செவ்வாய், 31 மே, 2016

ஆலயங்கள் இல்லாத ஊரும் , குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் !




            சுமார் இரண்டு மாதங்கள் பள்ளிக் கல்வி விடுமுறையில் சாலைகள் அத்தனையும் ஓய்விலிருந்து இன்று  முதல் அதிரப்போகின்றன.......
அங்கும் இங்கும் அனாயசமாகக் குழந்தைகளை அள்ளிக் கொண்டு கடக்கும் ஆட்டோக்களும் , ’பெயில்’ கிடைக்காத கைதிகள் போல வேனுக்குள் பள்ளிக்குப் பயணிக்கும் குழந்தைகளின் பாவமான முகங்களும் , அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கூட்டத்தால் தன்னுடைய கலெக்சன் பாதிக்கும் என்ற கடுப்பில் வேண்டுமென்றே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் தள்ளி நிறுத்தும் பேருந்தும் அதை  நோக்கி, விட்டேனே பார் என்று ஓடும் இலவசப் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களின் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் காணக்கிடைக்கும் இனி வழியெங்கும் .ஒரு பேருந்து போனாலே வால் பிடித்துத் தொடர வேண்டிய திருப்பூர் மங்களம் செல்லும் அலுவலகச் சாலையில், ஒரு யுகேஜியோ, எல்கேஜியோ படிக்கும் விரல் சூப்பும் மேட்டுக் குடிப் பையன்களை அழைத்துச் செல்லும் பல பெரிய கார்களால் சாலை மறியல் தினமும்  நடக்கும்.. 


       இதுநாள் வரை ஜிம்மிலும் ,யோகாசன் வகுப்புகளிலும் அரட்டை அடித்து விட்டு வந்து ஏதோ ஒரு  மியுசிக் சானலின்  கடைசிப் பாட்டையும், கைகாட்டிக் கேவலமான வணக்கம் சொல்லி விட்டுச் செல்லும் சுமார் ’காம்பயரிங்’ அழகியைப் பார்த்து விட்டுச் சென்று கொண்டு இருந்த அப்பாமார்களுக்கு, இனி தினப்பலன் ’அவஸ்தை’ .

   சாவகாசமாகச் சமைத்து விட்டு சர்வ லட்சணங்கள் பொருந்தியத் தொலைக்காட்சித் தொடரைப் பக்கத்து வீட்டு மாமியிடம் சிலாகிக்கும் அம்மா மார்களுக்கு இனி ’கரண்ட்கட்’ .

    வீட்டில் செய்தித் தாளின் கடைசிப் பக்க விளம்பரங்களைக் கூட விட்டு வைக்காமல் வாசித்த தாத்தாக்கள் இனி பாலத்தின் மேல் பயணிக்கும் ரயில் பெட்டி போல விட்டு விட்டு விட்ட இடத்திலிருந்துதான் வாசிக்க வேண்டும் .
   இந்தச் சமயத்தில் கார்ப்பரேசன் பைப்பில் தண்ணி வந்தால் எல்லாம் கோவிந்தாக் கோவிந்தாதான். பார்த்துப் பார்த்துப் பண்ணிய உணவுகள் யாரும் விசாரிக்காத தவற விட்டக் கடிதம் போல ரசிக்கப்படாமல் கிடக்கும்.


 முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்லும் LKG (Lower Kindergarten) UKG (Upper Kindergarten) குழந்தைகளைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சோகமாகவும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கும் .விட்டு வாசலில் தொடங்கிய அழுகை பள்ளிவரைத் தேம்பித் தேம்பிப் பள்ளிக்கு வந்தும் அம்மாவின் இடுப்பை விட்டு இறங்காமல் ஓவெனெ அழுகும் குழந்தைகளும், அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று கதறும் பிள்ளைகளும் பார்க்க இரண்டு மனம் இருந்தால் தேவலாம் . எப்படியோ சமாதானப்படுத்தி ஆயாவிடம் கால் மனதாய் அனுப்பி வைக்க ,அழுது கொண்டே முதல் முறையாக தன்னை விட்டு பிரிந்து செல்லும்பிள்ளையைப் பள்ளிக்கதவின் ஊடே பார்க்கும் அம்மாவுக்கு எவண்டா கண்டுபிடிச்சான் இந்தப் பள்ளிக்கூடங்களை என்று நினைத்து அழுகையும்ஆத்திரமும் கூட வரலாம்  !

  எப்படியோ குழந்தையை விட்டு விட்டு வந்த அம்மாவுக்கு இடுப்பிலிருந்து இறங்கிய குழந்தை மனதிலிருந்து இன்னும்  இறங்காமல் இருக்கும் தவிக்கும் .வீட்டுக்குள் நுழைந்தால் அப்போதுவரை குழந்தைக் கலைத்துப் போட்ட பொருள்களும் அவசரத்தில் கழற்றிப் போட்டுச் சென்ற ஆடைகளும் மீண்டும்மீண்டும் ஞாபகப்படுத்த ஒரு சமயம் போய்க் கூட்டிட்டு வந்தரலாம் என்று கூட அந்த அம்மாவுக்குத் தோணும் .இன்று அந்தக் குழந்தையில்லாமல் அவள் ஒரு மூன்று மணி நேரத்தைக் கடந்து விட எத்தனை முறைக் கடிகாரத்தைப் பார்த்து இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது .கோவில் இல்லாத ஊரும் ,குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் . 


          நேற்று வரை பகல் பத்து மணிக்கு மேல் பல்லைக் கட்டாயத்தில் அரைகுறையாக விளக்கிய பசங்கள் வீட்டை ரெண்டு பண்ணுங்கள் இல்லாத இடத்தில் தேடக்கூடாதைத் தேடி இல்லையென்று பெற்ற அம்மாவின் சாபங்களையும் ஒரு ஜோசியருக்கு ஒரு காசு இல்லாமல் கழுதை ,எருமை, பிசாசு என்ற புதிய பெயர்கள் தேடி வரும் . ஒன்பதாயும் கிளம்பாமல் குறிப்பிட்ட வயது பசங்கள் அங்கு இங்குக் கெஞ்சிக் கதறிப் பெற்ற அலை பேசி எண்ணில் தன் கேர்ள் ஃபிரண்டுக்கோ பாய் ஃபிரண்டுக்கோ அலைபேசியில் யூனிஃபார்மில் எப்படி இருக்கிறேன் என்று (அவனுக்கோ அவளுக்கோ) செஃபி எடுத்து அனுப்பிக்கொண்டு இருப்பார்கள் .. 


             விடுமுறையில் உறவினர்களின்  ஊர்களுக்குச் சென்று புதிதாய் முளைவிட்ட காதல் நாற்றுக் கதைகளைச் சுமந்து சென்று, தன் கூட்டாளியுடன் பாபிலோனியாவின் நேபுகாத் நேசர் ரேஞ்சில் அளப்பதுவும்,ஐபிஎல் விராத்தின் அடிக்காத சிக்சருக்கெல்லாம் வசவுகளால் அலங்கரிப்பதுவும் , தோணி பாவம் என்று அங்கலாய்ப்பதுவும் , கிறிஸ் கெய்ல் பெண் நிருபர் மெக்மெக்லின் பேட்டி எடுக்கும் போது என்ன கேட்டார் ? என்ற சுவாரசியங்கள் வேறு கோணத்தில் ரசிக்கப்படுவதுவும் இனி நாளும் சாதரணமாகும். ..

           என்னுடைய பையனுக்கு மூன்று வருடம் போராடி இந்த முறை மாற்றிய பள்ளிக்கு ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் அழைத்துச் சென்றேன் .அவன் தன் அம்மாவை  கூட வர வேண்டாம் என்றான் .நேற்றே நான் அவன் பள்ளிக்கு போய் தொடங்கும் நேரம் விசாரித்து விட்டேன் ..இன்று அரை நாள் மட்டும் .போகும் போது ஒரே ’நெர்வசாக’ இருக்குப்பா என்றான்.உங்களுக்கு இருந்துச்சா இதே மாதிரி என்று கேட்டான் .ஆமாம் என்றேன் .முத நாள் யார் கூட போனீர்கள் என்றான் என் அண்ணனுடன் என்று சொல்லிவிட்டு   .எதாவது தோணினால் மகரிசியை நினைத்துக்கொள் என்றேன்.

அப்புறம் ஒன்று சொன்னான்  ,முதல்ல போனவுடன் யாராவது என்னை மாதிரி ஒரு புதுப்பையனைத் தேடி பழகிக்கொள்வேன் அப்புறம் அவனும் நானும் சேர்ந்து மற்றவகளை பழகிக்கொள்வோம் என்றான்  புத்திசாலி . அறிவில் அவன் அம்மா மாதிரி !


            வகுப்பை விசாரித்து உள்ளே போனோம் .மாடி ஏறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அப்பா உங்களுக்கு நெர்வசாக இருக்கா ? என்றான் இல்லை இது எனக்கு பழகிப் போனதால் ஒன்றுமில்லை என்றேன்.வகுப்பில் கடைசி பென்ஞ் மட்டும்தான் காலியாக இருந்தது  அதில் ஒரு சைனா தேசத்து பையன் போல புருவமில்லாமல் உருண்டையாக இருந்தான் .என் பையன் என்னைப் பார்த்து  நீங்க கிளம்புங்க என்று சைகை செய்தான் .

   மாடிப்படி இறங்கும்போதுதான் எனக்கு பையன் கேட்ட நெர்வசஸ்னஸ் தொற்றிக்கொண்டது .சரி, யாருக்கும் தெரியாமல் அழுவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே ?



       

வியாழன், 19 மே, 2016

அழகை ரசிக்க மூடு ( Mood ) அவசியமா?


         
Selena Gomez' - ‘World’s Most Beautiful Women of 2016’ 

காதல் செய்யும் போது இந்த உலகமே அழகாகத் தெரிந்தது. அந்தப் பருவத்தில் பன்னியும் அழகாய்த் தெரியும் என்று என் பாட்டி சொல்லக் கேட்டதும் ஞாபகம் வருகிறது , அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன் .உலகிலேயே அவரவர் மனதின் அளவுகோல்தான் அழகைத் தீர்மானிக்கின்றன. என்கிறார்கள் மனோதத்துவியலாளர்கள். ஆனந்தமான நிலையில் இருக்கும்போது இந்த உலகத்தில் அத்தனையுமே அழகுதான் என்கிறது ஆன்மீகம் .படைப்பின் ரகசியங்கள் அத்தனையுமே அழகியலைச் சார்ந்ததுதான் என்கிறார்கள் கடவுளைக்கூட ஒத்துக்கொள்ளாதவர்கள் .எல்லாம் சரிதான் என்று போல நமக்குத் தோணினாலும் ,அழகு என்பதைச் சிந்திக்கும் போது எல்லோரும் ஏக மனதாய் ஒத்துக்கொள்ளும் விசயம் புற விசயங்களைக் கடந்த அகவியலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். 

             இயற்கை அழகு என்ற ஒரு உணர்வைக் கொடுத்ததே ஏதோ ஓர் உள்நோக்கம் கொண்ட விளையாட்டின் உச்சமாயும் , தந்திரமான வலைப்பின்னலுமாய்த் தெரிகிறது . அதற்காகக் கவர்ச்சியையும் அழகையும் எங்கும் ஒன்றாகப் பார்த்து விடவும் கூடாது. நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அதுவே அழகு என்று அர்த்தம்.
           
Miss universe 2015

             இங்கே நாம் அழகின் ஆதாரத்தைத் தேடி ரொம்ப வேகமாய்ப் போகிறோம் என்பதாய் எனக்குத் தோணுகிறது ... அதனால் மெல்ல ஒரு சின்ன விசயத்தில் ஆரம்பிப்போம் .கடந்த ஆண்டு Paulina Vega (Paulina Vega Dieppa ) என்ற பெண் மிஸ் யுனிவர்சாகத் தேர்வு செய்யப்பட்டார் .( நமக்குதெரியும் அந்த அழகிப் போட்டிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு எதெல்லாம் மிக முக்கியமாக வைத்துள்ளார்கள் என்பதை அதைப் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் விட்டுவிடுவோம் ! ) ஆனால் அந்தப் இந்தப்பெண் நமக்கு அப்படி ஒன்றும் அழகாகத் தோணவில்லை. காரணம் அவள் அவள் கொலம்பிய பெண் என்பதாலா ?
              இல்லை வெளியில் பார்க்கும் அழகுக்கும் நம் மனதின் வாசனை என்று சொல்லப்படும் ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது . நாம் பார்க்கும் விசயங்கள் சகலமும் மனதின் ஏற்கனவே இருக்கும் சில ஆதாரங்களுடன் இடத்துக்குத் தகுந்தாற் போலவும், பார்க்கும் பொருளுக்குத் தகுந்தார் போலவும், அப்போது தோன்றும் மனதின் எண்ண இயல்புக்குத் தகுந்தார்போலவும் தோன்றியதெல்லாம் பதிந்துகொள்கிறது . நல்ல மன நிலையில் ( மூடில் ) அது வெளியே செயல்படுகிறது .

 அப்படி அவள் ஒன்றும் அழகில்லை   !     

               அழகை பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்த்த நமக்கு முந்தைய தலைமுறை நேரில் பார்க்காத ஏழாம் கிளியோபாட்ரா அழகி என்று நம்பிக்கொண்டு இருந்தது. கிரேக்கத்தைச் சேர்ந்த  புளூட்டாக் ( Plutarch ) என்ற வரலாற்று மற்றும் வாழ்வியல் ஆய்வியல் ஆசிரியனுக்கு அதுவும் பிடிக்கவில்லை ! கிளியோபட்ரா நீங்கள் நினைக்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் அழகில்லை   (Cleopatra was melodic, intelligent, charming and charismatic. But not a jaw-dropping beauty, like Elizabeth Taylor up above.And she was slender and not too tall.  என்று அந்த கனவையும்  கலைத்தான் என்பது வேறு விசயம் . 

         அடுத்து அந்த அளவுக்கு யாரும் பேசப்படாவிட்டாலும் மர்லின் மன்றோ (Marilyn Monroe )  என்ற அழகி அந்த இடத்தை நிரப்பிவிட்டதாக நம்பிக்கொண்டார்கள்.  ஆனால் நம் முந்தைய பெரிசுகளை அவ்வளவு கிறங்கடித்த, அத்தனை பேரழகியாகப் பார்க்கப்பட்ட  மர்லின் மன்றோ  “I'm pretty, but I'm not beautiful. I sin but I'm not the devil. I'm good, but I'm not an angel” என்று பொதுவில் தன் அழகையே  போட்டு உடைத்தாள்.




       நன்றாக யோசித்தால் , கைகளில் அள்ளிய மழை நீர் போல, இதுதான்  அழகு தீர்மானிக்கும் முன் அது மனதின் வழியே வழிந்து ஓடிப்போய் விடுகிறது…ஒருவேளை அழகு இலக்கணத்தோடு பிறந்து இருந்தால் அதை இலக்கியம் கட்டிப்போட்டு இருக்கும்.  

  மின்னல் அரசி’யாம் சீதை  !     



  எப்படியாவது அழகின் நதி மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற ஆசையில் கொஞ்சம் பின்னோக்கி கம்ப ராமாயண காலம் நோக்கி நகரலாம்...அங்கு வடமொழியில் வால்மீகி கூட பேசாத இடம் ராமனும் - சீதையும் கண் கலந்து இதயம் நுழைந்த இடமான கன்னி மாடப்பகுதி .இந்த இடத்தில் ராமனின் பார்வையில் நுழைந்த கம்பன் சற்றே ஆர்வ மிகுதியில் ..

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

     ”தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.”
           என்று வருணித்து சீதா தேவியின் அழகைப் பற்றி பேசுகிறார் ஆனால் அதை முடிக்கும் முன் கம்பனுக்கு ஒரு விசயம் குறுக்கிடுகிறது.தான் ராமனின் பார்வையால் பார்த்தாலும் இவள் ராமனுக்கு மனைவியாகப் போகிறவள். அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் சட்டெனெ தோன்றியதோ என்னவோ அங்கு சட்டெனெ, 
‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ 



       நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவி என்று ‘மின்னல் அரசி’யாம் சீதை! கம்பர் சுதாரித்து பேசுகிறார் கம்பர்.சரி அதை விடுவோம் .ராமனின் சீதைக்கே இத்தனை வருணனை தேவைப்படுகிறதென்றால் அழகை ரசிக்க எவ்வளவு மூடு தேவைப்படுகிறது ? 

அர்த்தயாம பூஜை.

      சிவன் கோவில்களில் இரவு சுமார் 8.30க்கு மேல் ( கோவில்களுக்கு தகுந்தாற் போல)  சிவ ஆகமம் – பூஜா முறைகளில் இரவு அர்த்தயாம பூஜையும் ஒன்று   ( மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல் என்பதாக நடத்தப்படுகிறது . ) அப்போது இறைவன் மிகவும் மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் கேட்கும் வரம் தருவார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது .அது போல வாஸ்து பகவானுக்கு உகந்த நேரமாக அவர்  எழுந்து ,குளித்து ,உண்டு ,நல்ல திருப்தியான மன நிலையாக தாம்பூலம் தரித்த நேரம் என்பது வாஸ்து பூஜைக்குறிய நேரமாகவே கருதப்படுகிறது  .இப்படி இறைவனுக்கே வரம் தர நேரம் ( மூடு )  சொல்லப்படும் போது நாம் என்ன விதி விலக்கா ?


      ஆனால் இதில் விதி விலக்கு இருக்கிறது ! இயற்கைப் படைப்புகளில் எங்காவது லயித்து மனம் நிற்கும் போது மட்டும் தன்னையறியாமல் பகுத்து பார்க்கும் குணம் சற்று பின்னோக்கி நகர்ந்து விடுகிறது ! கடல், மலை,நதி குளம் ,வானம் , மரங்கள் , பூக்கள் , பறவைகள்,மழைக்காட்சி,வானவில் எல்லாமே அழகாய்த் தெரிகிறது .இங்கு சற்று மின்னல் கீற்றாய் ஒரு விடை அழகைப்பற்றி கிடைக்கிறது . ஆம்.மனம் இயற்கையின் தாளவிதிக்குள் கட்டுப்படும்போது அது எண்ணங்களை கிளறாமல் நேரடியாய் மனதின் அடித்தளத்துக்குள் நீயே அதுவாகிறாய் "தத் துவம் அசி “ என்று கலந்து கரைந்து போகிறது .

               மனிதன் எங்கிருந்து தோன்றினானோ அங்கே போய் கலந்து நிற்கவே உயிரும் மனமும் ஒன்றாய் போட்டியிடுகிறது .தேவையைப் பொறுத்தும், அடைந்து அனுபவிக்கக் கூடிய அழகெல்லாம் சலித்து மனம் ஒதுக்கிறது .எது நிரந்தரமோ அங்கே மனம் நிபந்தனைகளை கை கழுவிக்கொண்டு லயித்துப்போக தாவி நிற்கிறது ... !

செவ்வாய், 17 மே, 2016

+2 மாணவர்களின் அன்புப் பெற்றோர்களுக்கு ....


ஒரு சின்னக் கதையோடு தொடங்குவோம் .. 


வீட்டில் படிப் படி என்று ஒருவனைப் பிழியவில்லை .ஆனால் அவன் படிக்க ஆசைப்பட்டான் ஆர்வமாக இருந்தான் .சின்ன வயதிலிருந்தே மனோதத்துவத்தில் மிக ஆர்வமாக இருந்தான்.பத்தாவது மதிப்பெண் பட்டியலில் அவன் எடுத்த குறைந்த மதிப்பெண்ணில் அறிவியல்தான் முதலிடம்.வெறும் 43 தான். ஆனால் அவன் படித்த அரசுப் பள்ளியில் யாரும் Pure Science பிரிவில் சேர மறுத்ததால் அவன் பள்ளி அவனை வம்பாக அந்தப் பாடப் பிரிவில் உடக்கார வைத்தது.மண்ணும் சரியில்லை ,விதையும் சரியில்லை அப்படியானால் வெள்ளாமை எப்படிப் பலன் தரும் ? +2 வில் தோல்வி.அப்போது அவனுக்கு அவன் வீடு தோள் கொடுத்தது .ஐ.டி.ஐ படிக்க வைத்தது .சில அரசியவாதிகள் செய்தச் சூழ்ச்சி அதிலும் வேலை கிடைக்க விடாமல் துரத்தியது.அவனாய் வேலை ஒரு பிரசித்திப் பெற்ற விவசாய மோட்டார்க் கம்பெனி ஷோரூமில் பில் போடுவது,தினசரிக் கணக்குப் பராமரிப்பது .வங்கிக்கு போவது என உயர்ந்தான்.இந்த வேலைப் பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வியில் எம்.ஏ நிர்வாகவியல் படித்தான் ,அதிலும் முழுமையாக்கத் தொழில் விடாமல் துரத்தியது .ஜோதிடம் ,கம்யூட்டர்,மெர்சண்டைசிங் இன்னும் எத்தனையோ படித்தான் எதிலும் முழுமை அடைய முடியடவில்லை...

ஆனால் அவன் கனவை ஒரு குரு நிறைவேறினார் அதுவும் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் மிகப்பெரிய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினான்.அந்த டிப்ளோமாவை இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து போன தன் தாயிற்கு அர்பணித்தான் .அடுத்து அதே கல்வியில் இரண்டாடுப் படிக்க வேண்டிய முதுநிலை முடித்தான் .அதை அடுத்தச் சில மாதங்களில் மறைந்த தன் தந்தைக்கு அர்பணித்தான்.இப்போது அவன் அதே கல்வியில் ஏறக்குறைய எட்டு வருடம் படிக்க வேண்டிய ஆசிரியருக்கான கல்வியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து அடுத்தவருக்குப் போதிக்கும் ஆசிரியனாய் ஆகப் போகிறான் ...அதைத் தன் மனைவிக்கும் தனது மகனுக்கும் அர்பணிக்கப் போகிறான் ... 

எல்லோரின் கனவும் விதை போல. விதைத்தவன் உறங்கினாலும் அந்த விதைகள் உறங்குவதில்லை..


அன்பு முகநூல் நண்பர்களே ... 

மாணவ வாழ்வின் மிக முக்கியமான கட்டம் +2 முடிவு .இது வரை அவன் எப்படிப் படித்தான் என்பதை விட இனி அவன் சொந்தக் காலில் நின்று சாதிக்க இந்த மதிப்பெண் ஒரு புதிய வாசல் என்பது உண்மைதான் .ஆனால் இதுவே இறுதியில்லை . முகநூலில் ஆசிரியர்கள் அதிகம் இல்லை .மாணவர்களும் குறைவு அப்படியே ஒருவேளை இருந்தாலும் அவரவர்கள் ஒன்று சேர்ந்துக் கலாய்த்துகொள்வார்கள். பொதுத்தலத்தில் அவர்கள் பார்வைக் குறைவு . ஆனால் முகநூலில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் ,படித்தவர்களும் ,அன்புச் சகோதர்களும் நிறைய இருக்கிறீர்கள் .உங்கள் அருகில் உள்ள தேர்வில் தோற்றுப்போன மாணவர்களுக்கும்,குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் அடுத்து என்ன செய்யப் போகிறோன் என்று தெரியாது கைபிசைந்து நொறுங்கிய மன நிலையில் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஆறுதலாய் இருங்கள் .முகநூலில் செலவழிக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பகுதியை அந்த அருகில் உள்ள மாணவனின் எதிர்காலத்திற்கு ஒதுக்குங்கள்.எதாவது ஒரு வழிகாட்டலாக .குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் இருந்தால் அடுத்து என்ன படிக்கலாம் அல்லது அடுத்து தோற்றுப்போனவனுக்கு அடுத்து எப்போது தேர்வு எழுதலாம் ,எந்த டுட்டேரியல் நல்ல கோச்சிங் இருக்கிறது தெரிந்து வைத்துச் சொல்லுங்கள் .ரொம்பவும் மெனெக்கெட வேண்டாம் போகிற போக்கில் இணையத்தில் ,பத்திரிக்கைகளை ,சுவர் விளம்பரங்களைக் கவனித்தாலே போதும். 

இது விதைக்கிற காலம் இல்லை ... 

முக்கியமாக நிறைய வீடுகள் குழந்தைகளை அவர்களை அவர்கள் மனதைச் சிதைக்கும் நேரமிது . பல வீடுகளில் தந்தையோ தாயோ வீட்டில் ஏதோ ஒரு கனவுடன் ஒரு பிடிவாதமாக முடிவெடுத்துக்கொண்டு என்னை மாதிரி இவன் கஷ்டப்படக்கூடாது ,அல்லது நம் சொந்தத்தில் நல்லா படித்தவன் என் மகன்தான் என்று சொல்லிக்கொள்ளவோ ,தன் மகனை மருத்துவனாகவோ ,வக்கிலாகவோ ,கனவு கண்டுகொண்டு அந்த வறட்டு வைராக்கியத்தில் அந்தப் பையனை +1 ல் பிடிக்காத பாடத்தைத் தேர்வு செய்யச் செய்து விடுகிறார்கள்.முதல் வருடம் அவன் யோக்கிதை அவனுக்கும் தெரிந்து விடும் .ஆனால் வழியில்லாமல் கொஞ்சம் காசு இருக்கிற வீட்டில் டூயூசன் வைத்து விடுகிறார்கள் .சில வீட்டில் அதுவுமில்லை எப்படியாவது படித்து விடு என்று கட்டாயப்படுத்திக் கரைசேரச் சொல்கிறார்கள் .எப்படி அது முடியும் ? ஒன்பதாவது படிக்கும் வரை அவன் படிப்பைப் பற்றியோ அவனுக்கு எது வரும் என்பது பற்றித் துளியும் கவலைப்படாதப் பல வீடுகள் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் புதைச்சேற்றில் அவனை அழுத்த தொடங்குகிறார்கள்,அது கடைசியில் +2 தேர்வு முடிவில் பிரதிபலிகிறது. 


நான் எந்தப் படிக்காத பையனுக்கும் மதிப்பெண் எடுக்காத பையனுக்கும் இங்குச் சப்போர்ட் பண்ணவில்லை.விதைக்கிற காலத்தில் விட்டு விட்டு அறுவடையின் போது அவன் முன் அருவாளோடு அவன் முன் நிற்கிறீர்களே என்று ஆதங்கம்தான் இந்தப் பதிவு. சிலர் முகம் சுளிக்கலாம் அவனைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறதே படிக்கத்தான் அதற்காக இரவு பகலாகக் கஷ்டப்பட்டுப் பொருள் சேர்த்துப் படிக்கவைக்கிறோம் நீ சொல்வதைப் பார்த்தால் அவனோடு பள்ளிக்கூடம் போய் உடகார்ந்து கொள்ளச் சொல்வது போல இருக்கிறதே என்று கோபப்படலாம்.நியாயமான கோபம்தான் . இந்த உலகத்தில் நம்முடன் இருப்பதை விட அதிகம் பள்ளியில்தான் இருக்கிறான்.அவனோடு சேர்ந்துப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்.வேலை விட்டு வந்து அவனோடு வாரம் ஒரு முறையாவது பேசுங்கள் அவனுக்குப் பொருள் சேர்ப்பதைப் போல அதுவும் முக்கியம் .ஒன்பதாவது ,பத்தாவது வகுப்பு அவன் படிக்கும் போது அவன் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது போய் விசாரியுங்கள் .அவனுக்கு எது பலம் எது பலவீனம் தெரிந்து கொள்ள முயலுங்கள் .அதுவும் உங்கள் கடைமைதான். தனக்கே சரியாக முடிவெடுக்கத் தெரியாத பல குடும்பங்கள் அவனுக்கு என்ன படிக்க வரும் என்று தெரியாமல் வைக்கோல் பொம்மையைத் தயார் செய்வது போல எதோ ஒரு உருவமாய் அமுக்குவது போல அமுக்கி ஏதாவது ஒரு பாடத்தை இவர்களே தேர்வு செய்து உட்காரவைத்து விடுகிறார்கள்.உங்கள் கனவை அவன் எப்படி நிறைவேற்ற முடியும் அவனவன் கனவைக் கரைசேர்க்கவே பல பிறப்புத் தேவைப்படுகிறது



நல்ல பெற்றோர் நீங்கள் ... 

எனவே இது வரை என்ன செய்தீர்களோ பெற்றோர்களே விட்டு விடுங்கள் அவன் உங்கள் மகன் அல்லது உங்கள் மகள் .உங்களின் அதிகப் பட்ச அறிவும் அக்கறையுமே அவனை வளர்த்து இருக்கிறது .அவன் எதிர்காலம் உண்மையிலேயே உங்கள் கையில் இருக்கிறது இப்போதுதான் .உங்களுக்கு இருக்கும் ஆதங்கங்களை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் .இப்போது உங்கள் குழந்தைகளுக்கு ஆதராவாய் இருங்கள் .அவன் ஒரு சிக்சர் அடித்த போது கூட அவனைச் சுற்றி ஆயிராமாயிரம் கைதட்டல்கள் அவனை நோக்கிப் பறந்து வந்து இருக்கலாம்.பாராட்டுதான் உலகம் என்று தெரிந்து வைத்து இருக்கும் நம் குழந்தைகள் இந்த மாதிரித் தேர்வு முடிவுகளில் நொந்து போய்விடுவார்கள் .நீங்கள் படிப் படி என்று காட்டுக் கத்துக் கத்திய போது அவன் எதிர்த்துப் பேசியிருக்கலாம் அவன் தன் குறைந்த பட்ச அறிவால் உங்களை முட்டாள் போலக் கேலி செய்து இருக்கலாம்.அதெல்லாம் இப்போது மனதில் கொள்ளாமல் வேண்டாத பாலிபேக் போலத் தூக்கி வெளியே எறியுங்கள் .அவனுக்கு இப்போது நீங்கள் காட்டும் அக்கறை இனி எப்போதும் அவனால் மறக்க முடியாது அது வேறு எதனாலும் உங்கள் மேல் அன்பை வரவைத்து விடாது .இதுவே அவன் மேல் நீங்கள் வைத்து இருக்கும் உண்மையான அன்பின் அடையாளத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் .தோற்ற போது அவன் கூட இருக்கு ஒரே ஆறுதல் நீங்கள் மட்டுமே .இங்குத் தோற்றதற்கு அல்லது குறைந்த மதிப்பெண் பெற அவன் கவனக்குறைவு ,எதிர்காலம் பற்றிய அவன் அக்கறையின்மை எதுவாகவேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்.அவனோடு நேற்றுவரைக் கூடச் சுத்தியவர்கள் , படித்தவர்கள் நிறைய மதிப்பெண் அடுத்தக் கல்லூரிக்கோ அல்லது வேறு படிப்பிற்கோ போவதைப் பார்த்தாலே அவன் தன் வாழ்வின் பாடமாக எடுத்துக்கொள்வான் .அதுவே யாராலும் தர முடியாத பாடம் . 


குழந்தைகள் விருட்சங்கள் ... 

இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் பிறப்பின் நோக்கம் இருக்கிறது .அதை நோக்கி நாம் நகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம் .சிலருக்கு ஆரம்பமே வெற்றியாக இருக்கிறது.சிலருக்கு அப்படியில்லை.இங்கு உங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள் .எத்தனை பேர்ப் படித்த படிப்புக்கு வேலைப் பார்க்கிறோம் .அப்படியே பிடிவாதமாக இந்த வேலைக்குத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்தவர்கள் வாழ்க்கை எங்கு நிற்கிறது .நம்மால் நம் பெற்றோரை , நம் இளமைக் காதலை வாழ்வின் சந்தோசத்தை , வேலையை , இப்படி நிர்ணயம் செய்ய முடியவில்லை .அப்படி இருந்தும் நாமும் இந்தச் சமூகத்தில் ஒரு கணவனாய், மனைவியாய் ,ஒரு குழந்தையைப் பெற்ற பெற்றோராய் நிற்கவில்லையா அது போல அவனும் நிற்பான் .இந்த +2 அவனைத் தீர்மானித்து விடாது.அவன் எதிர்காலம் அவனேதான் அவன் ஒரு விருட்சம். இப்போது வெய்யில் அடிக்கிறது .நீரூற்றிப் பாதுகாப்புக் கொடுங்கள் அவனாய் உங்களைப் போலப் பலரையும் வாழவைப்பான் . இந்த உலகத்தில் எவனும் முழுதாய் தோற்றவன் இல்லை .ஒவ்வொருவனின் அவனவன் வழியில் வெற்றியும் வேறு வேறு ! 


மேலே தொடங்கிய கதையில் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் , பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளார்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினவன் மேலே கொடுக்கப்படுள்ள படத்தில் இருக்கிறான் ...உங்கள் மகனோ , மகளோ +2வில் தோற்றால் எதுவும் நடந்து விடாது .தோள் கொடுங்கள் எத்தனையோ குழந்தைகள் பள்ளிக்கே லாயக்கில்லை என்று துரத்தியபோது பின்னாளில் தங்களின் பெற்றோர்களின் அன்பால் அறிஞர்களாகியிருக்கிறார்கள் .இங்கு நான் பார்க்கவே எதிலும் ஜெயிக்காத என் நண்பர்கள் பலர் தன் தாய்த் தந்தையைத் தளர்ந்த வயதில் உட்காரவைத்து மூன்று நேரமும் தங்கள் வருவாயில் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் பார்த்துப் பார்த்துப் படி படி என்று அவன் எதிர்கால நரகத்தை மட்டுமே வழிகாட்டிய தந்தைகளை அவர்கள்  பிள்ளைகள் யாரோ ஒரு அமெரிக்காப் பெண்ணைக் கட்டிக்கொண்டும் கிரீன் கார்டும் வாங்கிக்கொண்டு தன் பெற்றோர்களை உயர்ந்தப் பட்ச அனாதை விடுதிகளில் சேர்த்து விட்டு பேரப்பிள்ளைகளைக்  கொஞ்சுவதற்கு உயிரற்ற ’ஐபேடில்’ முத்தமிட்டு எச்சில் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். முடிந்தால்... விநாயமுருகனின் ’ராஜிவ்காந்தி சாலை’ நாவலைப் படித்துப் பாருங்கள். அதில் பெற்ற அப்பனைப் பார்த்துக் கொள்ள விரும்பாத ஐ.டி அறிவாளிகள் ஏதோ ஒரு அடுத்த மாநில லாரியில் ஏற்றி  திரும்பி வர முடியாத தூரத்தில் அநாதைகளாய்ப் பிச்சை எடுக்க விட்டதாகப் படித்து இருக்கிறேன் ...

சனி, 14 மே, 2016

சலூன் கடைப் போஸ்டரும் - தேர்தல் வாக்குறுதிகளும் !


பழைய படம் இல்லை . புதுசு ! அப்போது செல் ஃபோன் வசதி இல்லையே ?

எங்களின் குடும்பத்தில் ஆறு பேருக்கும் வெகு நாளாய் ஆஸ்தானமுடித் திருத்தம் செய்பவர் திரு.ராமு (அப்பா அப்படித்தான் கூப்பிடுவார் ) அவர் சலூன் கடைத் திண்டுக்கல் டாக்ஸி ஸ்டாண்ட் ஒட்டியுள்ள மார்க்கெட் பகுதிக்குள் இருக்கும் .அப்பா கடைக்குக் கொண்டு போய் விடும் போது ஒட்ட வெட்டச் சொல்லி விட்டுப் போய்விடுவார். இருந்தாலும் அவர் எனக்கு வெட்ட ஆரம்பிக்கும் போது , உனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்று பரிவாய்ப் பணிவாய் விசாரிப்பார். தாத்தா , பாட்டி ,அப்பா, அம்மா,அண்ணன்கள் நான்குபேர் ஆக மொத்தம் எட்டுப்பேருக்கு இளையவனான (கடைசி அடிமையான) எனக்கு அது மிகப்பெரிய கௌவுரவமாகத் தெரியும்.எனக்கு அதுனாலேயே அவரை ரொம்பப் பிடிக்கும்.ஆனால் அப்போது ஸ்டைல்ன்னா என்னான்னுத் தெரியாது . எதைச்சொல்வது ? அதனாலப் பதிலுக்கு அழகா வெட்டுங்க என்பேன் . 

விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னிருந்து ராமுதான் வெட்டிக்கொண்டு இருக்கிறார் .அனேகமாக ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் அந்தக் கடையிலுள்ள காலண்டர்களும் போஸ்டரும் என்னை மிகவும் பயமுறுத்த தொடங்கின .அவர் பார்க்க கிராமத்து ஆசாமியாய் இருப்பார் ஆனால் அவர் கொஞ்ச சின்ன வயதில் சினிமாக் கம்பெனிக்குப் போய்க் காஞ்சித் தலைவனில் ( 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ) எம்.ஜி ஆருக்குச் சிகை அலங்காரம் செய்யும் போது உதவியாளராக இருந்ததாக அப்பச் சொல்லியிருக்கிறார். அங்கே இருந்த அவரை  அப்படி இப்படியெனெக் கட்டவிழ்த்தக் காளையாய்க் கெட்டுப்போவார் என்று நினைத்த அவர் குடும்பம் இங்குக் கட்டாயமாக அழைத்து வந்து கால் கட்டுப் போட்டுவிட்டதாம் ! 

   அப்படிச் சினிமாப் பழக்கத்தினாலோ என்னவோ அவர் கடைப் போஸ்டர்களில் அதிகப் பட்சம் ஹிந்தி கதா நாயகிகளுக்கு நிறைய இடம் கொடுப்பார் அந்த நாயகிகள் கண்ணாடியில் சுவரில் படு மாடனாய் இருப்பார்கள்.நேரில் நின்று சிரிப்பது போலவே இருக்கும் ! எங்குதான் அதெல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்பது அப்போது தீராத ஆச்சர்யம் எனக்கு . அது மட்டுமல்ல அந்தக் கதாநாயகிகள் யாரும் இத்துனூண்டு உடை அணிந்து கொண்டு இருக்கமே என்று எப்படிக் கூச்சப்படாமல் இருக்கிறார்கள் ? பார்க்கிற நமக்கே இப்படி இருக்கேன்னு யோசிப்பேன்..நான் விடைத் தேடுவதற்குள், ஒன்று ராமு முடி வெட்டி முடுத்து விடுவார் அல்லது வெட்ட வெட்ட அவர் தலையில் தெளித்த தண்ணீர் ஈரத்தின் சுகத்தில் என்னையறியாமல்  தூங்கிப்போவேன்…. 

Pinky Lalwani சிரிப்பைப் பார்த்தால் இவர் இப்படி செய்வார் என முன்னமே தெரியும் போல ?

சில வருடம் கழித்து ராமு எங்கள் வீட்டுக்கே வந்து முடித் திருத்தம் செய்ய வீட்டுக்கே வந்து விட்டதால் கடைசிவரை அந்தப் போஸ்டர்கள் எதற்கு வைக்கிறீர்கள் , எங்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போனது .அதற்குப் பிறகு அந்த மாதிரிப் போஸ்டர்களை விஜய்மல்லையாவின் கிங்ஃபிசர்க் காலண்டர்களில் பார்த்தேன் அவரைக் கேட்பதற்குள் இந்தப் பேங்க் மேனேஜர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியோ நாட்டைவிட்டே அனுப்பி வைத்து அவரைக் காப்பாற்றி விட்டார்கள். எனக்கு விஜய் மல்லையாவுக்கும் ஒரே பொருத்தம் இருவருக்கும் ஃபார்முலா1 ரேஸ் பிடிக்கும்.ஆனால் நான் பேங்கில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டிவிடுவேன் என்பதால் எனக்கு யாரும் கடன் தரவில்லை.ஒருவேளை தந்து இருந்தால் நானும் இந்தியப்படை (Indian force ) என்ற ஒரு ஃபார்முலா1 ரேஸ் ஒரு அணி ஆரம்பித்து நம்மூர் நரேன் கார்த்திகேயனையும் ,கருண் சந்தோக்கையும் ரேஸ் ட்ராக்கில் வைத்து ஒரு கலக்குக் கலக்கியிருப்பேன் .! ஆனால் Pinky Lalwani யோடெல்லாம் சுத்தியிருக்க மாட்டேன் என்றூ சத்தியம் செய்கிறேன் .


இப்போது தெருவெங்கும் அரசியல் பிரச்சாரங்களில் சத்தமும் ,வாகன உறுமல்களும் ,துண்டு பிரசுரங்களும் கலைகட்டுகிறது . சில வாக்குறுதிகளைக் காப்பாற்றாவிட்டாலும் வீட்டு வாசலில் விசிறி எறியப்பட்ட வயதில் மூத்த அரசியல் வாதிகளின் படம் போட்ட நோட்டிஸ்கள் காலில் படும்போது வருத்தமாக இருக்கும் ! ஆனால் அவர்கள் பிரசாரங்களில் தரும் வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கைகளும் ( Manifesto ) தொலைக்காட்சி விவாதங்களில் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம் அதைச்செய்வோம் என்று சொல்கிறாகள்  .

ஆளும் கட்சி படிப்படியாக டாஸ்மாக் எனும் மாநில அரசு நிறுவனம் மூடப்படும் என்கிறார்கள் .மக்கள் மன்றம் என்ற பெயரில் 110 விதி ஆள்கிறது தமிழகத்தை .இலவசங்கள் தொடரும் என்கிறார்கள்

இன்னொரு கட்சி வந்தவுடனே முதல் கையெழுத்தே அதுதான் என்கிறது . 2014–15 ஆண்டில் 26,188 கோடி வருவாயையும் இழக்கவும் 29,297 பணியாளார்களுக்கும் ஆப்பு வைப்பேன் என்கிறது அதை விட அந்தப் பழக்கத்தால் வரி போக நிகர வருமானம் 7 ஆயிரம் கோடி வருவாய்த் தந்த தமிழனை குடித்தால் கைது செய்வேன் என்கிறது . அருமை . ஊற்றிக் கொடுத்தவர்கள் இப்படித்தானே சொல்வீர்கள் .

உங்கள் வலக்குகளில் தப்பிக்க மக்களைக் கொல்லும் போது கை கட்டி நிற்கிறீர்கள் , நீதிபதியின் கால் குலேட்டரை எடுத்து ஒளித்து வைத்து கொள்கிறீர்கள் .

இன்னொன்று கட்சி தேடிப்போனாலும் தீர்ந்துப் போச்சுன்னு கைவிரிக்கும் ரேசன் கடையை வீட்டுக்கே வந்து தருவேன் என்கிறது .அந்த கட்சி கடைசி வரை பேரம் பேசிப் பேசி பாவம் ஏற்கனவே இருந்த கூட்டணியை குழப்புகிறது !

முதுகெழும்பை வளைக்கச் சொல்லித் தந்த மெக்காலே கல்வித் திட்டத்தை ஒருத்தர்  முழுதாய் இலவசம் என்கிறார்.அவர்கள் அனுமதித் தந்த மருத்துவக் கல்லூரி வலக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது .

கடைசிவரை மீன் பிடிக்க சொல்லி தரமாட்டார்கள் கையேந்த மட்டுமே கற்றுத்தருவீர்கள் 

உங்களுக்கெல்லாம் தெரியுமா ? 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடி எனப் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உயர்த்தியுள்ள ரூ.2,47,031 கோடிக் கடன் தொகையைக் கணக்கிட்டால், 7 கோடியே 50 லட்சம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.32,937 கடனை ஏற்றி வைத்துள்ளது.
இதை யார் அடைப்பார்கள் ?

வந்தவுடன் வரவினங்களுக்கு முக்கியத்துவம் தருவோம் என்பதைப் பற்றிப் பேசத் தயங்குகிறீர்கள்.சென்னைவாசிகள் வெள்ளத்தின் போது உணவுக்காகவும் உயிர் பிழைப்பதற்காகவும் மக்கள் கையேந்தியதைப் போல இந்தத் தமிழகம் முழுதும் கையேந்த வேண்டும் ஆசைப்படுகிறார்கள் போல ! எவனையாவது குறை சொல்லியே வெட்கம் இல்லாமல் வாக்குக் கேட்கிறீகளே வாக்கு என்பது பெறப்படுவதில் இல்லை கொடுக்கப்படுவதிலும் அதைப் பிசிறில்லாமல் காப்பதிலும்தான் தில் இருக்கிறது.

சரி இன்னொன்றுத் தெரியுமா நீங்கள் எல்லாம் இன்னும் சில வருடங்களில் திருந்தினாலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த உங்களிடம் பணம் கொடுத்துப் பதவிக்கும் பொறுப்புக்கும் வந்த அரசு ஊழியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் அரசு இயந்திரத்தில் .அவர்கள் போட்டக் காசை எடுக்க வீட்டுக்குக் கூடப் போவதில்லையாம் அவர்களை வைத்தா நல்லாட்சி செய்யப் போகிறீர்கள் ? அவர்கள் படித்த தந்திரசாலிகள் உங்களை விடவும் திறமைசாலிகள் .கொடுத்த காசை வசூலிக்க அவர்கள் உங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டார்கள் .

ஏனோ எனக்கு அப்போது பார்த்த ராமு அவர்களின் சலூன் கடைதான் ஞாபகம் வந்தது .ராமுவாது முடி வெட்டுவதற்காக மட்டுமே அன்று காசு வாங்கினார் . அந்தச் சிரிக்கும் ஹிந்தி நாயகிகளைப் பார்க்கக் காசு வாங்கவில்லை . அங்கு வேண்டாதைக் கழிக்கக் காசு கொடுத்தோம் .ஆனால் நீங்கள் அரசியல் வியாபாரிகள் உங்கள் கட்சி ,உங்கள் அதிகாரம் , உங்கள் ஊழல் ,வழக்கு, மீண்டும் ஆட்சிக்கு வர இத்தனைக்கும் சேர்த்து எங்களை வெட்டவும் , வெட்டியதை ஐந்து வருடத்தில் மறந்து போகச் செய்யவும் வேண்டியதை இழக்க வாக்குக் கேட்கிறீகள் .



       நீங்கள் யார் வந்தாலும் தர வேண்டியது வாக்குகள் அல்ல மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது . அதில் கவனம் செலுத்துங்கள் .நீங்கள் கடவுளை மறந்து வேண்டுமானால் போங்கள் அல்லது உங்கள் வீட்டு பெண்களை ரகசியமாக அனுப்பி பூஜை செய்து கொள்ளுங்கள். ஆனால் முதலில் கோவில்களை பொதுவாக்குங்கள் எல்லோரும் தரிசிக்க அனுமதியுங்கள் .தரிசனத்திற்கான கட்டணத்தை முற்றிலும் இல்லாதாக்குங்கள் .என்று இறைவன் என்ற பயம் போனதோ அன்றே தமிழனின் சரித்திரம் தரித்திரமாகி விட்டது . எல்லா கல்வி நிலையங்களையும் அரசு அதிகாரிகளற்ற பொது மக்கள் குழு மேற்பார்வைக்கு கீழ் கொண்டு வாருங்கள் . எங்கள் முதல் கையெழுத்து குளம் , கம்மாய் ,ஏரி இவற்றை தூய்மை படுத்துவதாய் இருக்கட்டும் என்று சொல்லுங்கள் .வேலை வாய்ப்பை உருவாக்கவும் கைவினை பொருட்களை செய்யவும் ஊக்கமளியுங்கள்.சமுதாய மாற்றத்திற்கு அறிஞர்கள் மாநாடுகளை 6 மாதம் ஒரு முறை நடத்துங்கள் .லஞ்சம் பெறப்பட்டால் அவரை எதுவும் செய்யாதீர்கள் தனியாய் லஞ்சம் பெறும் அதிகாரி என்று ஒரு அட்டை மாட்டி அதற்கு கீழ் பண்புரியச் சொல்லுங்கள் .விவசாய பொருட்கள் நிர்ணயத்தை பங்கு மார்க்கெட்டுக்கு துளியும் விடாதீர்கள் .குழந்தைகள் - பெரியவர்களை அரசே கவனித்துக்கொள்ள  ஏற்பாடு செய்யுங்கள் . இப்படி மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது .அரசு அதிகாரிகள் தாங்களே முன் வந்து ஓய்வு பெற்று வழி விடுங்கள் .உலகம் முழுதும் உள்ள தமிழன் அனைவரிடமும் முன்னேறும் திட்டம் நிறைய இருக்கிறது கேட்டுப் பெறுங்கள் .நம்மால் முடியாவிட்டால் யாராலும் முடியாது என்று நம்புங்கள்.இந்த உலகத்திற்கு தமிழன்தான் மூத்த குடி, வழிகாட்டி எல்லாம் அவனை உங்கள் இலவசங்களால் ஊனமாக்காதீர்கள் .

   எங்கள் எண்ணம்தான் நீங்கள் . அதனால் நாங்கள் மாற வேண்டும் .அதற்கு காலம்தான் எங்களுக்கு மே 16 ஆம் தேதிக்குள் பக்குவம் தர வேண்டும் ...

திங்கள், 11 ஏப்ரல், 2016

சினிமாவில் ( உண்மைக் ) கொலையாகும் இலக்கியம் !



        ஹாலிவுட்டில் மிகப்பல பிரபல நாவல்கள் கதையம்சம் மாறாமல் திரைப்படமாவதும் வெற்றிப் பெறுவதும் மிகச் சகஜம்.லாரன்ஸ் ஆஃப் அரேபியா , டாக்டர் ஷிவாகோ & டேவிட் லீன் எடுத்த தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ். போன்ற நாவலின் அத்தனை பக்கங்களையும் சம்பவங்களாகத் திரைக்குக் கொண்டு வந்தார்கள் . ஆனால் நமது நாட்டில் அது அப்படிச் சாத்தியமாவது மிக அதிசயம் .இங்கு இன்று நேற்றல்ல 1935ல் வடுவூர் கே. துரைசாமி ஜயங்கார் எழுதிய ’மேனகா’ என்ற நாவல் , முதலில் நாடகமாகவும் பின்னர் 1935 ல் திரைப்படமாகவும் பரிணமித்தது ( இந்தத் திரைப்படம் மூலம்தான் நமது மறைந்த திரு.என் எஸ் கிருஷ்ணனைத் தமிழ் உலகிற்கு அறிமுகமானார்.) தொடங்கிக் கடந்த ஆண்டு வெளிவந்த திரு.மு.சந்திரகுமார் அவர்களால் படைக்கப் பட்ட "லாக்கப்" விசாரணை ‘ யாக மாறிய விதத்திலும் எழுதியவர் நோக்கில் அப்படியே நாவல் படமாக்கப் படுகிறதா ? என்பது மிகப்பெரிய கேள்வி . 

                  மறைந்த எழுத்தாளர்த் திரு.ரங்கராஜன் (சுஜாதா) அவர்களின் காயத்ரி நாவல் திரைப்படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து “எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது’ என்பதாய்ச் சொல்லும் அளவிற்கு நம் நாவல் - திரைக்கதையாக மாறும் போது மிகப்பெரிய கதைக்கருவே விபத்தாக மாறுகிறது .இதற்கு உதாரணமாகச் சுஜாதா அவர்கள் சொன்னதையே இங்கு எடுத்துக்கொள்ளலாம் . “படம் பிடிப்பவர்கள் கதையை மாற்ற விரும்பும் ஆசையை நானும் சமீபத்தில் உணர்ந்தேன். காயத்ரி என்ற என் கதையைப் படம் எடுக்கிறார்கள். படம் எடுப்பவர்கள் களங்கப்பட்டுவிட்ட கதாநாயகிக் கடைசியில் இறந்தே தீரவேண்டும் என்று உடைந்த கண்ணாடித்துண்டை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்”என்று தன் கதையின் முடிவு என்னுடையதல்ல என்று வேதனைப்படுகிறார்.

ஆனால் அதே சுஜாதா கமலுடன் கைகோர்த்துக்கொண்டு ’விக்ரம்’ என்ற தொடர்கதையக் குமுதத்தில் எழுதி அப்படியே படமாக்கினார் என்பது விதி விலக்கு ! அது மட்டுமல்ல அந்தக் கதை குறிப்பாக ஆண் – பெண் வித்தியாங்களைப் பற்றிக் கமல் பேசும் வசனங்கள் வெளிப்படையாக அந்தந்த வாரங்களிலே விமர்சிக்கப்பட்டுச் சிதறடிக்கவும் பட்டது என்பது சுவாரஸ்யம் !


மோக முள்ளின் வலி.. 

திரு.தி.ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ நாவல் 1955 - 56 காலங்களின் பின் புலத்தில் உருவானது .அதில் ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் காமத்தின் உட்கூறுகளையும் , மிக நுணுக்கமான எண்ணங்களின் சிற்பியாக வார்த்தைகளில் செதுக்கினார் தி.ஜா. அன்று அந்த நாவல் காலத்தின் கட்டயமாகப் பார்க்கப்பட்டது.யாரும் பேசாத இளைஞர்களின் மனதின் ஆழங்களைத் தொட்டது அந்த நாவல் ! 

                இந்த நாவலைப் பற்றி அறிந்த வாசிக்க தேடிய போது, சொந்த ஊரில் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்தோம்.அப்போது எங்கள் நண்பர்களில் ஒருவர் கோவை சென்ற போது பழைய புத்தகச்சந்தையில் இந்த நாவலைப் பார்த்து இருக்கிறார்.அவர் கையில் மதிய உணவுக்கு இருக்கும் பணத்தின் சரியான அதே அளவில் புத்தகத்தின் விலை.மதியம் பட்டினியாய்க் கிடந்து அதை வாங்கி இரவு 10 மணிக்கு என் வீட்டில் கொடுத்து விட்டுப் போனார்.நாண்பர்கள் அனைவரும் உருகி உருகிப் படித்தோம்.வெகு நாளாய்ப் பாபுவாய்க் கிறங்கிக் கிடந்தோம் .நிறையப் பெண்கள் யமுனாவைப்போல இருக்க வேண்டும் ஆசைப்பட்டோம்.இனி இப்படி ஒரு நாவல் யாராலும் எழுத முடியாது என்று பிதற்றினோம் .பல மாதங்களாய்த் தி.ஜாவின் மோகமுள்ளின் உணர்வு குத்திக்கொண்டே இருந்தது. யார் அந்த நாவலை உணர்வோடு படித்தாலும் இது நடக்கும் என்று நம்பினோம்.அந்தக் கதைப் படமாக எடுக்கப்பட்டால் எந்த எந்த இடங்கள் முக்கியமாகப் பேசப்படும் என்று கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் எடுத்தோம். அப்படி ஒரு பாதிப்பில் கரைந்து போயிருந்தோம்…

இயக்குனர் என்ற தொழிற்நுட்பக் கருவி .. 

           அந்தப் படம் 1995 ல் இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியாகி தேசிய விருதும் பெற்றது. .ஆனால் அந்தக் கதை எந்த அளவுக்கு உயிர்ப்போடு திரைப்படமாக்கப்பட்டு இருந்தது என்று கதைப் படித்தவர்களுக்குதான் அதன் வலி புரியும் ! .அதே சமயம் எழுதுவதையெல்லாம் அப்படியே கதையாக மாற்ற முடியுமா ? என்று கேட்பவர்களும் உண்டு.இதை ஒரு கதாசாரியனும் – ஒரு இயக்குனரும் பேசித் தீர்க்க வேண்டும் என்பதாய் ஒதுக்க விரும்புவர்கள் அதிகம் . ஆனால் இருவரின் கடமையும் நோக்கமும் ஒரு பொதுவான விதிக்குக் கீழ் வருகிறது அது அவர்கள் சொல்ல விரும்புவதைச் சிதைவுப் படமால் பார்ப்பவனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே .கதாசிரியன் உணர்ச்சியாளன் தனது கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நூல் இழையையாகப் பார்த்துப் பார்த்துப் பின்னி வருபவன் ஆனால் இயக்குனர் என்பவன் முழுக்க முழுக்கத் தொழிற்நுட்பம் சார்ந்தவன் . ஆனால் சத்யஜித் ரே, தாகூரின் ஒரு சிறப்பான overstated நாவலை, சேதாரமில்லாமல் இரண்டு காரட் திரைக்கதை (வெள்ளி) மட்டும் 22 காரட் நாவலின் , understated திரைப்படமாக அற்புத ஆபரணமாக ஆக்கியது  விதி விலக்கு ! சத்யஜித்ரே என்ற இயக்குனருக்குள் எப்போதுமே ஒரு எழுத்தாளனின் ஆளுமை நிறைந்து இருந்தது என்பதுதான் அதன் காரணம் !. 


ரசிகன் கொல்லப்பட வேண்டும் !

                            ஏதோ ஒரு கதையில் கதா நாயகன் ஒரு தியானம் செய்ய நுழைகிறான் என்று ஒருவரியில் கதாசிரியர் எழுதிவிட்டுப் போயிருப்பார்.அதைப் படமாக முயற்சிச் செய்யும் இயக்குனருக்கு முதலில் தியானம் என்றால் என்ன ? என்று தெரியவிட்டாலும் தியானம் எங்குப் பண்ணுகிறார்கள் ? ,இந்தக் கதையின் கதை நாயகன் வசதியானவனாக இருந்தால் அதை எங்கு எடுப்பது ? இது எப்படிக் கதைக்கு முக்கியத்துவம் பெறுகிறது ? எப்படிக் காட்சிப்படுத்துவது ? என்ற நூறாயிரம் கேள்விகளுடன் அந்த ஒரு காட்சிக்கு அணுக வேண்டியிருக்கிறது.

    எழுதப்பட்ட காட்சி படமாக்கல் என்ற தொழிற்நுட்பச்சிறைக்குள் மாட்டிக்கொள்ளும் போது இங்கு எழுதியவன் சொல்ல வந்ததோடு இயக்குனர் காட்சிப்படுத்தும் போது  முரண்படலாம். ஆனால் அதில்லாமல் இயக்குனர் அந்த இடத்தில்தான் கதாநாயகியைக் கதாநாயகன் சந்திக்கிறான் என்ற ஒரு “டுவிஸ்டை” கொண்டு போய் வைத்து அப்போது அங்கு ஒரு பாட்டும் தேவைப்படுகிறது என்று வைக்கும் போது அந்தக்கதை அங்கேயே இறந்து போய்விடுகிறது .பிறகு இல்லாத மந்திரமெல்லாம் போட்டு அந்தப் பிணத்தை (கதையை) வைத்துக்கொண்டு A,B,C ரசிகர்களைத் திருப்திப் படுத்த வேண்டும் ,கதாநாயகன் ஹீரோயிசத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்,தயாரிப்பாளாரை குளிரச் செய்யக் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒருபாடலில் ஆந்திர அழகிகளைக் குலுங்கச் சொல்ல வேண்டும்..இப்படியாக இரண்டரை மணி நேரம் கதைப் படித்த ரசிகன் கொல்லப்படவும் வேண்டும். 

எழுத்தும் ,வாசிப்பும் ..

                ஒரு எழுத்தின் மூலம் பெறும் உள்ளார்ந்த உணர்வுகளின் எண்ண ஓட்டம் வாசிப்பவனுக்கும் எழுத்தின் ஆளுமைக்குமானத் தொடர்பைப் பொறுத்து மாறுகிறது.படிப்பவன் முதல் நாள் ஒரு மலையாளப்படம் பார்த்து விட்டு அதே நோக்கில் மணிமேகலையை புராணத்தைப் படித்தால் கோமுகிப் பொய்கை முன் நிற்கும் மணிமேகலையைப் பற்றிய "அணிப்பூங்கொம்பர்," "மணிப்பூங்கொம்பர்," "ஆயிழை," "அணியிழை" வருணனையைப் படித்தால் அவன் பார்த்த மலையாளப்பட நாயகியின் ஞாபகம்தான் முன் நிறுகும்.மணிமேகலை யாரென்று தெரியாமல் அவனே ஒருத்தியை மனதுக்குள் இவள்தான் அவள் என்று தருவித்துக்கொள்கிறான் .இது படிப்பவனுக்கும் – அந்தக் கதைக்கும் இடையே உள்ள ரசவாதம்..ஆனால் இந்த விதித் திரைப்படத்தில் பார்க்கும் போது அடிபட்டு விடுகிறது .அதே மாதவி மகள் மணிமேகலைப் பாத்திரத்தில் நயனதாராவை நடிக்க வைத்திருந்தால் அவர் என்ன உடை உடுத்தியிருப்பார் ? ஒரு வேளை இப்படி எடுக்கப்பட்ட படத்தின் ”ரஸ்”பார்த்து விட்டு சீத்தலைச் சாத்தனார் என்ன சொல்லியிருப்பார் ?
      ஆர்.கே.நாராயணனின் கையிட் (Guide ) என்ற நாவல் விஜய் ஆனந்த் இயக்கத்தில் அமெரிக்க நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர் பெர்ல் பக் (Pearl Sydenstricker Buck ) என்பவர் ஆங்கிலப் பட ஆக்கத்திற்குத் திரைக்கதை எழுதி 1965ல் வெளியானது.இங்கு ஹிந்தியில் இயக்குனரே திரைக்கதை அமைத்து இருந்தார் அந்த முடிவைப் பார்த்து  அதிருப்தி அடைந்து ஆர்.கே நாரயணன் என்ன பேசினாரோ அதைத்தான் சீத்தலைச் சாத்தனாரும் பேசியிருப்பார் ! .(அது மட்டுமல்ல கூடுதலாகச் சாத்தனாருக்கு நயனதாராவுடன் சிம்பு , பிரபு தேவா விசயம் தெரிந்து இருந்தால் என்ன ஆவது ?  காரணம் மணிமேகலை காப்பியத்தின் இறுதியில் துறவு பூணுகிறாள் . 


               

உருவம் -உள்ளடக்கம் எது தோற்றுப்போகலாம் ?

  எழுத்தில் சிலவற்றைப் படிப்பவரின் கற்பனை வட்டத்துக்குள் பயணித்துக் கொள்ளலாம் .அது திரைப்படமாகாத போது அந்தக் கற்பனைச் சேதாரம் ஆகிறது.அந்தக் கதை வாசித்தவனின் முன் திரைப்படம் நொண்டியிடுகிறது .

வாசிப்பவனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விசலாமானது .முதலில் வாசிப்பவனின் அவன் எந்தக் கோணத்தில் அந்த நாவலை , புதினத்தை அல்லது இலக்கியத்தை வாசிக்கிறான் என்பது முக்கியம் . இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம் நமது சோழர்கள் மிக உன்னதக் கலாச்சாரம் கொண்டவர்கள்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தார்கள் .அன்பே சிவம் என்ற சிவ பெருமானுக்குத் தஞ்சைப் பெரிய கோவிலை காணிக்கியாக்கினார்கள் ஆனால் அவர்கள் எதிரி என்று நினைத்தது இன்னொரு தமிழ்ப் பேசும் சமூகமான பாண்டியனையும் , சோழனையும். அவர்களோடு போர்க் களத்தில் மோதினார்கள் வென்றதோடு நிறுத்தியிருக்கலாம் ஊருக்குள் புகுந்து பெண்களைத் தெருவுக்குக் கொண்டுவருவதுவும் இழிவுப் படுத்துவதும் தவறு என்ற மன நிலையில் வாசிப்பவன் வாசித்தால் மொத்த சோழர் குலச் சரித்திரமே அவன் கண்ணோட்டத்தில் மதிப்பில்லாமல் போகலாம் .

இரண்டாவது அவன் வாசிப்பின் மன விரிவு சம்பந்தப்பட்டது.வாசிப்பவன் மிக்கபெரிய கற்பனையாளியாக இருந்தால் அந்தக் கதை எழுதுபவனோடு தன்னிலை மறந்து பயணிப்பான்.இதற்கு உதாரணம் மிகப்பிரபலமான ”ஜூராசிக்பார்க்” கதையைப் புத்தமாகப் படிப்பவன் , ’கிளைமேக்சில்’ அந்த இரண்டு குழந்தகள் தப்பித்து ஓடிக் கதவுகளைச் சாத்திக்கொண்டு ஒளிந்து கொள்ளுவார்கள் .அப்போது அந்த வேட்டை மனோபாவத்தோடு அவர்களைத் துரத்தும் டைனோசர்கள் அந்தக்கதவைத் தகர்த்து உள்ளே போனது என்றால் வாசிப்பவன் அந்தக் கதவு இரும்பால் அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்டதா என்பதெல்லாம் கற்பனை செய்ய மாட்டான் அவனுக்கு அந்த வேட்டை மிருகத்தின் பலிவாங்கும் வெறிதான் முன் நிறுக்கும் அந்தக் கதவைப் பெரிதாய்க் கற்பனை செய்து கொள்ள மாட்டான் .(ஆனால் அந்தப் படத்தில் ஸ்டீபன் ஃபீல்பர்க் என்ன செய்தார் அந்த மிருகம் அந்தக் கதவின் கைபிடியைத் திருகி உள்செல்வது போல அந்த இடத்தில் காட்சி அமைத்து இருப்பார்.)

மூன்றாவது இந்த வாசிப்பில் அவன் அறிந்து கொள்ள முயலும் விசயமும் இருக்கிறது .ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவன் ஓஷோவைப் படித்தவன் அடுத்து இன்னும் ஆழமான தேடலில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் புரிந்து கொள்ள முயற்சிப்பான்.அவன் வாசிப்பின் மூலம் தேடலின் விசாலம் கூடும் .விசய ஞானத்தின் வேர் எல்லையில்லாமல் பரந்து விரியும் ...

ஆனால் இத்தனைக்கும் அதற்கு மேலும் வாசிப்வனை அவன் எல்லைக்குள் நுழைந்து வெற்றி பெறுவதும் வாசிப்பை அப்படியே காட்சிப்படுத்துவதும் இயக்குனருக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல . ஆனால் இதைத் தாண்டி ஒருநாவல் என்ற படைப்பு உருவான பின் அதன் முக்கியமான இரண்டு அங்கங்களான உருவம்-உள்ளடக்கம் (form and content) இருக்கிறது இது பொதுவாக எல்லாப் படைப்புகளுக்குமே சொத்துதான் .எழுத்து என்ற படைப்பு ஆனால் அதன் உருவம் முழுமைப்படுத்த இயலாத போது அதன் உள்ளடக்கம் மாறக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள்வது அவசியம் மறைந்த திரு.பாலுமகேந்தரன் இதை We should understand /feel the point which triggered the author to write that story and we should start from there என்கிறார் .நாமும் இதையே எதிர்பார்ப்போம்.மாம்பலத்திலிருந்து எல்லா மாம்பழ ஜூஸ் தயார் செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும் அது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிளேவரிங் சப்சண்ட்டை விஞ்ஞான முன்னேற்றம் ! ஆனால் இது மாம்பழ ஜூஸ்தான் என்று வேப்ப எண்ணையை வாயில் ஊற்றும் முயற்சி செய்வதற்குச் சும்மா இருந்து கொள்ளலாம் அல்லவா?



சினிமாவும் இலக்கியமும் !

                     முப்பது வருடமாகப் போராடியும் இலக்கியத்தையும், சினிமாவையும் இணைக்க முடியவில்லை என்கிறார் கமல்.சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் கமல் பேசும்போது...

                எனது சினிமா வாழ்க்கை 50 வருடமென்றால், அதில் கடந்த 30 வருடமாகச் சினிமாவையும், இலக்கியத்தையும் இணைக்கப் பாலமாக இருந்து வருகிறேன். ஆனாலும் முடியவில்லை. சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அது யார் காதிலும் விழவில்லை. சினிமாவும், இலக்கியமும் தனித்தனித் தீவாக இருக்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? இதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது. ஒன்று தெரிந்து விட்டால், இன்னொன்றுத் தேவையில்லை என்று இருவருமே நினைக்கிறார்கள். சினிமாவே ஒரு இலக்கியம்தானே என்று சினிமாகாரர்கள் நினைக்கிறார்கள். இலக்கியம் அனைத்தையும் படித்து விட்டோம். சினிமா எதுக்கு என்று இலக்கியவாதிகள் நினைக்கிறார்கள். இவர்களை எப்படிப் பேலன்ஸ் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தது சினிமா மட்டுந்தான். தமிழைக் கற்று வருகிறேன். எனது சினிமாவில் வித்தியாசங்கள் இருக்குமானால் அது மற்றவர்களின் எழுத்தால் கிடைத்தது. சினிமாப் பார்ப்பவர்கள் புத்தகமும் படிக்க வேண்டும், அப்போதுதான் சினிமா பற்றிய விமர்சன அறிவு வளரும். சினிமா மொழி வேறு. ஆனால் அது மக்கள் மொழியில் பேச வேண்டும். இலக்கியம் சினிமாவோடு சேர்ந்தால் தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயரும் என்று நம்புகிறார் 



            சமீபத்தில் வெளியாகிய சுமார் 300 படங்களுடன் போட்டியிட்ட இந்தியத் திரைப்படங்களில் ’விசாரணை. தேசிய விருதும் குவித்து இருக்கிறது .ஆனால் அதன் கதைப் படிக்கப் பயமாயிருக்கிறது .ஒருவேளை இவ்வளவு அற்புதமாகப் படமாக்கப்பட்ட திரைப்படத்தில் சந்திரகுமாரை நான் தேடும் நிலை வந்து விட்டால் …? வேண்டாம் !
 தமிழ் சினிமாக்கள் நாவல்களைத் திரைப்படமாக மாற்றட்டும் .இது ஆரோகியமான முயற்சிதான். இது எந்த வித சமாளிப்பும் அற்ற ,ரசிகருகளுக்காகக் கதையில் மாற்றம் செய்தோம் என்ற மழுப்பலும் இல்லாத படங்களாக வரட்டும்.இந்த வரிசையில் சுஜாதாவின் ‘என் இனிய இந்திரா’ கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (அனிமேஷன்) திரைப்படம் எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம் !










வியாழன், 31 மார்ச், 2016

என் இறந்த தினம் ( My Dead Day ) !



பெரியவர்கள் வாழும் அல்லது வாழ்ந்த வீட்டின் தனியறைகளில் , பரண்களில் அல்லது இரும்புப் பெட்டிகளில் ஏதாவது ஒரு ஆச்சர்யம் எப்போதும் ஒளிந்து கொண்டு இருக்கும் என்பதை நம்புவது எல்லோருக்கும் பழக்கமான ஒன்று ! எனது நண்பர் சுகுமார் வீட்டின் பரண்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு மூட்டையிலும் எங்களுக்கான ஏதோ ஓர் ரகசியம் காத்து இருக்கும் ! வீட்டில் யாருமில்லாத போது அனேகமாக எங்கள் வேலை அங்குப் பரணை ஆராய்வது !


அப்படி ஒரு சமயம் மூட்டையை இறக்கிப் பார்க்கும் போது முதலில் சிக்கியது சுகுமாரின் அப்பா தன் கைப்பட வரைந்த ஓர் ஓவிய நோட்டு.அதில் மிக நேர்த்தியான சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய, செதுக்கியது போலான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன .மிகப்பல ஓவியங்கள் ஒளிவுமறைவின்றி வரையப்பட்டு இருந்தாலும் விகல்ப மனம் உள்ளவர்களின் கண்களில் பட்டால் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காகக் குறிப்பிட்ட இடங்களில் சமீபத்தில் வெளியான சாருக்கான் மகள் சுஹானா (Suhana) ’பிகினி’ உடை போன்ற சின்ன மறைப்புகள் இருந்தன.அந்தப் பதினைந்து வயதில் அது ஒருவித உள்ளூரக் குறுகுறுப்பைத் தந்தாலும் அந்தப் பெரியவர்களின் பார்வையில் அந்த ஓவியங்களைப் பார்க்கும் போது , ஒரு மதிப்பையும் பிரமிப்பையும் தந்தது. இவ்வளவு தத்ரூபமான கைப்பட வரைந்த ஓவியங்களின் முதல் கைப்பிரதியை அப்போதுதான் பார்க்கிறேன் . அதற்கு முன் குமுத்தில் ஜெ…(ஜெயராஜ்) படங்களையும் ம.செ….(மணியம் செல்வன்) படங்களை மட்டுமே ஓவியம் என்று நினைத்துக் கொண்டு இருந்த காலம் அது ! 

              அடுத்து எங்களுக்குக் கிடைத்த புத்தகம்  பெயர் இல்லாத பழுப்பேறியக் காகிதங்களையுடைய கனமான ஒரு ஜோதிடப் புத்தகம் .அந்தப் புத்தகம்தான் இந்தப் பதிவுக்கே காரணம்...

அதில் என் மரணத்தைப்பற்றி…. 

        அந்தப் புத்தகத்தின் பல இடங்கள் அடிகோடிட்டு இருந்தன. அந்தக் கிழிந்தப் புத்தகத்துக்கான தலைப்பு பட்டியல் (Index) பகுதி சில பக்கங்கள் தள்ளி மடித்து உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. அதில் எங்களைக் கவர்ந்தத் தலைப்பு..
’ஒருவரின் மரணத்தேதியை எப்படிக் கண்டறியலாம்’
உடனே அந்தப்பகுதியை பிரித்தாராய்ந்துக் கண்டு பிடித்து மிக ஆவலுடன் வாசித்தோம். எனக்கு அதில்... 


”துலாம் ராசி ,சுவாதி  நட்சத்திரத்தில் எட்டாம் அதிபதி தசையில்  ஜாதகனுக்குத் தனது 83 ஆவது பிராயத்தில் ஒரு ஞாயிறுக் காலை சூரிய உதயத்திற்குச் சில நாளிகை முன் மாரடைப்பால் மரணம் சம்பவிக்கும்.” 

அதைப் படித்து விட்டு சாயந்திரம்வரை சுகுமார் வீட்டிலிருந்து விட்டுத்தான் என் வீட்டுக்குக் கிளம்பினேன்.சுகுமாரின் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் .நடந்து போகும்போது மீண்டும் அந்த ஞாபகம் பற்றிக்கொண்டது ..என் வரை வீடு வரும் வரை அதே நினைவுதான் சவலைப்பிள்ளையாய் மனதில் தொற்றிக்கொண்டு வந்தது... உயிரனங்களிலே மனிதன் மட்டுமே தனக்கு மரணம் உண்டு என் தெரிந்து வாழ்பவன் .இருந்தாலும் பதினைந்து வயதில் அந்தபுத்தகத்தின் வரிகள் ஒரு ஆழ்ந்த கலவர அலையை என்னுள் எழுப்பியது .

நான் 13 வயது வரை வளர்ந்த சூழ்நிலையும் அப்படிப்பட்டது .அந்த வயதில் பேய் , செய்வினை ,குட்டிச்சாத்தான் ,ஏவல் என்ற செய்திகள் சதா என் கிராமத்தை இரவுகளானால் இருள் கவ்வுகிறதோ இல்லையோ இந்தப் பயம் கவ்விப்பிடித்துக்கொள்ளும் . இதுக்கெல்லாம் மேலாகத் திண்டுக்கல் - பழநி இருப்புப்பாதை அருகில் ( இப்போது இருக்கும் அங்கு நகர் ”ஹவுசிங்போர்டு” கட்டுவதற்கு முன்னிருந்த கிராமம் ) என்னுடைய புதியஊர்.( ஊர்ப் பெயர் ) அந்த ஊர் அப்போது நகரத்தை விட்டு சுமார் இரண்டு கி.மீ தள்ளியிருந்ததால் தற்கொலை செய்துகொள்ள நிறையப்பேர் எங்கள் வீட்டுக்கு சுமார் ஆயிரம் அடித் தள்ளியுள்ள இரயில் தண்டவாளங்களைத்தான் தேர்வு செய்தார்கள் ! அந்த பகுதியில் போகும் ரயில் திடீரென்று நிறுத்தபட்டு இருந்தால் விபத்து நடந்து விட்டது என்பதாய் புரிந்துகொள்ளலாம்   அந்தக் கிராமம் முழுதும் ஓடிப்போய்ப் பார்த்துவிட்டுதான் மற்ற வேலையைப் பார்க்கப் போவார்கள் . அதில் எங்கள் வீட்டு அண்ணன்கள் நாழ்வரில் இருவர் மட்டும் முதல் ஆளாய் அங்கு போய் நிற்பார்கள் . அவர்களுக்கு அன்று இரவு என்னைப் பயமுறுத்த ஆயுதம் அதுதான் ! 


இங்க பாரு அந்த ஆளு மொட்டையாய் இருந்தான்.( செத்தவன் முடியோடு இருந்தால் பிழைத்து விடவா போகிறான் ?) குடித்து விட்டுத் தண்டவாளத்தில் படுத்து இருந்து இருக்கிறான் .நம்ம முனியாண்டிப் பார்த்து இருக்கிறார். அப்படியே ரயில் வந்து சதக் சதக்ன்னு ஏறி கழுத்து ஒருபக்கம் கால் சிதறி ஒருபக்கம் போயிருச்சு . முண்டம் மட்டும் தண்டவாளத்துக்கு நடுவில கிடந்துச்சு... 
                  அப்படியே தந்தி நிருபர் போல வீட்டுக்கு வந்து  கலந்து கட்டி அடிப்பார்கள் ! அதைக் கேட்டு விட்டு இரவு எனக்கு  இருக்கிற கொஞ்ச நெற்றி பூராவும் இடமில்லாத அளவுக்கு விபூதியை எடுத்துப்பூசிப் பூசிப் பயந்து கொண்டு தூங்குவேன் அந்த மாதிரி இரவுகள் ஏனோ ஆமை வேகத்தில்தான் நகரும்!


               அது மட்டுமல்ல எங்கள் பகுதியில் புளிய மரங்கள் அதிகம் . எல்லாப் புளிய மரங்களுமே பேய் பிடித்தவர்களுக்குக் கழிப்புக் கட்ட பயன் படுத்தியதுதான் பேய் ஓட்டுபவர் பேய் ஓட்டக் கொடுத்த காசுக்கு ஏற்ப பிடுங்கிய தலை முடிகளை இங்குக் கொண்டு வந்து பத்திரமாகப் பெரிய ஆணிகளில் சுற்றி புளிய மரத்தில் அடித்து விடுவார்கள் .கணக்கில்லாத அந்த ஆணிகளில் நீள முடிகளைப் பார்க்கும் போது அது காற்றில் லேசாக அசைந்தால் கூட யாரோ முகம் தெரியாத குரல் ஒன்று என்னைக் கூப்பிடுவது போல ஒரு பிரம்மை எனக்குள் தங்கிக்கொள்ளும். வீடு திரும்பிய அன்றைய இரவில் வரும் கனவுகள் எல்லாமே ஏறக்குறையப் பாதி ரயில் ஓடிக்கொண்டு இருக்கும் யாரோ தள்ளிவிட்டு உருண்டு விழுவது போலவே வரும் ! 

இப்படிச் சிறு வயதில் பயத்தின் பின்னனியிலும் (முன்னனியிலும்) வளர்ந்தாலோ என்னவோ இப்போதும் ”ஹாரர்” படங்களை என் வீட்டில் மனைவியோ மகனோ பார்க்கும் அளவுக்குக்கூட என்னால் தைரியமாகப் பார்க்க முடியாது. தாவணிக் கனவுகள் பாக்கியராஜ் குடும்பத்தோடு படம் பார்க்கப் போன கதையாய், நான் பேய் வரும் சீன்களில் கீழே எதையாவது தேடுவது போல முகத்தைத் திருப்பிக்கொண்டோ கண்ணை மூடிக்கொண்டோ யாருக்கும் தெரியாமல் சமாளித்துத் தப்பித்து விடுவேன் ! 

இதை மறக்க நினைத்த சில மாதங்களுக்குள்,மேலும் ஒரு சம்பவம் … 

நான் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் போது ஒரு நாள் அந்த வழியாய் வந்த கிளி ஜோதிடக்காரர் ரூபத்தில் ஒரு பிரச்சனை வந்தது! பொழுது போக்காய் ஜோதிடம் பார்த்ததில் எல்லோருக்கும் ராமன் , சீதை என்று மங்களம் பாடிய கிளி என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை ,எனக்குக் எடுத்த சீட்டில் யாரோ கூண்டுக்குள் சிறைபட்டு நிற்பது மாதிரி ஒரு படம் எடுத்து தந்து ஒரு நெல்லைக் கவ்விக்கொண்டு மீண்டும் கூண்டுக்குள் சிறைப்பட்டது .அதற்குக் கிளி சாமி பலன் சொல்லும்போது ஒரு குண்டைப் போட்டார்..



…தம்பிக்கு நேரம் இந்த ஒரு மாதம் மிகவும் சரியில்லை.யாரோலோ கூண்டேறி ஜெயிலுக்குப் போகணும்ன்னுக் குறி சொல்லுது .இந்த ஒரு மாதம் யார் வீட்டிலும் தங்கக் கூடாது ,பொழுது சாயறதுக்குள்ள வீடு வந்து அடையணும் என்றவர் அதோடு நிறுத்தவில்லை …முக்கியமாப் போலிசுப் பிரச்சனைன்னு ஒரு நாளாவது தம்பி கூண்டேற விதியிருக்குன்னு சொல்லுது .. 

        என்று கிளியைக் கூண்டிலிருந்து வெளிவிட்டு என்னைக் கூண்டுக்குள் அடைத்து விட்டார் அந்த மனிதர் !.வீடு பயந்து விட்டது.அரண்டவன் கண்ணில் இருண்டதெல்லாம் பயம் என்பது போல ஆகிப்போச்சு .

ஆனால் அந்தக் கிளி சாமி சொல்லிச் சென்று முப்பது நாளுக்குள் காலை எழு மணிக்கெல்லாம் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அரக்கப் பரக்க மூச்சு வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்தார்.வந்தவர் திண்டுக்கல் மாணிக்கம் செட்டியார் மளிகைக் கடையில் பொட்டலம் மடிப்பவர். எழுதப் படிக்கத் தெரியாதவர் மூணு நாளாக மனிதர் குடும்பத்தோடு கொழுந்தியால் திருமணத்தைக் கொண்டாடத் தேனி போயிருக்கிறார் .இவர் இல்லாத வாடகை வீட்டில் திருடன் வந்து பொருளெல்லாம் எடுத்துக்கொண்டு இங்கே கொண்டாடி விட்டுப் போய் விட்டான் .காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் துணைக்கு எழுத படிக்கத் தெரிந்த ஆள் வேண்டுமென்று என் அம்மாவிடம் கேட்க அவர்களும் கிளி ஜோதிடம் மறந்து போய் இரக்கப்பட்டு அனுப்பி விட்டார்கள் . 
    காவல் நிலையத்திற்குக் காலை ஏழரைக்கு (அப்படித்தான் அரம்பித்தது) போனோம். அய்யா (காவல் துறை துணை ஆய்வாளர்) வரும் வருவதற்குள், அப்படியே அடுத்தத் தெருவில் உள்ள கடையில் இரண்டு குயர் பேப்பர்,ஒரு பேனா, வயர்லெஸ் பேட்டரிக்கு இரண்டு பாட்டில் டிஸ்டில் வாட்டர் வாங்கிக் கொடுத்துவிட்டுக் காத்து இருக்கச் சொன்னார் .பத்தரைக்கு வந்தார் அய்யா.வந்தவுடன் மற்றதெல்லாம் விசாரித்த அய்யா கடைசியில் இவரை விசாரித்தவர்,

      யாரைக்கேட்டு மூணு நாளெள்லாம் ஒம் பாட்டுக்கு பூட்டிட்டு போற ? ஒரு வார்த்தை இங்க வந்து சொல்லிட்டு போயிருக்கல்லாம்ல நாங்க அந்தப் பக்கம் ஒரு கண் வச்சு இருப்போம்ல ? என்றார் . 
 அவர் அக்கறைப்படுகிறாரா ? இல்ல சொல்லிட்டுப் போயிருந்தா இவரே எல்லாத்தையும் ஆள் வச்சு அள்ளி அனுப்பியிருப்பாரோ தெரியவில்லை! எனக்கு அந்தச் சமயத்தில் சிரிப்பு வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . ஆனால் அடக்கிக்கொண்டேன்.(ஒருவேளை என்னை ஜெயிலில் போட்டு விட்டால் ?) 


அப்புறம் இரண்டு காவலர்கள் எங்களுடன் வீடு வந்து கை வைக்காமல் சோதித்தார்கள்.பிறகு தடயவியல் நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்து ஒரு பெண்ணும் ஆணும் வந்தார்கள்.கதவு ,டேபிள் ,பரண் ,பீரோ,எல்லாப் பக்கமும் ஒரு பவுடர்த் தூவி பிறகு மெல்ல ஒரு பிரஸ் வைத்துத் தேங்யிருந்த ரேகைப் பதிவுகளை ’லென்ஸ்’ வைத்துப் பார்த்தார்கள்.போட்டோ எடுத்தார்கள்.இதில் ஒரு விசேசம் எனக்கு அப்போது தெரிந்தது.திருடர்களில் கூட இரண்டு வகைகள் இருக்கிறார்களாம் . ஒருவன் பணம் மற்றும் நகைகள் மட்டும் திருடுபவன் ,இன்னொருத்தன் அண்டாக் குண்டா வெள்ளிப்பாத்திரம் மட்டும் திருடுபவனாம்.அந்த வீட்டில் திருடியவன் இரண்டாம் வகை. அவர் வீட்டில் பித்தளைபாத்திரம் , வெள்ளிக்குத்து விளக்குகள் மட்டுமே களவு போயிருந்தன .பீரோவில் துணிக்கடியில் (அவருக்குக் கூடத் தெரியாமல் அவர் வீட்டு அம்மா ( மனைவி ) வைத்து இருந்த பணமெல்லாம் அப்படியே இருந்தது. அந்தச் சம்பவத்தை நம் இயக்குனர் சசிகுமார் வார்த்தையில் இப்போது சொல்ல வேண்டுமென்றால்  , ‘பொருள் மட்டும்தான் திருடுவேன் என்ற அந்த திருடனின் நேர்மை எனக்குப் பிடித்து இருந்தது !’ 

இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜோதிடத்தில் நம்பிக்கை வந்ததோ இல்லையோ ஒரு சுவாரசியம் வந்தது சரி நமக்கு உண்மையில் என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்க ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்டப் போதுதான் தெரிந்தது வீட்டில் யாருக்கும் முழுபலன்களைக் கணித்து ஜாதகம் நோட்டுக் கிடையாதாம்.பிறந்த போது எழுதிய குறிப்பு மட்டும்தான் இருந்தது.அதை எழுதியவரிடமே கொடுத்து முழுதாய் விரிவாக எழுதிக்கொள்ள அப்ப அந்த ஜோதிடரின் முகவரி சொன்னார் அவர் ஜோதிடர் மட்டுமில்லையாம் சிவன் கோவில் பூசாரியும் கூட .திண்டுக்கல் அரண்மனைக்குளத்தருகே (பேருந்து நிலையத்திலிருந்து மதுரைச் செல்லும் வழி ) அவர் வீடு தேடிப்போனேன் .சிவன் கோவில் பூசாரி என்பதால் உடனே வீட்டு அடையாளம் சொல்லி அனுப்பினார்கள். 

வீட்டு வாசலில் புதிதாய்ப் பந்தல் போடப்பட்டு இருந்தது.வாசலில் மத்திம வயதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
அவரிடம் ஜோஸ்யக்காரர் வீடு இதாங்களா ? என்றேன் .
ஆமாம் என்றார் .
அவரப் பார்க்க முடியுங்களா? என்றேன் .
அவரை என்னை உற்றுப்பார்த்து விட்டு ,

அவர் இறந்து இன்னைக்கோட மூணு நாளாகுது என்றார். 

செவ்வாய், 22 மார்ச், 2016

ஆண்கள் அழுவது வெளியே தெரிவதில்லை !


                  ஆண்கள் அழுவது சில சமயம் வெளியே தெரிவதில்லை ! இப்படி ஆரம்பிக்கும் இந்தப் பதிவு ஒரு விதக் கோழைத்தனமான் பதிவாகக் கூட உங்கள் மனதில் நினைக்கலாம் .ஆனால் இந்த உலகில் அப்பாக்களின் அழுகையை மொழிப் பெயர்க்க யாருமில்லை . கம்பீரமாகவே நடித்து விட்டுத் தன்னால் எதோ ஒன்று முடியாதபோது அதுவும் தன் குழந்தைகளின் படிப்புக்கோ,திருமண விசயத்திலோ நல்லது என்று தெரிந்த விசயத்தைச் செய்ய முடியாத நிலை வரும் போது எவ்வளவு பெரிய சாதனை செய்த அப்பாவானாலும் முகம் பொத்தி அழுக வேண்டிய நிலை வருமே அந்த நாளை சில சமயம் மறக்கவோ அல்லது மறுக்க முடியாது . அப்படிப்பட்ட அப்பாவில் நானும் ஒருவன். 

            விசயம் இதுதான் .இன்று அந்தக் குழந்தை ஏசு பள்ளியில் என் பையனைச் சேர்த்து விட மாமானாருக்குத் தெரிந்த ஒரு காவல் துறை அதிகாரி மூலம் அந்தப் பள்ளியின் தந்தையை ( Father) சந்தித்தோம் .பொதுத்தேர்வு நடக்கிறபடியால் அவரைச் சில நிமிடமே சந்திக்க அவகாசம் கிடைத்தது. 

           வரவேற்றவர் மரியாதை நிமித்தமாகச் சில வார்த்தை அந்த அதிகாரியிடம் பேசிய பள்ளித் தந்தை என்னிடம் திரும்பி இப்போ உங்க பையன் எங்க படிக்கிறான் ? என்றார்.சொன்னேன்.அதுவுமே நல்ல பள்ளிதானே என்றவர் தொடர்ந்து எல்லாமே இங்கதான் படிகணுன்னு ஆசைப்பட்டா முடியுமா ? எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்கன்னார் ? 

         அவரின் பொதுத்தேர்வு இந்நேரம் அரம்பித்து இருக்குமே என்ற அவசரமும் ஏன் கழுதறுக்கிறீர்கள் என்ற அயற்சியும் ஒரு சேரக் கேள்விகளாய் வந்து விழுந்தது.சோதனைத் தேர்வு முடிந்தவுடன் யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்கினாத்தான் மற்றபடி உங்களுக்கு என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்றார். 

 நன்றி சொல்லி விட்டு வெளியேறினோம். 

அந்த அதிகாரியின் வேலை நேரத்தை அபகரித்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டு ,விடைபெற்றேன் . 


             வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கிப் பயணப்படும் போது, எனக்குப் பள்ளித்தந்தையின் அந்தக் கேள்வி எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ?’ என்ற மீண்டும் கேட்டது.  எனது தந்தை என்னை ஆறாம் வகுப்புக்கு திண்டுக்கல் 1980ல் புனித மரியன்னைப் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டபோது இதே கேள்வி சிலர் கேட்டார்கள் .அப்போது அவர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார் . திண்டுக்கல்லில் மூன்று விதமான பள்ளிகள் அப்போது இருந்தது.ஒன்று அடித்தே படிக்க வைக்கும் பள்ளி.இன்னொன்று எப்படியோ படி எனக்கு மாசம் ஆனால் கவர் கொடுத்திடுவாங்கன்னு கூசாமச் சொல்லி பிழைப்பு நடத்தின ஆசிரியர்களின் புனிதத் தன்மையைத் தூக்கி எறியும் சில பேர் இருக்கும் அரசுப் பள்ளி!.இதற்கு இரண்டுக்கும் நடுவே அப்பா என்னைச் சேர்க்க விரும்பியது புனித மரியன்னைப் பள்ளியில்  . காரணம் அங்கு ஒழுக்கம் கல்வி இரண்டும் இரு கண்களாக இருந்தது. அடித்துப் படிக்க வைப்பதில் நம்பிக்கையற்றவர்கள் அங்கு இருந்த ஆசிரியர்கள் .ஆனால் அக்கறை மிகுந்தவர்கள் .எனது மூத்த சகோதரர் அங்குப் படித்தவர். ( திண்டுக்கல் ஐ.லியோனி, என் அண்ணனுக்கு சீனியர். ) அவர் நல்ல முறையில் தேறினாலும், குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்புக்கு அனுப்பவில்லை .

அப்பா அப்போது நினைத்து இருந்தால் இப்போது என்னைப் போல யாராவது ஒரு முக்கிய நபரை என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம் ஆனால் சிபாரிசை அவர் வெறுத்தார்.சிபாரிசினால் யாருக்கோ தகுதியான ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப்பறிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் . விளைவு ? ஐந்தாம் வகுப்பு வரை தன் சொந்த பெயரைக்கூடத் தமிழைத் தவிர வேறு எதிலும் எழுத தெரியாத எனக்கு எப்படி அந்தப் பள்ளியில் கிடைக்கும் ? அரசுப் பள்ளிதான் என் தகுதிக்கு வாய்ப்புத் தந்தது. 


ஒரு வேளை நான் அந்தப் புனித மரியன்னையில் படித்து இருந்தால் இங்கு வந்து பதிவுலகத்துக்கு வேண்டுமானால் வராமல் போயிருப்பேன்.ஆனால் அந்தப் பள்ளியில் நடத்த ஆள் இல்லாது போனதால் கைவிடப்பட்ட , எனக்குப் பிடித்த தேசிய மாணவர் படை (NCC ) அல்லது சாரணர் படையிலோ (Scout) சேர்ந்து, ராணுவத்தில் சேரும் ஒரு வாய்ப்பைப் புனித மரியன்னைப் பள்ளியின் மூலம் பெற்று இருப்பேன் ! அது என் கனவு .அந்தக் கனவையும் அந்தப் பள்ளியில் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.அங்கு படித்த என் வகுப்புத் தோழர்கள் பெரும்பகுதிப்பேர் தேராமல் அவர்களின் விவசாயத்துக்கு போய் விட்டார்கள் . சிலரை இப்போது முனிசிபால்டி குழி தோண்டும் பணியிலும் இன்னும் சிலர் அரசியல் வாதிகளாய் வலம் வருகிறார்கள் .நிறையப்பேரின் விதியை மாற்றிய பெருமை அந்த பள்ளிக்கு உண்டு.

அரசுப் பள்ளிகளில் காசு இல்லாதவர்கள் மட்டும் சேரவில்லை,வெகு தூரத்திலிருக்கும் கிராமத்துப் பள்ளியில் விவசாய வேலை மற்றும் மாடு மேய்த்த நேரம் போன பிறகு ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் , வேறு பள்ளியில் தோற்று ஒதுங்கினவர்கள் ,என்னைப்போல அடி முட்டாள்கள் எல்லோரும் படித்தோம் .எங்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவில்லை வேறு வழியில்லாது சில ஆசிரியர்கள் அடித்துப் படிக்க வைத்தார்கள்,அதிலும் முக்கியமாக விதியின்  பரிசோ தெரியவில்லை அந்தப் பள்ளியின் பிரேமா டீச்சர் ,அரங்க நாயகப்பெருமாள் ,ராபர்ட் சார் ,ஜோசப் சார் போன்ற தமிழாசிரியர்கள் இன்றும் நான் வணங்கிக் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் . அதே போல எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ’பாட்டனி மாஸ்டர்’சுந்தர மகாலிங்கம் சார் .அவருக்கு மற்ற ஆசிரியர்களே பயப்படுவார்கள் வகுப்பில் என்னை மற்றவர்கள் போல நடத்துவார்.மாலைத் தன் வீடு வரை என்னை அழைத்துச் சென்று  சாப்பிட வைத்திருக்கிறார்.ஆனால் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எதனால் என்பது இதுவரை எனக்குத் தெரியாது .


                  படிப்புதான் வரவில்லை இந்தப் பசங்களுக்குப் பொதுச் சேவையிலாவது பயன்படுத்தலாம் என்று நினைத்தரோ என்னவோ தெரியவில்லை சுந்தரமகாலிங்கம் சார் -  இயற்கைக் கழகம் (Nature Club) ஒன்றை ஆரம்பித்து,அதில் என்னைத் தலைவனாய் ( President ) போட்டுத் திண்டுக்கல் ஒடுக்கம் மர வளர்ப்புத்திட்டத்தில் பள்ளியின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் பங்கு பெறச்செய்து லட்சகணக்கான மரம் நடச்செய்து பள்ளிக்குப் பெருமைச் சேர்த்தார்.அந்த செய்தி அப்போது ’ஹிண்டு’ பத்திரிக்கையில் முதல் பக்க கட்டச்செய்தியாய் என் பெயருடன் வந்தது.பார்த்தீனியம் செடியளிப்புத் திட்டம்,மேலும்  குஜராத் மாநிலத்தின் ஜல்கானில்,  இந்திய அளவில் நடந்த மரம் நடுவிழாவில் கலந்து கொள்ளச் செய்தார் . இன்றும் நான் திண்டுக்கல் போகும் போது வெகு தூரத்திலிருந்து நின்றுப் பார்த்தாலே அந்த மரங்கள் தெரியும் அதில் ஒரு மரமாவது நான் நட்டுப் பிழைத்த மரமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன் .அந்தத் தோப்பின் மரங்களில் ஆணி வேர்களுக்கு நிச்சயம் என் பாட்டனி மாஸ்டர் சுந்தரமகாலிங்கம் சார் யாரெனெத் நிச்சயமாகத் தெரியும் .இயற்கை எப்போதும் மனிதனை மறக்காதல்லவா ? 


அதே சமயம் இந்தப் பசுமையான நிகழ்வுக்களுக்கு எதிராக  வாழ்நாள் முழுதும் மாறாத வலி நிறைந்த தழும்புகளையும் அங்குதான் பெற்றேன் . எட்டாவது படிக்கும் போது ஒரு பெண் ஆசிரியை  சொந்த வீட்டில் மாடி மேல் நிலைத்தொட்டிக் கழுவும் வேலைக்கு மாதம் ஒருமுறை அனுப்ப படுவதும், ஒன்பதாவது படிக்கும் போது வேதியியல் ஃபார்முலா தெரியவில்லை என்பதால் எங்கள் வகுப்புப் பிரம்பு உடைந்தும் அடுத்த வகுப்பு பிரம்புவரை அடித்தே உடைத்து அதையும் எங்கள் காசில் வாங்க வைத்து இருந்த ஆசிரியர்களும் இருந்தார்கள்.பத்தாவது படிக்கும்போது வேலை நேரத்தில் ஆசிரியர்களுக்குள்ளே வட்டி கொடுத்து வசூல் வாங்கச் சென்று விடும் என் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவர் வகுப்பை ’டியூசனில்’தான் எடுப்பார் . அதற்கு என்னால் போக முடியவில்லை .காரணம் வெளியில் கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கு (அடித்தே படிக்க வைக்கும்) பள்ளி ஆசிரியரிடம் படித்துக்கொண்டு இருந்தேன்.எனக்கு இருந்த கல்வி புலமைக்குத் தமிழ் வரலாறு தவிர எல்லாமே டியூசன் படிக்க வேண்டிய சூழ்நிலைதான்.ஆனால் வசதியில்லை .அதைக் அந்த வட்டிக்கார ஆசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை. தேவை இல்லாதுக்கெல்லாம் அடிப்பார்.அதிலும் என்னை ’லீடராக’போட்டுப் படிப்பையும் கெடுக்க முயற்சி தீவிர முயற்சியும் கூட எடுத்தார் .இதெல்லாம் பரவாயில்லை பத்தாவது பொதுத்தேர்வுக்குச் சில நாள் முன்னால் என்னையும் நண்பர் சுகுமாரையும் அழைத்து ,நீங்கள் இரண்டு பேரும் ஹாலுக்குள் துண்டுச் சீட்டுக்கள் கொண்டு போங்கள் .கேள்விகளுக்கு விடைகளை எழுதி (அவரிடம் டியூசன் படித்த) எனது சக மாணவர்களுக்குக் கொடுத்து உதவச்சொன்னார்.அப்படிப் பட்ட  அபத்தமும் அங்கு அரங்கேறியது. 


இப்போது யோசித்துப் பாருங்கள் இந்தக் கேள்வியை ! எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ? என்ற அந்தப் பள்ளியின் தந்தைக்கு பதிலாக என் மொத்த வலிகளையும் அவர் தந்த சில நிமிடத்தில் சொல்ல முடியுமா ? பண்ணிரெண்டாம் வகுப்பில் வேதியல் மற்றும் இயற்பியல் சமண்பாடுகள் புரியவில்லையே என்று புத்தகத்தைப் பார்த்து அழுது ,அழுது ஓய்ந்துபோய் வெறித்து ஓட்டு வீட்டின் கூரையைப் பார்த்து தானாய் சிரித்துக்கொண்டதைத்தான் சொல்லவா ? திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல நம் தாய்நாட்டின் முந்தையை (குறிப்பிட்ட) ஆண்டு வரலாறுகள் அத்தனையும் ஆங்கிலத்தில் மட்டுமதான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே அதை எப்படிப் படிப்பது என்று கேட்கவா ? 

இது மட்டுமா ? தீபாவளிக்கு அலுவலகம் சார்பில் நான் தயாரித்த ’ட்ராஃப்ட்’ மெயிலைப் பார்த்து ஒரு சின்னத் தவறுக்கு முதலாளி பல பேர் முன்னால் சொல்லிச் சிரித்த போது அவமானத்தில் வலித்தது சொல்லவா ? சரி இதெல்லாம் போகட்டும்.  என்னைப்போல என் பையனும் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான் (அதிலும் அங்கு ஒரு யோகா மாஸ்டராக இருக்க ஆசைப்படுகிறான் . அப்படியெல்லாம் இருக்காத் தெரியவில்லை ! ) அவன் கனவையாவது நிறைவேற்றுங்களேன் என்ற ஆதங்கத்தில் பார்த்து விட்டு என் அலுவலகம் திரும்போது தலைக்கவசத்திற்குள் வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் நான் அழுதேன்.நிறைய ஆண்கள் வெளியே தெரியாமல் என்னைப் போலத்தான் அழுகிறார்கள். 


அழுவதற்கு வில்லியம் ஜேம்ஸ் எண்ணங்களின் பிரதிபலிப்புக் காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு நடையைக் கட்டி விட்டார். அவருக்குத் தெரியுமா ? இந்திய ஆணுக்கு இருக்கும் பிரச்சனைகள் எத்தனை என்று ?... பல வருடம் கூடப் படித்த நண்பர்களை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது தொடங்கி , எம்பது மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் மூஞ்சிய கூடப் பார்க்காமல் பேப்பர் கொடுத்த டீச்சர் நாற்பது எடுத்த போது உரக்கக் கத்திச் சொல்லிப் பக்கத்து வகுப்புக்கே கேட்கும் அளவுக்குக் கூப்பாடுப் போடும் போது, இந்த உலகில் எவனுக்குமே பிடிக்காமல் போன தீபாவளிப் புது ஆடையைப் பார்த்தப் போதெல்லாம் வந்த அழுகை ,வயது ஒரு பக்குவம் தந்து நம் வீட்டில் அப்போதுதான் அக்காவோடோ அல்லது தங்கையோடோ ஒரு புரிதல் வரும் நேரத்தில் யாராவது ஒருவனுக்குக் கட்டிக்கொடுத்து அந்த மாமனுக்கோ மச்சானுக்கோ மெட்டிப் போட்டு அனுப்பி வைக்கும் போது , போயிட்டு வரேன் அப்பான்னு போகும் அக்காவை மவுனமாகப் பார்த்து கொண்டு இருக்கும் அப்பாவை பார்க்கும் போது , அடுத்து வந்த அக்காவை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்று எப்போதாவது சொல்லும்போது அந்த அக்கா ,அவருக்குப் பிடிக்காது என்று பிரித்துப்பேசி கொண்டு வந்து விட முடியுமா முடியாதான்னு நடையை கட்டும் போது ...நல்ல மேட்ச்சில் நம்ம பால் மட்டும் அந்த வீணாப் போனவன் தப்பாய்த் தொட அது பவுண்டரி லைனை தாண்டும் போது .. செஸ் விளையாட்டில் விளையாடத் தெரியாதவனின் சிப்பாயிடம் ராணியை பறி கொடுக்கும் போது .. ரம் அண்ட் சூட்டில் கீழே கிடந்த சீட்டை கவனிக்காமல் நழுவ விட்ட வாய்ப்பின் போது.. ரெட்டுக்கு ஃபாலோ போடுகிறேன்னு அதை எதிராளின் மவுத்தில் நிறுத்திக் கொடுக்கும் போது..சில சமயம் இதெல்லாம் ஆத்திரமும் அழுகையுமாய் பீறிடும் ...


கொடுத்த காதல் கடித்ததிற்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தையில் தூக்கி எறியாமல் அந்தப் பெண் அதைத் தலமையாசிரியர் அறைவரைப் புகார் அளித்து ,அதற்கு அப்பாவை வரவைத்து அங்கு நிறுத்திய போது ,அது உலக அளவில் பெரிய குற்றம் என்ற கூப்பாடுப் போட்டுப் பல வாரம் பேசாமல் பாக்கெட் மணியும் கொடுக்காத அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்... கேட்டக் குரூப் கிடைக்காமல் கிடைத்த குரூப் பிடிக்காமல் வைத்த அரியரை எதாவது ஒரு விசேசத்தில் தேடித் தேடிப் பெண்களைப் பெற்ற அம்மாக்களிடம் மட்டுமே நம் அம்மா சொல்லும் போது..காதலுக்கு உதவும் போது பஞ்சராகும் வண்டி மீது வரும் கோபம், தேடி வந்த பெண்ணைத் திருவிழாவில் தவற விட்டு கடைசி வரை கண்டு பிடிக்காமல் வீடு திரும்போது..அடித்துப் பிடித்து ஏறிக்குதித்து டிக்கட் கவுண்டரில் கை நீட்டும் போது டிக்கட் இல்லையென்று டப்பென்று அடித்துச் சாத்தும் போது , நண்பனிடம் வாங்கிய அதுவரை ஓட்டாத பைக்கைக் கியர் மாற்றிப் போட்டு அசடு வழியும் போது, பிடிக்காத பைக்கைச் சொல்லாமல் கொள்ளாமல் அப்பா வாங்கி நிறுத்தும் போது,பிடித்த ஹீரோ டம்மிக் கதையில் நடித்து ஃபிலாப் ஆக்கியது மட்டுமல்லாமல் அதை டிவிப் பேட்டியில் வந்து, என்னோட கேரியர்ல முக்கியமான படம்ன்னுக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாய்ச் சொல்லும் போது மொத்த வீடும் திரும்பி நக்கலாய் நம்மைப் பார்க்கும் போது ..

நம் தெருவிலே இருக்கிற ஒரே ஒரு ஃபிகரை எவனோ ஒருவன் தெரு முனையில் ட்ராப் பண்ணி விட்டு ,திரும்பி நமக்குக் கைக் காட்டும்போது ,பக்கத்து வீட்டுக் குட்டிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த போது தவறாக உச்சரித்த ஆங்கிலச்சொல்லை ஒட்டுக்கேட்டு அதைப்போய்த் தெருவுக்கு வரும் விளக்குமாறு விற்கும் பெண் வரை முதல் வீட்டு அங்கிள் தேடித் தேடி வெடிச்சிரிப்புடன் சொல்லிக் காட்டும் போதெல்லாம்,நம்மிடம் இருக்கும் மொபைல் போன் ஹேங் ஆகி வெறுப்பேற்றும் போது ...இன்னும் எத்தனை வலிகள் ஆணாய்ப் பிறந்தவனுக்கு ? 


               ஆனால் பிறக்கப் போகும் குழந்தையைப் பத்து மாதம் ஆணால் தூக்கிச் சுமக்க முடியாது .பெண்களின் பிரசவ வலியை நிச்சயமாய் ஒரு ஆண் மகனால்  புரிந்து கொள்ளவோ முடியாது . ஆனால் அன்று அந்தப் பிரசவத்தின் போது மருத்துவமனைக்கு வெளியே இவள் சின்ன வலிக்கெல்லாம் தாங்க மாட்டாளே எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ? என்று கவலைப்படத் தொடங்கிய ஆண்களின் அழுகையும்   வெளியே யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீர் துளிகளும்  இந்த மண்ணை இன்னும் ஈரமாகத்தான் வைத்துக்கொண்டு இருக்கிறது...