செவ்வாய், 17 நவம்பர், 2015

என்றென்றும் அன்புடன் ,



அப்பாடா என்று புது அலுவலகம் வந்து உட்கார்ந்து விட்டோம் .அற்புதமான சூழலில் இன்னும் உற்சாகமாகப் புது விசயங்கள் எழுதுவதற்கு ஆர்வம் பிறக்கிறது.பொதுவாய்த் தேர்வுக்கு மிகக் கவனமாகப் படிக்கும் போதுதான் நிறையக் கவிதை எழுத ,கட்டுரை எழுதப் புத்திப் போகும்..அப்படித்தான் தொடர்ந்து வேலை இருக்கும் போது நிறையவிசயங்கள் வந்து போனது. 

குறிப்பாய் , 

நடனமாது மனது பற்றி.. 

கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் மட்டுமே விரும்பிய கவிஞர் சூர்தாசர் அருமையான ஒரு பக்திப் பாடலான ”பிரபு எந்தன் குறைகளைமனதிற்கொள்ளதே”என்றுத் தொடங்கும் பாடலை கேத்ரி மன்னரின் அரசச் சபையில் “அம்மா! என் கண்களைத் திறந்துவிட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?“ என்று சுவாமி விவேகானந்தரை கண்ணீர் மல்கக் மன்னிப்பு கேட்க வைத்த அந்த நடனமாது மனது பற்றியும் , 

ஆண் - பெண் மனநிலை

உலகில் எப்போதும் சுவாரசியமாகவே இருக்கும் ஆண் - பெண் மனநிலைகளைப் பற்றிச் சமீபத்திய நீயா – நானாவின் அழகியல் பற்றிய ஆய்வும்,இயற்கையிலேயே 
ஆண்-பெண் மூளை அமைப்பை இந்தியாவைத் தவிர 45 நாடுகளுக்கு மேல் நேரடியாக ஆய்வு செய்து எழுதிய ஆலன் & பார்பரா பீஸ் கட்டுரைகளும் , 

மனதில் எண்ணம்


எங்கிருந்து மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படாத ரோண்டா பைரனின் ( Rhonda Byrne - The Secret ) ”ரகசியம்” ( அதன்தொடர்ச்சியாய் வந்த .சக்தி .மாயாஜாலம் போன்ற புத்தகங்கள் ) ஏன் விற்பனையில் சக்கைப் போடு போடுவதையும், 

ஊனமுற்ற மனம்

எங்கள் அம்மாவைத் தொடர்ந்து அப்பாவின் மறைவின் வலியை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் ஊனமுற்ற மனதோடு உலவிக்கொண்டுஇருப்பதுவும் 

என எழுதப் பல விசயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .. 

அதில் ஒன்று திருப்பூரில் எனக்கு இருக்கும் இரண்டு நண்பர்களில் இரண்டாமவர் ராஜதுரை .அவரின் கல்யாணம் பொள்ளாச்சியில் . 


இப்போது இருக்கும் என் கம்பெனியில் அவர் ’சீனியர் மெர்சண்டைசராக’ இருந்தவர் அவர். ஒட்டன்சத்திரம் அருகில்தான் அவருக்குச் சொந்த ஊர்.எதையும் ’டேக் இட் ஈசியாய்’ எடுத்துக்கொள்ளும் கொள்கையுடையவர் அவரை விட அவர் அப்பா மிகச் சுவாரசியமானவர் .விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்ற என் அடுத்த ஜென்ம ஆசையை இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு விவசாயி .அவர்கள் தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் கணக்கன் பட்டி .இரண்டு முறை அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறேன் .முற்றிலும் வேறு தனித்த ஓர் உலகமாகப் படும் இடம் .அங்குச்செல்ஃபோன் எப்போதாவது வேலை செய்யும் .வெகுதூரம் வண்டிப்பாதைதான்.மிகுந்த வயல் பரப்பு மட்டுமே என்பதால் அது நகர மன அழுதத்திலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்ற மிக விடுதலைப் போல உணர்வைத் தரும் இதல்லாமால் அங்குக் காட்டு யானைகள் வந்து போகும் இடம் அவர்கள் தோட்டத்தைப் பலமுறை துவம்சம் செய்துஇருக்கிறது .ஒருமுறை நாங்கள் போன போது அதிகாலை நான்கு மணிக்கு யானையின் பிளிறல் பயமுறுத்த்த்தி இருக்கிறது ! .அவர் அப்பா சுவாரசியமானவர் என்று இங்குச் சொன்னதற்குக் காரணம் வேறு. 

கண்டப் பயலுகச் சகவாசம் !

முதல் முறை ஊருக்கு நண்பர் ஆதியுடன் கண்ணக்கன் பட்டி போயிருந்த போது வீட்டுக்கு அடுத்தச் சாலை வீட்டில் ராஜதுரையும் அவர் அப்பாவும் முழுப்பாட்டிலைக் காலி செய்து கொண்டு இருந்தார்கள் . குடிப்பது தவறுதான் ஆனால் அதை அப்பா ஊற்றித்தர அம்மா கறி சமைத்துத் தட்டில் சுடச் சுட படைப்பதுவும் இது வரை எந்த வீட்டிலும் நான் பார்த்தது இல்லை.இங்கு யார் போனாலும் அவருக்கும் ஒரு கோப்பைக் காத்து இருக்கும் .இதற்கு நண்பரின்அப்பா சொல்லும் கரணம் என்ன தெரியுமா?என்னுடன் அவன் குடிப்பதால் ஒரு பொறுப்பு வருவதாகவும் கண்டப் பயலுகச் சகவாசம் குறைவதாகவும்சொல்கிறார். சரிதான் ! 

பொள்ளாச்சிக்குக் குறைந்தது ஒன்னறை மணி நேரப் பயணம்.போகும் போது படிக்க ஒரு பாலகுமாரன் பழைய அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டேன்.ஒரு வேளை நின்ற படியே பயணம் என்றால் அதற்கு ஹெட்ஃபோன் எடுத்துக்கொண்டு புஷ்பாத் தியேட்டர் நிறுத்தத்தில் மத்திய பேருந்துநிலையம் செல்ல நகரப் பேருந்ததில் ஏற முதல் படியில் கால் வைக்கிறேன் .உள்ளுகுள்ளிருந்து ஒரு கை என் தோளில் அழுத்தமான பிடிக் கவ்வியது.சுதாரிபதற்குள் யாரோ மனிதர் என்னைச் சரித்து விட்டு கீழே இறங்கினார்.உள்ளே ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னைத் தள்ளி விட்டு இறங்கியமனிதர் டாஸ்மாக் அனுதாபி போல !.அரசின் இந்த வருட இலக்கை அடைவதற்கு உதவக் காலை ஏழுமணிக்கே தொடங்கிவிட்டார் போல ! . 

டிக்கெட் எடுத்து விட்டுப் புத்தகத்தை எடுத்தேன் .பாலகுமாரனின் - ”என்றென்றும் அன்புடன்” பல்சுவை மாத இதழில் 1997ல் எழுதிய 155 பக்க நாவல்.பொதுவாகவே பாலாவின் கடிதங்களில் அவர் கையெழுத்துக்குக் கீழ் கற்றுக்கொண்ட இந்த என்றென்றும் அன்புடன் வரிதான் என் எல்லாக்கடிதங்களிலும் பாலாவிடம் கற்றுக்கொண்ட இன்றும் தொடர்கின்றன.ஒருக் கடிதம் முடியும் போது இந்த வசீகராமான வார்த்தையை வெட்கமில்லாமல்காப்பியடிக்கக் கற்றுக்கொண்டேன் நான் .அப்போதெல்லாம் என்னைப் பாலகுமாரனின் நிழல்போல நினைத்துக்கொண்ட காலம் ! அவர் எழுத்தை மறுபேச்சிலாமல் பின்பற்றும் தருணங்கள் அவை.இப்போது மீண்டும் அந்த நாவலைப் படிக்கிறேன்.அவரே அந்த நாவல் தன் சொந்தக் கதை என்பதாகச்சொல்லியிருப்பார். 

அடங்காத வெறி !
அந்தக் கதை சொன்ன இரண்டு விசயத்தை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது .ஒன்று அவர் இரண்டாவது மனைவியை வீட்டுக்குள் கொண்டுவர எழுதும் கதைக் கோணத்தில் தன்னைத் தன் புத்தியைப் பல கோணத்தில் ஆய்வு செய்துகொண்ட நுட்பம்.(எனக்கு இந்தப் புத்தகம் எப்படி அப்போதுபுரிந்தது என்பது ஆச்சர்யமக இருக்கிறது ) அடுத்தது அவருக்கு இருந்த ராஜராஜசோழனின் வாழ்வில் மேல் இருந்த அடங்காத வெறி ! அதுவே 2010 ல் ஆறுபாகம் கொண்ட 2733 உடையார் நாவலின் ஆணிவேர் இதைத் தினமலர் இணைய இதழில் அவரே சொல்லியிருக்கிறார்


கேள்வி : சோழதேசம் மீது ஏன் இந்தப் பாசம்? 
பாலகுமாரன் பதில்”உண்மைதான். அதுக்குக் காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுனத் தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தினநிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான்ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்தக் கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழதேசத்தின் மீது எனக்குக் காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களைத் தேட ஆரம்பிச்சேன்.சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவுப் பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறதுக் காதல்அல்ல...வெறி!” 
பாதி நாவல் படிப்பதற்குள் பொள்ளாச்சி வந்து விட்டேன். 


அப்போதுதான் ஓர் ஆர்வக்கோளாரில் ராஜதுரைக் கல்யாணப் பத்திரிக்கை வைக்கிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று வசனம் பேசியதன்பிரச்சனையைச் சந்தித்தேன் மண்டபத்தின் பெயர் என்ன எங்கு இருக்கிறது ? மாப்பிள்ளைக்கே தொடர்புக் கொண்டேன்.மறுமுனையின் மாப்பிள்ளைத் தோழர்ச் சரோ பேசினார் .தொழிற்பேட்டை அருகே உள்ள சரோஜினித் திருமண மஹால் எனக் கேளுங்கள் நடந்து வந்து விடலாம் என்றார்.எதற்கும்கேட்போம் என்று அருகிலிருந்த பேருந்து நடத்துனரைக் கேட்டேன் .எந்தத் தொழிற்பேட்டை உடுமலைப்பேட்டை சாலையில் இருப்பதா என்று பதிலுக்குப்பயமுறுத்தினார்.விவரம் சொன்னேன் .அதுவா அது உடுமலைச் சாலையில் மின்நகரம் நிறுத்தம் என்று கேளுங்கள் என்றார் .நடந்து போகலாமா என்றஎன்னைப்பார்த்துச் சிரித்தார்.மூன்றுக் கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டுதல் இருக்கா ? .அது சரி . சத்தமில்லாமல் நகரப் பேருந்தில்ஏறினேன்.மின்நகரம் தாண்டியும் நடத்துனர் எதுவும் பேசவில்லை .சந்தேகப்பட்டுக் கேட்டதற்கு அடுத்தம் நிறுத்தம் என்றார்.மண்டபம் பேரையேகாணோம்.அதற்குப் பதிலாக வால் புட்டிப் பெயிண்ட் விளம்பரம் மட்டுமே பெரிதாக இருந்தது .

பெண் தனியார் பள்ளியில் ஆசிரியை என்பதால் கல்யாண மண்டபதிற்குப் பதிலாகப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து விட்ட உணர்வு வரவைத்துவிட்டார்கள் . சமீபத்திய தீபாவளி வெளியீடு ஆடைகள் புது மடிப்புக் கலையாமல் ஆசிரியைகள் வலம் வந்தார்கள் . மாப்பிள்ளை ராஜதுரையுடன் படம்எடுத்துக்கொள்ள மேடையேறியப் போது என்னைப் பெண்ணிடம் இவர் என் அப்பா மாதிரி என்றார்.அதற்கு அவர்கள் என்ன வயசு குறைவா தெரியுது என்றார் .அதற்கு என்ன பதில் சொன்னார்த் தெரியவில்லை ! 

அங்கு வந்த இன்னும் சில நண்பர்களுடன் சாப்பிடப் போனோம் . அங்குச் சில ஆசிரியர்கள் மாணவர்கள் .வயது மூத்தவர்கள் விரல் விட்டுஎண்ணிவிடலாம்.இளமைப்பட்டாலம் எங்கும் நிறைந்து இருந்தது.எதுச் சொன்னாலும் க்ளு க்ளுக் என்ற சிரிப்பு வெடிகள் அமர்க்களப்பட்டது.மொத்தம் 50இருக்கைகள் மட்டுமே இருந்ததால் ஏற்கனவே சாப்பிட்டவர்கள் இலை எடுப்பதற்குள் உட்கார வேண்டிய நிர்பந்தம். 
அங்கு சில ஆசிரியைகள் நான் பார்த்த உடனே இவர் அறிவியல் பாடம் எடுப்பவர் இவர் கணக்குப் பாடம் எடுப்பவர் இவர் வரலாறுப் பாடம் எடுப்பவர்என்றதும் உடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நண்பர் எப்படிச் சொல்கிறீர்கள் என்றார் ஆச்சர்யத்துடன் . காரணம் சொன்னதும் சாப்பிட்ட உணவு மண்டையில் புறையேறச் சிரித்தார். 

விடைபெற்றுப் பேருந்து ஏறியதுவும் மீண்டும் என்றென்றும் அன்புடன் பயணம் தொடர்ந்தது. வீடு வந்துதான் முற்றியது. 

அந்த நாவலில் வரும் ராகவனும் நானும் சில விசயத்தில் ஒரே குணம் போலத் தோன்றியது .ஆமாம் .இதுதானே பாலகுமாரன் வெற்றி. 

திங்கள், 12 அக்டோபர், 2015

பிஞ்சுக்கால்களின் முள் பயணங்கள் !



குழந்தைகளுக்குத் தவறான விசயங்களைக் கற்பிப்பதில் நம்மைவிடவும் புத்திசாலிகள் யாரும் இருக்க முடியாது .பால் குடி மாறாத போதே பள்ளிச்சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்பி வைத்துக் கொள்கிறோம். வயசு மூன்றரை வருகிறதோ இல்லையோ விஜயதசமிக்கு “ அ “ போட, அழைத்துக் கொண்டு போய் அடைத்து விடுகிறோம்.அப்புறம் தொடர் ஓட்டம் ... முதலில் நல்ல மார்க் எடுத்தால்போதும் என்போம் .பிறகு வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்போம் அப்புறம் மாவட்ட ,மாநில அளவில் இப்படியே விக்கிரமாத்தியன் கதை போல  கட்டளைகள் நீண்டு கொண்டே போகிறது  அவர்களுக்குக் கொடுத்து அனுப்பும் மதியம் உணவை அமுக்கி அனுப்புவதை விட அவர்கள் புத்திக்குள் வழிய வழிய ஏன் வழிந்து வந்த பிறகும்அமுக்கிக் கொண்டு இருக்கிறோம் கேட்டால் நாங்கள் கஷ்டப்பட்டோம் எங்கள் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற புலம்பல் அதோடு மட்டுமில்லைஇன்னொரு பகவத்கீதைப் போல நாங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம் அவனைப் படிக்க மட்டும்தானே சொல்லுகிறோம் என்ற புலம்பல்பட்டியல் நீள்கிறது ..பெற்றோர்களை உங்கள் படிப்பு என்ன என்றால் மூனாம் கிளாஸ் என்கிறார்கள் .உங்களைப்போல நிறம் இருக்க வேண்டும் ,கலர் இருக்க வேண்டும் ,பல்லு மூக்கு எல்லம் அப்படியே இருந்தால் சந்தோசப்படுவீர்கள் ஆனால் அறிவின் வளர்ச்சியில் ஐன்ஸ்டீன் போல இருக்க வேண்டும் என்றால் அந்தக் குழந்தை என்ன செய்வான் ?அப்படியே பார்த்தால் கூட ஐன்ஸ்டீன் கூடப் பள்ளியிலிருந்து ‘எதற்கும் லாயக்கில்லாத பிள்ளை’ என்றுவெளியேற்றப்பட்டவர்.

நண்பர் சுகுமாரிடம் பேசிக்கொண்டு இருந்த போது , நாம் பிள்ளைகளாக இருந்துதான் பெரியவர்கள் ஆனோம் .இது நாம் பெற்றோர் ஆன பிறகு  அடிக்கடி மறந்து போகிறது .குழந்தைளுக்குன்னு ஒரு உலகம் இருக்கு அதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது .நாமெல்லாம் முடிந்த அளவுக்கு படித்தோம் இப்போ நாமும் ஒரு இடத்தில் இல்லையா ? அவர்களை தொந்தரவு படுத்தாமல் விட்டாலே அவன் வழியை தேர்வு செய்து விடுவார்கள். அப்போது போய் உதவினால் போதும்  என்றார். அது மிகவும் சரிதானே ?  இப்படி நாம் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மன அழுத்தம் கொடுக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போனால்  பின்னாளில் புதுவித நோயாளிகளாக இந்த சமூகத்தில் வலம் வருவார்கள் அவ்வளவுதான் நடக்கும் !

மதிப்பெண் பட்டியலில் ரேங்க் பார்த்துக் கையெழுத்தும் போடும் நாம் பையன் ஒழுக்கம் பற்றியோ ,உடல் நலம் பற்றியோ. என்றாவது அதில் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று கவலைப்பட்டு இருப்போமா ? சக மாணவர்களுடன் அவர்கள்  வைத்து இருக்கும் நட்புணர்வு எப்படி இருக்கிறது என்று என்றாவது பார்த்து இருப்போமா ? அவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் , எப்படி விளையாட வேண்டும் ,விளையாட்டில் அவர்கள் விருப்பம் எது ? எதாவது தெரியுமா ? நம் வீட்டில் ஒரு புது ஜீவன் வளர்கிறது ஆனால் அதற்கு அதன் விருப்பம் எது என்று தெரியாமல்.இது நல்லதா ?நம் காரணங்களை அவர்கள் மேல் திணித்து எதிர்மறை எண்ணங்களின் விதைகளை அவர்களுக்குள் ஆழமாக விதைப்பதன் மூலம் வாழ்வே கஷ்டம் என்ற மன உணர்விலேயே அவர்கள் முள் செடியாய் வளர்வது அழகா?

இது பத்தாதுன்னு இப்போது இன்னொரு அபாயம் பரவி வருகிறது யோகா என்ற பெயரைச் சொல்லித் தனியார் பள்ளிகளில் மிகப்பெரிய ஸ்டால் போடாத குறையாகக் கூவிக் கூவி வியாபாரம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். ஆயிரம்கொடு ,ஐநூறு கொடு என்று பிள்ளைகளை  நச்சத் தயார் செய்து அனுப்பிவைக்கிறார்கள்  .

போன வாரம் என் பையன் இப்படித்தான் யோகாவுக்கு நான் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறேன் .வெளியில் போட்டி வைத்து இருக்கிறார்கள் பணம் வேண்டும் என்றான் நாழாவது படிக்கும் என் பையன் பள்ளியில் பணம் கட்டப் போனால், பணத்தை வாங்கிய பிறகு  இந்த போட்டிக்கும்  எங்களுக்கும் எந்தச் சம்ப்ந்தமும் இல்லை.நீங்கள்தான் ஞாயிற்றுக்கிழமைக் குறிப்பிட்ட இடத்திற்குக் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றார்கள்.

போட்டி நடக்கும் இடத்திற்கு  பையனைக் கூட்டிப் போனால் எந்த ஒரு சரியான நிர்வாக ஒருக்கிணைப்பும் இல்லை . ஒரே கும்பல் மொச்சுகிறது கும்பலுக்கிடையில் மூன்று மேடை அதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை ஒரு மேடை .நான்கு முதல் எட்டாம் வகுப்பு , அடுத்து ஒன்பது முதல் பனிரெண்ட்டாம் வகுப்புவரை . ஒவ்வொருமேடையிலும் மூன்று நடுவர்கள் கையில் மதிப்பெண் போட்ட பிரிண்ட்டடுப் பேப்பரை நடுவர்கள்  தங்கள் மதிப்பெண்ணைத் தூக்கிக்காட்டுவார்கள் பக்கவாட்டில் அவர்கள் ஜூனியர்கள் ( மாஸ்ட்டர்களின் மாணவர்கள் ) குறித்துக் கொள்வார்கள் .மேடையை விட்டு இறங்கியவுடன் ஒரு மெடல் ,சான்றிதல் தருவார்கள்  வாங்கிய பணத்துக்கு மனசாட்சிக்கு பதில் சொல்ல ஆறில் ஒரு பங்குச் செலவுசெய்து விட்டார்கள் .தேர்வு செய்யப்பட்டவர்கள் பின்னர் அழைக்கப்படுவார்கள் என்றார்கள் ( ஒரு வேளை விவேக் பாணியில் ’பின்னே காணும்’ என்பது போலவா? தெரியவில்லை  )

யோகா என்ற பெயரில் யோகா மாஸ்டர்கள் அசோசியேசன் மற்றும் பள்ளிகள் மூலம் ’அன்கோ’ போட்டு யோகாவை வளர்ப்பதாக சொல்லி அவர்கள்தான்  அமோகமாக வளர்கிறார்கள் அதன் மூலம் வரும் தொகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இது பற்றி எனது பையனுக்குப் பிரத்தியோக யோகா வகுப்பு எடுக்கும் ஆசிரியரைக் கேட்டேன் . அது ஏமாற்று வேலை சார் .சம்பாதிக்க இது ஒரு புதுவழி .இனி இதெல்லாம் நம்பிப் பசங்களைக் கூட்டிட்டுப்போய்த் தான் தேர்வு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தை விதைக்காதீர்கள் என்று எச்சரித்தார் . (அவரும் அந்த அசோசியேசனில் ஒரு முக்கிய உறுபினர்தான்)

சரி அப்படியானால் யோகா வேண்டாமா என்ற உங்கள் கேள்விக்கு  ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதிலைப் படித்தேன்  இந்த மாதிரி விசப்பரிட்சைகளைத் தவிர்க்க இதை தெரிந்து கொள்ள வேண்டும் . ( நமது வாழ்வில் யோகா என்ன செய்கிறது என்பதான கேள்விக்கு அற்புதமான ஒரு புத்தகம் படித்து வருகிறேன் - விரைவில் அதையும் பதிவு செய்ய வேண்டும் )

கேள்வி: குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொடுக்கலாம்?


சத்குரு: எட்டு, ஒன்பது வயது வரை நாங்கள் குழந்தைகளுக்கு ஆசனங்கள் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்குப் பதினான்கு, பதினைந்துவயது ஆகும் வரை நாம் எல்லா ஆசனங்களையும் கற்றுக் கொடுப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு எல்லாயோகாசனங்களையும் கற்றுத் தருகிறார்கள். பத்மாசனம் போன்ற ஆசனங்களையெல்லாம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எலும்புகள் இன்னும்வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கற்றுக் கொடுத்தால், அவர்களுடைய கால்கள் வளைந்து போவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் அதையெல்லாம்கற்றுக் கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆக வேண்டும். அவர்களுடைய எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைய வேண்டும்.அதன்பின்தான், அவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஈஷா யோகாப் பயிற்சி வகுப்பை நாம் ஏழிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தினாலும், அதில் கற்றுத் தரப்படும் ஒன்றிரண்டு ஆசனங்கள் மிக, மிகஎளிமையானவை. ஆனால் உங்கள் குழந்தைகள் யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எல்லாஆசனங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தால், அவர்கள் வளைந்த கால்களுடன், சிதைந்த மூட்டுகளை உடையவர்களாக ஆகிவிடலாம். ஏனென்றால்குழந்தைகளுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்துக் கொண்டும், உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. அந்தச் சமயத்தில் அவற்றின் மேல் அதிகமானஅழுத்தம் கொடுத்தால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
( http://tamilblog.ishafoundation.org/kundaliniyai-parisothikka-ninaithal/)


சனி, 10 அக்டோபர், 2015

மருத்துவமனைகளும் இன்னொரு ஆலயங்களே !



ரொட்டித்துண்டு 5 ரூபாய் !

பிரசவ வலியுடன் தவித்த மனைவியை இரவு பத்து மணிக்கு மேல் அவசர அவசரமாக அப்போதைக்குக் கிடைத்த ஆம்னி வேனில் அழைத்துகொண்டு அந்தத் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ( ஈ.எஸ்.ஐ - Employees' state Insurance Corporation of India ) நோக்கிப் போய்க்கொண்டு இருந்தோம்.மனைவியுடன் வந்த பாட்டி பனிக்குடத்திலிருந்து நீர் வரத்தொடங்கி விட்டது கொஞ்சம் வேகமாகப் போங்கள் என்று எச்சரிக்க இன்னும் வேகமெடுத்தோம் .ஆம்னி வேன் ஓட்டுனர் ஐம்பது வயதைக் கடந்தவர் என்பதால் வேறு எதுவும் சொல்ல எனக்குத் தோணவில்லை.புரிந்து கொண்டு செயல்பட்டார். 

பனிரெண்டு மணிச் சுமாருக்கு மருத்துவமனைப் போய் விட்டோம் .பதிவுச் சீட்டு வாங்கி வரச்சொன்னார்கள் .ஓடினோம் .பதிவுச் செய்யும் அறைக்குப் போகும் வாசல் கதவு மூடியிருந்தது.தட்டியபோது ’கோன் ‘ என்று ஹிந்தியில்  அதட்டலாய் ஒரு குரல் வந்தது.நல்ல வேளை என்னுடன் வந்த நண்பனுக்கு ஹிந்தி மாலத்தெரிந்ததால், சமாளித்துப் பதிவு செய்து அங்கிருந்துத் தப்பித்து மருத்துவமனைக்குள் ஓடவும்,எதிரே பாட்டி வரவும் சரியாக இருந்தது ... 

இங்கு  இரவுப் பணிக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்காங்களாம்.அதனால் அவசரமாப் பார்க்கணுன்னா அரசுப் பொது மருத்துவமனைக்கு எழுதிக் கொடுக்கிறார்களாம் அதுவும் உடனே அறுவைச் சிகிச்சைக்குச் சம்மத்தித்தால் எழுதிக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள் என்ன செய்யலாம் ?என்று பதஷ்டமாய்க் கேட்டார்கள் மனைவியின் பாட்டி தர்மாம்பாள். அவர்கள் பேத்திமார்க்களோடு சேர்த்து நூற்றுக்கு மேற்பட்ட சுகப் பிரசவம் ஆவதற்குத் துணைப் போனவர்கள் .அதுமட்டுமல்ல வேறு வழியில்லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களின் அவஸ்தை நன்கு உணர்ந்தவர்கள் .எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களிடமே ,என்ன செய்யலாம் என்றேன் .கொஞ்ச நேரம் பார்ப்போம் அவள் தைரியமா ( மனைவி ) இருக்கா,ஒரு வேளை வலி வந்தால் எழுதி வாங்கிட்டுப் போயிறலாம் ஆனால் அதற்குள் பக்கத்தில் கார் எதுவும் இருக்கான்னுப் பார்த்து வைக்கச் சொன்னார்கள். ( தர்மாம்பாள் பாட்டி பற்றிய இன்னொரு பதிவு http://myowndebate.blogspot.in/2013/03/blog-post_9.html இருக்கிறது. )

இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் வெளுத்தும் வாங்கும் காற்றும் ,அது இல்லாத வேளையில் தாக்கும் கொசுக் கூட்டதிற்குப் பதில் சொல்லுவதிலேயும் நேரம் கரைந்து கொண்டு இருந்தது .பாவம் . கூட வந்த நண்பன் சங்கர்தான் , அங்குக் கிடந்த ஏதோ ஒரு செய்தித் தாளை விரித்துச் சுருண்டுப் படுத்துக் கிடந்தான்.அலுவலகத்தில் அவனோடு சண்டை நிறைய இருக்கும் .ஆனால் தூங்கும் போது யாரைப்பார்த்தாலும் பாவமாக இருக்கத்தான் செய்கிறது .காலை ஆறு மணிக்குள் மூன்று முறைப் பாட்டி வெளியே வந்து உள்ளே வேலைப் பார்ப்பவர்களுக்காகக் காஃபி வாங்கிவரச் சொன்னார்கள்.அப்போதெல்லாம் மனைவி பற்றி விசாரித்தபோது  தூங்கிக் கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். 

காலை 10:20 க்கு குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம் .அந்தச் சந்தோசம் ஒரு நாள் நீடித்தது .அடுத்த நாள் மதியம் வரை குழந்தைச் சிறுநீர்க் கழிக்கவில்லை செக்கப் வந்த மருத்துவரிடம் எதேச்சையாகக் கேட்டப் போது இதை ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டார்.அடுத்த நிமிடம் இன்குபேட்டரில் வைக்கச்சொல்லி எழுதிக் கொடுத்தார்கள்.இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பு இல்லை என்று எழுதி நிரப்பிய ஃபாரத்தில்  கையெழுத்துக் கேட்ட போது, வலியோடு போட்டேன் .

அடுத்த நாள் காலை திருப்பூர் வந்து ,மருத்துவமனை  கொஞ்சம் தாமதமாகப் போக, மனைவிக்குப் பாத்ரூம் போகத்தரும் வெண்ணீருக்காக இருபது ரூபாய்ப் பணம் கேட்டு இருக்கிறார்கள் அங்கு பணிபுரிபவர்கள் .சில்லறை இல்லை என்று சொன்னதற்காகத் திட்டிவிட்டு, பிரசவமானவர்களுக்குத் தரும் கோதுமை ரொட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டர்களாம் . 

ஆண்டொன்றுக்கு ஈ.எஸ்.ஐ தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் மொத்தக் காப்பீட்டுத் தொகை வருமானம் 14,000 கோடியாம் .

ஆனால் ஒரு ரொட்டித்துண்டு 5 ரூபாய்

மருத்துவச் சேவைப் புரிபவர்கள் !

கடந்த வாரம் சனிக்கிழமை மாமானார் ( மனைவியின் தந்தை ) ஒரு சாலையில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டதால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.எனக்கு இந்த விசயம் சொன்னவுடன் நான் விசாரித்த அளவில் அந்த மருத்துவமனை சிகிச்சைப் பார்ப்பதை விட  மிக மோசமாகவும் பில்லை போடுவதில் மட்டும் கவனம் கொள்பவர்கள் என அறிந்து முதலுதவியோடு வெளியே வந்து குடும்ப மருத்துவரிடம் போன போது ,அடிபட்டப் போது மூன்று முறை வாந்தி எடுத்தார் எனச் சொன்னதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் நல்லது. அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் இரவு பிரச்சனை ஏற்பட்டால் எப்படிச் சமாளிக்க முடியும் என்றார் .உடனே அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப் போனோம் அங்கு உடனே பார்க்க முடியாது வேண்டுமானால் எழுதி வாங்கிக் கொண்டு கோவைச் செல்லுங்கள் என்றார்கள் ஏற்கனவே இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது .இங்கே பார்த்துக் கொள்கிறோம் .என்று சேர்த்தோம் . 

காலைதான் தெரிந்தது. ஞாயிறு ஸ்கேன் எடுக்கமாட்டார்களாம் .விடுமுறையாம். காத்து இருந்தோம் அடுத்த நாள் காலை ஸ்கேன் எடுக்கப்பட்டது .அதை வார்டுக்கு வரும் மருத்துவரிடம் கேட்டப் போது பொறுங்கள் இதற்கு வேறு ஒரு மருத்துவர் வருவார் என்று கழற்றிக்கொண்டார் அங்கு இருந்த நர்ஸ்களிடம் கேட்டப் போது வருவார் காத்து இருங்கள் என்றனர் அவர்களும்.  கடவுளைக் கேட்டால்கூடச் சொல்லியிருப்பார்கள் போல ! ஆனால் நடந்தது வேறு .அந்த நாள் மட்டுமல்ல அடுத்த நாள்  மதியம் வரை கூட யாரும் வரவில்லை .வேறு வழியில்லை டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு ,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கிளம்பினோம். 

அரசு மருத்துவமனை வராண்டா விட்டு  வெளியே வரும்போது அங்கு ஒரு அறிவிப்பைப் பார்த்தேன் “ மருத்துவமனைப் பாதுகாப்புத் தண்டனைச் சட்டம் எண் 48/2008ன் படி, அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைப் புரிபவர்களுக்குக் காயம் ஏற்படுத்துதல், உடல், உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல், பணிச் செய்ய விடாமல் தடுப்பது, சொத்துகளுக்குச் சேதம் உண்டாக்குதல் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் ” 

அப்படியானால் நோயாளிக்கு யார் பாதுகாப்பும் இல்லையா ? 

இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ! 

எனக்கு ஒரு சமயம் சிறுநீர்த் தொற்று ( urinary infection ) ஏற்பட்டுவிட்டது .கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் முதலில் உடல் சூட்டினால் வந்ததாகக் கவனமில்லாமல் இருந்து உடல் சோர்வு மற்றும் குறையாத காய்சல் அதிகரிக்கவும் சந்தேகம் வலுக்கவே ஒட்டன்சத்திரம் - அம்பிளிக்கையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் அனுமதிக்கப்பட்டேன் . வழக்கம்போல ரத்த அழுத்தம் ,ரத்தம் மற்றும் சிறுநீர்ச் சோதனைக்கு அப்புறம் பிரத்தியோக மருத்துவரிடம் அனுப்பினார்கள் .அவர் உடனே பெட்டில் சேரச் சொன்னார்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைச் சிறுநீர்ப் பரிசோதனை நடந்ததது .காய்ச்சல் நின்றபாடில்லை. இரவு அப்பாதான் கூட இருந்தார் எனக்கு நடக்கும் தொடர்ச் சோதனை மற்றும் குறையாத காய்ச்சலால் லேசாய் அப்பாவுக்குப் பயம் வரத் தொடங்கி விட்டது . 

காலை வந்த முதல் வேளையாக என் அறைக்கு வந்து மீண்டும் பரிசோதித்த மருத்துவர் முற்றிலுமாக அனைத்து மருந்துகளையும் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார். மதியத்திற்குள் மூன்று முறை என்னை நேரில் அவரே வந்து சோதித்தார் .அவர் முகத்தில் ஏதோ ஒரு கேள்வி இருந்தது .அப்பா அவரிடம் கேட்டே விட்டார்.சார் என்ன பிரச்சனை என்று . ஒரு நிமிடம் அப்பாவின் முகத்தைப் பார்த்த அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் .இந்தத் தொற்றுக்கிருமியால்தன் இந்தப் பாதிப்பு என்பதைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்த அளவு போராடிக்கொண்டு இருக்கிறேன்.நீங்கள் பயப்படாதீர்கள் என்று தோளில் கைவைத்து அப்பாவை பார்த்துச் சொல்லிவிட்டு  , என்னைப்பார்த்தும் பயப்படாதீங்கக் குணமாக்கிடலாம் என்றார் .நர்ஸ்களைக் கூப்பிட்டுச் சில மாத்திரைகளை இருப்பில் இருக்கிறதா எனக் கேட்க்க சொன்னார் .காய்ச்சல் கொஞ்சம் விடைபெற்றது.மெல்ல , மெல்ல  என்னுடைய உடல் உணர்வு  திரும்பத் தொடங்கிவிட்டது . 

மதியம் மூன்று மணி இருக்கும்.திடீரெனெ என்னை வந்து பரிசோதித்தவர் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்  இருந்தது , கையில் எழுதிக் கொண்டு இருந்த பேனாவுடன் அப்படியே வந்து விட்டார் போல ! .நர்ஸ்ஸ்ஸ் என்ற அழைப்பின் அழுத்தத்தில் ஒரு புது உற்சாகம் இருந்தது.என்னைப் பெயரைச் சொல்லி அழைத்து , நீங்க கவலைப்படாதீங்க நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம் என்றார் .அப்பாவிடம் , உங்க மகனுக்கு ஒன்னுமில்லை காலைல நீங்க அழைத்துச் செல்லலாம் என்றார் மீண்டும் . ஏற்கனவே கொடுப்பட்ட மருந்துகள் திருப்பிப் பெற .நர்ஸ்களிடம் உத்தரவிட்டார். அப்பா சந்தோசமானார் .

சொன்ன மாதிரி மதியம் இரண்டு மணிக்கு அறையைக் காலிசெய்துவிட்டு இரண்டரை நாள் சிகிச்சைக்கும் தங்கியிருந்ததற்கும் சேர்த்து ஐந்தாயிரம் பில் கொடுத்தோம். மருத்துவர் அறையில் அப்பாவுடன் போனேன்.சில நாளுக்கும் மட்டும் மாத்திரைக் கொடுத்தார்.சத்தான ஆகாரம் எது என்ற ஒரு பட்டியலைத் தந்தார்.  

விடைப் பெறும்போது சார் இது எதனால் வந்தது என்று அவரிடம்
கேட்டேன் .பதில் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தார் .ஐயா நீங்க ரெண்டு நிமிசம் வெளியே இருங்க என்றார் அப்பா வெளியே போன பிறகு , இது மூன்று காரணத்தால வரும் .தவறான தொடர்பு , பொதுக் கழிவரை உபயோகப்படுத்துவது ,மற்றவர்கள் உபயோகித்த உள் ஆடைகளை உபயோகிப்பது .நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டீர்கள் என்பது உங்களிடம் கேட்க வேண்டும் என்று நிறுத்தினார் .அப்போதுதான் எனக்கு அது ஞாபகத்துக்கு வந்ததது.அலுவலகம் தொடர்பாகப் பலமுறை கோவைச் சென்று வந்தேன் .அப்போது பொதுக்கழிவறை உபயோகித்து இருக்கிறேன்.அதைச் சொன்னதும் இனிமேல் தவிர்த்து விடுங்கள் என்றார் .விடபெற்று வெளியே வந்தோம் . அப்போது எனக்கு உடல் அசதியாக இருந்தது .ஆனால் மனம் இன்னும் சில நம்பிக்கைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது .

அந்த மருத்துவமனையை விட்டு வரவேற்பு அறையைக் கடக்கும் போது அப்பா அங்கு இருந்த ஒரு வாசகத்தை காட்டினார். 

 ” நாங்கள் மருந்தளிக்கிறோம் இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ”. 

சமர்பணம் .

இது எனக்கான அனுபவம் மட்டுமே. எல்லோருக்கும் பொதுவானது அல்ல . எல்லோருக்கும் பொருந்தவும் வாய்ப்பும் இல்லை. மருத்துவம் தொழில் அல்ல சேவை .மருத்துவர்கள் நோயாளிகளின்  வாழ்நாளை அல்லது தலைவிதியை நிர்ணயிக்கும்  இன்னொரு  கடவுளர்கள் .இங்கு வெகு பல மருத்துவர்கள் தனது மருத்துவத் தொழிலைக் கடவுளுக்கு மேலாக மதித்து வருகிறார்கள் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குடும்பத்தின்   பாதத்திற்கும் இந்தப் பதிவு சமர்பணம் .

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

காதலுக்காகக் காதலையே கொடு !



வெகு நாளைகுப் பிறகு மிக நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து ஃபோன் . நாளைக்குத் திருச்சிவரைப் போகவேண்டும் கூட வர முடியுமா ? எனக் கேட்டார் . கேட்ட அவர் குரலில் ஒருவித அயற்சியும் சங்கடமும் கலந்து இருந்தது.எனக்குச் சமீபத்தில் இருக்கும் பொறுப்பு பற்றி அவருக்கும் தெரியும் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்பதில் அவருடன் நான் இருக்க வேண்டிய ஏதோ ஒரு அவசியம் இருக்கிறது .பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்க நினைத்தேன் .ஆனால் உடனே சரி என்று சொல்லிவிட்டு என் வேலைக்குள் மூழ்கிப் போனாலும் வேறு ஏதாவது ஃபோன் வரும்போதெல்லாம் நண்பரிடம் எதற்கும் என்று கேட்டு இருக்கலாம் என்று பல முறை நினைவுகள் கரை மோதும் அலைகள் போல வந்து, வந்து போனது . 

என் நண்பர்கள் இப்படித்தான் .சந்தோசமாய் இருக்கும் போது விடவும் சங்கடமாக அல்லது முடிவெடுக்கும் தயக்கம் இருக்கும் போது என்னுடன் தங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் .அது ஏன் என்பதை எனக்குள் கேட்டுக்கொள்வேன் .ஒரே பதில் அதைத்தான் நானும் விரும்பி இருக்கிறேன் என்பதாக எனக்கு என் மனது சொல்லி விடும் .இது இன்று நேற்று அல்ல 30 வருடமாகத் தொடரும் நட்பு ஊர்வலத்தின் தொடர்ப் பயணம் ... 

      திரைபடத்தில் ’எண்ட் கார்டு’ போட்டது சில நட்புக்கள் வேறு வித சூழ்நிலையால் கரை ஒதுங்கிவிடும் .பல வருடங்களுக்குப் பிறகும் ஏதாவது ஒரு சந்திப்பில் அதே நட்பு ஒரு வித பெருமூச்சுடன் மீண்டும் தத்தித் தத்தியாவது தொடரும்.இப்படித்தான் பல வருட இடைவெளிக்குப் பிறகு கூட என்னை விடச் சில வயது இளைய நண்பன் ஒருவன் ஊர் விட்டு வீடு தேடி வந்தான் .வந்த சில அரைமணிக்குள் வா மேலே போய்ப் பேச வேண்டும் என்றான்.மொட்டை மாடியில் காற்று வாங்க போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுப் போனால் இரவு ஒன்பதுக்குத் தொடங்கிய பேச்சு ஒரு மணிக்கும் மேலும் நீண்டது .

      விசயம் இதுதான் .நண்பணுக்கு நல்ல சம்பாத்யம் .அற்புதமான மனைவி குழந்தைகள் ,நிறைவான வாழ்க்கை .இதெல்லாம் விட ஊரில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் தேடித் தேடிப் பண உதவி செய்பவன். இது அவன் இங்கு என்னைத்தேடி வரும் சில வாரங்களுக்கும் முன்வரை .இப்போது அவனுக்கு ஒரு சிக்கல் யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது இதற்குத் தான் காரணமில்லை என்பதான ஒரு புளுகு மூட்டை என் தோளில் ஏற்றி வைத்தாலும்,இதுத் தவறு என்று அவன் மனதில் உள்ளுணர்வுக் சதா கூக்குரலிட்டு இருக்கிறது.அதனால் அவனுக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள் எனத் தெரிந்து கொள்ள ஜாதகர்கள் ஒருவரிடமல்ல மூவரிடம் போயிருக்கிறான் எல்லோரும் ஒரே மாதிரி அவனுக்கு நடக்கும் தசா மற்றும் புத்திக்குப் பெண்களால் அவமானம் என்ற ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்லியிருக்கிறார்கள் .அந்தப் புயலில் சிக்கிய கப்பல்தான் என் வீட்டு வாசலுக்குக் கரையேற்றி என்னைத் மீண்டும் தேடி வரவைத்து இருக்கிறது .அதனால் நான் அப்படி ஆள்களுக்குக் குறிச் சொல்லுபவனோ குடுக் குடுப்பை ஆட்டும் ஆள் அல்ல .எல்லாச் செயலுக்கும் விளைவுகள் காத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாதவன்.அது மட்டுமல்ல .எண்ணங்கள் எனபது விதை.யாரோ நினைத்தால் மட்டும் வளர்வதில்லை.செயல்படுத்த முடியாத அதற்குத் திராணியில்லாத பலரின் எண்ணங்களின் கொத்து எவன் கழுத்திலாவது மாலையாக விழுந்து யாரோ ஒருவனை மேடையேற்றி வேடிக்கப் பார்க்கும்! 

நாம் இப்படி இருக்கப் பல பேரின் நல்ல எண்ணமும் அதற்கு எதிரான எண்ணமுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. என்பதால் அவன் பேசியதைக் கேட்டு விட்டு நான் சொன்னச் சில ஆலோசனைகளை அவன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை .என் நோக்கமும் அதுதான். எது அவனுக்குச் சரி என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.சொல்லிவிட்டேன்.கேட்பது அவன் சொந்த விசயமே ! இதில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவன் வாரம் ஒருமுறை போனில் பேசுகிறான் .தொடர்பு மீண்டுள்ளது. 

சரி திருச்சி விசயம்...

அடுத்த நாள் நண்பருடன் திருச்சி .போகும் போதும் எதற்கு போகிறோம் என்று அப்போதும் அவர் எதுவும் சொல்லவில்லை.நிறைய புத்தகங்களைப் பற்றிப் பேசினோம்.திரைப்படங்கள் ,சமீபத்திய வலைப்பூ பற்றிக்கூட பேசினோம் .ஆனால் எங்கு போகிறோம் என்பது மட்டும் சஸ்பென்ஷாக நீண்டுகொண்டே போனது .ஆனால் அவர் தூக்கம் வருகிறது என்று திருச்சிக்கு சென்றைடையும் அரை மணி நேரம் முன்பு தூங்க துவங்கி விட்டார்.அப்போது அவர் இத்தனை நேரம் பேசிய பேச்சுக்களில் பொதுவான ஒரு ஒற்றுமை  இருந்தது உணர்ந்தேன் .அது மிகவும் எதிர்மறையான அதே சமயம் காதல் தோல்விகள் பற்றி இருந்தது.


மதியம் ஒரு மணி திருச்சி வந்துவிட்டது .மன்னிக்கவும் .நாங்கள்

திருச்சிக்கு வந்து விட்டோம்.அவரை மெல்ல எழுப்பினேன். இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடம் பயணித்து ,ஒரு வீட்டு முன் வண்டி நின்றது. வாசலில் நிறைய இரண்டு சக்கர வாகனங்களும் கார்களும் நின்று இருந்தன .சில சேர்களில் உதிறிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் .ஹோட்டல் ஆட்டோ ஒன்று மதிய உணவு இறக்கிக் கொண்டு இருந்தது.ரசம் வாசனை லேசாய் சுண்டி இழுத்தது.நண்பர் தயங்கி தயங்கி முன் சென்றார்.நிறைய செருப்புகள் வாசலை நிறைத்து இருந்தன.சின்ன வயது பிள்ளைகள் துரத்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள் வழக்கம் போல பெரியவர்களின் அதட்டலோடு.


             நண்பர் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.பெரியவர் ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்தவருக்கு விடைக் கொடுத்து விட்டு,எங்களைப் பார்த்துத் திரும்பி, நண்பரை உற்றுப் பார்த்து நீங்க...என்று லேசாய் இழுத்தார்.நண்பர்த் தன் அண்ணன் பெயரைச் சொன்னார்.உடனே பெரியவர் முகம் பிரகாசம் ஆகி .அடடே நீங்களா என்று கைகளைப் பிடித்தார்.அடுத்த சில நொடிகளில் அவர் முகம் சோகம் தொற்றிக்கொண்டதைக் கவனித்தேன்.உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு வாங்க என்றார்.நண்பர் என்னைப்பார்த்து .இவர் சாந்தி அப்பா என்றார் நண்பர் .நான் யார் சாந்தி என்று யோசித்துக் கொண்டே அவருக்கு வணக்கம் சொன்னேன்.எனக்கும் வணக்கம் சொன்னவர் நண்பரைப் பார்த்துக் கூட்டிடு .உள்ளே போங்க என்றார் மீண்டும். 

வாசலைக் கடந்தவுடன் பெரிய ஹால் வரவேற்றது .அங்கும் பல பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் .ஆச்சர்யமாய் மெல்லப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஹாலின் மையப்பகுதியைக் கவனித்தேன். ஒரு டீபாய் போன்ற மேசையில் துணி விரித்து அதன் மேல் ஒரு ஆணின் போட்டோ வைத்துப் பெரிய மாலைப் போட்டு ,அதற்கு முன் இரண்டு விளக்கும் ,ஒரு விபூதித் தட்டும் இருந்தது.போட்டோவில் அந்த நபர் அல்லது உருவம் சிரித்துக்கொண்டு இருந்தது.

எங்கள் இருவரையும் அங்கு இருந்த சில பெண்கள் யார் என்பது போலப் பார்த்தார்கள்.நண்பர்ப் போட்டோவையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.நான் மெல்லச் சுவற்றின் மற்றொரு பெரிய குடும்பப் போட்டோவைப் பார்த்தேன் .அதில் இங்குச் சிரித்துக் கொண்டு இருக்கும் மனிதரும் அவரோடு அந்த ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன்.எங்கே ?எனது ந்யுரான்கள் சாந்தி என்ற பெயரோடு பல முகம் தெரியாதவர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டு இருந்தது. 

அப்போது, எங்களுக்குப் பின்னால் இருந்து வாங்க என்று நண்பர் பெயரைச் சொல்லி அழைத்த பெண் குரலைப் பார்க்கத் திரும்பினேன். 
இந்தப் பெண் ,இந்த முகம், சாந்தி . 
எஸ். 
நண்பரின் காதலி. 
அந்தக் குடும்பப் போட்டோவில் இருக்கும் பெண் இவள்தான் .அப்படியானால் அவள் கணவர் இறந்து விட்டார். 

எனக்கு உள்ளே சொரேர் என்று ஒரு கத்தி இறங்கியது போல இருந்தது !

சுமார் 15 வருடம் இருக்கும் .சாந்தியை நண்பரின் அண்ணன் வீட்டு விசேசத்தில் அண்ணிக்கு நட்பான இந்தச் சாந்தியைப் பார்த்த நண்பரின் அம்மா உடனே பிடித்துப்போக இந்தச் சாந்தியைப் வீட்டுக்கு அழைத்து விருப்பம் நண்பருக்குத் திருமணம் செய்யும் தன் ஆசையைச் சொன்னார்கள்.அவர்கள் வீட்டில் நண்பரின் அண்ணி இதை நேரில் தெரிவித்தபோது அப்பா உடனே சம்மதித்தார்,அம்மா மெல்லத் தயங்கினார்.அம்மாத் தயங்கியதன் காரணம் எதுவெனெ அப்போது புரிந்து இருந்தால் சாந்திக்கும் நண்பருக்குமிடையே காதல் என்ற ஒரு மாயவலைப் பின்னப்படாமலேயே போயிருக்கும். 
வீட்டின் சம்மதத்தோடு இருவருமே காதல் காதல் யாத்திரைத் துவங்கி விட்டார்கள் .எங்கள் நண்பர்கள் சிலர் அப்போது காதலித்து இருந்தாலும் திருமணம் வரை போகும் நிச்சயக்காதல் என்று நண்பரின் காதலை நாங்கள் பெருமையாகக் கொண்டாடுவோம். 

ஆனால் நண்பருக்கு வெளியூரில் வேலை மாற்றம் ஆனப் பிறகும் அந்தக் காதல் சில ஆண்டுகள்தான் வெகு ஆரோக்கியமாகப் பூவும் பிஞ்சுமாக நீடித்தது.ஆனால் சாந்தியின் தாய் மாமன் என்ற புயல் ஒன்று குறுக்கே வந்து கலைத்துப்போடும் வரைதான் அது நீடித்தது. 
சாந்தியின் அம்மாவின் உடன் பிறந்த சகோதரன்தான் இப்போது நடுவீட்டில் சிரித்த போட்டோவாகிப் போன தாய்மாமன் ராஜா.பெயருக்கேற்றார் போல ராஜாவாகச் சுற்றினார்ப் பத்தாததற்கு நல்ல சம்பாத்யம் .ரியல் எஸ்டேட்,ஹோட்டல் எனப் பணம் குவிந்துகொண்டு இருந்தது .ஆனால் சாந்தி வீடு விவசாயம் .பெரிய வசதியில்லை .அதனால் தனது தம்பியைக் கட்டிவைத்தால் தனது மூத்த பெண் நல்லா வாழ்வாள் என்ற எல்லாத் தாய்மாரின் கனவுச் சாந்தியின் அம்மாவுக்கு இருந்தது.சாந்தியின் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும்.விருப்பமில்லை.அவர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார்.காரணம் ராஜாச் சின்ன வயதிலேயே சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்ததால் அவனை வெற்றி மிதப்புக் குடிப்பழக்கத்தில் தள்ளியிருந்தது.அதுவும் பந்தயம் கட்டி ஒரு ஃபுல் பாட்டிலை எவ்வளவு சீக்கிரம் ’ராவா’ (எதுவும் கலக்காமல்) குடிக்கிறேன் என்று போட்டிப் போட்டு ஜெயிப்பவன் ராஜா.இளம் வயதில் காசு சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் நிறையப் பேரின் நிலை இப்படித்தனோ? 

      சாந்தியின் அம்மாவுக்கு அந்தக் காதல் வலுவான அடித்தளம் போட்டு வருவதை லேசாய்க் கண்டித்து வந்தார் .சாந்தி உறுதியாய் இருந்தாள்
நண்பர் வெளியூரில் இருந்ததும்,சில விசேசங்களில் ஒன்று கூடிப் பேசிச் சில திட்டங்கள் தீட்டித் தம்பியை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பதுவும் ,பழக வைத்தார் சாந்தி அம்மா .ராஜா நிறையச் செலவுச் செய்தான் .அதுவும் குறிப்பாய்ச் சாந்திக்கு . ஆரம்பத்தில் வேண்டாம் என மறுத்த சாந்தி அம்மாவின் சொந்தம் என்பதுவும் ,சாதாரண வீட்டுச் சூழலில் வளர்ந்துவிட்டு நிறையச் செலவு செய்து, தாய் மாமன் ,புடவை ,நகை என அடுக்கியதில் அதை அன்பாகப் புரிந்துக் கொண்டாள் .மெல்ல அவள் மனதில் அவள் அம்மா நினைத்த நீரூற்றுப் பெருகத் தொடங்கியது..ஒருப் பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது அப்போது எங்களுக்குப் புரியவைத்தது சாந்தி அம்மாதான் 
       இதைச் சாந்தியே நண்பருக்குக் கடிதமாக எழுத ,நண்பர் மனதளவில் விலகத் துவங்கினார் .நாங்கள் பேசிப் பார்ப்போம் என்றோம் .அதற்கு அவர் சொன்னப் பதில் ,எதுவேண்டுமானாலும் பேசிப் புரிய வைத்து விடலாம் நாழுச் சுவருக்குள் ஒன்றாய் வாழும் ஆண் பெண்ணுக்கிடையே உள்ளக் காதல் பேசிப் புரியும் விசயமல்ல.அவளுக்கு அதுதான் பிடிக்கும் என்று தெரிந்தப் பிறகு நாம் பேசித் திசை மாற்றினால் அந்த வாழ்க்கைப் பயணமாக இருக்காது சுமையாகத்தான் இருக்கும் விட்டு விடுங்கள் அவளை விரும்பிய எனக்கு அவள் விரும்புவதையும் மதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார். 

      அதற்கு பிறகு சில மாதங்களில் அவசர அவசரமாக அதே ஜோரில் திருமணமும் முடித்து விட்டார்ச் சாந்தி அம்மா.அவர் கணவர் வேண்டாம் உன் தம்பி குடும்பதிற்கு ஆகாதவர்கள் என்று எவ்வளவோ தடுத்தார் .காசுதான் முழு வாழ்வின் அர்த்தம் என்று நம்பிய சாந்தியும் ,அவர் அம்மாவும் அவரைத் தோற்கடித்தார்கள் .பெரிய வீடு, நகை,கார், பைக் எனச் செல்வம் கூரையைப் பொத்துக்கொண்டும் கதவை,ஜன்னலைத் திறந்துகொண்டும் பீரோவை நிரப்பியது.சொந்தமெல்லாம் ஒவ்வொரு விசேசத்திலும் செய்முறையில் அசந்துப் போனது. .

செல்வம் எப்படி வந்தது என்பதை யாருக் கேட்கவில்லை.ஆனால் எப்போதும் போலக் கட்டுசோறுக்குள் பெரிச்சாளி போல ராஜாவின் குடியின் அளவுக் கொஞ்சமும் குறையாததால் மெல்ல எமன் யாருக்கும் சொல்லாமல் பாட்டில் வழியாக நுழைந்து ராஜாவின் கிட்டினியில் போய்த் தஞ்சம் புகுந்தார்.ஒரு சமயத்தில் ஒரு சேர இரண்டு கிட்டினியும் செயல் இழந்தது.இதில் பெரிய வெடிக்கை என்னவென்றால் சொந்தமெல்லாம் கிட்னித் தர மறுத்த போது சாந்தி நண்பரிடமும் கேட்டு இருக்கிறாள் .எங்களுக்குத் தெரியாமல் அவரும் தரச் சம்மதித்து விட்டார் ஆனால் வீட்டாரின் சம்மதம் கேட்டப் போது அவர்கள்  மறுத்து விட்டார்கள்.இதை அண்ணியிடம் சொல்லி சாந்தி ஒருமுறை வருத்தப்பட்டாளாம் ! 
 

இதனால் வேறு வலியில்லாத சாந்தித் இதே மாதிரி பிரச்சனையில் உள்ள ஒருவருக்கு தன் கிட்னியை வேறொருவருக்குக் கொடுத்து அவர் குடும்பத்தில் ஒருவர் கிட்னியை ராஜாவுக்குப் பெற்றுக்கொண்டாள்.ஆனால் அதுவும் ராஜாவின் உடல் தன்மைக்குப் பொருந்தவில்லை அதுவும் செயல் இழக்க, வீட்டிலேயே டயாலிசிஸ் அமைத்துக்கொண்டார்கள் ஆனால் அப்போது யாரும் அறியாமல் கிட்னியில் தங்கியிருந்த எமன் மெல்ல இன்ஃபெக்சன் என்ற தொற்று மூலம் மூளைக்குபோய் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் புகுந்து ராஜாவின் மரணத்திற்கு நாள் குறித்து விட்டார். 

 இன்று ராஜாவுக்குப் பதினாறாம் நாள் . சாந்தியை இந்தக். கோளத்தில் சந்திக்கும் மன தைரியம் இல்லாத நண்பர் இங்கு வருவதற்கு மிகப்பெரிய தயக்கம் இருந்ததால் என்னை அழைத்து வந்து இருக்கிறார்
நாங்கள் இரண்டு பேரும் போட்டோவைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு விபூதிப் பூசிக்கொண்டோம்.மெல்ல அங்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தோம்.

சாந்தி எதிரில் போட்டோவுக்கு அருகில் உட்கார்ந்தாள் .அவள் முகத்தில் நண்பரின் பல கேள்விக்குப் பதில் இல்லை.ஆனால் நண்பருக்குத் தெரியாத பல விசயங்கள் சாந்தி முகத்தில் இருந்ததாக நான் நினைத்தேன் .

வெகு நேரம் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை . நண்பர் அடிக்கடி அவர்கள் குடும்பப் போட்டோவை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார், அங்கு அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்திய சாந்தி, இவள்தான் மூத்தவள் பி.ஈ பண்ணுகிறாள் என்றாள் .

அந்தப் பெண் வணக்கம் அங்கிள் என்றது நண்பரைப்பார்த்து .நண்பர் முகம் வெகுவாக மாறியது.

ஒரு அரை மணி நேரம் கழித்து கம்பெனியிலிருந்து ஒரு போன் ’வைபிரேசன்’ மூடில் அதிர்ந்தது . அவர்கள் வீட்டுக்கு பின் பக்கம் போய் பேசலாம் என்று  போனேன் .அங்கு வீட்டுக்கு மேலே மாடி செல்ல பின் வழிப்படி இருந்தது .ஆனால் யாரும் பெரிதாய் உபயோகிப்பது மாதிரி தெரியவில்லை .அந்த படிக்கு அருகில் கீழே நின்று பேசலாம் என்று போனை ஆன் செய்யும்போது அந்த படிகளில் ஓரத்தில் சாந்தியின் மகள் உட்கார்ந்து இருப்பதுவும் போனில் சுவாரசியமாக, முகம் பிரகாசிக்க சாட் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது . வெளியிலிருந்து பார்த்தால் சுலபமாக தெரியாத இடம் அது. என்னைப் பார்த்ததும் மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு .மீண்டும் அவசரமாக செல்லுக்குள் விட்ட இடத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டது அந்தப்பெண். 

மீண்டும் போன் பேசிவிட்டு உள்ளே வந்தேன்.

 தாழ்ந்த குரலில்  சாந்தி யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
 என்னிடம்  பல பேர் வந்து செய்முறைகள் செய்யவும் , பணம் வைத்துக் கொடுக்கவும் துணியெடுத்துக் கொடுக்கவும்  கேட்டார்கள்  என் வீட்டில் அவரே இல்லை நீங்கள் துணி எடுத்துக் கொடுப்பதும் ,விருந்துப் போடுவதும் செய்தால் ஒரு நாள் உங்கள் வீட்டிலும் நான் திருப்பி செய்ய வேண்டி வரும் அது என்னால் முடியாது எனவே வேண்டாம் கோவித்துக்கொள்ளாதீர்கள் என்று பக்குவமாய்  சொல்லி அனுப்பி விட்டேன்  என்றாள்.

சாந்தி சொன்னதை நண்பர் கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை. 

காலம் எனும் சதுரங்கம் நமக்கு  எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும்,நாம் அதை புரிந்து கொள்ளாமல் சதா காலத்தையே ஏமாற்றக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறோம் !

வியாழன், 3 செப்டம்பர், 2015

எதிரணிக்கும் நடுவர்



பொதுவா நம்ம லோக்கல் அணிகளில் கார்க் மற்றும் ரப்பர்ப் பந்துக் கிரிக்கெட்டுக்கு உப்புக்குச் சப்பாணியைத்தான் அம்பயரா நியமனம் செய்வது வழக்கம் .ஆறு கல்லைப் பெறக்கிக் கையில் வைத்துக் கொண்டு பௌலிங் கிரீஸ் கோடு போட ஒரு குச்சியை வைத்துக் கொண்டு,அதே குச்சியில் ஓவர் கணக்கும் எழுதிக் கொள்வதும் முக்கியமான வேலைகள் ! .ஆனால் கிரீஸ் நோ பால் கொடுப்பது அடிக்க முடியாத அல்லது அடிக்கத் தெரியாத பந்துக்கெல்லாம் வைடுப் பால் என்று கூச்சலிடும் பேட்ஸ்மேன்களை சமாளிப்பதும் ,சில சமயத்தில் லெக் அம்பயர்ன்னு ( எதற்கும் அணியில் பயன்படாத உப்புக்குக் கூட இல்லை ஒப்புக்குச் சப்பாணி ) இல்லாத போது அவன் வேலையும் சேர்த்துப் பார்த்து .நெஞ்சுக்கு வரும் சாதரண ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடித்து,அவுட் ஆனதும் நோ பால் கேட்டு வெளியே போக மறுக்கும் பேட்ஸ் மேன்களிடம் தாவுத் தீர்க்கும் வேலைதான் மிகக் கஷ்டமான நடுவர் வேலை .

 அந்த வேலையை நான் பார்க்கப் போனது கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டதை விடப் பெரிய விபத்து .ஒரு சமயம் நாங்கள் அதிகம் விளையாடும் அல்லது அனுமதிக்கப்படும் திண்டுக்கல் பப்ளிக் ஸ்கூல் கிரவுண்டில் எனக்குக் குறி வைத்து விக்கெட்டுக்கு அழகாக வீசப்பட்ட பந்தை ஏறி அடிக்கிறேன் என்ற பெயரில் முன்னேற, பந்துத் தாடையைப் பதம் பார்த்தது சாதாரண அந்தப் பந்தை வீணாகப் பாடி லைன் (Bodyline) பந்தாக்கி ஒன்றரை இன் சதைக் கிழிந்து ரத்தம் வந்து நிற்கவில்லை.ஃபேமிலி டாக்டரிடம் போனால் வீட்டுக்கு விசயம் போய் விடும் .மெனெக்கெட்டு டாக்டரே காரை எடுத்துக்கொண்டு நேரில் போய்ச் சொல்லிவிட்டுத்தான் அடுத்தப் பேசண்டைப் பார்க்கப்போகும் அளவுக்கு நல்ல மனுசன் அவர் .எனவே ஜி ஹெச் போனோம் .அங்கு நண்பர் வரிசையில் நின்றுச் சீட் வாங்கி ,டாக்டரைப் பார்த்து,அவர் இன்னும் கொஞ்சம் இழுத்துக் காயத்தை இரண்டு இன்ஞ்சாக மாற்றித் தையல் போட அனுப்ப (அங்கும் கெட்ட நேரம்) ஒரு ஆண் உதவியாளர் மிகச் சாவதானமாகப் பக்கத்திலிருப்பவரிடம் விலா வாரியாகப் பேசிக் கொண்டே வலிக்க வலிக்கத் தையல் போட்டார் .அசங்கதப்பா தையல் விழாது என்ற அலட்டல் வேறு வலியை விடக் கடுப்பேற்றியது .ஒரு வழியாய்த் திருப்பி அடுத்த வாரமும் விளையாடப் போனால் எல்லாப் பந்தும் தாவாங் கொட்டைக்கு வீசப்படுவதாக ஒரு பிரம்மை அடிக்கடி வந்தது .( எல்.பி.டபில்யூ இல்லாததால் ) எப்போதும் போல்டாகாமல் பட்டோடி நவாப்புக்கு இணையாக விளையாடும் நான் (!) அன்று பார்த்து விக்கேட்டே எடுக்காத ஒரு ஸ்பின்னரிடம் இரண்டடித் தூரம் ஸ்டிக் பறக்க, வெளியேற்றப்பட்டேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த வழியாகப் போன இன்னொரு டீம் மேட்ச் கேன்சலாகி எங்களோடு விளையாடக் கேட்க எங்கள் டீமில் நல்ல அற்புதமான ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும் இன்று திண்டுக்கல்லில் மாதா எலெட்ரானிக்ஸ் உரிமையாளரக இருக்கும் செல்வராஜ் ,ராபர்ட் சகோதரர்கள் ,எலும்பு மூட்டுச் சிகிச்சை மருத்துவர் ஐயப்பன் டாக்டரின் தம்பி கார்த்தி ,எல் ஐ.சி ஏஜென்ட்களின் செயலாளார்க் கணபதி ,வெங்கடேஸ் சைக்கிள் மார்ட் வெங்கடேஸ் ,சென்னையில் இப்போது சுகாதாரக் கண்காளிப்பாராகக் கோவிந்தராஜ் ,பின்னாளில் வெறும் கேட்டரிங் மட்டுமே படித்து அமெரிக்கக் கப்பலில் உலைகையே வலம் வந்த சதீஸ் போன்ற எல்லோரும் எங்கள் அணீயின் தூண்கள். ஆனால் பலரும் அணியில் ஒரு பொழுதுப் போக்குக்காக விளையாடுவதால் அடுத்த அணியுடன் சீரியஸாகப் போட்டியில் போராடுவதை விரும்பாதவர்கள் .அதிலும் முக்கிய இடங்களில் இருப்பதால் சின்னப் பையன்களுடன் போட்டியிட்டு முடிவு (சென்னை 600028 படத்தில் வருவது மாதிரி) ஊத்திக் கொண்டால் என்ன செய்வது என்று ஒரு பயமும் அப்புறம் எதாவது அழுகுனி ஆட்டம் ஆடிச் சண்டை வந்து விடும் போன்ற இத்யாதிக் காரணங்களால் வெளி அணிகளுடன் பொதுவாக ஒத்துக் கொள்வதில்லை ஆனால் அன்று அப்படி விட முடியவில்லை .காரணம் எங்கள் அணியிலே பலரும் வரவில்லை .எனவே பால் மேட்சுக்கு ஒத்துக் கொண்டோம் .

டாஸ் வெற்றிப் பெற்றுப் புது அணியுடன் மோதுவதாலும் எங்களுக்கு இது பழக்கபட்டப் பிட்ச் என்பதால் பந்து வீச்சைத் தேர்வு செய்தோம் பொதுவாக இடக்கைப் பந்து வீச்சாளனான எனக்கு இருபது ஓவர் மேட்ச்சுகளில், எட்டு ஓவருக்குப் பிறகுதான் பந்து வீசும் வாய்ப்பு வரும் அதுவும் முன்னனிப் பவுலர்கள் அல்லது டீம் கேப்படனுக்கு நெருக்கமான எதுக்கு வீசுகிறோம் என்று தெரியாத சில பவுலர்கள் எதிர் அணியிடம் அடி வாங்கி நல்ல ரன் கொடுத்துப் பேட்ஸ்மேன்களை ஃபாமுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு (அடி வாங்க) பந்து வீச்சுத் தருவது வழக்கம் .அன்று அதனால் என்னை நடுவராக அணி நிற்கச் சொன்னது என் அணி .கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது .பொதுவா நான் உலகக் கிரிக்கெட்டில் கூட எந்த நாடு விளையாடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள மாட்டேன் அவர்கள் எப்படி வியூகம் வகுத்து ஒருங்கிணைந்துப் போட்டியை நகர்த்துகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வேன் .அப்படி இருக்கும் நான் விளையாட்டு ஆர்வத்தில் எத்தனை பந்துகள் போடுகிறார்கள் ,மொத்தம் எத்தனை ஓவர் போடுகிறாகள் ,ஒரு ஆள் எத்தனை ஓவர் போடுகிறான் ,ரன் அவுட்டுக்குப் பக்கவாட்டுக்கு நகர்வது ,கையில் இருக்கும் பந்து வீசும் கணக்குக்குக் கை மாற்றிக் கல் வைத்துக் கொள்வது முடியுமா என்று தெரியவில்லை என்பதே என் பயத்திற்கான காரணம் .அதை விட என் அணி ஆள்களிடம் கெட்டப் பெயர் வந்து விடக் கூடாது என்ற சட்டச் சிக்கல் வேறு இருக்குதே.

ஆனால் Think Of the Devil and there He Appears என்ற வாஈயம் எனக்காக்காவே எழுதப்பட்டது போல ! ஐந்து ஓவர் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை .நானும் என்னை ஏதோ இரு அணிகள் விளையாடுவதாகவும் அதற்குத் தேர்வு ஆனால் ஆறாவது ஓவரில் அந்த டீம் எங்கள் பந்து வீச்சாளார்களைக் கணித்து விட்டது .அடித்து ஆடத் தொடங்கி விட்டார்கள்.ஏழாவது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த ஒரு பையனக்கு எங்கள் அணி ஒரு ரன் அவுட் கேட்க நான் மறுத்து விட்டேன் .ஒன்பதாவது ஓவரில் அந்த அணியின் ஸ்கோர் 43.விக்கெட் ஒன்று கூடப் போகவில்லை .எங்கள் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அதே நல்ல பேட்ஸ் மேன் தலைக்கு மேல் வந்த பௌன்சரைத் தூக்கி அடிக்க எல்லைக் கோட்டில் கேட்ச் ஆகும் முன்னே ,யாரும் கேட்க்காமல் நோ பால் என்று கூவி விட்டேன் .ஏதோ ஒரு அற்புதமான டைமிங் சென்ஸ் என்று என்னை நான் வியந்து கொண்டு இருக்கும் போது எங்கள் கேப்டன் என்னை முறைத்துக் கொண்டு இருந்த எங்கள் பவுலரைச் சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு , என் அருகே வந்து நோ பால் கொடுத்தது தப்பில்லை .அது அவர்களே கேட்க்கவில்லையே கிருஷ்ணா என்று மனசு நொந்தது போலக் கேட்டார் .அது தப்புதான் என்று என் புத்திக்கு உறைக்கும் முன் பத்தாவது ஓவரில் எனக்குப் பந்து வீசும் வாய்பு என்ற பெயரில் மெல்ல நடுவர் பதவியிலிருந்து கழட்டி விட்டு ஃபீல்டிங்கில் நிறுத்தி 13 ஆவது ஓவர் கொடுத்தார்கள் .

மன நிலைச் சரியில்லாமல் பந்து வீசப் போய் முதல் பாலுக்கு லெஃப்ட் ஆர்ம் அரவுண்ட் ஸ்டிக் என்று சொல்ல மறந்து விட்டேன்.கிரிஸ் நோ பால் கொடுத்து நானும் டேவிட் செப்பர்டுதான் என்று என் அணிக்காரர் நிரூபித்தார். நோ பாலுடன் ஏழு பந்து வீசி மூன்று ரன் கொடுத்தேன் .ஆனால் என் சகப் பந்து வீச்சாளார்கள் எட்டாவது வள்ளலாக ரன் கொடுத்தும் ,எனக்கு வாய்ப்புத் தரவில்லை .ஆனால் என் மீதான என் அணியின் கோபத்தை என் அணிக்காரகள் கவனித்தார்களோ இல்லையோ எதிரணியின் துணைத்தலைவன் கவனித்துக் கொண்டே இருந்து இருக்கிறான்.ஒரு ஆறுதலுக்காக எனக்கு 19 ஆவது வீச அழைத்தார்கள் .ஒரு விக்கெட் 7 ரன் கொடுத்தேன் .என் கேப்டன் செல்வராஜ் என் அண்ணனின் நண்பர் என்பதால் அந்தக் கோபத்தை மறந்து விட்டார்.ஆனால் சொந்த அணிக்கு விசுவாசம் இல்லாதவன் போலப் பலரும் என்னிடம் பேசவில்லை .மீண்டும் எதிரணிப் பந்து வீச வரும் முன் செல்வராஜ் ( எங்கள் கேப்டன் ) அவர்களிடம் என்னை மெயின் அம்பயராக நிற்க அனுமதிக் கேட்டார்கள் .அவர் அணியின் மற்றவர்களைப் பார்த்தார் .நம் பேட்ஸ்மேன்களுக்கு பேராபத்து என்பது போல அவர்கள் கண்களாலே வேண்டாம் என்றார்கள் .ஆனால் செல்வராஜ் அண்ணன் சரி என்று அனுப்பி வைக்கச் சம்மதித்தார் .ஆனால் நான் போகும் முன் என்னை அருகே அழைத்து , பயப்படாதீங்கக் கிருஷ்ணா , ஆனால் அப்பீலுக்கு அப்புறம் சரியா இருந்தா முடிவெடுங்க என்றார் .அது எனக்கு ஆறுதலாக இருந்தது .

நல்ல வேளை அந்தப் போட்டியில் நாங்களே ஜெயித்தோம் .எங்கள் அணியின் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டு இருந்த சுரேஸ் ( சின்னக் கவாஸ்கர் என்று அழைப்போம் ) நின்று நிதானமாக் 83 ரன் எடுத்துப் பிரித்து மேய , மூன்று விக்கெட் இழந்து 17 ஆவது ஓவரிலே வெற்றிப் பெற்றோம். .அந்த அணியில் நல்ல பவுலர்கள் இருந்தும் புதுப் பிட்ச் கைக் கொடுக்காததால் எங்கள் அணியிடம் எளிதாகக் கொஞ்சம் டஃப் கொடுத்துத் தோற்றுப் போனார்கள் .எனக்கும் முடிவெடுப்பதில் மிகப் பெரிய பிரச்சனை வரவில்லை. .எதிரணித் தோற்று விடைப் பெறும் போது அந்த அணியின் அத்தனை பேறும் எனக்குத் தேடித் தேடிக் கைக் கொடுத்தது, இன்னொரு பெரிய ஆறுதல் .பின்னாளில் எதிரணி அம்பயர் வேலைத் திருப்பூர் வந்த பிறகும் தொடர்ந்தது .நான் வேலைப் பார்த்தக் கம்பெனியின் மூன்று யூனிட்டிலும் அற்புதமான கிரிக்கெட்டர்கள் இருந்தார்கள் .ஆனால் வெறியர்கள் .விடிய விடிய வேலைச் செய்தப் பிறகும் (கல்யாணம் ஆனப் பலரும் இதில் இருந்தார்கள் ) கட்டாயம் விளையாட வருவார்கள் .ஒரு டோர்னமெண்ட்டில் நான் கேப்டனாக இருந்து ஃபைனலில் பாச்சாங்காட்டு அணியுடன் மோதி ரன்னர் கப் வாங்கி எனது அருள்புரம் யூனிட்டில் ( இப்போது சேடப் பாளையம் யூனிட்) வைத்து விட்டு வந்தோம்
.
என்னதான் இரண்டு அணிகளும் விளையாடும் வரை கால் வலிக்க நிற்கும் கோட் ஸ்டாண்ட் வேலை அம்பயர் வேலையாக இருந்தாலும் எனக்கு அம்பாயர் வேலையில் மிகுந்த ஈடுபாடு வந்து நானே விரும்பி ஒட்டிக் கொள்ள முக்கியக் காரணம் இருந்தது . முதலில் விளையாட்டை ரசிக்க முடிந்தது இரண்டு அணிகளுக்கும் அம்பயாராக இருக்கும் போது நம்மைப் பொதுவாய்ப் பார்த்தார்கள் அதனால் அவர்களின் வெளிப்படையான பேச்சுக்களில் அணிகளின் திட்டமிடல்கள் தெளிவாகப் புரிந்தது. எந்தப் பவுலருக்கு என்ன ப்ளேஸ்மெண்ட்டில் ஃபீல்டர்ப் போடுவது, எப்படிப் பேட்ஸ்மேன் ஆடினால் எங்கு மூவபிள் ஃபீல்டர்ப் போடுவது அவன் தகுதி ,அடிக்க ஆரம்பித்தால் மிக்ஸிங் பவுலர்களைக் கொடுத்துத் திசைத் திருப்புவது ,போன்ற உலகத்தர நுட்பங்கள் அருவி போல அந்த இடத்தில் கிடைத்தது .எந்த அணி எதில் பலம் எதில் பலவீனம் என்பது போன்ற கணிப்புகள் எப்படிச் செய்கிறார்கள் மிகச் சுலபமாகப் புரிந்தது. .நல்ல பேட்ஸ் மேன்களின் ஃபுட் மூவ் கிட்ட இருந்து பார்க்க வரப் பிரசாதமாகக் கிடைத்தது .நல்ல பவுலர்கள் எப்படிப் பால் வீசி விக்கெட் எடுக்கத் திட்டமிட்டுப் பந்தைப் பிட்ச்சில் வைக்கிறார்கள் என்பது போன்ற பல வெற்றி ரகசியங்கள் அம்பயர் ( என்ற கல் பொறுக்கி ) இடம் நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பில் கொட்டிக் கொடுத்தது .ரகசியமாக எல்லோரின் திறமையையும் ரசிக்கச் சிறந்த இடமாக இருந்தது .யார் நல்லா விளையாண்டாலும் ரன்னர் பக்கம் வரும் போது பாராட்ட முடிந்தது .முதல் தர கிரிக்கெட்டை இன்றும் நான் ரசிக்க,புரிந்து கொள்ள, விவாதிக்க அன்று எதிரணி நடுவராக நான் நின்றப் போதெல்லாம் கற்றுக் கொண்ட பாடம்தான் உதவுகிறது .அவ்வளவு ஏன் என் பையன் என் அப்பாவுக்குக் கிரிக்கெட் தெரியும் என்று அவன் வயது பசங்களிடம் சொல்லிக் கொள்ள இது உதவியது .

பேக் வாய்ஸ் !

யாருப்பா அது ,ஏதோ இண்டர் நேசனல் கிரிக்கெட் அம்பயர் ரேன்ஞ்சுக்கு அனுபவம் எழுதறயான்னு ?

பதிலுக்கு கூட்டத்தில் எந்த சத்தமும் இல்லை!

ஒரு வேளை எனக்கு மட்டுமே கேட்கும்  மனப் பிராந்தா ?  

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

செருப்புதான், ஆனாலும் .

.
எப்பவாவது முக்கியமான வேலை இருக்கும் போது உங்கள் செருப்பு அறுந்துத் தொங்கி ,அடுத்த அடி எடுத்து வைக்கும்போது குடிகாரன் போலத் தள்ளாடும் நிலை வந்தால் என்ன செய்வது ? எங்காவது தைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வது என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் .அது சரிதான் ஆனால் தைக்க ஆள் தேடுவதுவும் யாரும் பார்க்கக் கூடாது என்ற கூச்சம் பிடுங்கித் தின்பதைத் தவிர்க்க ஹெல்மெட்டைக் கலட்டாமல் வேர்த்து நிற்கும் போது கடங்காரனைக் கண்டுபிடிப்பது போல நச்சுன்னு வந்து பிரேக் பிடித்து நின்று என்ன என்று நம்மையும் நம் தைக்கும் செருப்பையும் மாறி மாறிப் பார்ப்பவர்களை என்ன சொல்வது விதியின் விளையாட்டு என்பதைத் தவிர ? 

செருப்புதானே வீசியெறிந்து விட்டுப் புதுசு வாங்க வேண்டியதுதானே என்று
நீங்கள் யோசித்துக் கொண்டே படிப்பது (!) தெரிகிறது.ஆனால் செருப்பு விசயத்திற்குப் பின்னால் எனக்கு நிறையக் கோபம் பல பேர் மேல் உண்டு.கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தக் காலத்திலிருந்தே செருப்பைத் தொலைப்பது என் அணிச்சையான செயலாக இருந்தால் பரவாயில்லை யாராவது தூக்கிக் கொண்டு போவதுவும் அதற்குப் பதிலாக ஒரு பிய்ந்து போன செருப்புக் கூட விடாமல் போவது எந்த விதத்திலும் நியாயம் இல்லைதானே ?

வெறும் காலுடன் நடந்து வரும் போது யார் மீதெல்லாமோ கோபம் வரும் ! வெறும் காலோடு கூட நடந்து விடலாம் பிய்ந்து போன செருப்போடு  நடப்பது மிகப் பெரிய அவமானமாக தோணும்..என்ன செய்ய ? கிரிக்கெட் விளையாடும் போது மிகுந்த சிரமப்பட்டு ஃபாஸ்ட் பௌலராக உருவெடுத்தபோது கேன்வாஸ் ஷு அவசியம் தெரிந்தும் வாங்கப் பயப்பட்டபோது ஒரு சீனியர் தன்னுடைய இரண்டு ஷூவைப் பிரசண்ட் பண்ணினார்.

எனக்குத் தெரிந்துப் பள்ளியில் தொடங்கி வேலைக்குப் போகும் வரை கூட
இதை அனுபவித்து இருக்கிறேன். எங்கு இருந்துதான் எனக்குன்னு மட்டும் வருவார்களோ தெரியவில்லை அலாக்காக என் செருப்பை மட்டும் தூக்கிக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள் .இது நான் தனியாகப் போகும் போது மட்டுமல்ல அம்மா ,அப்பா ,அண்ணன்களோடு போகும் போதும் நடந்த பிறகுதான் அவர்கள் இதை ஒத்துக் கொள்ளத் துவங்கினார்கள். இப்படித்தான் தொலைத்தால் என் வீடுதான் என்ன செய்யும் இருக்கவே இருக்கு ரப்பர்ச் செருப்பு என்று படிக்கும் வரை காலம் தேய்ந்தது அதோடு செருப்பு ராசி இல்லாதவன் என்ற பட்டப் பெயர் மட்டும் இன்னும் தேயவில்லை.

திருப்பூர் வந்து ஊருக்குப் போகும் போதெல்லாம் வீட்டில் வீட்டுக்குள்
நுழையும் போது என்னோடு சேர்த்து என் செருப்பையும் பார்த்துப் பழகிவிட்டார்கள்.திரும்பி வரும் போது கட்டாயம் அப்பாவோ ,அண்ணனோ ஒரு புது ஜோடி வாங்கிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது . .திண்டுக்கல் தோல் தொழிலுக்கு நல்ல பெயர் வாங்கி இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது ஆனால் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை ’தோல்’ என்று திரு.செல்வராஜ் எழுதிய நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கிய பிறகு தெரிந்து இருக்கலாம்.(அந்த நாவலின் அவர்களின் துயர் நிறைந்த வாழ்வு எப்படிப் பட்டது என்பதை விளக்கமாக யதார்த்த மொழியில், 26 அத்தியாயங்களாக 117 கேரக்டர்களுடன் இந்த நாவல் வடிவமைத்துச் சொல்லியிருப்பார். )

கல்யாணம் மண்டபச் செருப்புக் காணாமல் போகும் கார்டூன்கள் பழைய ஆனந்த விகடனின் கூடச் சகஜமாக வெளிவரும் .இப்போதெல்லாம் பரவாயில்லை கல்யாண மண்டபங்களில் திருமண மேடைவரைக் கூடச் செருப்பு சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. கோவில்களில் இலவசச் செருப்பு ஸ்டாண்ட் இருந்தாலும் அங்கும் கை நீட்டிக் காசு கேட்பது தவிர்க்கமுடிவதில்லை என்பது வேறு விசயம். இங்குத் திருப்பூரில் புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் ஒரு அருண் ஐஸ் கிரீம் கடையில் Leave your foot wear outside என்பதைப் படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வந்து போகும் .

ஜாதகம் நம்புபவர்கள் அதில் திசாப் புத்தி மாறியப் பிறகு சில வயதில்
தழைகீழானப் பலன் தருவதாகச் சொல்வார்கள் அது போல மாறி இருக்கா அதில் செருப்புராசி வந்து இருக்கா (!) இல்லையான்னு ஒரு சோதனைக்காக வீட்டுக்குத் தெரியாமல் தகுதிக்கு மீறிய விலையில் ஒரு செருப்பு வாங்கினேன்.அதிலும் முக்கியமாக டிவிஎஸ் ஸ்டார்ச் சிட்டியில் பைக்கில் கியர் போடும் போது சாதாரணச் செருப்பு நழுவிவிடுகிறது என்பதால் பின் பகுதியில் வார் வைத்த சாண்டக்ஸ் டைப் வாங்கி வந்ததுதான் இப்படிச் சோதிக்கிறது.பாப்புலர் அன்கோவில்  டாட்டா ஸ்கைக்குப் பணம் கட்டி விட்டு படி தாண்டி ஜம்ப் பண்ணும் போது வடிவேலுக்குச் சொன்ன மாதிரிச் சண்டையிலக் கிழியாத சட்டைப் போல முன் பக்கம் பட்டெனே கிழிந்து சிரித்தது .எப்படியோ பஸ் ஸ்டாண்ட் போனால்  செருப்புத் தைப்பவர்கள் இருப்பார்கள் ஆனால் அங்கு நிறையபேர் வந்து போவதால் யாராவது பார்த்து விடுவார்களே என்று அலைந்து திரிந்து ,ஊத்துக்குளிப் பாலத்துக்குக் கீழ் ஒருவரைத் தேடிப் பிடித்துத் தைக்கக் கொடுக்கும் போதுதான் திசாப் புத்திச் சரியாய் இருந்து அந்தரம் சரியில்லை போல ! ஒரு ஆள் வந்து விசாரித்து விட்டுப் போனான் .

செருப்பைத் தைத்து முடித்து விட்டு அந்தத் தொழிலாளிக் கேட்டப் பணம் கொடுக்கும் போது ,போதுமா என்றேன் .இல்ல சார் சரியாய்த்தான் கேட்டு இருக்கிறேன் என்றார் .இல்லங்கப் பெரியவரே நல்லாத் தைத்து இருக்கிறீங்க இன்னும் ஒரு பத்து ரூபா சேர்த்து வைத்துக்கங்க என்று கொடுத்த  போது சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார் . அவராவது திருப்பித்தியாக இருக்கட்டுமே ?

செருப்புதானே என்று மிகச் சாதாரணமாக யோசிப்பவர்கள் ராமன் செருப்பை  வைத்து 12 ஆண்டு காலம் பரதன் ஆண்டான் என்கிற இராமாயண விசயத்தை நினைவுப் படுத்திக் கொள்வதும் முக்கியமான விசயம்தான் !

வெள்ளி, 31 ஜூலை, 2015

மகாத்மா அப்துல் கலாம் .



ஒரு நிறைவான மனிதர் நேர்மையான தனது வாழ்வைப் பூர்த்தி செய்துள்ளார்.ஒரு மனிதன் தன் வாழ்வுக்குப் பிறகு பேசப்படுவதில்தான் அவர் அருமை புரியும் .மக்களுக்குப் புரிந்து இருக்கிறது .அதனால்தான் திரும்பிய பக்கமெல்லாம் அஞ்சலி வரிகள் .அந்த மாமனிதரின் மரணத்தின் வலிகளைப் புரிந்த வாசகங்கள் ஆனால் சோகமாக இல்லை உங்கள் கனவுகளை மெய்பிக்கிறோம் என்ற வாக்குறுதிகள் .ஒரு மனிதன் மரணம் விதைக்கப்பட்டுள்ளது .அதன் பலனை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா 2020 மூலம் அனுபவிக்கும்.
இங்கு , திருப்பூரில் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல அமைப்புகள் மூலம் மௌன அஞ்சலி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளியிலிருந்து துவங்கி சிக்கண்ணா கல்லூரியில் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .எங்கள் அலுவலத்திலிருந்து நான்கு பேர் கலந்து கொண்டோம் .அவசர அவசரமாகப் பிற்பகல் 3.15 க்கெல்லாம் பேருந்துக்காகக் கூட காத்து இருக்காமல் போனால் 100 பேர் கூட இல்லை .ஆனால் 4.20 க்கு ஆயிரக்கணக்கோர் கூடி விட்டனர் .ஆட்சித்தலைவர் கமிசனர் , துணைக்கமிசனர் ,அரசு சார்பில் கலந்து கொண்டனர்.அதனாலேயே என்னவோ Mine-Resistant Ambush Protected கூட்டத்தைக் கலைக்க உதவும் காவல் துறையின் மிக விலையுள்ள வாகனம் பயமுறுத்தியது. மூன்று பேர் கொண்ட வரிசையாய் தொடங்கும் முன் நிற்கச் சொன்னார்கள் .ஊர்வலம் முடியும் வரை யாரும் மூன்றுக்குள் வரவில்லை நானும் மற்ற இரண்டு பேரை சேர்க்கப் போனால் வெள்ளையாய் ஓவர் கோட் அணிந்த ,மருத்துவ சங்கத்தை சேர்ந்தவர்கள் .ஒரு வித தயக்கத்தோடு அவர்களோடு சேர்ந்து கொண்டேன் . சிக்கண்ணா கல்லூரிக்குள் மிகப் பெரிய மேடை ஏற்பாடு செய்து இருந்தார்கள் .எல்லோரும் வரிசையாய் நீண்ட மலைப்பாம்பைப் போல உள்ளே போய் நிறைந்தோம் .அங்குள்ள மைதானத்தில் நிற்பதர்க்கு கோடுகள் கூட போட்டு இருந்தார்கள் .மக்கள் மனதில் கலாமை மனதில் வைத்து இருப்பதால் மிக வரிசையாகவும், அமைதியும் காத்தனர் .

மேடை முழுதும் கலாம் அஞ்சலி படங்கள் .இங்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி நடந்தது.இரண்டு பிரமாணர்கள் சாந்தி பண்ணும் மந்திரம் சொல்லியும் அடுத்து கிறிஸ்துவ மதச் சார்பில் வசனங்களும் ,முடிவில் இஸ்லாமைச் சேர்ந்த ஒருவராலும் அந்த ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் .ஆனால் அவர் இந்த மூன்று மதங்களில் முடிந்து விடவில்லை அதற்கு அப்பால் பல நாடுகளின் மக்களின் மனங்களில் விதைகளாய் வாழ்கிறார் .அமெரிக்காவின் இரும்பு கோட்டையிலே கூட அவர்கள் தேசியக் கொடியை பாதிக்கம்பத்துக்கு இறக்கி வணங்கச் செய்து விட்டாரே !

முதலில் பேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் திரு .சக்திவேல் பேசும்போது நமது தேசப்பிதா காந்தியைப் போல அவரும் ஒரு மஹாத்மா .எனவே இன்றிலிருந்து ,இங்கிருந்து மகாத்மா அப்துல் கலாம் என்று அன்போடு அழைக்கப்படுவார் என்றார்.அடுத்து திருப்பூருக்கு கலாமை அழைத்து வந்த பெருமைக்குரிய அகில் எஸ்.ரத்தினசாமி அவர்கள் பேசும்போது கலாமின் நினைவில் கலங்கி பேச்சைத் தொடர முடியாமல் பேச்சை நிறுத்தினார் .மேலும் சிலர் பேசி முடித்த பின் உறுதி மொழி வாசிப்பட்டது .முடிவில் கலாமின் கனவுகளில் ஒன்றான மரம் வளர்ப்புத் திட்டத்தினை நனவாக்க ராம் ராஜ் காட்டன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .அங்கிருந்து வீட்டுக்கு பேருந்து ஏறும் மனம் கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டு இருந்தபோது கூடவே நடந்து வந்து கொண்டு இருந்த ஒரு அறுபது வயதுக்கு மேற்பட்டவர் தானாகவே என்னிடம் மெல்ல கலாமின் நினைவாகப் பேசி ஆரம்பித்தார் .என்ன மனுசன் சார் ? வாழ்ந்தா இப்படிப் பேசும்படியாக வாழனும் சார் .பேச்சோடு பேச்சாக வி.வி.கிரி இதே பதவி முடியும்போது அள்ளிக்கொண்டு போனதையும் இதற்கு முன்னிருந்த பிரதீப பாட்டில் வண்டிக்கு பெட்ரோல் கேட்டுக் கொண்டு இருப்பதையும் நொந்து கொண்டார் இது நம் சினிமா கலாச்சாரத்தின் விளைவா தெரியவில்லை ஒருவரை நல்லவரென்று சொல்ல இன்னொரு கெட்டவரை உதாரணப்படுத்திக் கொள்கிறோமோ ? எங்களோடு இன்னும் ஒருவர் சேந்து கொண்டார் .அவர் இனி இப்படி ஒரு சிறப்பு யாருக்கும் இருக்காது என்று ஆதங்கப்பட்டார் . நாம் எப்போதுமே யாராவது நல்லவராக்கட்டும் என்றூ மட்டும்தான் யோசித்துப் பழகி விட்டோம் நாமும் அதற்குத் தகுதி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பயம் விடாது துரத்திக் கொண்டேதானே இருக்கிறது என்ன செய்ய ?

அவர்கள் கூட என்னவோ பரவாயில்லை இங்கு .அவர் புதைக்கபடும் முன்னே எத்தனை விமர்சனங்கள் ? பேச்சு உரிமை இருக்கிறது என்ற ஆவேசத்தில் ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் மரணதிற்கான  அடிப்படை அஞ்சலி கூடத் தெரியாமல் விமர்சிப்பதுவும் பேசுவதுவும் அதை எந்த வித கூச்சமும் இல்லாமல் ரேட்டிங் எகிறலுக்காக சில மீடியாக்கள் ஹைலைட் பண்ணுவதுவும் எப்போது மாறுமோ தெரியவில்லை. பாகிஸ்தான் அணு வி்ஞ்ஞானி அப்துல் காதர் கான் அப்துல் கலாம் ஒன்றும் மாபெரும் விஞ்ஞானி கிடையாது என்றூம் அவர் எல்லா விஞ்ஞானிகளையும் போல சாதாரண விஞ்ஞானிதான் என்று கூறியிருக்கிறார்.இதைச் சொன்ன இவரை வைத்துதான்  பாகிஸ்தான்  அணு ஆயுதச் சோதனையையும் நடத்தியது. இதே கானை தேசதுரோகம் செய்து விட்டார், நாட்டின் அணு ஆயுத ரகசியங்களை விற்று விட்டார் என்று கூறி பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலிலும் வைத்தது.அப்படி எதுவும் அரசாலோ நாட்டு மக்களாலோ எந்த குற்றமும் அற்ற அவரை விமர்சிக்கும் முன் அதுவும் அவர் உடல் அடக்கம் செய்யும் முன் பேசுவது எவ்வளவு மனிதாபினம் உள்ள செயல் ?

 தன் வாழ்வின் திருப்தி என்று கலாம் நினவு கூறும் போது ,பொக்ரானில் அணு குண்டு சோதனையையோ அக்னி ஏவுகணை பற்றியோ சொல்லவில்லை.  அதற்கு பயன்படுத்தப்படும் காம்போசிட் மெட்டீரியல்களை ரீ சைக்கிள் செய்து இந்த கேலிப்பர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைத் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் செயற்கை கால் நான்கு கிலோ எடையில் தயாரிப்பதை 400 கிராம் அளவுக்கு எடை குறைக்கும் யுக்தியை கண்டுபிடித்ததும் ,  அதை அணிந்து கொண்ட குழந்தைகள் நடப்பது மட்டும் அல்லாமல் வேகமாக ஓடினர். இதனைப் பார்த்த அவர்களது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அப்போது கலாம் பெரிய திருப்தி என்கிறார் என்பதை நினத்துப் பாருங்கள்

அது மட்டுமா இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் இப்போது இரத்த குழாய்களுக்கு ஒரு ஸ்பிரிங்கை வைத்து குழாயை பெரிதாக்குகிறார்கள். அதை ஸ்டென்ட் என்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் இந்த ஸ்டென்ட் விலை அதிகமாக இருந்தது.  1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இந்த ஸ்டென்டுக்கு அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.இதே போல கால் மூட்டு அறுவை சிகிட்சையின் போது பயன்படுகிற ஸ்டீல் பிளேட்டுக்களுக்கு மாற்றாக சிரமங்கள் குறைந்த புதிய வகை பிளேட் ஒன்றையும் கலாம் கண்டு பிடித்தார்.அது ஒன்று போதும் .அப்படி ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் அபிப்ராய பேதம் கொண்டால் மக்கள் உங்களை மன ஊனம் கொண்டதாக நினைத்து விடும் அபாயம் உண்டு .சுதாரித்துக் கொள்ளுங்கள் .பிரபலங்களை தாக்கிப் பேசி பெயர் வாங்கிக் கொள்வது அரசியல் சாத்தியமாக இருக்கலாம் .

விவேக் தனது இரங்கல் பேச்சின் போது கலாம் அணிந்து கொள்ள இரண்டே கோட்டுகள்தான் வைத்திருந்தார்.அதில் ஒரு கோட்டில் பின்புறம் லேசாக தையல் விட்டிருக்கும்  என்றார் .நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன் எனது பணியில் எப்போதுமே இறைவனை ஒரு பங்குதாராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். என அக்னிக் சிறகுகளில் அவர் குறிப்பிடுகிறார்.அதனால்தான் அந்த எளிமையால்தான் அவர் மஹாத்மா கலாம் ஆனார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் போராடிய அந்த எளிய குடும்பத்திலிருந்து விஞ்ஞானியாகவும் ,முதல் குடிமகனாகவும் உயர்ந்தவர் .அவர் சில்வர் ஸ்பூன் பிறப்பல்ல .அப்படிப் பிறந்து பீரங்கி பேர ஊழல் செய்தவர்களைக் கூட அவர்கள் இறப்பிற்குப் பிறகு இந்தத் தேசம் மறந்து விட்டது.ஆனால் முழுமையான வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த பேராத்மாவைப் பற்றி மாற்றுக் கருத்து வைத்து இருந்தால் உங்களையே உங்களால் மன்னிக்க முடியாத ஒரு பாவத்தை செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

தன் தாயை நினைவு கூறும் வகையில் அவர் எழுதிய கவிதையை படியுங்கள் அவர் எங்குப் போயிருக்கிறார் என்பது புரியலாம் .

''தாய்'' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை....
 ''அம்மா... எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள். எனக்கு வயது 10 அது ஒரு பௌர்ணமி தினம் என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும், அம்மா நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்.. திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள் என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன குழந்தையின் வலிகளைத் தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!'' 
ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரைப் பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது... அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்...

 ''உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே, இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''! அன்பு நிறைந்த தன் தாயாரைப் பார்க்க கலாம் போய்விட்டார் .


இனி எதுவும் வேண்டாம் என்ற அந்த மாமனிதருக்கு இனியாவது இளைப்பாறட்டும் .அவர் பிறந்த நாளைத் தேசிய மாணவர் தினமாகவோ அல்லது இளைஞர் எழுச்சி நாளாகவோ கொண்டாடுங்கள் .அவருக்குத் தபால் தலை வெளியிடுங்கள் ,மணிமண்டபம் கட்டுங்கள் .அவர் வீட்டை அருங்காட்சியகமாக ஆக்குங்கள்.அவரில் பெயரில் விருது வழங்குங்கள் , இன்னும் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யுங்கள்.அதெல்லாம் காலத்தின் கரங்களால் பழசாகி விடலாம் ஆனால் அவரின் மரணத்திற்காக அவரை நேரில் பார்க்காத பிஞ்சு குழந்தைகள் மற்றும் மெழுகுவத்தி சுடர் முன் பள்ளிக்குழந்தைகள் விட்ட கண்ணீரும் , அவர் மரணத்தைச் சொந்த வீட்டு மரணமாக நினைத்த ஒவ்வொரு மனமும் போதும் அதற்கு எதுவும் இனி சமம் இல்லை .அப்படியே அதற்கும் மேல் எது இருந்தாலும் அவர் அன்பு அம்மா பார்த்துக் கொள்வார்கள் ,