகாப் பிரபு போல .


     காவல் துறை திருப்பூரில் சந்து சந்துக்கு ஒளிந்து இருந்து கேஸ் பிடிக்கிறார்கள் .காவல் துறை நண்பரிடம் விசாரித்த போது இத்தனை கேஸ் பிடிக்கவேண்டும் என்ற மேலிடத்து உத்தரவாம். நண்பர் ஒருவர் ஒன் வேயில் சிக்கிக்கொண்டார் .சார் அந்தப் பக்கம் ரோட்டில் தோண்டிய குழி மூடாமல் இருக்கிறது என்று தன் தவறுக்குச் சாலையை நீதிமன்றம் போல நினைத்து தன் தரப்பில் வாதாடியிருக்கிறர்.அதெல்லாம் அப்பீல் கிடையாது என்று சொல்லி ஸ்பாட் ஃபைன் வாங்கி அனுப்பி விட்டார்கள் .

      வண்டிக்குச் சாலை வரி வண்டி வாங்கும் போதே பிடுங்கிக்கொள்கிறார்கள், வருசா வருசம் இன்சூரன்ஸ் ரினுவல் பண்ணு ,ஹெல்மெட்டுப் போடு ,ஒரிஜினல் லைசன்ஸ் வச்சுருக்கணும் இப்படி ஆளாளுக்குச் சட்டம் போட்டு முக்குக்கு முக்கு  தடுத்து நிறுத்திக் கேஸ் போடுகிறார்கள் .ஆனால் ஒரு சாலையும் உறுப்படியா இல்லை . இதை யார் சடையைப் பிடித்துக் கேட்பதுன்னு தெரியலை என்று நொந்துகொண்டார்.




             ஒன்று புரிகிறது . எல்லாப் பக்கமும் சிஸ்டம் இருக்குது . செயல் படுத்தும் மனிதர்களிடம் அக்கறை இல்லை . இப்படி சம்பாதிப்பது தவறு என்ற சுய ஒழுக்கம் பைசாக்குக் கூட இல்லை. அட்லீஸ்ட் கடவுள் பக்திக்காகவாவது ஒருகாலத்தில் மரியாதை இருந்தது ,திராவிடக் கட்சிகளின் கைங்கர்யத்தில் இப்போது அதுவுமில்லை ( தலைவர்கள் , அவரவர் மனவிமார்களை மட்டும் கோவிலுக்கு இடைத்தரகர்களாக அனுப்பிப் புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள் ) . மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற மரியாதை அரசு எந்திரப் பணியாளார்களுக்குக் கொஞ்சமும் இல்லை. லஞ்சம் கொடுத்துதானே வேலைக்கு வந்தோம் என்ற மமதை ஒருபக்கம் .எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க அவரவ் வேலைகளை விட்டு விட்டு அவர்களுக்கு எதிராகப் புகார்க் கொடுக்க மெனெக்கெடத் தயாராக யாரும் இல்லை என்பது மறு பக்கம் புரிந்து வைத்து இருக்கிறார்கள் அவர்கள் .

                  ஒரு அரசு இயந்திரம் இப்படித்தான் செயல் பட வேண்டும் என்ற சிஸ்டம் ஏற்கனவே ஒன்றுக்குப் பல முறைத் திருத்தம் செய்து வைத்து இருக்கிறார்கள் .அதை நடைமுறைப்படுத்த ஆள் இல்லை. எப்போது எந்த அரசு அலுவலகத்திலும் சாமான்யனிடம் கூடக் கையூட்டுப் பெறக் கௌரவப் பிச்சை எடுக்கவில்லையோ அதுவே மக்களையும் ஜனநாயகத்தையும் உண்மையில் காக்கும் ஆட்சி .அதை ஆன்மீக அரசியல் தந்தாலும் சரி மக்கள் நீதி மய்யம் தந்தாலும் சரி .யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் தீர்ப்புப் பொய்யாகலாம் மகேசன் தீர்ப்பு என்றும் பொய்யாவதில்லை. ‎Richard Dawkins சொல்வது போல கடவுளை அவர்கள் The Blind Watchmaker என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

சனி, 2 டிசம்பர், 2017

தீபத்திருநாள் - வாழ்க்கையின் வசீகர தினம் !




காலங்கள் எவ்வளவு அழகானவை

            இந்த மனதிற்கு காலத்தில் இறந்த காலம் எதிர்காலம் எல்லாம் இல்லை அதற்கு எப்போதும் வசந்த காலத்தின் மீதுதான் விருப்பம் போல ! அதை மட்டுமே அது .மிக பத்திரமாக வாழ்வின் பல அழகாக சேமித்து வைத்து இருக்கிறது பாருங்களேன் !
                                                                                    

              அப்படிபட்ட என் வாழ்வில் நான் இன்றும் என்னை இந்த உலகில் மயக்கும் தினங்களாக கொண்டாடுவது  தீபத்திருநாளும் , மார்கழிப் பூஜைக் காலை வேளையும்தான். 

      திண்டுக்கல்லில் நண்பர்கள் யாரையும் அழைத்துக்கொள்ளாமல் நான் நகர் வலம் வரும் ஒரே நாள் திருக்கார்த்திகைத் தினத்தன்றுதான்.சேர்ந்து போனால் அதற்குப் பல அரத்தங்கள் வந்து விடுவதும் ஒரு காரணம்.அதை விட வசீகரமான காரணம் .தனித்துத் திரியும் போது சில விசயங்கள் உள்ளுக்குள் பொங்கி வழியும்.ஆமாம் தீபத்திருநாளன்று மாலை திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றும் நாளன்று வீட்டில் அம்மாவுக்கு உதவியால் மண் தீப சுட்டிகளைக் காலையிலிருந்து ஊரவைத்து வெளியே எடுத்து உலரவைத்தால்தான் சுட்டிகள் எண்ணை அதிகம் குடிக்காது என்பதால் அப்படி வழக்கம்.பிறகு திரியிட்டு எண்ணை வார்த்து தயார் செய்துகொள்வேன் .

          அம்மா அற்புதமாகக் கோளம் போடுவார்கள் .அதிலும் தேர்கோளம் பிரசித்தம். நல்ல நாட்களில் மட்டும் எந்தக்கோளம் போட வேண்டும் என்பது என் சாய்ஸ். அதே போல அம்மா போட்ட கோளத்தில் எந்த வர்ணப்பொடி இட்டு அழகு படுத்துவதும் எனது உரிமை .அம்மா சாமி படத்தின் முன்னும் ,வாசல் படி முன்னும் கடைசியாகப் பிரமாண்டக் கோளம், தெருவாசல் முன்னும் போடுவார்கள் . ஒற்றைப்படை எண்ணிக்கையில் மொத்தமாக எடுத்துக்கொண்டு , தீபங்களை வீட்டு வாசல் படிகள் இரு பக்கம் தொடங்கி , நீர்த்தொட்டி , காம்பவுண்ட் சுவர் என வரிசை கட்டி அழகு பார்த்து பார்த்து வைப்பேன் .சில இடங்களில் மட்டும் சுட்டிகளில் அடியில் எண்ணை வழிந்தால் பாதுகாப்பிற்காக அட்டை வைப்பது வழக்கம். தெரு வாசல் பிரமாண்டக் கோளத்தின் மையத்தில் சின்ன முக்காலி போட்டு அதன் மீது கேரளாவிலிருந்து வாங்கி வந்த ஐந்து முகப் பித்தளை விளக்குகள் வைத்து அதைச் சுற்றி பூ வடிவத்தில் ஏதாவது ஒரு அழகில் சுட்டிகளை வைப்பேன் .அம்மா அன்று மறுப்பெதுவும் சொல்ல மாட்டர்கள்.அவன் இஷ்டம் என்பார்கள் . 

      திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றியவுடன்,நாங்கள் வீட்டில் தீபமிடத்தொடங்கிவிடுவோம் , சகல தீபமும் மொட்டு மொட்டாய் மலர்வது போல அந்தக் காற்றில்  மெல்லியதால் ஒரு மஞ்சள் ,சிவப்பு ஆடையணிந்த பெண் அசைந்தாடுவது போல ரம்மியமாக இருக்கும் .வீட்டின் எல்லாத் தீபமும் எற்றிவிட்டு ,சாமி பூஜை செய்துவிட்டு வாசல் வரை தூபம் காட்டி விட்டுச் சூடம் ஏற்றி வீட்டுக் கார்த்திகை அரங்கேற்றம் முடிந்துவிடும்.அதற்குப் பிறகு ... 



நகர் உலா.

         இது எனக்குப் பதினேழுவயதிருக்கும் போது வந்த பழக்கம் . எங்குமே நண்பர்கள் இல்லாமல் வீட்டை விட்டுச் செல்லாத நான் அன்று மட்டும் நண்பர்கள் இல்லாமல் செல்வதற்குக் காரணம் சேர்ந்து செல்லும் போது காட்சிகளின் கோணம் மாறிப்போகலாம்.பார்ப்பவர்கள் மனதில் வேறு ஒரு நோக்கமாக மாறி எதார்த்தம் திசைமாறி விடும் என்ற பயமே காரணம் .என் நண்பர்களுக்கு ரசிக்கும் என் மனம் தனித்து இருப்பதையே விரும்பும் என்று புரிந்துகொள்வார்கள் . வீட்டுத் தீபம் ஏற்றி விட்டு மெல்ல என் தெருவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டின் முன் உள்ள கோளத்தையும் ,அதன் விளக்குகளையும் ரசிக்கக் கிளம்பி விடுவேன் .இன்னொன்றும் புரிந்திருக்கும் அந்தச் சமயத்தில் அந்த நாளில் ஏனோ எல்லாப் பெண்களும் மிக அழகாகத்தெரிவார்கள் .பல வீட்டில் தீபாவளியன்றே இதற்கும் சேர்த்து புது ஆடை எடுத்திருப்பார்கள் .அதனால் அந்தப் பட்டுப் புடவைகள் சரசரக்கப் பெண்கள் தீபமிடுவதும் ,தீபமிட்ட வீட்டில் ஜன்னல் ஓரங்களில் தீபத்தின் ஒளியில் மிளிரும் வெளிச்சச் சிதறல் முகத்தில் பட்டுத் தெறிக்க நின்று வாசலை நோக்கி நிற்கும் போது எல்லாப் பெண்களுமே தேவியின் ரூபமாய் தெய்வீகமாய்த் தெரிவார்கள் .அது ஒரு மனம் பூராவும் தீராத அழகை நிரப்பும்.சில வீட்டில் தீபாவளியின் மிச்ச பட்டாசு முனுமுணுக்கும்.

          எங்கள் தெருக்களைச் சுற்றித் தொடங்கும் உலா அப்படியே சொசைட்டி தெரு,அக்ராஹரம்,ஹவுசிங்போர்டு எனக் கால்கள் போய்கொண்டே இருக்கும் .எனக்குத்தெரிந்து அன்று மட்டும் கால் ஓய்வைத்தேடாது.சுமார் இரண்டு மணி நேரமாவது கண்களும் மனசும் தீபத்தின் சுடர்களைப் பறித்து மனதுக்குள் நிரப்பி விட்டு வீடு திரும்பி விடுவேன்.அன்று பலரும் திண்டுக்கல் மலைக்கோட்டை மேலே ஏறி சொக்கப்பானைக் கொளுத்திச் சுழற்றுவது மிக அழக்காக வெகு தூரமத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் .அது பொதுவாகப் பழைய சைக்கிள் டயர்கள் .துணிகளை எண்ணையில் நனைத்துக் குச்சி அல்லது கயிற்றில் கட்டுச் சுழற்றுவார்கள் .வேடிக்கைப் பார்த்து விட்டு வீட்டில் எரிந்து முடிந்த விளக்குகளைப் பூக்கள் வைத்துக் கையமர்த்தத் தொடங்கிவிடுவேன்...


சுமார் எட்டு மணிக்கும் மேல் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு அமர்ந்தால் , கவிதை மார்கழிப்பனியாய்க் கொட்டும் ...




வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அசல் ஓட்டுனர் உரிமமும் போலி மக்கள் நலனும் !




ஓவியாவைத் திருமணம் செய்து கொள்வீர்களாஎன்பதற்கு ஆரவ் என்ன சொல்லப் போகிறார் ?

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசுத் தன்னுடைய கட்சிப் பெரும்பான்மையை எப்படிக் காத்துக் கொள்ளப் போகிறது ?

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஏன் விலக்கப்படுகிறார் ? இன்ன பிற கவலை இந்தியாவைச் சூழந்து இருக்கும் போது,

          தமிழகரசு வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது ( ஆனால் சந்து சந்துக்கும் சீருடை அணிந்த காவல் துறை இருக்கும் ). என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் நீங்கள் செல்லும் முக்கியச் சாலைகள் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்து விபத்துக்கள் நடந்துஉங்கள் வண்டியிலோ ஆம்புலன்ஸ் வாகனத்தில் வீடு போய்ச் சேர்ந்தாலோ திருப்பூர் அவினாசிச் சாலைகளில் ஆயிரம் அடி இடைவெளிக்கு மூன்று சிக்னலில் காத்து இருக்கையில் உங்களுக்கு அதில் முன் நிற்கும் வாகனம் எவ்வளவு புகையில் கருகினாலோ புஷ்பாத் தியேட்டர்த் துவங்கி RTO அலுவலகம் வரை மற்றும் பழைய பேருந்து நிலையம் முதல் வீரபாண்டி வரை உள்ள பிரபல உணவகங்களின் வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு இருந்தாலோஆட்சியே மாறினாலும் இந்தா முடித்து விடுவோம் என்று கட்டிக்கொண்டே.......இருக்கும் பாலங்களாலும் இன்ன பிற சாலை ஆக்கிரமிப்புகள்முக்கியச் சாலைகளை ஒட்டிய கோவில் கூட்டங்கள் ,எந்த ஒரு வேக விதிகளுக்கும் உட்படாத விர் விர்... வாகனத் தொந்திரவுகள் போன்ற இத்தியாதி இத்தியாதிப் பிரச்சனையால் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை எதுவும் இல்லாமல் போனாலும் (எதுவும் மாற்ற மாட்டோம் ).


        ஆனால் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் உரிமம் எடுத்து வண்டி வாங்கி அதில் ISI முத்திரை உயிர்கவசம் அணிந்திருந்துவண்டிக்கும் (உங்களுக்கும் கூட) இன்சூரன்ஸ் வைத்திருந்து உங்கள் அன்புக் குடும்பத்திடம் போயிட்டு வரேன்னு சொல்லி விட்டு வந்தாலும்நீங்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181-ன் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிப் பிடிபட்டால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்ஏன் இரண்டையுமே சேர்த்து கூட விதிக்க முடியும் என்பதாகச் சட்டம் சொல்லுகிறது.

    அன்பு மனைவிகள் வேண்டுகோளுக்கிணங்க ஆதர்ச வாகன ஓட்டிப் புருசர்கள் தங்கள் உரிமங்களை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பந்தாவா வந்திருந்த போதிலும் இன்று யாரும் திருப்பூரில் சீருடைக் காவலர்கள் நிறுத்தி உரிமம் சோதிக்காததால் ஏமாற்றம் அடைந்தோம் .அனேகமாக எப்படி எங்கு நிறுத்தி சோதிக்கலாம் என்ற ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கலாம் !



       திருப்பூர் போன்ற வாகன பயன்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் நிறையப் பேருக்கு வாகன ஓட்டும் உரிமம் இருந்தாலும் சாலை விதிகளை மதிக்கவோ விரும்புவதில்லை.இங்குக் கம்பெனிகளின் கட்டாயத்தில் வண்டி ஓட்டுவதும்,அவசரம் அவசரம் என்ற மன அழுத்தம் முழுவதுமே சாலைகளின் மேல் கொண்டுவந்து சுமத்துவதுமே காரணம்.மேலும் முக்கியச் சாலைகள் எப்போதும் மாற்றிப் பயணிக்க அனுப்பப் படும்போதும் அங்கே மாற்றப்ட்ட சாலையை அதைச் சீர் செய்யக் காவலர்கள் நியமிப்பது குறைவு.தானே தனக்கு உதவி என்ற கோபமும் இதற்குக் காரணம் .ஒரு சின்னக் கூட்டம் என்றாலும் மிக ஜனசந்தடிப் புழங்கும் திருப்பூர் நகராட்சி முன்னால் அனுமதி கொடுக்கிறார்கள். பொதுவாய் ஊருக்கு ஊர் வழி விடு விநாயகர்தான் அதிகம்.ஆனால் திருப்பூரில் விநாயகசதுர்த்தியால் வழி அடைக்கப்பட்டவர்கள் அதிகம். முக்கியவீதிகள் அனைத்துமே சில கி.மீட்டர்தான் இருக்கும்.இருந்தும் எதனால் முக்கியச் சாலைகள் வழியே ஊர்வலங்களுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.அதுபோல ஏற்கனவே போக்குவரத்துக்குப் போதாக் குறையாக உள்ள குமரன் சாலைகளில் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக்கடைகள் துவங்க எப்படித்தான் அனுமதி அளிக்கிறார்கள் என்பது நீலத் திமிங்கில விளையாட்டின் (Blue Whale Game) 50 ஆவது நாள் போல அதிர்ச்சியளிக்கிறது.


       திருப்பூரில் என் போன்ற பல நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவர்கள் ஒரு வீட்டுக்கு வாகனங்கள் ஓட்டினாலும் அல்லது நிறுவனங்களுக்காக வாகனங்கள் ஓட்டினாலும் அவர்களின் அசல் வாகன உரிமம்தான் அவர்களுக்கு வேலை உத்திராவாதம் (Guarantee ) அளிக்கிறது.அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.நண்பன் ஒருவன் சொந்த ஊரிலிருந்து போனில் பேசும்போது என்னுடைய பதினாறு லட்ச ரூபாய் லாரியை ஒரிஜினல் லைசென்ஸ் நம்பித்தான் கொடுத்து இருக்கிறேன். ட்ரைவரும் அதனால்தான் பொறுப்பாய் ஓட்டிக்கொண்டு இருக்கிறான் .நான் அவனிடம் காவல்துறைச் சோதனைக்காக ஒரிஜினல் லைசென்ஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வண்டி வருமா இல்லை அடுத்த மாநிலத்தில் அவன் விற்று விட்டுக் காணவில்லை என்று சொன்னாலும் நான் நம்பி அவன் பின்னால் அலைய வேண்டியதுதான் என்று நொந்துகொண்டான்.




        காலை இது சம்பந்தமாக தந்தி தொலைக்காட்சி ஒரு அலசல் நேரடி செய்தி தொகுப்பு செய்தது அதன் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டே பேசும்போது நம்முடைய ATM கார்டுகள் நாம் ஒரிஜினலை பத்திரமாக வைத்திருக்கும் போது அது போல அசல் உரிமமும் முக்கியத்துவம் கொடுத்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். நல்ல ஆலோசனை ஆனால் பாண்டே நீங்கள் ஆளும் கட்சி திவாகரன் அணி போல சில சமயம் பேசுகிறீர்கள்.நாம் ATM இல்லாமல் கூட நம்முடைய தேவைக்கேற்ப காசோலை அல்லது இணைய சேவையை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை உபயோகம் செய்யலாம் .உங்கள் அசல் உரிமம் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்  எப்படி நடத்தப்படுவீர்கள் என்று என்னை வந்து தனியே சந்தியுங்கள் சொல்கிறேன் .

       உரிமம் தொலைந்து போனால் அதைப் பெறும் வழியை எளிதாக்கினால் இது சாத்தியம். நாங்கள் எப்போதும் அரசை மதிக்கிறோம்.அரசு சொல்வதைக் கேட்டு மதிப்பதால்தான் ஓட்டுனர் உரிமம் தேர்வு எழுதி, எட்டுப்போட்டு, வாய் மூலம் பதிலளித்துப் பெற்று வைத்து இருக்கிறோம்.இது எங்கள் கடமை ஆனால் அதைப் பற்றிய சந்தேகங்களும் சங்கடங்களும் அறிந்து பேசுங்கள் .

    அது சரி உங்களைப் போன்ற பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் உண்மை மட்டும்தானே பேசுவீர்கள் .அது மக்களுக்கு என்ன செய்தால் என்ன ?








சனி, 22 ஜூலை, 2017

திரு.கோபிநாத்துக்கு அன்பு வணக்கங்கள் .




          அரசுக்கு எதிராக மக்களே தெருவில் இறங்கி டாஸ்மாக் கடைகளைத் துரத்தி அதற்காகத் தடியடி வாங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் மனம் விட்டுச் சிரிக்கும் நிகழ்ச்சியில் சிரிப்பு என்ற பெயரில் குடிகாரத்தனத்தையும் , பெண்கள் வேசமிட்ட ஆண்களையும் வைத்து மது,மாது என்ற இரண்டையும் கொண்டாடத் தொடங்கியது ஏன் என்று தெரியவில்லை .என்ன பஞ்சம் வந்தது உங்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு ?

          நாடகங்கள் போன்ற  நிகழ்ச்சிகளிலும் போதை என்ற வஸ்தைத் தெரியாமல் கலப்பது தொலைந்து போகட்டும். சிரிப்பு நிகழ்சியைக் குடும்பத்துடன் உட்கார்ந்தால் தவறாமல் இடம் பெறுவது போதையில் காமெடி பண்ணுவது , ஆண்கள் பெண் வேசமிட்டுப் பெண்கள் நடத்தையைக் கேவலத்தின் உச்சத்திற்கு இழுத்துக் கொண்டு போவதே வாடிக்கையாகி வருகிறது. இது எப்படிக் காமெடியில் சேரும் ? இதனை உருவாக்கும் இயக்குனர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லவே இல்லையா ? அவர்கள் வீட்டுக் குழந்தைகள் முதல் எல்லாருமே இதைப் பார்க்கத்தானே செய்வார்கள் ? பார்ப்பதால் இந்தப் போதையில் உளரும் காமெடிக் கன்னி வெடிகள் பிஞ்சு உள்ளங்களில் பதியாதா ? அது இதைப்பார்க்கும் நிரந்தர நடுவர்களாக இருப்பவர்கள் யாவரும் உச்சி முகர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள் .அதிலும் ஒருவர் தனக்கு இருக்கும் குடிக்கும் பழக்கத்தை ஏதோ சர்பட்டம் வாங்கியது போலப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார். 


 ஆண்கள் பெண் வேசமிடுவது தவறல்ல .ஆனால் அது ஒரு அதீத ஆணாதிக்க அருவெறுப்பை உரித்துக்காட்டிக் கொள்ளச் செய்யும் அவலமாகவேத் தெரிகிறது .ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதை அவளுக்குச் சமூகம் சொல்லித்தரும் பாடம் மிக முக்கியம் .அவள் மேல் இருக்கும் தாய்மையும் அன்புமே இன்று வரை மிக உயரத்தில் வைத்து இருக்கிறது .அதைத் தள்ளிக் கீழே சாய்க்கும் விதமாக ஆடைகளை விலக்கிக் கொண்டு அலைவதும் ,இரட்டை வசனங்களால் ஆண்களே அருவெறுக்கும் வசனங்களை உச்சரிப்பதும் அதற்குக் கை தட்டு வாங்குவதும் எப்படி காமெடிக்கு மரியாதை சேர்க்கும்

       உங்களால் சிரிக்க வைக்க முடியவில்லையானாலும் பரவாயில்லை .சீரழிய வைத்துவிடாதீர்கள் .மிகப்ப்பெரிய செய்தி சேனலுடன் இணைத்துக் கொண்டு தொடங்கிய நீங்கள் செய்திகளே இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்து  பாராட்டுப் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் நோக்கி வளர்ந்து கொண்டு இருப்பதன் காரணம் உங்கள் தொலைக்காட்சியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்ட கவனமேயாகும் .

    கல்யாணத்திற்கு முன் வைத்துக்கொண்ட காதலைக் கூட விவாதிக்கும்  நீயா நானா விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் தாங்கள்  தயவு செய்து உங்கள் நிகழ்ச்சிகளில் இது சரியா என்று மக்கள் அரங்கில் விவாதித்து மக்கள் உணர்வுகளுக்கு மரியாதைத் தாருங்கள் என்ற விண்ணப்பத்தை உங்கள் தொலைக்காட்சி மீது வைத்திருக்கும் உரிமையும் அன்பும் மீதுள்ள அக்கறையாக பதிவு செய்கிறோம்.நன்றி.