சனி, 16 மே, 2015

களவுதான் கற்று(ம்) மறக்க வேண்டும்

புதுவையில் (1995 சமயம் ) தங்கியிருந்த போது நண்பர்கள் இருவருடன் காலை 7 மணிக்கு பேசிக் கொண்டேயும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் நடந்து வந்து கொண்டு இருந்தோம் .அப்போதுதான் சாலையில் கிடந்த ”அது” என் கண்ணில்தான் முதலில் பட்டது.பேச்சுச் சுவாரசியத்தில் நண்பர்கள் கவனிக்கத் தவற விட்டு இருக்கலாம் .சந்தேகமே இல்லை அது தங்க குருமாத்துதான் (சங்கிலி) !.

காரைக்குடி செட்டி நாட்டு நகை வகையில் சொல்லப்படும் குருமாத்து - கைசங்கிலி புதுச்சேரியில் கொஞ்சம் வேறு மாதிரியாகக் கைசங்ங்ங்கிலி ( நீளமாக ) கையிலிருந்து கழன்று விழுந்து விடும் அளவுக்குப் பெரிதாய் இருக்கும் .வெள்ளியில் செய்தால் நூறு கிராம் என்பதெல்லாம் சும்மா .அதர்க்கு மேல்தான் இருக்கும் .தங்கமாக இருந்தால் வசதிக்குத் தகுந்தது போல இருக்கும் .பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை  அணிவது  புதுவையில் வழக்கம் .

                 அப்படிப் பட்ட தங்கத்தில் செய்யப்பட்ட குருமாத்துதான் என் கண்ணில் அந்த வீதி வழியே நடந்து வரும்போது பட்டது .அதுவும் திறந்து இருக்கும் ஒரு பாத்திரம் முலாம் பூசும் கடை வாசலில் கிடந்தது .நண்பர்களிடம் சொன்னேன். உடனே என்ன மிசே (Monsieur) எங்க ? அந்த ஊர்க்கார நண்பர் அதிர்ந்தார். இப்படிக் கேட்ட புதுவை நண்பரின் தந்தை காவல் நிலையத்தில் ஏட்டு .(இன்னும் சில ஆண்டில் ஓய்வு பெறும் நிலையில்  இருப்பவர் .) தயங்கித் தயங்கி பேசிக் கொண்டே  சுமார் நூறு அடி அது கிடந்த இடத்திலிருந்து கடந்து, அந்த வீதியின் சந்திப்புக்கு வந்து நின்று விட்டோம்.

 சரியா பாத்திங்களா ஜீ ? இதைக் கேட்டது என் ஊர்க்கார நண்பர் . ஆம் என்றேன் .மீண்டும் இடத்தை உறுதி படுத்திக் கொண்டதும் அவசரமாக அவர்கள் கேட்ட முதல் கேள்வி எப்படி எடுப்பது ? அந்தக் கடைக்காரனுக்குத் தெரிந்தால் பேஜாரயிடும் என்றார் புதுவை நண்பர் .சில திட்டம் போட்டோம் கடைசியில் ஒரு திட்டம் பட்டை தீட்டப் பட்டது ( எடுக்கப் போவது தங்கமல்லவா ? ) நல்ல விசயத்துக்குத்தானே திட்டம் போடுகிறோம் என்பதால் ஒரு சுவாரசியமும் அதே சமயம் பதட்டமும் தொற்றிக் கொண்டது . நல்ல விசயத்துக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்றார் புதுவை மிசே .அது சரி !

       சரி ஒரு எண்ணம் பிறந்து விட்டது இனி நான் வேண்டாம் என்றாலும் அவர்கள்  விட வாய்ப்பு இல்லை என நன்றாகத் தெரிந்தது ,நான் அப்போது அதே குருமாத்து மாதிரி  வெள்ளியில் அணிவது பழக்கம் ஆனால் அது 30 கிராமுக்குள்தான்  இருக்கும்  .அதை எடுத்துக் கொண்டு எங்களில் யாராவது ஒருவர் கையில்  சுற்றிக் கொண்டே போவது போல போய் ,அந்த இடம் போகும் போது எதேச்சையாய் தவற விட்டு விடுவது போல தவற விட்டு  குனிந்து   எடுக்கும் போது அந்தத் தங்க குருமாத்தையும் சேர்த்து எடுத்து வந்து விட வேண்டும்.இதில் பயன் படுத்தும் நபர் அடையாளம் காணப் பட்டு விட்டாலும் அடுத்த முறை பார்க்கும் போது தெரியக் கூடாது .அப்படி எங்கள் மூவரில் என் ஊர்க்கார நண்பரை தேர்வு செய்தோம் .காரணம் அவர் இன்னும் மூன்று நாளில்

திருப்பதிக்கு மொட்டை போடப் போகிறார் .திரும்பி வந்தால் எனக்கே அவரை அடையாளாம் தெரியாத மாதிரி இருப்பார் !. அவரைப் போகவிட்டு விட்டு நான் பின்னாலேயே சைக்கிளில் போய் அவர் எடுத்தவுடன் அந்தத் தெரு முனையின் மறு பக்கம் போய்ச் சங்கிலியை எடுத்த நண்பரை அழைத்துக் கொண்டு, புதுவை நண்பர் தந்தை பணிபுரியும் காவல் நிலையம் போய் விட வேண்டும் இதுதான் திட்டம் .புதுவை நண்பர் தவற விட்ட சங்கிலியை தேடுவது போல எங்கள் நாங்கள் போன பின் அந்தக் கடை முன்னால் போய் அந்தக் கடைகாரரிடம் விசாரிக்க வேண்டும்  .காரணம் ஒருவேளை கடையில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் சங்கிலியை எடுத்த எங்கள் நண்பரை பார்த்து இருந்தால் எந்த அளவுக்கு ஆள் அடையாளம் உள் வாங்கி இருக்கிறார்கள் என்பது அறியவே .இந்த நாடகம் !

                   இதைப் படிக்கும் போது ஏதோ திருட்டு விளையாட்டுப் ( professional thief game) போல உங்களுக்கு இருக்கலாம் எங்களைப் பொறுத்தவரை உரியவரிடம் அந்தச் சங்கிலிப் போய்ச் சேர வேண்டும்.சில சமயம் நல்ல விசயத்தைச் சரியாகக் கொண்டு செல்வதுதான் கஷ்டம் என்பது அங்கு அந்தத் திட்டம் போடும் போதுதான் தெரிந்தது .

                    இதே போல 5 ஆவது படித்து கொண்டு இருக்கும் போது, உணவு
இடைவேளை முடித்து வரும்போது  நானும் நண்பனும் நடு ரோட்டில் கிடந்த வெள்ளிக் கொலுசு   எடுத்துப் போய் பள்ளியின்  வகுப்பாசிரியரிடம் கொடுக்க, அவர் அதை தலைமையாசிரியரிடம் கொடுத்தார். நாங்கள் பள்ளி அசம்பிளியில் வைத்து பொதுவில் பாராட்டப்பட்டோம் .ஆனால் அதை இழந்தவர்கள் நிச்சயமாய் எங்கள் பள்ளிக்கு தேடி  வந்து    கேட்கப் போவதில்லை   அது அறியாத வயசு .ஆனால் இங்கு கதையே வேறு .

யோசித்த படி  அவர் எடுத்து சென்று விட்டார் . நான் அந்தக் கடையைச் சைக்கிளில் கடந்து அவரை அழைத்துச் செல்லும் போது கவனித்தேன் கடையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் எந்தச் சலனமும் இல்லை .அப்போது அங்கு மூன்று பேர் கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள் .ஒரு வேளை நண்பர் எடுக்கும் போது கவனித்து இருந்தால் வெளியே வந்தாவது என்ன என்று பார்த்து இருப்பார்களே ? கடைசியாக தேடிக் கொண்டே புதுவை நண்பரை நேரே காவல் வரச் சொல்லியிருந்தோமே அதுவும் நடந்து விட்டது.

                  காவல் நிலையத்தில் , புதுவை நண்பரின் தந்தை கோர்ட் வரையிலும்  சென்று விட்டதாக சொன்னார்கள் .வரும் நேரம் என்பதுவும் சொன்னார்கள் . காத்து இருந்தோம். அப்போது புதுவை நண்பரிடம்  அந்தக் கடையில் யாராவது பார்த்து விட்டார்களா என்று  கேட்ட போது , ஆமாம் நல்லாவே கவனித்து இருக்கிறார் அந்தக் கடை ஓனர் . கடை திறந்து  அரைமணி நேரமா உட்கார்ந்து இருக்கிறோம் நாங்கள் யாரும் கவனிக்கவே இல்லை. ஒரு குள்ளமாத் தடிப் பய இங்க கிடந்த பவுனுல செஞ்ச குருமாத்துன்னு நினைக்கிறேன் அதை எடுத்துட்டுப் போயிட்டான் பாரு மிசே ? சரி அவனுக்கு அதிருஷ்டம் என்றும் புலம்பினாராம் .அடப்பாவி நல்லா கவனிச்சுட்டானே அந்த ஆள் என்று நண்பர் பயந்து விட்டார்  .நண்பரின் தந்தை வந்தவுடன் கொடுத்து விட்டு வந்து விட்டோம் .

 சங்கிலியை எடுக்கும் போது அடையாளம் காணப்பட்ட என் நண்பர்
அதற்குப் பிறகு புதுவையிலிருக்கும் வரை நண்பர் (மொட்டை போட்டு திரும்பி வந்த பிறகும்) குருமாத்து எடுத்த அந்த வீதி வழி மறந்தும் கூடப் போனதேயில்லை ! நல்ல விசயங்கள் செய்யும்போதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டியாய் இருக்கிறது .அல்லது பயப்பட வேண்டியதாக இருக்கிறது ..
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக