புதன், 16 மார்ச், 2016

அன்னை தெரேசா புனிதர் ஆனார் !


கடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா

              இன்று என்  முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது . 

               அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். செப்., 4ம் தேதி , அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறிந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது . அவர் ஆத்மா உலகை விட்டு பிரிந்து 19 ஆண்டுகாலம் ஆகியும் இன்றும் அன்பு என்ற சொல்லுக்கு அன்னை தெரேசாதான் என்று மனிதர்கள் மனத்தில் மரித்துப் போகாத உதாரணமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ! அவர் இந்தப் பட்டத்தைப் பெறும் தகுதிக்கான ஆய்விலா இவ்வளவு காலம் இருந்தார் ? 

 கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில்,அற்புதங்களை நிகழ்த்தியவர்களுக்குத்தான் புனிதர் பட்டம் தரப்படுகிறது .இது பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. 


         தனது வாழ்கையே அன்பின் வரலாறாக வாழ்ந்த அந்தத் தூய ஆத்மாவுக்கு இந்தப்பட்டம் ஏன் இவ்வளவு காலம் கடந்து வந்து இருக்கிறது என்பது கேட்க நமக்கு உரிமை இல்லை அதைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சபைதான் முடிவு செய்யும் அது.  

           உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் செயல்படும் போது இன்னும் என்ன தகுதியை எதிர்பார்கிறார்கள் ? இந்தப் பட்டத்தைப் பெற அன்னை தெரேசாவுக்கு என்ன தகுதி தேவைப்பட்டது ?

              அதற்கு நாம் புனிதர் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின், அவருக்குப் புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்வதற்கான வேலைகள் துவங்குகிறது. 

1. கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு நிலைகளில், முதல் நிலை, 'இறை ஊழியர்' என அழைக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் புனிதர் என நம்பப்படுவோரை, திருச்சபையால் ஏற்றுக் கொள்வதற்காக அளிக்கப்படும் முதல் பட்டமாக இது கருதப்படுகிறது. 

2. பிஷப்பால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்து, அவர் நற்பண்புகளை உடையவர் எனப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்பின், அவருக்கு, 'வணக்கத்திற்குரியவர்' என்ற பட்டம் வழங்கப்படும். 

3. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றி, சிறப்பான முறையில் வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் என்றும், மற்றவர்களின் நலனுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராக உள்ளார் என்பதை உறுதி செய்து, அதற்காக, அருளாளர் (முக்திப் பேறு) பட்டம் வழங்கப்படும். 

4. இந்த மூன்று நிலைகளும் முடிந்து, நான்காவது நிலையை எட்டிய பின், 'புனிதர்' பட்டம் வழங்கப்படும். இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை இது குறிக்கும். 


புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் ஒருவர் இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. அற்புதம் இந்த உலகின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம் .ஆனால் அந்த நாட்டின் திருச்சபை அதை அங்கீகரித்துச் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, நடந்த இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, அந்தச் செய்தி அனுப்பப்பட்டு இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். 

அப்படி நடந்த முதல் சம்பவம் கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் மோனிகாவை இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. குணமடையச் செய்து அற்புதம் நிகழ்த்தினார். 

இரண்டாவதாக , 2008ல், 35 வயது பிரேசிலைச் சேர்ந்த மூளை மூளையில் உருவாகிய கட்டியால் கோமா நிலைக்குப் போன ஒரு நபருக்காக அவரது மனைவி தெரேசாவைப் பிரார்தனை செதுகொண்டதன் மூலம் அந்தக் கட்டு கரைந்து குணமடைந்து விட்ட, இரண்டாவது அற்புதத்தை நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க, இப்போது போ பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். 

இதுவரை அன்னைத் தெரேசாவுக்குப் பெற்ற விருதுகள் . 


1962 – பத்ம ஸ்ரீ விருது 
1971 – 23வது போப் ஜான் அமைதி விருது 
1971 – குட் சமரிட்டன் விருது 
1971 – கென்னடி விருது 
1972 – சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது 
1973 – டெம் பிள்டன் விருது 
1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1979 – அமைதிக்கான நோபல் பரிசு 
1982 – பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது 
1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை .

           ஆரம்ப காலங்களில் ஒரு முறை அன்னை தெரேசா அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரேசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரேசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். 



                அன்னை தெரேசாவுக்கு அவர் வாழ்ந்த மதம் தரும் உயரிய அங்கீகாரம் அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்பையும் கருணையையும் வாழும்போதே இறைவனனின் வரமாகப் பெற்று வாழ்ந்தவர் அன்னை தெரேசா . மனித குலம் அவரை மறக்கும் போது இந்த உலகின் கடைசி மனிதன் இறந்து விட்டான் என்பதை காலம் தன் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக