செவ்வாய், 22 மார்ச், 2016

ஆண்கள் அழுவது வெளியே தெரிவதில்லை !


                  ஆண்கள் அழுவது சில சமயம் வெளியே தெரிவதில்லை ! இப்படி ஆரம்பிக்கும் இந்தப் பதிவு ஒரு விதக் கோழைத்தனமான் பதிவாகக் கூட உங்கள் மனதில் நினைக்கலாம் .ஆனால் இந்த உலகில் அப்பாக்களின் அழுகையை மொழிப் பெயர்க்க யாருமில்லை . கம்பீரமாகவே நடித்து விட்டுத் தன்னால் எதோ ஒன்று முடியாதபோது அதுவும் தன் குழந்தைகளின் படிப்புக்கோ,திருமண விசயத்திலோ நல்லது என்று தெரிந்த விசயத்தைச் செய்ய முடியாத நிலை வரும் போது எவ்வளவு பெரிய சாதனை செய்த அப்பாவானாலும் முகம் பொத்தி அழுக வேண்டிய நிலை வருமே அந்த நாளை சில சமயம் மறக்கவோ அல்லது மறுக்க முடியாது . அப்படிப்பட்ட அப்பாவில் நானும் ஒருவன். 

            விசயம் இதுதான் .இன்று அந்தக் குழந்தை ஏசு பள்ளியில் என் பையனைச் சேர்த்து விட மாமானாருக்குத் தெரிந்த ஒரு காவல் துறை அதிகாரி மூலம் அந்தப் பள்ளியின் தந்தையை ( Father) சந்தித்தோம் .பொதுத்தேர்வு நடக்கிறபடியால் அவரைச் சில நிமிடமே சந்திக்க அவகாசம் கிடைத்தது. 

           வரவேற்றவர் மரியாதை நிமித்தமாகச் சில வார்த்தை அந்த அதிகாரியிடம் பேசிய பள்ளித் தந்தை என்னிடம் திரும்பி இப்போ உங்க பையன் எங்க படிக்கிறான் ? என்றார்.சொன்னேன்.அதுவுமே நல்ல பள்ளிதானே என்றவர் தொடர்ந்து எல்லாமே இங்கதான் படிகணுன்னு ஆசைப்பட்டா முடியுமா ? எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்கன்னார் ? 

         அவரின் பொதுத்தேர்வு இந்நேரம் அரம்பித்து இருக்குமே என்ற அவசரமும் ஏன் கழுதறுக்கிறீர்கள் என்ற அயற்சியும் ஒரு சேரக் கேள்விகளாய் வந்து விழுந்தது.சோதனைத் தேர்வு முடிந்தவுடன் யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்கினாத்தான் மற்றபடி உங்களுக்கு என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்றார். 

 நன்றி சொல்லி விட்டு வெளியேறினோம். 

அந்த அதிகாரியின் வேலை நேரத்தை அபகரித்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டு ,விடைபெற்றேன் . 


             வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கிப் பயணப்படும் போது, எனக்குப் பள்ளித்தந்தையின் அந்தக் கேள்வி எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ?’ என்ற மீண்டும் கேட்டது.  எனது தந்தை என்னை ஆறாம் வகுப்புக்கு திண்டுக்கல் 1980ல் புனித மரியன்னைப் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டபோது இதே கேள்வி சிலர் கேட்டார்கள் .அப்போது அவர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார் . திண்டுக்கல்லில் மூன்று விதமான பள்ளிகள் அப்போது இருந்தது.ஒன்று அடித்தே படிக்க வைக்கும் பள்ளி.இன்னொன்று எப்படியோ படி எனக்கு மாசம் ஆனால் கவர் கொடுத்திடுவாங்கன்னு கூசாமச் சொல்லி பிழைப்பு நடத்தின ஆசிரியர்களின் புனிதத் தன்மையைத் தூக்கி எறியும் சில பேர் இருக்கும் அரசுப் பள்ளி!.இதற்கு இரண்டுக்கும் நடுவே அப்பா என்னைச் சேர்க்க விரும்பியது புனித மரியன்னைப் பள்ளியில்  . காரணம் அங்கு ஒழுக்கம் கல்வி இரண்டும் இரு கண்களாக இருந்தது. அடித்துப் படிக்க வைப்பதில் நம்பிக்கையற்றவர்கள் அங்கு இருந்த ஆசிரியர்கள் .ஆனால் அக்கறை மிகுந்தவர்கள் .எனது மூத்த சகோதரர் அங்குப் படித்தவர். ( திண்டுக்கல் ஐ.லியோனி, என் அண்ணனுக்கு சீனியர். ) அவர் நல்ல முறையில் தேறினாலும், குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்புக்கு அனுப்பவில்லை .

அப்பா அப்போது நினைத்து இருந்தால் இப்போது என்னைப் போல யாராவது ஒரு முக்கிய நபரை என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம் ஆனால் சிபாரிசை அவர் வெறுத்தார்.சிபாரிசினால் யாருக்கோ தகுதியான ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப்பறிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் . விளைவு ? ஐந்தாம் வகுப்பு வரை தன் சொந்த பெயரைக்கூடத் தமிழைத் தவிர வேறு எதிலும் எழுத தெரியாத எனக்கு எப்படி அந்தப் பள்ளியில் கிடைக்கும் ? அரசுப் பள்ளிதான் என் தகுதிக்கு வாய்ப்புத் தந்தது. 


ஒரு வேளை நான் அந்தப் புனித மரியன்னையில் படித்து இருந்தால் இங்கு வந்து பதிவுலகத்துக்கு வேண்டுமானால் வராமல் போயிருப்பேன்.ஆனால் அந்தப் பள்ளியில் நடத்த ஆள் இல்லாது போனதால் கைவிடப்பட்ட , எனக்குப் பிடித்த தேசிய மாணவர் படை (NCC ) அல்லது சாரணர் படையிலோ (Scout) சேர்ந்து, ராணுவத்தில் சேரும் ஒரு வாய்ப்பைப் புனித மரியன்னைப் பள்ளியின் மூலம் பெற்று இருப்பேன் ! அது என் கனவு .அந்தக் கனவையும் அந்தப் பள்ளியில் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.அங்கு படித்த என் வகுப்புத் தோழர்கள் பெரும்பகுதிப்பேர் தேராமல் அவர்களின் விவசாயத்துக்கு போய் விட்டார்கள் . சிலரை இப்போது முனிசிபால்டி குழி தோண்டும் பணியிலும் இன்னும் சிலர் அரசியல் வாதிகளாய் வலம் வருகிறார்கள் .நிறையப்பேரின் விதியை மாற்றிய பெருமை அந்த பள்ளிக்கு உண்டு.

அரசுப் பள்ளிகளில் காசு இல்லாதவர்கள் மட்டும் சேரவில்லை,வெகு தூரத்திலிருக்கும் கிராமத்துப் பள்ளியில் விவசாய வேலை மற்றும் மாடு மேய்த்த நேரம் போன பிறகு ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் , வேறு பள்ளியில் தோற்று ஒதுங்கினவர்கள் ,என்னைப்போல அடி முட்டாள்கள் எல்லோரும் படித்தோம் .எங்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவில்லை வேறு வழியில்லாது சில ஆசிரியர்கள் அடித்துப் படிக்க வைத்தார்கள்,அதிலும் முக்கியமாக விதியின்  பரிசோ தெரியவில்லை அந்தப் பள்ளியின் பிரேமா டீச்சர் ,அரங்க நாயகப்பெருமாள் ,ராபர்ட் சார் ,ஜோசப் சார் போன்ற தமிழாசிரியர்கள் இன்றும் நான் வணங்கிக் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் . அதே போல எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ’பாட்டனி மாஸ்டர்’சுந்தர மகாலிங்கம் சார் .அவருக்கு மற்ற ஆசிரியர்களே பயப்படுவார்கள் வகுப்பில் என்னை மற்றவர்கள் போல நடத்துவார்.மாலைத் தன் வீடு வரை என்னை அழைத்துச் சென்று  சாப்பிட வைத்திருக்கிறார்.ஆனால் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எதனால் என்பது இதுவரை எனக்குத் தெரியாது .


                  படிப்புதான் வரவில்லை இந்தப் பசங்களுக்குப் பொதுச் சேவையிலாவது பயன்படுத்தலாம் என்று நினைத்தரோ என்னவோ தெரியவில்லை சுந்தரமகாலிங்கம் சார் -  இயற்கைக் கழகம் (Nature Club) ஒன்றை ஆரம்பித்து,அதில் என்னைத் தலைவனாய் ( President ) போட்டுத் திண்டுக்கல் ஒடுக்கம் மர வளர்ப்புத்திட்டத்தில் பள்ளியின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் பங்கு பெறச்செய்து லட்சகணக்கான மரம் நடச்செய்து பள்ளிக்குப் பெருமைச் சேர்த்தார்.அந்த செய்தி அப்போது ’ஹிண்டு’ பத்திரிக்கையில் முதல் பக்க கட்டச்செய்தியாய் என் பெயருடன் வந்தது.பார்த்தீனியம் செடியளிப்புத் திட்டம்,மேலும்  குஜராத் மாநிலத்தின் ஜல்கானில்,  இந்திய அளவில் நடந்த மரம் நடுவிழாவில் கலந்து கொள்ளச் செய்தார் . இன்றும் நான் திண்டுக்கல் போகும் போது வெகு தூரத்திலிருந்து நின்றுப் பார்த்தாலே அந்த மரங்கள் தெரியும் அதில் ஒரு மரமாவது நான் நட்டுப் பிழைத்த மரமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன் .அந்தத் தோப்பின் மரங்களில் ஆணி வேர்களுக்கு நிச்சயம் என் பாட்டனி மாஸ்டர் சுந்தரமகாலிங்கம் சார் யாரெனெத் நிச்சயமாகத் தெரியும் .இயற்கை எப்போதும் மனிதனை மறக்காதல்லவா ? 


அதே சமயம் இந்தப் பசுமையான நிகழ்வுக்களுக்கு எதிராக  வாழ்நாள் முழுதும் மாறாத வலி நிறைந்த தழும்புகளையும் அங்குதான் பெற்றேன் . எட்டாவது படிக்கும் போது ஒரு பெண் ஆசிரியை  சொந்த வீட்டில் மாடி மேல் நிலைத்தொட்டிக் கழுவும் வேலைக்கு மாதம் ஒருமுறை அனுப்ப படுவதும், ஒன்பதாவது படிக்கும் போது வேதியியல் ஃபார்முலா தெரியவில்லை என்பதால் எங்கள் வகுப்புப் பிரம்பு உடைந்தும் அடுத்த வகுப்பு பிரம்புவரை அடித்தே உடைத்து அதையும் எங்கள் காசில் வாங்க வைத்து இருந்த ஆசிரியர்களும் இருந்தார்கள்.பத்தாவது படிக்கும்போது வேலை நேரத்தில் ஆசிரியர்களுக்குள்ளே வட்டி கொடுத்து வசூல் வாங்கச் சென்று விடும் என் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவர் வகுப்பை ’டியூசனில்’தான் எடுப்பார் . அதற்கு என்னால் போக முடியவில்லை .காரணம் வெளியில் கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கு (அடித்தே படிக்க வைக்கும்) பள்ளி ஆசிரியரிடம் படித்துக்கொண்டு இருந்தேன்.எனக்கு இருந்த கல்வி புலமைக்குத் தமிழ் வரலாறு தவிர எல்லாமே டியூசன் படிக்க வேண்டிய சூழ்நிலைதான்.ஆனால் வசதியில்லை .அதைக் அந்த வட்டிக்கார ஆசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை. தேவை இல்லாதுக்கெல்லாம் அடிப்பார்.அதிலும் என்னை ’லீடராக’போட்டுப் படிப்பையும் கெடுக்க முயற்சி தீவிர முயற்சியும் கூட எடுத்தார் .இதெல்லாம் பரவாயில்லை பத்தாவது பொதுத்தேர்வுக்குச் சில நாள் முன்னால் என்னையும் நண்பர் சுகுமாரையும் அழைத்து ,நீங்கள் இரண்டு பேரும் ஹாலுக்குள் துண்டுச் சீட்டுக்கள் கொண்டு போங்கள் .கேள்விகளுக்கு விடைகளை எழுதி (அவரிடம் டியூசன் படித்த) எனது சக மாணவர்களுக்குக் கொடுத்து உதவச்சொன்னார்.அப்படிப் பட்ட  அபத்தமும் அங்கு அரங்கேறியது. 


இப்போது யோசித்துப் பாருங்கள் இந்தக் கேள்வியை ! எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ? என்ற அந்தப் பள்ளியின் தந்தைக்கு பதிலாக என் மொத்த வலிகளையும் அவர் தந்த சில நிமிடத்தில் சொல்ல முடியுமா ? பண்ணிரெண்டாம் வகுப்பில் வேதியல் மற்றும் இயற்பியல் சமண்பாடுகள் புரியவில்லையே என்று புத்தகத்தைப் பார்த்து அழுது ,அழுது ஓய்ந்துபோய் வெறித்து ஓட்டு வீட்டின் கூரையைப் பார்த்து தானாய் சிரித்துக்கொண்டதைத்தான் சொல்லவா ? திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல நம் தாய்நாட்டின் முந்தையை (குறிப்பிட்ட) ஆண்டு வரலாறுகள் அத்தனையும் ஆங்கிலத்தில் மட்டுமதான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே அதை எப்படிப் படிப்பது என்று கேட்கவா ? 

இது மட்டுமா ? தீபாவளிக்கு அலுவலகம் சார்பில் நான் தயாரித்த ’ட்ராஃப்ட்’ மெயிலைப் பார்த்து ஒரு சின்னத் தவறுக்கு முதலாளி பல பேர் முன்னால் சொல்லிச் சிரித்த போது அவமானத்தில் வலித்தது சொல்லவா ? சரி இதெல்லாம் போகட்டும்.  என்னைப்போல என் பையனும் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான் (அதிலும் அங்கு ஒரு யோகா மாஸ்டராக இருக்க ஆசைப்படுகிறான் . அப்படியெல்லாம் இருக்காத் தெரியவில்லை ! ) அவன் கனவையாவது நிறைவேற்றுங்களேன் என்ற ஆதங்கத்தில் பார்த்து விட்டு என் அலுவலகம் திரும்போது தலைக்கவசத்திற்குள் வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் நான் அழுதேன்.நிறைய ஆண்கள் வெளியே தெரியாமல் என்னைப் போலத்தான் அழுகிறார்கள். 


அழுவதற்கு வில்லியம் ஜேம்ஸ் எண்ணங்களின் பிரதிபலிப்புக் காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு நடையைக் கட்டி விட்டார். அவருக்குத் தெரியுமா ? இந்திய ஆணுக்கு இருக்கும் பிரச்சனைகள் எத்தனை என்று ?... பல வருடம் கூடப் படித்த நண்பர்களை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது தொடங்கி , எம்பது மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் மூஞ்சிய கூடப் பார்க்காமல் பேப்பர் கொடுத்த டீச்சர் நாற்பது எடுத்த போது உரக்கக் கத்திச் சொல்லிப் பக்கத்து வகுப்புக்கே கேட்கும் அளவுக்குக் கூப்பாடுப் போடும் போது, இந்த உலகில் எவனுக்குமே பிடிக்காமல் போன தீபாவளிப் புது ஆடையைப் பார்த்தப் போதெல்லாம் வந்த அழுகை ,வயது ஒரு பக்குவம் தந்து நம் வீட்டில் அப்போதுதான் அக்காவோடோ அல்லது தங்கையோடோ ஒரு புரிதல் வரும் நேரத்தில் யாராவது ஒருவனுக்குக் கட்டிக்கொடுத்து அந்த மாமனுக்கோ மச்சானுக்கோ மெட்டிப் போட்டு அனுப்பி வைக்கும் போது , போயிட்டு வரேன் அப்பான்னு போகும் அக்காவை மவுனமாகப் பார்த்து கொண்டு இருக்கும் அப்பாவை பார்க்கும் போது , அடுத்து வந்த அக்காவை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்று எப்போதாவது சொல்லும்போது அந்த அக்கா ,அவருக்குப் பிடிக்காது என்று பிரித்துப்பேசி கொண்டு வந்து விட முடியுமா முடியாதான்னு நடையை கட்டும் போது ...நல்ல மேட்ச்சில் நம்ம பால் மட்டும் அந்த வீணாப் போனவன் தப்பாய்த் தொட அது பவுண்டரி லைனை தாண்டும் போது .. செஸ் விளையாட்டில் விளையாடத் தெரியாதவனின் சிப்பாயிடம் ராணியை பறி கொடுக்கும் போது .. ரம் அண்ட் சூட்டில் கீழே கிடந்த சீட்டை கவனிக்காமல் நழுவ விட்ட வாய்ப்பின் போது.. ரெட்டுக்கு ஃபாலோ போடுகிறேன்னு அதை எதிராளின் மவுத்தில் நிறுத்திக் கொடுக்கும் போது..சில சமயம் இதெல்லாம் ஆத்திரமும் அழுகையுமாய் பீறிடும் ...


கொடுத்த காதல் கடித்ததிற்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தையில் தூக்கி எறியாமல் அந்தப் பெண் அதைத் தலமையாசிரியர் அறைவரைப் புகார் அளித்து ,அதற்கு அப்பாவை வரவைத்து அங்கு நிறுத்திய போது ,அது உலக அளவில் பெரிய குற்றம் என்ற கூப்பாடுப் போட்டுப் பல வாரம் பேசாமல் பாக்கெட் மணியும் கொடுக்காத அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்... கேட்டக் குரூப் கிடைக்காமல் கிடைத்த குரூப் பிடிக்காமல் வைத்த அரியரை எதாவது ஒரு விசேசத்தில் தேடித் தேடிப் பெண்களைப் பெற்ற அம்மாக்களிடம் மட்டுமே நம் அம்மா சொல்லும் போது..காதலுக்கு உதவும் போது பஞ்சராகும் வண்டி மீது வரும் கோபம், தேடி வந்த பெண்ணைத் திருவிழாவில் தவற விட்டு கடைசி வரை கண்டு பிடிக்காமல் வீடு திரும்போது..அடித்துப் பிடித்து ஏறிக்குதித்து டிக்கட் கவுண்டரில் கை நீட்டும் போது டிக்கட் இல்லையென்று டப்பென்று அடித்துச் சாத்தும் போது , நண்பனிடம் வாங்கிய அதுவரை ஓட்டாத பைக்கைக் கியர் மாற்றிப் போட்டு அசடு வழியும் போது, பிடிக்காத பைக்கைச் சொல்லாமல் கொள்ளாமல் அப்பா வாங்கி நிறுத்தும் போது,பிடித்த ஹீரோ டம்மிக் கதையில் நடித்து ஃபிலாப் ஆக்கியது மட்டுமல்லாமல் அதை டிவிப் பேட்டியில் வந்து, என்னோட கேரியர்ல முக்கியமான படம்ன்னுக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாய்ச் சொல்லும் போது மொத்த வீடும் திரும்பி நக்கலாய் நம்மைப் பார்க்கும் போது ..

நம் தெருவிலே இருக்கிற ஒரே ஒரு ஃபிகரை எவனோ ஒருவன் தெரு முனையில் ட்ராப் பண்ணி விட்டு ,திரும்பி நமக்குக் கைக் காட்டும்போது ,பக்கத்து வீட்டுக் குட்டிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த போது தவறாக உச்சரித்த ஆங்கிலச்சொல்லை ஒட்டுக்கேட்டு அதைப்போய்த் தெருவுக்கு வரும் விளக்குமாறு விற்கும் பெண் வரை முதல் வீட்டு அங்கிள் தேடித் தேடி வெடிச்சிரிப்புடன் சொல்லிக் காட்டும் போதெல்லாம்,நம்மிடம் இருக்கும் மொபைல் போன் ஹேங் ஆகி வெறுப்பேற்றும் போது ...இன்னும் எத்தனை வலிகள் ஆணாய்ப் பிறந்தவனுக்கு ? 


               ஆனால் பிறக்கப் போகும் குழந்தையைப் பத்து மாதம் ஆணால் தூக்கிச் சுமக்க முடியாது .பெண்களின் பிரசவ வலியை நிச்சயமாய் ஒரு ஆண் மகனால்  புரிந்து கொள்ளவோ முடியாது . ஆனால் அன்று அந்தப் பிரசவத்தின் போது மருத்துவமனைக்கு வெளியே இவள் சின்ன வலிக்கெல்லாம் தாங்க மாட்டாளே எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ? என்று கவலைப்படத் தொடங்கிய ஆண்களின் அழுகையும்   வெளியே யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீர் துளிகளும்  இந்த மண்ணை இன்னும் ஈரமாகத்தான் வைத்துக்கொண்டு இருக்கிறது... 

வியாழன், 17 மார்ச், 2016

பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...” நூல் மதிப்புரை.



சன் டிவியில் தீபாவளி , பொங்கலைக் கொண்டாடுகிறார்களோ இல்லையோ பட்டிமன்றங்களை இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் திரு.சாலமன் பாப்பையா,திருமதி.பாரதி பாஸ்கர்,திரு.ராஜா இவர்கள் கூட்டணியை நம்பியே இன்றும் சன் டிவி மக்கள் மனதில் நிரந்தரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்று வாய்க் கூசாமல் சொல்லலாம் ! இன்று இருக்கும் பிரபலத்துக்குப் பாரதி பாஸ்கரும் ,ராஜாவும் இன்னும் கூடத் தங்களை வளர்த்து விட்டவர்களானாலும் மேற்படித் தொலைக்காட்சியை எதோ ஒரு நன்றியுணர்வோடுதான் தாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது !

பாரதி பாஸ்கர் ஆனந்த விகடன் மூலம் எழுதிய கட்டுரைத்தொகுதி அடங்கிய - ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...” நூல் வாசிக்க நேர்ந்தது (விகடன் பிரசுரம்,96 பக்கங்கள், விலை 70 ரூபாய்..ஓவியங்கள் :ஷிவ்ராம்) அதைப்பற்றித்தான் இங்குப் பேசப்போகிறோம் .

எழுதத் தெரிந்தவர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது ஆனால் பேச தெரிந்தவர்கள் அற்புதமாக எழுதுவார்கள் என்பது திருமதி பாரதி பாஸ்கராலும் நிருபணமாகியிருக்கிறது ! மேடையில் முழங்குவது போலத் தனது எழுத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் .அதிலும் அவரின் பட்டிமன்ற அதே பேச்சுத் தொணியில் கொஞ்சமும் விட்டுத்தராத் தன்மை எழுத்திலும் அப்படியே இருக்கிறது . நுணுக்கமான பொருள் செறிவுடன் , மனிதாபிமான இழையோட்டத்துடன் இந்த நூலின் மூலம் சுமார் 89 பக்கங்களில் ( மொத்தப் பக்கம் 96 ) ஒரு மேடைப்பாடம் நடத்தியிருக்கிறார்.


ஆண்கள் நிற்க ...

இருபது தலைப்புகளில் அவர் படைத்த கட்டுரைகளில் பெரும்பகுதி ஆணாதிக்க விருட்சத்தின் வேர்களில் சுடு நீரை ஊற்றும் முயற்சியாகவே இருக்கிறது ! கட்டுரை 1,2,7,13,19 கணவர்களால் பாராட்டப்படாத பெண்கள் பற்றி
”வீடு பாராட்டாவிட்டாலும் , நேசிக்கிறது”என்ற தலைப்பில் பேசும் கட்டுரையில் சின்னச் சின்னப் பாராட்டுகளுக்கு ஏங்கும் பெண்களுக்கான பரிந்துரைத்துப் பேசும் அவர் “அங்கீகாரத்துக்கான ஏக்கம் ஆண்களின் குரோமோசோம்களை விடப் பெண்கள் குரோமோசோம்களில் அதிகம் என்று விஞ்ஞானம் சொல்கிறதாம்” (பக்.10). இது கிடைக்காதபட்சத்தில் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் பேசுகிறார் .

மேலும் “கயமை”என்ற கட்டுரையில் பெண்களைச் சமூகமே ஒருவித பயன்படும் பொருளாகப் பார்க்கிறது .எல்லா விளம்பர பொருள்களிலும் பெண்களே காட்சி பொருளாவதாகச் சொல்வதோடு ,அதிலும் திரைப்பாடல்களில் பெண்களை “மார்க்கெட் தோறும் கொட்டிக்கிடக்கும் காய்கறிகளோடு பெண் உடலைச் சம்பந்தப்படுத்தும் கருத்து நிறைந்த சினிமாப் பாடல்கள்” (பக்.14) என்ற நிலைதான் இன்று நிலவுவதாக விரக்தியில் பதிவிடுகிறார்.

சமூகத்தின் எல்லா விமர்சனப் பார்வைகளும் பெண் மீதே வைக்கப்படும் முட்டாள்தனம்பற்றியும் ,இளம் பெண்களை உடைகளிலும் நடைகளையும் கண்டிக்கும் சமூகத்தைத் தனது எழுத்து மூலம் கோபமாகப் பார்கிறார்,பணியிடங்களில் சக ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் ‘பாலியல் சீண்டல்கள்’ பற்றிக் கொந்தளிக்கிறார். முடிவாகப் பெண்களின் வாழ்வே போராட்டம் இருந்தாலும் ஆண்கள் வாழ்வில் நடந்த அத்தைனையும் சாதனை என்று மட்டும் பதிவிடப்படுவதாக ஆதங்கப்படுகிறார்.


பெண்கள் கவனிக்க ...

”என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது !” என்று பெருமைப்படும் பாரதி பாஸ்கர் பெண்களுக்கெனெ நிறைய அக்கறையைக் கொட்டிக் கொட்டி எழுதிய கட்டுரைகள் 4,6,9,10,14,16,17 போன்றவை. சின்ன,சின்ன மனச்சுமைகளை அவர்கள் தூக்கிச் சுமப்பது ,விட்டில் குழந்தைகள் முதியோர்களிடம் நாம் சின்னச் சின்ன விசாரிப்புகளை அவர்கள் மேல் அக்கறையாக நீளும் ஒரு கையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்! அழகு என்ற பெண்களின் கற்பனையான மன பிம்பம் ! கரைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறார்..

”அக்னி மூளையின் அறை … பெண்களுக்கெல்லாம் சிறை ! “ என்ற பதிவில் “திரும்பத் திரும்ப நிகழும் சமையல் வேலை கையில் அள்ளிய நிதி நீர் போல நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரத்தை எல்லாம் நம்மிடமிருந்து ஒழுகச் செய்கிறது” என்று கவித்துவமானப் பார்வையில் தன் வேதனையைப் பகிற்கிறார்.வீட்டின் நிதி நிலமையில் பெண்களின் அறியாமை பற்றிப் பேசும் அவர் ,

” பிரியாத நட்பென்னும் பெரு வரம் வாய்க்குமோ?” என்ற பதிவில் பெண்கள் தங்கள் நட்பை ,வாழ்ந்த இடத்தை இழக்கும் சோகத்தை “பெரு நதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்வு நதியின் பயணத்தை ஒன்றாகவே தொடங்கிய பல மரங்களில் ஒவ்வொன்றின் பயணமும் வேறு வேறாகிப் போவது போல ..என்று மனம் கசிகிறார்.

இரண்டாவது குழந்தைகள் வளர்ப்பினைப் பற்றிய தன்னுடைய பார்வையை 3,8,12,15 பதிவுகளில் மிகத் தீர்க்கமாகப் பதித்துள்ளார் .”அதிலும் வலி நிரம்பிய இழப்புகள்… வராமல் இருக்கக் கடவோம் ”.என்ற கட்டுரையில் ”குழந்தைகள் பிறந்தவுடன் அதை வளர்க்கும் திறமையை இயற்கைத் தமக்கு உடனடியாக வழங்கி விடுகிறது என்று எல்லாப் பெற்றோறுமே நம்புகிறோம் ! என்ற தவறை உணர்த்துகிறார் .

மேலும் பெற்றோர்கள் எப்படி ஆதரவாக நடந்து கொள்ளா வேண்டும் என்று “மௌன வாழ்த்து” என்ற கட்டுரையில்,
வீட்டுப் பெண்களிடம் அம்மாக்களின் குரல் எடுபடாமல் போனதற்கான காரணத்தைப் பேசுகிறார் இங்கு .” பிடிக்காததைப் பெண் செய்யும்போது உடனே கத்தி ஆர்பாட்டம் செய்து என் பேச்சை இந்த வீட்ல யாரு கேக்கிறாங்க வில் முடிக்கும் அம்மாக்கள் இங்கு ஜெயிக்கவே முடியாது .ஆறப்போட்டுத் தனியாகப் பேசி ,நீ சாதிக்கப் பிறந்தவள் என்று நினைவூட்டினால் மட்டுமே இந்தத் தலைமுறை பெண் குஅந்தைகளை வழி நடத்தல் சாத்தியம்” என்று இந்தக்கால அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறார்.


இருபாலம் கடக்க...

இருபாலருக்கும் பொதுவாக அவர் பேசப்படும் கட்டுரைகள் 5,11,17 திருமணம் அன் பின் கணவன் மனைவிக்கு இடையே தொலைந்து போகும் காதலை அனுசரணையை ஆராய்கிறார். அடுத்து ஆண்களை விமர்சிக்கும் அவர் பார்வையைலிருந்து விலகி அல்லது பாவம் விடுங்கப்பா என்ற ரீதியில் முடிவாக ”பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான் என்ற கட்டுரையில் “பெண்களின் அக உணர்வில் ஒரு நாளும் ஆண் அவளுக்குப் போட்டியே அல்ல.இன்னொரு பெண்தான்”மன நல மருத்துவத் தோழி சொன்னதைப் பகிர்கிறார்.

மேலும் எதற்கெடுத்தாலும் பிரச்சனை, பிரச்சனை என்ற இருபாலருக்கும் ”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்”என்ற கட்டுரையில், 37 ஞாயிற்றுக் கிழமை செய்யாமல் தள்ளிப்போன கைப் பையையும் வீட்டு குளிர் சாதனப்பெட்டியையும் சுத்தம் செய்யும் வேலையைப் பற்றிய தனது மனப் போராட்டத்தையும் இப்படி நாம் மனதுக்குள் சேர்த்து வைத்து இருக்கும் தேவை இல்லாத விசயங்களைப் போக்க ஜப்பானிய .”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்” முறைப்படி ”மனசுக்குள் இருக்கும் கசடுகளை அப்படியே தள்ளி யாரிடமும் ஏன் நமக்குள்ளே கூட அதைப்பற்றிப் பேசாமல் புலம்பாமல் அடுத்த வேலை பார்க்கும் முயற்சிதான் இது” என்று ஒப்பிடுகிறார் !



என்னைப் பாதித்த இரண்டு கட்டுரைகள் 18,20 .

”அச்சம் தவிர்” என்ற கட்டுரையில் கண் பார்வைப் பறிக்கப்பட்ட யமுனா என்ற பெண்ணோடு ஏற்பட்ட நட்பையும் அவளைப் பார்த்து வியந்த தன்மைகளைப் பதிவு செய்யும் போது தன் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பாரதி பாஸ்கர் விவரிக்கும் போது கண்களில் நீ கசிகிறது ..

’அடுத்து அவர் தனது முன்னுரையில் ஓர் எழுத்தாளனின் எழுத்தனுபவம் எத்தனை மகத்தானது ’ என்று பேசும்போது உடல் நலமற்ற தன் அம்மாவை 2010 தீபாவளியன்றுப் பார்த்து விட்டு வந்து, அன்று இரவே எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பிய ”நேரில் நின்று … பேசும் தெய்வம் “ என்ற கட்டுரை எழுதிய இரண்டு நாளில் என் அம்மா உலக வாழ்க்கைப் பயணத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார் என்று எழுதி விட்டு ”அன்றுதான் உணர்ந்தேன் அந்தக் கட்டுரை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்று சொல்ல வேண்டும் என்கிறார் தனது மீளாத் துயரத்தைப் பதிவு செய்யும் கட்டுரை மிக உருக்கமானது .


முடிவுரை . 

நிறைய இடங்களில் பெண்களுக்காக மட்டும் பேசும் இந்நூல் ஆசிரியர் பாரதி பாஸ்கர் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு கவித்துவத்துடன் பதிவிடுகிறார் .அவரின் ஆண்கள் பற்றிய கோபம் மேடைகளில் கொப்பளிப்பது போல இங்குச் சிதறிப் பரவினாலும் அவருக்குள் ஒரு பொதுப்பார்வை இருக்கிறது .பெண்ணாய் இருப்பதால் பெண் சமூகம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற எல்லைகளைத் தாண்டியிருக்கிறார்.அதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் உண்மையான முகம்..

புதன், 16 மார்ச், 2016

அன்னை தெரேசா புனிதர் ஆனார் !


கடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா

              இன்று என்  முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது . 

               அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். செப்., 4ம் தேதி , அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறிந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது . அவர் ஆத்மா உலகை விட்டு பிரிந்து 19 ஆண்டுகாலம் ஆகியும் இன்றும் அன்பு என்ற சொல்லுக்கு அன்னை தெரேசாதான் என்று மனிதர்கள் மனத்தில் மரித்துப் போகாத உதாரணமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ! அவர் இந்தப் பட்டத்தைப் பெறும் தகுதிக்கான ஆய்விலா இவ்வளவு காலம் இருந்தார் ? 

 கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில்,அற்புதங்களை நிகழ்த்தியவர்களுக்குத்தான் புனிதர் பட்டம் தரப்படுகிறது .இது பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. 


         தனது வாழ்கையே அன்பின் வரலாறாக வாழ்ந்த அந்தத் தூய ஆத்மாவுக்கு இந்தப்பட்டம் ஏன் இவ்வளவு காலம் கடந்து வந்து இருக்கிறது என்பது கேட்க நமக்கு உரிமை இல்லை அதைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சபைதான் முடிவு செய்யும் அது.  

           உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் செயல்படும் போது இன்னும் என்ன தகுதியை எதிர்பார்கிறார்கள் ? இந்தப் பட்டத்தைப் பெற அன்னை தெரேசாவுக்கு என்ன தகுதி தேவைப்பட்டது ?

              அதற்கு நாம் புனிதர் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின், அவருக்குப் புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்வதற்கான வேலைகள் துவங்குகிறது. 

1. கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு நிலைகளில், முதல் நிலை, 'இறை ஊழியர்' என அழைக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் புனிதர் என நம்பப்படுவோரை, திருச்சபையால் ஏற்றுக் கொள்வதற்காக அளிக்கப்படும் முதல் பட்டமாக இது கருதப்படுகிறது. 

2. பிஷப்பால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்து, அவர் நற்பண்புகளை உடையவர் எனப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்பின், அவருக்கு, 'வணக்கத்திற்குரியவர்' என்ற பட்டம் வழங்கப்படும். 

3. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றி, சிறப்பான முறையில் வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் என்றும், மற்றவர்களின் நலனுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராக உள்ளார் என்பதை உறுதி செய்து, அதற்காக, அருளாளர் (முக்திப் பேறு) பட்டம் வழங்கப்படும். 

4. இந்த மூன்று நிலைகளும் முடிந்து, நான்காவது நிலையை எட்டிய பின், 'புனிதர்' பட்டம் வழங்கப்படும். இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை இது குறிக்கும். 


புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் ஒருவர் இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. அற்புதம் இந்த உலகின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம் .ஆனால் அந்த நாட்டின் திருச்சபை அதை அங்கீகரித்துச் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, நடந்த இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, அந்தச் செய்தி அனுப்பப்பட்டு இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். 

அப்படி நடந்த முதல் சம்பவம் கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் மோனிகாவை இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. குணமடையச் செய்து அற்புதம் நிகழ்த்தினார். 

இரண்டாவதாக , 2008ல், 35 வயது பிரேசிலைச் சேர்ந்த மூளை மூளையில் உருவாகிய கட்டியால் கோமா நிலைக்குப் போன ஒரு நபருக்காக அவரது மனைவி தெரேசாவைப் பிரார்தனை செதுகொண்டதன் மூலம் அந்தக் கட்டு கரைந்து குணமடைந்து விட்ட, இரண்டாவது அற்புதத்தை நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க, இப்போது போ பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். 

இதுவரை அன்னைத் தெரேசாவுக்குப் பெற்ற விருதுகள் . 


1962 – பத்ம ஸ்ரீ விருது 
1971 – 23வது போப் ஜான் அமைதி விருது 
1971 – குட் சமரிட்டன் விருது 
1971 – கென்னடி விருது 
1972 – சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது 
1973 – டெம் பிள்டன் விருது 
1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1979 – அமைதிக்கான நோபல் பரிசு 
1982 – பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது 
1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை .

           ஆரம்ப காலங்களில் ஒரு முறை அன்னை தெரேசா அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரேசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரேசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். 



                அன்னை தெரேசாவுக்கு அவர் வாழ்ந்த மதம் தரும் உயரிய அங்கீகாரம் அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்பையும் கருணையையும் வாழும்போதே இறைவனனின் வரமாகப் பெற்று வாழ்ந்தவர் அன்னை தெரேசா . மனித குலம் அவரை மறக்கும் போது இந்த உலகின் கடைசி மனிதன் இறந்து விட்டான் என்பதை காலம் தன் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும். 



செவ்வாய், 8 மார்ச், 2016

காலம்தான் (முதற்) கடவுள் !



போன வாரம் எனது பையன் பயிழும் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது .

”தயவு செய்து பள்ளிக்கூட வாசல் முன் வாகனங்களை நிறுத்தி, குழந்தைகளை இறக்கிவிடுவதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு தராதீர்கள் ” 



                              நம் வீட்டில் நேர நிர்வாகம் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நம் வீட்டின் குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பி விடும் கடைசி அரை மணி நேர உச்ச பட்சக் கூத்துக்களைப் பார்த்தாலே போதும் .பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அப்பா சட்டை மாட்டி விட்டுக்கொண்டே இருக்கும் போது அம்மா உணவு ஊட்டுவதுவும் (அப்படிச் சொல்லக்கூடாது திணிப்பதுவும்) நடந்து கொண்டே இருக்கும்போது ஒருபக்கம் மாட்ட வேண்டிய ’டை ,பல்ட்டை ‘ தேடுவதுவும் ஒரு பக்கம் ’சூ ,சாக்ஸ்’ ஒரு ஆள் மாட்ட இன்னொரு பக்கம் சூ காலில் மாட்ட மறுக்கும் போதுதான் நேற்று போட்ட சூ ரோப்பே தளர்த்தவில்லை  அப்படியே இருக்கும் என்பதை அப்போதுதான் கவனிப்போம் எல்லாம் மாட்டிக்  கொண்டு பள்ளி பேருந்துக்கோ,ஆட்டோவுக்கோ அள்ளிப்போட்டு அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் அப்பாடா என்று நுழைந்தால் மேஜைமேல் போன வாரம் வாங்கிய புது ”லன்ஞ் பாக்ஸ்” கொடுத்து விட மறந்து போனது டிவிக்கு பக்கத்தில் மேசை மேல் நின்றுகொண்டு நம்மைப் பார்த்துச் அது கூடச் சிரிக்கும்.இதை விடச் சில சமயம் இரவு வரும் ஏழாம் உயிர் தொடரைக் கூடப் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு செய்துகொடுத்த ’ப்ராஜெக்ட்’அந்தக் குழந்தையின் படிக்கும் மேஜை மேல் ஸ்கூல் பேக்கிற்குள் வைக்க மறந்து தேமே என்று கிடக்கும்  .என வீட்டில் போன வாரம், வியாழக் கிழமை மட்டும் அணிய வேண்டிய பள்ளிச்சீருடை அணிந்து கொள்ள மறந்து பள்ளிக்கூட வாசல் வரை போய் திரும்பி வந்து மாற்றிக்கொண்டு போனோம்.(நல்ல வேளை எங்கள் அனுபவத்தில் பட்ட பாடத்தில் பள்ளிக்கு அடுத்தத் தெருவுக்குக் குடியேறியே விட்டோம் .அதனால் நேரமும் தூரமும் வாய்ப்பு இருந்தது என்பது வேறு விசயம்) இப்படித் தினமும் அல்லோல் படும் பெற்றோர்கள் தங்கள் அவசரங்களைப் பள்ளி வாசலில் கூடப் ’பளிச்செனெக்’ காட்டியதன் விளைவுதான் அந்தக் குறுஞ்செய்திப் பாடம் பெற்றோர்களுக்கு நடத்தப்படுகிறது .



                                      ஒரு பக்கம் அன்றைய போக்குவரத்து ஆட்டத்திற்கு ஆடி முடித்து, பள்ளிக்கூட வாசலில் கொண்டு வந்து விட்ட தாய்மார்களில் பலபேர் இரவு உடையில் இருப்பார்கள் அவசரத்தில் காலில் செருப்பு கூட இருக்காது . தந்தைமார்கள் இதை விட உச்சம். வீட்டில் கூடப் அணிந்து கொள்ள லாய்க்கில்லாத பெர்முடாஸ் அல்லது ட்ரவுசரோடு பந்தாவாக வந்து கடுப்பேத்துவார்கள்.சரி இது கூடப் பராவாயில்லை அதே கோலத்தில் அங்கு வந்து இருக்கும் இன்னொரு அவசர கோலத்தாரிடம் , என்ன விஜயகாந்த் ஒத்துக்கொண்டாராமே ? என்று அவர் வீட்டுப் பத்திரிக்கை அரசியல் விவாதத்தைத் தொடங்க பல்லுகூட விளக்காத அந்த பிரகஸ்பதி பதிலுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில என்ன போட்டு இருக்கானான்னா...? என்று தனது பாழாய்ப்போன நினைவுகளைப் பின்னோக்கி பிறாண்ட ஆரம்பித்து, அபத்தமான அரசியல் பேசி வெறுப்பேற்றுவார்கள் .இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு இருப்பது இவர்களை விடத் தாமதமாகக் கொத்தாகக் தன் குழந்தையை அள்ளிக்கொண்டு அவசர அவசரமாக , பாதி ராத்திரியில் ஓடிப்போன பேயைப்போலப் பறந்து வரும் இன்னொரு அவசரப் பெற்றோருக்கு வழி விடாமல் சாலைகளை மறித்துக்கொண்டும் பள்ளிக்கூட வாசல்களுக்குக் குறுக்கே நின்றுகொண்டுதான் பேசிக்கொண்டு இருப்பார்கள் !


              ஒரே சமயம் இரண்டு பிள்ளைகளை வெவ்வேறு பள்ளிகளில் விட்டுச்செல்லும் அப்பாமார்கள் இன்னும் பாவம். ஒரு நண்பர் இப்படித்தான் அவசரத்தில் டூவிலரில் முன் பக்கம் உட்ர்கார்ந்து இருக்கும் பிள்ளையை பள்ளி மாற்றி இறக்கிவிட அது அழுதுகொண்டே, அப்பா நான் இந்த ஸ்கூல் இல்லப்பா என்று பரிதாபமாகச் சொல்ல எப்படியோ இறக்கி விட்ட்துகூட டென்சனில்லை அவருக்கு , .இதை அப்படியே மனதில் வைத்துக்கொண்ட அந்த வீட்டின் இரண்டாவதாகப்  பெண் குழந்தை அவர்கள் வீட்டு விசேசத்தில், எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் எங்கப்பா என்னை வேற ஸ்கூல்ல இறக்கி விடப்பார்த்தார் என்று சத்தமாகச் சொல்லி போட்டு உடைக்கும் பாருங்க,அப்போதுதான் நமக்கு  அரசின் வீட்டுக்கு ஒரு குழந்தை போதும் என்ற சுவர் விளம்பரத்தின் ’முக்கோணக் கட்டத்தின்’  அர்த்தம் முழுமையாகப் புரியும் 
ஒருபக்கம் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று தினமும் இப்படி நம்ம வீட்ல நடக்குதே இதைக் குறைச்சுக்கிறதுக்கு வழியே இல்லையான்னு மெல்ல ஒவ்வொரு வீட்டுகுள்ளேயும் எட்டிப்பார்த்துக் காரணம் ஆராயப் போனால் அதிகப் பட்ச வீடுகள் சொல்லும் ஒரே காரணம் சீக்கிரம் குழந்தைகள் தூங்க மாட்டேன்கிறார்கள் தூங்கினாத்தானே காலையில சீக்கிரம் கிளம்ப முடியும் என்கிறார்கள். சரி உங்க வீட்டில் எல்லாரும் தூங்கும் நேரம் எது ?  என்றால் இரவு பத்துக்கு மேல் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள் சொல்கிறார்.அப்பா எதாவது விவாதமோ செய்தியோ பார்க்கவும் அம்மா நாடக தொடர் பார்க்கவும் , பாட்டிமாரோ தாத்தாமாரோ (ஒருவேளை வீட்டில் இன்னும் வைத்து இருந்தால் ? ) ’சங்கரா’ டிவி நிகழ்சி என் ஆக மொத்தத்தில் பார்த்து முடியப் பத்தரைக்கு மேல் ஆகிவிடுவதுவும் ஒரு காரணம் ! மனிதன் தனது பொழுதுபோக்கிற்காகக் கண்டுபிடித்த சில சாதனங்கள் அவன் வாழ்வின் கோலத்தை மெல்ல மாற்றிக்கொண்டே வருகிறது . 


                         மனிதனுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய கொடை மெலடோன் (melatonin) என்ற திரவம் .இயற்கை, தூக்கத்தின் மூலம் மூளைக்கும், உடலுக்கும் ஓய்வு எனும் மருந்துதான் அது .அதிக நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பதால், ஐபேடு,மொபைல் போன்ற கருவிகள் பயன்படுத்துவதால் மெலடோனின் சுரப்புக் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுக்கப்படுகிறது ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது போட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்குகின்றன,அந்தப் போட்டான்கள் ஸ்ட்ரீம்கள், மனித மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பை தடுக்கும். தடுக்கப்பட்டால் அது நமது உடலை பகல் முழுதும் சோர்வு நிலையில் வைத்திருக்கும். அதேபோன்று தொடர்ந்து நீடிக்கும் போது மனிதர்களின் உறக்க-விழிப்புச் சுழற்சி (sleep wake cycle) மொத்தமாகப் பெரியவர்களான நமக்கும், வளரும் பிள்ளைகளுக்கும் பதிப்புக்குக் காரணமாகிறது.விஞ்ஞானக் கருவிகள் மருந்து போல .தேவைக்குத் தகுந்த இடத்தில் அதைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது தரும் அதைத் தவறாகப் பயன்படுத்தும்போதும் எதிர்விளைவுகளை இரட்டிப்பாகத்தரும் என்பதை மறக்கக் கூடாது. 

காலை அசதியாக எழுந்திருக்கும் அம்மாவால் எப்படி கவனமாக உணவு தயாரிக்க முடியும் நேற்று வாங்க மறந்த ஒரு பொருளால் அன்றைய காலை உணவு மாறிப்போகும் .அந்த அவசர உணவு பிள்ளைக்கு படிக்காது போகலாம் அதுக்கும் குடும்பத்தில் சண்டை தொடங்கும் நாங்களெல்லாம் அஞ்சும் பத்தும் பெத்தோம் இப்படியா வளர்த்தோம் ? என்று வீட்டு பெரியவர்கள் சுய தம்பட்டம் அடித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள் ! 



                          இந்தத் தூக்கமின்மைக் காலையில் விரைவாகப் படுக்கையை விட்டு எழ விடுவதுவும் இல்லை அப்படியே எந்திரிதால் சோர்வுக் கட்டி இழுக்க எந்தக் காரியமும் விளங்குவதுமில்லை . அதனால் உடற்பயிற்சிச் செய்வதில்லை இதில் சில பேர் இன்னும் கொஞ்சம் வில்லங்கம் பேசுவார்கள் .எங்க தாத்தால்லாம் தொன்னூறு வயசு வரைக்கும் எந்தப் பிரச்சனையும்மில்லை ஒரு உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை.மனுசன் கல்லு மாதிரி இருந்தார் என்பார்கள் .அதிலும் அவருக்குத் ( ஊருக்கு தெரிந்து ) இரண்டு மனைவிமார்கள் என்று கண்சிமிட்டிப் பெருமைப்படுவார்காள் .அந்தத் தாத்தா சித்ரகுப்தன் லெட்ஜரிலிருந்து கணக்கு முடித்து  நீக்கப்பட்டும் ஆத்ம சாந்தி அடையாமல் தெருவோர முருங்கை மரத்தில் இன்னும் தொங்கிக்கொண்டு அடுத்தவர்களை  பயமுறுத்திக்கொண்டு இருப்பது இது போலச் சிலரால்தான் என்பது உங்களுக்கு ஏன் ? என்று இப்போது புரியும் .

                                தாத்தா காலத்தில் அன்றாட உழைப்பின் மூலம் உடம்பின் எல்லாப் பாகமும் வேலை செய்ய வைத்தார்.அவர் உணவு இயற்கைச் சார்ந்ததாக அவர் வாழும் சூழலில் எந்த நேரத்தில் எந்த உணவுக் கிடைத்ததோ அதை உண்டார். அவருக்கு உணவே மருதாக இருந்தது .இயற்கைச் சார்ந்த வாழ்வியல் அவர்களுக்கு ஒரு சொத்தாகவே இருந்தது . அவரும் நாமும் ஒன்றாக முடியுமா? என் தாத்த வைத்து இருந்த உழவு மாடெல்லாம் அவரை விடவும் உயரமானது.கழப்பை என்னால் பத்து வயதிலும் நகட்டக்கூட முடியாது .எனவே நாம் நம் தாத்தாக்களைப் பற்றிப் பேசுவதும் அவருக்கு (தெரிந்து) வாக்கப்பட்ட இரண்டு பாட்டிமார்களைப் பற்றியும் பெருமூச்சுவிடுவது நமக்குச் சுட்டுப்போட்டலும் இப்போது ஒத்து வராது. 

          மனவேகம்தான் நம் அனைவரையும் மெல்லக்கொள்ளும் வியாதியாக மற்றிக்கொண்டே வருகிறது .மனதில் எதையாவது போடு நிரப்பிக்கொண்டே இருக்கிறோம் .வெவ்வேறு எண்ணங்கள் தொடர்பில்லாமல் கிளம்பி நம்மை அலைக்கழித்துகொண்டு இருக்கிறது.வீட்டுக்குள் நுழைந்தால் டிவி.வெளியில் வந்தால் செல்போன்,கம்யூட்டர் ,பத்திரிக்கை ,வெவ்வேறு நூதன மன அழுத்ததை விதைத்துக்கொண்டே இருக்கிறது.உணவில் அவசரம்,உறவில் அவசரம்,எல்லாமே எல்லா வருமானம் உள்ளோர்களிடமும் பரவி நிற்கிறது நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் நேரம் இல்லை என்று அபத்தமாக பேசி ஒரு கலாச்சாரம் உருவாக்க முயற்சிக்கிறோம்.இப்படி அழுத்தப்பட்ட மனநிலையில் எது நல்லது எது கெட்டது என்ற பிரித்துப்பார்க்கும் ஆறாவது அறிவு குன்றிப்போய் ”ப்ராய்லர்” கோளிகளாய் நாமும் நம் பிள்ளைகளும் வளர்ந்து வருகிறோம்!   



ஒருவரின் பிறந்த நேரம் முதல் இறந்த நேரம் வரை எல்லா இடத்திலும் காலம் முக்கியத்துவம் பெறும்போது அந்தக் காலத்தை எப்படிப் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்த புண்ணியம் அல்லது நம் பாவம் கூடவருகிறதோ இல்லையோ அல்லது வேறு எதுவும் நம் கூட வருகிறதோ இல்லையோ நம் நேரம் சாகும் வரை கூடவே வருகிறது .இதை எப்படி நாம் பயன்படுத்தினோம் என்பது வேறு விசயம் இனி வரும் தலைமுறைகளாவது அதை நல்ல முறையில் பயன்படுத்த பழக்கப்படுத்துவோம் .நாம் பள்ளிக்குக் கிளம்புகிறோம் என்ற பெயரில் தினமும் வீடுகளில் நடத்தும் மகாபாரத யுத்தங்களைத் தவிர்த்து நாம் காலத்திற்கு ஏற்ப அவர்களைத் திட்டமிட்டுப் பள்ளிக்குத் தயார் செய்வதுவும் அதை அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு செய்யவைப்பதுவும் இன்னும் நல்லது. பள்ளிக்கு ரிலாக்ஸாகப் போகும் பிள்ளைதான் பாடத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும் .எதிலும் ஈடுபாடுகாட்ட முடியும் . முக்கியமாக விளையாட்டில் உற்சாகமாகக் கலந்துகொள்ள முடியும் .இது அய்யாதுரைக் குழந்தை முதல்  ஐன்ஸ்டீன் குழந்தை வரை அனைவருக்கும் பொருந்தும்.அதனால் அன்பு,ஒழுக்கம் இதற்கு அடுத்துக் காலத்தைப் பயன்படுத்துவதை நாம் குழந்தைகளுக்குக் கடவுளாகச் சொல்லி வளர்த்தால் கல்வி எனும் சரஸ்வதியோ, லட்சுமியோ நம் வீட்டுக்கதவை தானே தேடி வந்து தட்டுவாள்... 



வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சாமியே சைக்கிள்ள போக , பூசாரி புல்லட் கேட்டானாம் !



வெகு நாளாய் இந்தப் பழகிய மொழிக்கு அர்த்தமாய்ச் சில கற்பனைகள் எனக்குள் இருந்தது.ஆனால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது இன்றுதான் .அலுவலக ஓய்வு அறை ஒன்று புதியதாய்க் கட்டப்பட்டு அதற்குக் கணபதி ஹோமம் நடத்த வழக்கமான ஆஸ்தானக் கோவில் அர்ச்சகரைத் தொடர்புகொண்டல் அவரின் இரண்டு அலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டதாகத் தானியங்கிக்குரல் செப்பியது .அவர் மிகவும் பிரபலமானவர் அப்படி அனைத்து வைக்க வாய்ப்பில்லை.இரண்டு நாளாய் நேரில் வருவதாகச் சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார் மனுசன் .ஆனால் இன்னும் ஒரு நாள் இருக்கும்போது தாமதித்தால் நிர்வாகத்தின் கத்தி நடுமண்டையை பதம் பார்த்து விடும் என்று அவரை எப்படியாவது பார்த்து விட அவர் பணிபுரியும் கோவிலுக்குத் தேடிக் கண்டுபிடித்துப் போனேன் . 

அங்கு மனிதர் மிகச் சாவகாசமாக ஒரு குடும்பத்தை உட்காரவைத்து ஜாதகம் பார்த்துக் கொண்டு இருந்தார் . அவருக்கு எதிர் புறத்தில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்கார்ந்து இருக்க அவர்களிடம் அவர் ராவணன் நவக்கிரகங்களைஅடக்கித் தன் வீட்டில் படிக்கட்டுகளாகக் குப்புறப் போட்டு வைத்திருந்தது போலக் கிரகங்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார் .கேது புத்தி உனக்கு விரயச்செலவு அதிகமிருக்கும் .சனிப் பார்வை இருப்பதால் சில உடல் உபாதைத் தோன்றி நீங்கும்.ஆயிரம் ரூபாச் சம்பாதிச்சா ஆயிரோத்தோரு ரூபாச் செலவு வரும் .சொந்தமா வரத்தகம் வேண்டாம் அடிமைத்தொழில்தான் சிறப்பு .யாரையும் நம்பி வாக்குக் கொடுக்கவேண்டாம் .... 
அவர் சொல்லும் பலனெல்லாம் ஏறக்குறைய அந்த ஜாதருக்குப் பொருந்துச்சோ இல்லையோ ஒரு தமிழ் நாட்டு பிரபலக்கட்சிக்கு அச்சு அசலாய்ப் பொருந்திப்போவது போல எனக்கு ஒரு பிரம்மை! (தொலைக்காட்சி விவாத அரங்கம் அதிகம் நான் ஏன் அதிகம் பார்க்கக் கூடாது என்று என் மனைவி சொல்லும் ஆய்வுரைக்கு அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.) 

ஜோதிசம் என்ற வார்த்தையை விட எனக்குச் சாதகம் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் .வாழ்வதற்கு உரியச் சாதகமான எளிய வழியைச் சொல்லிக்கொடுப்பதே ஜோதிடமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் ஜோதிடம் தவறு என நிரூபிக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அதை அதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டு ஏதோ ஒரு தவறிழைத்து விட்டார்கள்.நானும் திருவருள் ஜோதிட மையத்தில் ஆசான் சாந்தலிங்கனாரிடம் முதல் ஆறு மாத அடிப்படை ஜோதிடம் எழுதும் அடிப்படைக் கணக்குகள் பயின்று இருக்கிறேன் அது மட்டுமல்ல என்னைச்சுற்றியுள்ள என் நண்பர்கள் சுகுமார் உட்படப் பலரும் இயல்பிலேயே ஜோதிடம் அறிந்தவர்கள் ( சமீபத்தில் சுகுமார்த் தந்த ‘டிப்ஸ்’ – யாருக்காவது சனிப் புத்தியோ, சனித் திசையோ நடந்து கொண்டு இருந்தால் அவர்களை நாய்கள் துரத்தாதாம் !) 


எல்லா உயிரும் சமம்.சகல உடல்களும் இந்தச் சூரியக்குயவன் படைத்த மட்பாண்டங்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளாத ’பக்கிகள்’, தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்று பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடும் கற்பனையில் செய்த உச்சப் பட்ச மேஜிக் தமாசுகள்கள்தான் - மறைக்கப்பட்ட ஜோதிடவிஞ்ஞானம்.சரித் தலைவலிக்குச் சாப்பிடும் அனாசின் மாத்திரையில் எந்த ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியாத நாம் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம் (வளர்ந்த) உடலின் 206 எழும்போடும் அது எப்படித்தொடர்புடையது என்பதைக் கவனம் செலுத்த நேரமா இருக்கிறது ?.எல்லாத்தையும் லூசில் விட்டு விட்டோம். 

சரி இது கூடப்பராவாயில்லை.ஒருச் செய்திச் சானலில் அன்றாட ஜோதிடப் பலன்கள் சொன்ன ஒரு வேடிக்கையைப் பாருங்கள் அவர் ஒரு 'எண்கலைவித்தகர்', 'ஜோதிடக்கலைமணி' ஆவார். அவர் ஒரு சமயம் ஒரு வசதியான திருமணமாகாதப் பெண்ணுக்குப் பரிகாரம் சொல்லும் போது, ஒவ்வொரு வியாழன் தோறும் குருபகனுக்கு அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் இறைநம்பிக்கை இல்லாதவள் என்பதால் மறுத்து விட்டளாம்.அவளுக்குப் பதிலாக அவள் வீட்டுப் பணிப்பெண்ணை அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் வாரா வாரம் (முதலாளி மேல் உள்ள ) பயப் பக்தியுடன் தனது முதலாளியின் மகளுக்காக அர்ச்சனைச் செய்துவந்தாளாம்.குருப் பார்வை அவள் மேல் பட்டு வீட்டுப்பணிப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து விட்டதாம் ! இது எப்படிக் குரு என்ன அவ்வளவு ”ஜொள் ஜக்கா “ இப்படி எதாவது சொல்லப்போயிதான், வேண்டாம் உன் பழைய பஞ்சாங்கம் பரணில் வை என்று சொல்லப் பகுத்ததறிவாளார்கள் படையெடுக்கிறார்கள் 

சரி, நான் பார்க்கப்போன விசயத்திற்கு வருகிறேன் ...

ஒரு வழியாய் அவர்களின் ஏழு கிரகங்களையும் துவைத்துத் தொங்கவிட்ட பிறகே அவரின் பார்வை என் மேல் படிந்தது. வணக்கம் சொன்னேன்.சிரமப்படுத்திட்டேனோ ? என்றார். (ஆமாம் என்றாச் சொல்லவா முடியும்? நாழு இடத்தில் வழிக் கேட்டு ஆறு கிலோ மீட்டரல்லவாச் சுற்றியிருக்கிறேன் கடனைத் திருப்பிக் கேட்கும் போது வாய்தாக் கேட்க்கும் போது அணிச்சையாயாய் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரிப்போமே அப்படி ) சிரித்துக்கொண்டேன் .அவரிடம் தயாராய் வைத்து இருந்த பூஜைப் பொருள் பட்டியலை இந்த வருட வாசன் பாஞ்சாங்கப் புத்தகத்திற்குள்ளிருந்து ஆதிசேசன் வாலைபோல உருவித்தந்தார். பவ்வியமாகப் பெற்றுக்கொண்டேன்.இரவு ஒன்பது மணிக்கு நம்ம உதவியாளர்கள் வருவார்கள் சகல ஏற்பாடும் செய்து விடுமாறும் சொல்லியனுப்பினார்.அதோடு அவரின் பூஜைக்கான தொகை எவ்வளவு என்பதையும் வரவாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்ற ரகசியத்தையும் சொன்னார் குரல் தாழ்த்தி சொன்னார் .(பேஷ் பேஷ் நன்னாருக்கு ! ) 

அதிகாலைப் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் துவங்குவதால் இரவே எல்லா வேலைகளும் முடித்து விடவேண்டும் என ஆரம்பித்தோம் . ஒரு வழியாய் எல்லாம் முடித்து விட்டோம் என்பதாய்ப் பெருமூச்சு விடும் போது இரவு ஒன்பது மணி .அப்போதுதான் மாவிலையும் ,பசுமாட்டின் கோமியமும் இல்லை என்பதை மிகச் சாதரணமாக அலுவலக உதவியாளன் சொல்ல,மீண்டும் ஓட்டம்.. ஒரு இடத்தில் ஒரே ஒரு மாடு இருந்தது.அந்த வீட்டு வாசலில் ஒரு நாய்க் கட்டியிருந்தர்கள் அது எங்களைப்பார்த்து  விரோதமாகக் குலைத்துக்கொண்டே இருந்தது.அடுத்த இடத்தில் ஒரு பசுமாட்டுப் பண்ணையே இருந்தது.ஆனால் நாயிற்குப் பதிலாக அதைப் பராமரிக்கும் ஆளின் குரல் அதை விட விரோதமாக இருந்தது ! பாதிப் போதையில் உளற்ற்ற்றினார்... எப்படியோ பாத்திரமும் பணமும் கொடுத்துவிட்டுத் தப்பித்தோம். அதே போல ஒரு வீட்டில் தன்மையாய்ப் பேசி மாவிலைப் பறித்துக்கொண்டோம் இப்படியாகப் பரப்பரப்பு ஓய இரவு பதினொன்றும் ஆகிவிட்டது. 


அதற்குள் வந்து இருந்த சுவாமிகளின் (சம்பளம் எவ்வளவு என்று தெரியாத ) உதவியாளார்கள் ஹோமத்திற்கு ,ஈசான்யத்தில் பேப்பர் விரித்து அதன் மேல் தேவையான செங்கல் அடுக்கி மணல் பரப்பிக் கிரகங்களைக் கட்டிப்போட்டு முடிக்கவும் சரியாய் இருந்தது .அவர்கள் விடைபெறும் போது இரவு உணவுக்குப் பணம் கொடுத்து விட்டு,அவர்களிடம் ஏன் சாமி அலைபேசியில் தொடர்புகொள்ள மாட்டேன்கிறார் ? என கேட்டதற்கு வந்த இருவரில் ஒருவர் இன்னொரு உதவியாளாரைத் தவித்து விட்டு மெல்ல என் அருகே வந்து  சன்னமான குரலில் ,நோக்குத் தெரியாதா ? போன வாரம் சாமி வீட்டில் பட்டப் பகல்ல மதியம் மூணு மணிக்கு மாமியும், சாமியும் தூக்கிண்டு இருந்த அறைக்குள் யாரோ ஒரு விசமிப் புகுந்துச் இரண்டு செல்ஃபோன், நகை,பணம் அத்தனையும் வாரிண்டுப் போயிட்டான் சாமி பாவம் என்று முடித்தார்.
பாவம் என்று சொல்லும்போது அவர் அதை ஒரு கரிசனத்தில் சொல்ல முயற்சி செய்தார் .ஆனால் அதை மீறி அவர் கண்களில் அந்த நிகழ்வின் மூலம் அதீத ஒரு திருப்தி அடைந்து விட்டதற்கான ஒளி மின்னி மறைந்ததைக் கண்டேன் ! 

 எனக்குள் இன்னொரு முறைப் பதிவின் தலைப்பச் சொல்லிக்கொண்டேன்.

புதன், 17 பிப்ரவரி, 2016

திருப்பூரில் , சுஜாதாவும் - வில்லியம் ஹாஸ்லியும் (William Hazlitt).



   சாலை விபத்துத் திருப்பூர் வாசிகளுக்கு மிகச்சாதாரணம். எல்லா வேலைக்கும் முக்கியச் சில சாலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.குறுகிய ஆக்கிரமிப்புச் சாலைகள். பலருக்கும் இங்குச் சாலை விதிகள் மேல் நம்பிக்கை இல்லை. தங்கள் அவசரத்தைச் சாலைகள் மேல் வந்து காட்டுவது சாதனை என்றே நம்புகிறார்கள் .இதெல்லாம் போகத்தான் ’டாஸ்மாக் டார்கெட்டுக்கு’ உதவிச் செய்யப்போய் உயிர் விட்டவர்கள் கணக்கு ! 
              பத்து வருடத்திற்கு முன் சாயஆலைகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் எமனின் தூதர்களான லாரிகளின் இடத்தை இப்போது ”மினிபஸ்கள்” நிரப்பிக்கொண்டு விட்டன.நிறைய மினிபஸ் பூதங்களின் பின்னால் அரசியல் சாயம் மிளிர்வதால் காவல்துறை இவர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாத துறையாக நடந்து கொள்கிறது .இங்கு விபத்துக்கள் நடக்காத ,ரத்தமும், மரணமும் பார்க்காத ,சாலைகள் மிகக் குறைவு . 

     திருப்பூர் வந்த புதிதில் இப்படித்தான் இந்த ஊர்காரருடன் வீரபாண்டி அருகே ஒரு பல்பொருள் அங்காடிக்கு வந்து விட்டுத் திரும்பும் போது, அப்போதுதான் நடந்த ஒரு விபத்தில் , சடலம் ஒன்று சாலையின் ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டுச் சாக்குப் போர்த்தி வைத்து இருந்தார்கள் .அந்தச் சடலத்தின் கால்களில் உள்ள செருப்பு இன்னும் முற்றிலுமாகக் கழன்று விழாமல் பிரிந்து கொண்டு இருக்கும் உயிர் போலக் காலில் கவ்வியிருந்தது.அன்றுத் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா விபத்துக்களைப் பார்த்தும் ,பார்க்காமலும் கடந்து வந்து இருக்கிறேன். 

 ஒரு முறைப் பி.என்.சாலையில் ரேணுகாக் கட்பீஸ் எதிரே காலை ஒன்பது மணிக்கு வரும்போது , யாருமில்லாத சாலையில் யாரோ குடித்து விட்டுக் கிடக்கிறார் என்று நினைத்துக் கடந்து போய்கொண்டே சைடுமிர்ரர்ப் பார்க்கிறேன், அவர் தலையிலிருந்து ரத்தம் கோடாய் வெளியேறிச் சாலையை நனைத்துக்கொண்டு இருந்தது.அப்போதுதான் நடந்து இருக்கிறது இன்னொரு சமயம் ’டவுன்ஹால்’பேருந்து நிறுத்தம் கடக்கும் போது எதேச்சையாகக் கவனிக்கிறேன் அங்கு அடிபட்ட ஒரு மனிதனின், வெளியே வந்த உள்ளுறுப்புகளைச் சாக்கில் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் ! அதே போல இங்குள்ள 15 வேளம்பாளையம் சாலையில் எப்போதும் கூட்டமிருக்காது. அன்று ஒரு சனிக்கிழமைச் சாலையின் அலுவலகம் போகும் போது குறுக்கே ஒரு நகரப்பேருந்துச் சற்றுக் கோணலாக நின்று கொண்டு இருந்தது பார்த்தேன். பேருந்தின் உட்புறம் யாருமில்லை.டயர்ப் பஞ்சரும் இல்லை .மெல்லச் சாலை ஓரத்து இடைவெளியில் என் வாகனத்தைச் செலுத்திக்கொண்டே பேருந்து முன் பக்கம் பார்க்கிறேன்,அங்கு ஒரு இரண்டு சக்கர வாகனம் கோணல்மாணலாகப் பரப்பிக்கொண்டு கிடந்தது.அதை ஓட்டி வந்த பெண்ணின் பின் மண்டை அடிபட்டு உயிரற்று கிடந்தாள்.பள்ளிக்குத் தன் குழந்தையை விட்டு விட்டு திரும்பியிருக்கிறாள்.விபத்து நடந்து விட்டது.விபத்து நடந்த சில நூறு அடி தூரத்தில் ஒரு மர நிழலில் அந்தப் பேருந்தின் நடத்துனர் தன்னுடைய இன்வாய்சைக் கூட்டல் போட்டுக்கொண்டு இருந்தார் எதுவுமே நடக்காதது போல!


  திண்டுக்கல்,கோவை,புதுவை,மதுரை,எனப் பல இடங்களில் சுற்றியிருக்கிற எனக்கு அங்கு நடக்காத கவனிக்க முடியாத முரண்பட்ட இரண்டு குணாதியசங்கள் இந்த மக்களிடம் வெகு ஆண்டுகளாய் உறுத்திக்கொண்டே இருந்தது இன்று வரை... 

முதல் விசயம்..

இங்கு நீங்கள் சாலையில் உங்கள் வண்டியின் ”சைடு ஸ்டாண்ட்”எடுத்து விடாமல் ஒரு நிமிடம் கூட நீங்கள் பயணிக்க முடியாது அதற்குள் அந்தச் சாலையின் எதிரே வருபவர்களாகட்டும் நம்மைக் கடந்து போவோர்களாகட்டும் ஆண், பெண் பேதமில்லாமல் எச்சரித்து விட்டுச்செல்வார்கள் . அதே போலத் தவறி விழுந்தாலோ உங்கள் தோள் பையின் ’வார்கள்’சாலையில் உரசிக்கொண்டு வந்தாலோ உடனடி எச்சரிக்கை உங்களுக்கு ராக்கெட் வேகத்தில் வந்தடையும்.விபத்து நடந்து விட்டால் தன்னுடைய வண்டியைக்கூடச் சைடு ஸ்டாண்ட் சரியாகப் போடாமல் நழுவ விட்டு விட்டு ஓடி வந்து காப்பாற்றுபவர்கள் இங்கு அதிகம் .ஒரு சமயம் ஒரு விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கி உயிர் இழந்த ஒருவரின் சிதறிக்கிடந்த சுமார் 12 லட்சம் பணம் மக்களால் சேகரித்துப் பத்திரமாகக் கொடுக்கப்பட்டது.நானே பலமுறை இப்படி உதவி செய்யும் நல்ல மனிதர்களால் உதவி பெற்று இருக்கிறேன் .விபத்தில் அவ்வளவு கரிசனமா இந்த மக்களுக்கு ? 

இரண்டாவதாக முற்றிலும் புரியாத விசயம் .. 

இன்று திருப்பூர், மங்கலம் சாலையிலிருந்து நடராஜ் திரையரங்கு வழியே மதிய உணவுக்கு இரண்டு மணிச் சுமாருக்குப் போய்க்கொண்டு இருக்கும் போது, அந்தச் சாலையின் ரோட்டரி மஹால் தாண்டியவுடன் சாலை ஸ்தம்பித்து இருந்தது . அது ஒருவழிச்சாலை . சாலையின் இரண்டு பக்கத்திலும் ஆங்காங்கே போட்டது போட்டபடி இரு சக்கர வாகனங்களும் சில கார்களும் நின்று இருந்தன.இப்போதும் சில முன் செல்லும் வாகனங்கள் போகப் போக நிறுத்திக்கொண்டே இருந்தார்கள். நடுவில் கொஞ்சம் இடமிருந்தது. நுழைந்துக் கடக்கும் போதுதான் எல்லோரின் வெறித்த பார்வைக் குவியும் இடத்தில் பார்த்தால் மூன்று பேர்ச் சூழ்ந்து கொண்டு ஒருவரை அடித்துக்கொண்டு இருந்தார்கள் .என்ன பிரச்சனை என்பதில் என் கவனம் இல்லை. ஆனால் அத்தனை பேரின் முகத்தின் வெளியே குதிக்கக் காத்து இருக்கும் ஒரு வித ஆர்வத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டேன்.அங்கு நின்று கொண்டிருக்கும் வண்டிகளில் போட்டது போட்டப் படி விட்டு விட்டு வந்து தனக்கே நடப்பது போல உணர்ச்சியலைகள் ததும்பி நின்றார்கள் .. சிலருக்கு அங்கே அடிப்பவரைப்போலவே கையசைவுகள் கூட இருந்தது என்றால் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள் ! 

கடந்த 15 வருடமாகத் திருப்பூரின் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒரே மாதிரிச் செய்தியைத்தான் எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.சின்னதாய் ஒரு வண்டிக்கும் வண்டிக்கும் இடித்துக்கொண்டு நடக்கும் வாக்கு வாதமாகட்டும் ,மிகப்பெரிய உயிர் பறிபோன விபத்தாகட்டும் எல்லாத்துக்கும் ஒரே ’ரியாக்சன்தான்’.கூடியிருப்பவர்களின் அதே வெறித்த பார்வைகள், என்ன பார்க்கிறோம் எதற்குப் பார்க்கிறோம் ஏன் பார்க்கிறோம் நமக்கு அடுத்த வேலை என்ன என்பதைப்பற்றி எந்தக் கேள்வி இல்லாமல்,அங்கு நடப்பது முழுவதும் உள்வாங்கும் ஒரே விதப்பார்வை ! அப்படிக் கூடி இருப்பவர்களைக் கவனித்துக்கொண்டே பல முறை அலுவலகம் வந்த பின், மற்றவர்கள் (மிகச் சுவாரசியமாக) பேசும் போதுதான் அங்கு என்ன விபத்து என்றே தெரியும்.ஏன் இது என்ற தீராத நிழலாடும் சந்தேகத்துடன் வீட்டுக்குள் போனேன் , சமையல் தாமதமாகும் என்றார்கள் இல்லத்தரசி .


சரி, வெகு நாள் ஆகிவிட்டதே சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (1999 ) வாசிக்க எடுத்தால் அதன் 5ஆவது பகுதியில் வில்லியம் ஹாஸ்லியின் (William Hazlitt), On the pleasure of hating என்ற கட்டுரையில் ”நாம் வெளிப்படையாகச் செய்யும் காரியங்களில் மனிதாபமானம் கலந்து விட்டோம்.ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளயும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்சம் நாளாகும்.” 
இது படிக்கும் போது கூட என் சந்தேகம் பெரிதாய்ப் பொருந்திப் போகவில்லை.ஆனால் அடுத்துச் சொன்ன,

"We give up the external demonstration, the Brut violence but cannot part of the essence or principle of hostility" - மூர்க்கத்தனமான வன்முறையின் வெளிவடிவங்களை நாம் கைவிட்டு விடுகிறோம் ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மல் கைவிட முடியாது ”என்ற வாக்கியம் இன்னும் சில சந்தேக வலுவை முறித்தது.

ஆனால் அடுத்து வந்த சில வரிகள் நொறுக்கிப் புதைத்தன என்னை .அவை ”without something to hate we should lose the very spring of thought and action - நம் எண்ணங்களில் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் ” 

திருப்பூரின் அதிகபட்ச மக்கள் என்னைப்போலச் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவர்கள்.அப்படிச் சொந்த மண்ணை விட்டு இங்கு வந்ததற்குச் சம்பாதிப்பு மட்டுமே நோக்கம் அல்ல .இன்னப் பிற நிம்மதியற்றப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன .ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சனிஸ்வரப் பகவானின் காலடிச் சுவடுகள் கட்டாயம் எங்காவது ஓரத்தில் தென்படும் . தொலைந்து போன தூக்கங்களை நிச்சயமாய் எந்தக் குளிர்காற்றும் திருப்தியளிக்க முடியாது இந்த ஊருக்கு வந்த பலரின் வாழ்விலும் பல கொண்டை ஊசி வளைவுகள் எழுதப்படாதச் சட்டமாயிருக்கிறது .ஒரு பக்கம் வெகு சில அடித்தட்டு மக்களுக்கும் பணியிடத்துக்குள் நுழைந்து அன்றைய வேலைப் பொறுத்து வீட்டுக்குத் திரும்பினால்தான் உண்டு இல்லாவிட்டால் தூக்கம் உத்திரவாதம் இல்லை. நடுத்தர வாதிகளுக்கு இன்னும் இன்னும் என்று யாருக்கோ பதில் சொல்லும் சம்பாதிப்பு வெறி ,உள்ளூர்க்கார மேல் தட்டு வாதிகளுக்கு இன்று வந்தவனெல்லாம் கொடி நாட்டுகிறான் நாம் இப்படியாப் பிழைப்பது என்ற ஆதங்க உளைச்சல் ! மொத்தத்தில் இங்குள்ள பாதிக்கும் மேல் உள்ள மக்களின் மன நிலையை வில்லியம் ஹாஸ்லியின் 1928ன் சிந்தனையோடு ஒத்துப்போகிறது. 


                இப்போது முடிந்தால் இன்னொரு முறை முதலிருந்து வாசித்துப் பாருங்கள் முரண்பாடுகளுக்கான காரணங்கள் எல்லாமே புரிகிறது. ( இந்த பதிவை அடுத்து அடுத்து என (சிறு) வசிகரிப்பில் வாசித்த உங்கள் மனஅலை வரிசையும் ஹாஸ்லியின்  சிந்தனையோடு ஒத்துப்போகிறதா ? 

வியாழன், 11 பிப்ரவரி, 2016

7.83 ஹெர்ட்ஸ் - நிழல் உலக நிஜங்களின் தரிசனம் !


நாவலின் தன்மை !

இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள் ( பெப்ரவரி 11, 1847 ) இன்று இது போன்ற அற்புதமான அறிவியல் புனைக்கதையைப் பற்றி உங்களோடுபேசுவதில் மிகவும் சந்தோசம் .



அட்டைப்படத்தை பார்த்து விட்டு எதுவுமே கணிக்க முடியாத நாவல் இது ! வெகு நாளாய்க் காத்து இருந்து ஓர் அற்புதமான வரலாற்றுத் தளத்தில் அறிவியல் தன்மையுடன் ஒரு கதையை வாசிப்பவர்களுக்குத் திரு சுதாகரனின்7.83 ஹெர்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பைத்தரும் நாவல் . மிகப்பிரபலமான அறிவியல் கதைப் புனைவாளார்கள் கூட எழுதத் தயங்கும் மிக நுட்பமானமனதைக் கட்டுப்படுத்தும் அதிர்வலைகளைப் பற்றிய கட்டுரை வேசமில்லாத கதையுணர்வுடன் வெகு நேர்த்தியான அற்புதமான நடையில் தமிழுக்குப்படைத்து இருக்கிறார். தமிழில் அறிவியல் கதை என்பது தனியாகவும் அறிவியல் கட்டுரைத் தனியாகவும் வளர்ந்து வரும் நேரத்தில் இரண்டையும் சமீபவருடங்களில் இணைத்துத் தரும் இன்னொரு சிறந்த முயற்சி இது.

நாவலின் பெயர். 

”7.83 ஹெர்ட்ஸ்”மிகத் துணிவானப் பெயர்த் தேர்ந்தெடுப்பு . நாவலுக்குத் தமிழில் பெயர்த் தர முடியாவிட்டாலும் நாவலின் அறிவியல் புனைவுகள்அனைத்தையும் மிகச் சுலபாமாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெனெக்கெட்டுத் தமிழ் படுத்தித் தந்து இருக்கிறார் ஆசிரியர். 

ஆனால் எனக்குச் சிறு வருத்தம் மனதுள் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை .எல்லா நாவல்களும் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமேஎழுதப்படுகிறது.இரண்டாவது, எழுதிய ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட அனைவரின் உழைப்பின் பயனை, அதன் அதிக விற்பனையின்விளைவில்தான் அனுபவிக்க முடியும் . அப்படி அது வாசிக்கப்பட வேண்டுமென்றால் அது 1. மிகப்பிரபலமாக, நாவலின் தன்மைக் குறித்துவிளம்பரப்படுத்தவேண்டும்.2.நாவலின் பெயர்த் தவறி விழப்போகும் காதலியைத் தாங்கிப் பிடிக்கும் கைப் போலச் சிக்கெனெப் பற்றிக்கொள்ளவேண்டும்.(பெயர் வைக்கும் விசயத்தில் எழுத்துலக ஜாம்பாவான்கள் கூடக் கவனமாக இருந்தை நாம் மறக்கக் கூடாது ) 3.மிகப்பெரிய விமர்சனத் தாக்கத்தைவலைதளங்களில், பத்திரிக்கைகளில் எழுப்ப வேண்டும் .4.புத்தக விழாக்களில் ஃப்ளக்ஸ் பேனர் வைத்துப் பேசப்படவேண்டும் .என்பது என் தாழ்மையானகருத்து ! 



கதைக்கரு .

இந்த நாவல் வாசிக்கும் முன் வரை எனக்கு ஒநாய்கள் பற்றி எனக்கு ஒரு துளியும் தெரியாது .சில சேனல்களில் அவை கூட்டமாக ஓட,ஓடவிலங்குகளைப் பிய்த்துத் தின்னுவதையும்.சிங்கத்தின் இரையைக் கூட வெறுப்பேத்திப் பிடுங்கிக் கொள்வது மட்டுமே தெரியும். அவ்வளவுதான் !ஆனால் அவை 800 ஆயிரம் வருடங்களுக்கு முன் இதே பூமியை ஆண்ட ஓர் இனமாக ஓநாய் எனும் ஊனுண்ணிப் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒருகாட்டு விலங்கு என்பதுவும் அதன் ஆரம்பப் பிறப்பான பழுப்பு நிற ஓநாயிற்குத் தாயகம் இந்தியா என்பதும் எனக்கு மிகப்புதிய விசயம். அதை விடவும்புதிய விசயம் ஓநாயைத் தனது மூதாதையராக நம்பி, புனிதச் சின்னமாக வழிபட்டுக் கொண்டாடும் உலகில் பல்வேறு இனமக்களை அறிந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது .

கதையாக்கத்தின் நோக்கம் ! 

அந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது ! நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் . 

இந்தியாவுக்குள் நுழைந்த செச்சன்யப் போராளிகள் !. 

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள (சின்சியாங்கு) (Xinjiang) மாகாணத்தில், உய்கூர் (Uyghur) என்ற பகுதி மணிக்கெயிசம் என்ற மதத்தைச் சார்ந்தமக்களுக்கு இந்த இனமக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் .அப்படி வாழ்பவர்களில் செச்சன்யாவை (Chechnya ) சேர்ந்த போர்ஜ் மக்கள்குழு உலகில் உள்ள ஓநாயை அழிக்கத்திட்டமிடும் அரசுகளை மற்றும் அமைப்புகளைக் கொடுங்கோளர்களார்களாக நினைத்து அழிக்க நினைக்கிறது.இந்தியாவில் இரண்டு செச்சன்யர்கள் தலைமையில் ஒரு செயல் திட்டத்துடன் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். 

அதில் ஒருவன் ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பில் முக்கியமாக ’தெர்மடைட்’ என்கிற ஒரு விதமான கந்தகக் கலவையில் ஆயுதம் தயாரிக்கும்மூளைக்காரன் .அவன் கொஞ்சம் நல்லவன் கூட ! என்னது ? தீவிரவாதியில் நல்லவன் எப்படி இருக்க முடியும் ? என்ற கேள்விக்கு – அவன் தனது ஆசனவாயில் தான் இறந்துப் போன பிறகும் நமது ராணுவ அதிகாரி விக்ரம் பத்ராவுக்குக் கிடைக்குமாறு விட்டுப்போன ஓர் எச்சரிக்கைச் செய்தி. இந்தநாவலின் முக்கியமான திருப்பத்திற்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து தப்பிக்க உதவியது . 


        அது, ஒரு மண்டை ஓட்டுப்படம் ,ஒரு ஃபோர்ஜ் துப்பாக்கி (Forge Gun) ஒரு பெர்சியன் ஸ்வார்ட் (Persian sword) அதோடு ’அந்திம ஆயுதம் அமைதி ‘என்றவாசகம் கொண்ட ஒரு துண்டுச்சீட்டு அந்தத் தாக்குதலில் முடிவில் அதை நடத்திய ஒரு ராணுவ அதிகாரிக்கு விட்டுச் செல்கிறான் . நாவலின் இந்தமுடிச்சு , 31 ஆம் பக்கம் துவங்கிய இந்த ரகசிய முடிச்சிற்கான தேடல் 194 ஆம் பக்கம் வரை வாசிப்பவர்களை, வியர்க்க வைக்கும் அளவுக்குத் துரத்துகிறது. 

     இதில் இன்னொரு தீவிரவாதியை ’சாவுக்களி ஆடும் பிசாசு ‘என்று வர்ணிக்கும் அளவுக்குக் கொடுரமானவன் ஆனால் அவன் மரபியல் மற்றும்தொலைத்தொடர்பியலில் கில்லாடி.இவர்களுக்கு வெளியிலிருந்து உலகி பல இடங்களில் துறைகளில் பரவி வசிக்கும் மக்களின் துணையோடுமிகப்பெரிய ’நெட்வொர்க்’போலச் செயல்படுகிறார்கள் .இவர்களுடன் நம் நாட்டு அரசின் மேலும் அறிவியல் துறையினால் பாதிப்பட்ட ஓநாய் அறிவியல்விஞ்ஞானி எதிரிக்கு எதிரி நண்பன் போலத் துரதிருஷ்ட வசமாகக் கைகோர்த்துக் கொள்கிறார்.அவர்களின் விஞ்ஞானப் பூர்வமான சதி வலையைஅறுத்து எறிவதே நம் சுதாகர் அவர்களின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல் பேசுகிறது .


ஓநாய்பற்றிய வரலாற்றுத் தகவல்கள். 

ஓநாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட விசயங்கள் மிகச் சொற்பமே என்பது இந்தக்கதையின் பல இடங்கள் வலியுறுத்துகின்றன. அதிலும் வேத நாயகம்என்ற ஒரு பாத்திரம் மூலம் ஆசிரியர் சுதாகரின் ஓநாய்கள் பற்றிய ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.(அந்த மனிதன் நம்மைப் பொறுத்தவரை நம்வீட்டு நாய்கள் ஓநாய் வம்சத்தின் உப பிரிவாக ( Subspecies of Canis lupus familiaris or Canis familiaris ) அறிகிறோம் . ஆனால் ஆதி ஓநாயான பழுப்பு நிற ஓநாய்(lupus familiaris) இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பரவி வளர்ந்து இருப்பது தொடங்கிக் கிழக்கே சிக்கிம் தொடங்கி மேற்கே பாமிர் முடிச்சு வரை பூமியைஆண்ட இனம் (பக் -172) என்பதாகவும் ,

இன்றைய செர்பியா,துருக்கி ஆகிய நாடுகளின் தேசிய விலங்குகள் பட்டியலில் ஓநாய்கள் இருக்கிறது. துருக்கியில் சுமார் 10,000 வருடத்திற்கு முன் Anatolia - Gobekli Tepe இடத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் கோவிலாகத் தொல்லியல் துறை (http://archive.archaeology.org/0811/abstracts/turkey.html ) சொல்லும் கோவில் கற்படிவங்களில் ஓநாய்த் தலை வடிவம் செதுக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்துஉலகின் பார்வைக்குத் தந்தவர் ஜெர்மானியத் தொல்லியல் துறைப் பேராசிரியர் Professor Klaus Schmidt ( இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம்நாள்தான் நீச்சல் செய்துகொண்டு இருக்கும் போது மாரடைப்பில் காலமானார் ) நீல நிற ஓநாய் தெய்வத்தின் வழித்தோன்றலாக அவர்கள் தங்களைக்கருதிக்கொள்கிறார்கள் ! 

இதற்கும் ஒரு படி மேலாய்ச் செச்சன்யார்கள் தங்களுடைய மூதாதையர்கள் ஓநாய் முகம் இருக்குமாம் ! போராளிகளின் புரட்சிக் கொடி அதை இன்றும்பிரதிபலிக்கிறது ! 


ஓநாய்கள் இன அழிப்பு ! 

ஓநாய்கள் இனம் அழிக்கப்பட முதல் காரணமாய் இங்கிலாந்தின் மன்னர் (Edward the Confessor 1042 to 1066 இருக்கலாம் !) 1500 ஆம் ஆண்டில் ஒருதீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.இது உலகில் ஆங்கில ஆட்சிப்பரவல் போல விரிந்துப் பரவி ஓநாய் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது .காரணம் மனித இனத்தின் மாமிச உணவின் மேல் கொண்ட பேராவல் . அதற்குத் தடையாக இந்த ஓநாய்களின் வளர்ச்சித் தடையாக இருப்பதாகக்கருதிக்கொள்கிறது .ஓநாய்கள் மனிதனுக்குத் தடையாக நினைக்கத் தொடங்கிய காலமே அதன் வாழ்க்கைச் சுதந்திரத்தை மனித இனம் அறுவடைச்செய்யத்தொடங்கியது.இப்போது நாம் புலிகள் இனத்தைக் காப்பதற்கு இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ”ஆடு பகைக் குட்டி உறவு”என்பது போலஓநாயின் இனத்தின் உட்பிரிவான நாய்களை (சாம்பல் ஓநாய்க் கேனிசு லூப்பஸ் Canis Lupus Familiaris ) நம் வீட்டுச் செல்லமாக மனித இனமாக வளர்கிறது. 


நாம் ஒரு படி மேலே போய்ப் பைரவர் ( சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் ) வாகனமாகக் கோவிலுக்குள்வைத்துக் கும்பிடுகிறோம் என்பதும் மகாபாரதத்தில் போரின் போது ”அஞ்சுதற்குரியச் செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம்(பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து உருவாக்கப்பட்டது இது எதிரிகள் மனதைப் பிளப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது ) என்ற பெருஞ்சங்கை ஊதினான்”என்று பேசப்படுகிறது என்பது வேறு விசயம்.அதாவது நமது சமயத்தில் கூட ஒநாயின் இனமான நாய்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது .அப்படிபட்ட இந்தியாவும் அந்த இனதிற்கு எதிராகச் செயல்பட (கதைப்படி) எட்டு வருடங்களுக்கு முன் துருக்கியின் எர்ஜரம் எனும் நகரத்தில் அட்டாடர்க் பல்கழைகலகத்தில் (Ataturk University) உலகளாவிய ”மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மை ,கால்நடைவளர்ப்பில் உயிரியல் சவால்கள்” என்ற கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது .இதில் இந்திய இந்திய விஞ்ஞானிகளின் நிலைத் தவறாகச் செச்சன்யார்களால் புரிந்து கொள்ளப்படுகிறது இதன் விளைவாகப் போராளிப் பிரிவு ஒன்று இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டம் வகுக்கிறது . 


அந்தத் திட்டம் இருவகையில் வகுக்கப்படுகிறது .ஒன்று நேரடிக் குண்டு வெடிப்புகள் மூலம் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது . இதுதான் இந்தநாவலின் 21 ஆம் துவங்கும் ஒரு போராளி ( கொஞ்சம் நல்லவன் என்று முன்னரே சொல்லியிருந்தேனே அவர்(ன்) ) செய்ய வந்த வேலை. இன்னொருவகை நாம் இதுவரை எந்தப் புத்தக்கங்களிலும் வாசிக்கப்படாதப் பகுதி இதை மிகக் கவனமாகப் பக்கம் 105 முதல் 112 சொல்லப்படுகிறது .



மனிதக் குலத்திற்கு எதிரான நுண்மின் அலைப் பேரழிவு !. 

மூளையோட இயக்கம் நுண்மின் அலைகளால் ஆனது.நம் அனைத்து உணர்ச்சிகளையும் மின் அதிர்வுகளால்தான் மூளை உணர்கிறது .ஒவ்வொருஉணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இந்த மின்அலைதான் எனத் தோராயமாக மூளைமின்னலை வரைவு Electroencephalography, (EEG) என்ற கருவி மூலம்பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளைஎலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்து Electroencephalography Functional magnetic resonance imaging மூலம் கண்டறிந்து அதை ஒரு ‘டேட்டாப்பேஸ்ல”சேகரித்து வைத்து அதே மாதிரிச் செயற்கை மின் அலைகளை உற்பத்திச் செய்யும் எஞ்சினை உருவாக்கி,அதைக் கம்யூட்டர் மூலமாக்கண்ட்ரோல் செய்து எந்த மனித உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டுமோ அதை உருவாக்கி அதை ஓர் ஏற்பு அலை என்று சொல்லும் கேரியர் அலைமூலமா ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொழியச் செய்து அங்குள்ள மனிதன் அல்லது மீன்கள், எலி,யானை ,ஓநாய் போன்ற எந்த உயிரையும் தூண்டிச்செயல்பட வைக்கலாம்.உதாரணமாக மனிதனுக்கு இந்த உணர்ச்சியின் போது இந்த அலை மூளையில் ஏற்படும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தப்பட்டுஇருக்கிறது.


ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர் .மூளையின் செரிப்ரல்கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் மேலுறைப் போன்ற பகுதிப் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்காக உள்ளது. இதில் கோடிக்கணக்கில்நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் சுமார்ப் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானுக் கோடி நியூரான்கள்மூளை இணைப்பில் உள்ளன என்பதைக் கற்பனைச் செய்து கொள்ளலாம் ! இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப்பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்பு தூண்டுதலினால் மின் செயல் பாட்டைப் பெறுகின்றன. புலன்கள்அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை ஒரு EEG ன் எலக்ட்ரோடை மண்டையில்இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். EEG, சீரான இடைவெளியில்வருகின்ற ஆல்பா, பீட்டா டெல்டா , தீட்டா,காமா மற்றும் பல வகை மின்னலைகளைப் பதிவுச் செய்கிறது.இவற்றை அலைவரிசை அல்லது அலைஎண்என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.உதாரணம்..

Delta wave – (0.1 – 3 Hz) 
Theta wave – (4 – 7 Hz) 
Alpha wave – (8 – 15 Hz) 
Mu wave – (7.5 – 12.5 Hz) 
SMR wave – (12.5 – 15.5 Hz) 
Beta wave – (16 – 31 Hz) 
Gamma wave – (32 – 100 Hz) 

இப்போது இன்னும் பல மடங்கு முன்னேறியுள்ளது .அதாவது 0.1  நுண்ணிய ஹெர்ட்ஸ் மின்அலையில் மூளைச் செயல்படும்போது என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூட EEG கருவியின் மூலம் கண்டறியும் அளவுக்கு நுட்பம் முன்னேறியுள்ளது . 


1957 இராக் போரில் அமெரிக்காவின் CIA - Central Intelligence Agency இவ்வாறு ஒரு குறிப்பிட்டக் கோப உணர்ச்சிகளைத் தூண்டிச் செயல்படுத்தி இராக் மக்கள் தங்களுக்குள்ளே தாக்கிக் கொல்லுமாறு செயல்படுத்தப்பட்டார்கள். இது மாதிரித் தெரிந்தும் தெரியாமலும் உலக நாயகன் அமெரிக்க அண்ணன்செயல்படுத்தி இருப்பார் யாருக்குத் தெரியப் போகிறது ? கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாகஅழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட உலகின் 10 ரகசியப் பகுதிகளில் இந்த அமெரிக்காவின் அரசு ஆய்வு மையம் (HAARP government researchfacility) : அலாஸ்காப் பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையமும் (HAARP - High Frequency Active Auroral Research Program) ஒன்று !அப்படி இந்த ஆராய்ச்சி மையம் உலகுக்கு என்ன செய்கிறது ? இதற்கு இன்னும் பல பெயர் உண்டு அதில் ஒன்று Secret Weapon Used For Weather Modification .இதன் செயல்பாடுகளில் ஒன்றைக் கடந்த 04.12.2016 தினமலர்ச் செய்தி (http://www.dinamalar.com/user_comments.asp?uid=221584&name=wellington)உறுதிப்படுத்துகிறது.வாசித்துப் பாருங்கள் இதன் வலிமைப் புரியும். 

சென்னையில் மேலும் பல பகுதிகளைச் சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர்ப் பாதிப்புத் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படைத் திணறல்இந்தப் பேய்மழைச் செயற்கையாக உருவாக்கப்பட்டது... 

உலகப் பருவ நிலை மாற்றம் குறித்ததான மாநாடுப் பாரிஸில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு ஆதரவுப் பெறும் நோக்கில் இவ்வாறுநிகழ்த்தப்படுகிறது. இதைபோல் பல நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஹார்ப் [ HAARP: Secret Weapon Used For Weather Modification ] இந்தமாநாட்டின் நோக்கமே, தொழில்சாலைகளில் இருந்து வரும் கரியாமிலவாயுக்களால் பருவ நிலை மாறுபட்டுவிட்டதாகக் கூறித் தொழில்சாலைகளைமூட வைக்க வேண்டும் என்பதாகும். 


ஒருவேளை இம்மாதிரி மறைமுக விஞ்ஞான ஆயுதங்கள்தான் எல்லா நாடுகளையும் அமெரிக்காவிற்குப் பணியவைக்கும் முயற்சியா ?தெரியவில்லை.இது அமெரிக்கா அண்ணன் மட்டுமல்ல ரஷ்யச் சகோதரரும் Sura Ionospheric Heating Facility என்ற பெயரிலும் நியுஜிலாந்து ( military in aprogramme code named ) Project Sea என்ற திட்டத்தின் கீழும் இம்மாதிரி இன்னும் உலக நாடுகள் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அழிவின் விளிம்பிற்குஉலகை அழைத்துச் செய்யும் முயற்சியாகத் திட்டமிடுகிறார்கள் .இந்த நாவல் படிக்கும் போது நம் உலகம் எவ்வளவு பெரிய அபத்து வலைப்பின்னலில்சிக்கித்தவிக்கிறது என்பது மிரட்டும் உண்மையாகச் சுடுகிறது.இந்த நாடுகளின் முன் மனிதாபிமானம் என்பது நூறு டன் இரும்புக் குண்டை எச்சில்தொட்டுக் கட்டிடக் கூரையில் ஒட்டும் முயற்சி என்பது மிகத்தெளிவாக உணர முடிகிறது . 
இன்னும் சில பயங்கர உண்மைகளை இந்தச் சதிவலைகளால் எவ்வளவு சாத்தியம் என்பதை உங்களால் முடிந்தால்http://www.maruthamunaionline.com/V3/index.php/articles/205-human-action படித்துப்பாருங்கள் .அது மட்டுமல்லாது நாவலின் பின் பகுதியில் (பக் 229 -231) வரைஆசிரியர் கொடுத்த Reference பகுதிகளுக்குக் கட்டாயம் ஒரு விசிட் அடியுங்கள் .

ஆனால் இந்தக் கதையில் இந்தத் தொழில் நுட்பம் எப்படி யாரிடம் பயன்படுத்தப்படுகிறது ? இந்தப் பாதிப்பை மரபியல் ரீதியாக MAO ( Mono Amine Oxide )Type 2 Allele பாதிக்கப்பட்டவர்களை எப்படித் தாக்குகிறது அதற்கு உபகருவியாக என்ன என்ன தேவைப்படுகிறது ? ( பக். 108) 

இவ்வளவு சிரமமானக் கதை நகர்த்தலில் ஊடே திவாகர் – வித்யாக் காதல் இழைப் பின்னப்படுவதுவும், (பக் 132 – 133) 
இந்த அராய்ச்சியில் ஈடுபட்ட ஜெயா என்ற பெண்ணுக்கு ஹோலிஸ்டிக் சென்சிங் (Holistic sensing) மூலம் நினவுகளைத் திரும்பவும் மின்காந்தஅலைத்தூண்டல்கள் மூலம் செய்தியாகப் பெற MANAS - Mind and neural activity stimulator செயற்கை நுண்ணறிவு மென் பொருள் உருவாக்கப்படுவது இந்தியாவின் சூப்பர்க் கம்ப்யூட்டர் உதவியால் PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) inPune, India (பக் 117 ) 

இதை எப்படி நம் ராணுவம் ”மன ஆளுமைத் தன் வசம் இல்லாத மனிதர்களால் பெரிய தாக்குதல் வரும் என்பதை அறிந்து அதை முறியடிக்கும் இந்தியMAPRREC Mind And Psychical Resource REmote control என்ற திட்டத்தில் யாரெல்லாம் சேர்க்கப்படுகிறார்கள் ?(பக் 111) 

நாவலின் போக்கில் இடச்செருகலாக விக்ரம் பத்ராவின் கனவின் ESP காட்சிகளும் சில்கா ஏரி நிகழ்வுகளும் மீன்களின் தாக்குதல் எலி, யானை, மனிதர்கள்மனிதனைச் சாப்பிடும்  விசயங்கள் (பக் 77) 

நாவல் மூலம் கற்றதும் பெற்றதும் .. 



1.மனித இனத் தோற்றத்துக்குக் காரணமான ‘யாளி’என்றக் கலப்பின உயிரினத்தின் உடலும் ஆதி ஓநாய் இனத்தின் உடலின் அமைப்பும், முதலை அல்லது சிங்கம் போன்ற அமைப்பு Anatolia - Gobekli Tepe பழங்காலக் கோவில் சிற்பம் மூலம் ஒத்துப்போகிறது .இது என் தனிப்பட்ட தேடலுக்கு இன்னொரு பலம்சேர்க்கிறது. 

2. நான் கற்றுக்கொண்டும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கும் அகத்தாய்வு Introspection ( empathy, and psychoanalysis: An examination of the relationshipbetween mode of observation and theory.) என்ற HLA – Human Lucosite Antigen Allele பற்றிய செய்திகளும் அதன் தீர்வும் பற்றிய பயணமும் வலுப்பெற்று இருக்கிறது !  

3. தியானத்தின் போது குறையும் EEG அலைகளின் தன்மைக் குறித்த 
பின் பகுதி (பக் 229 -231) வரை ஆசிரியர் கொடுத்த Reference பகுதி அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது . 
     
        4.The Day After Tomorrow ஆங்கிலப்படமும் ,அமெரிக்காவிடம் தப்பித்த Edward Snowden - http://www.secretsofthefed.com/snowden-reveals-haarps-clobal-assassination-agenda-w-video/ பகுதிக்கும் இன்றைய நவீன HAARP சதிகளை http://www.pearltrees.com/tierracast/haarp/id9718285#l614 பாருங்கள். 

5 .மிகப்பல அறிவியல் நூல்களை ஆராய்ந்து வாசித்துக் கதைகள் புனையப்படுவதன் சாத்தியத்தை நீங்கள் அறியலாம் .ஆனால் ஒரு நாவலைப் படித்துவிட்டு நீங்கள் மிக்கப்பல ஆராய்சிக் கட்டுரைகளைத் தேடிப்போவது நிகழப் போகிறது என்றால் அது 7.83 ஹெர்ட்ஸ் நாவலைப் படித்தவர்களுக்கு நிகழப்போவது உறுதி !.


கடைசியாக … 

                 இரண்டு முறை இந்த நாவலை நான் வாசித்து ஒரு தரமான விமர்சனத்தைத் தர விரும்பினேன் காரணம் இன்னும் பலரால் இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும் என்ற ஒருவித ஆதங்கமே காரணம் .

                        ஆனால் இன்னொரு சிறு நாவல் அளவுக்கு என் விமர்சனம் விரிந்து விட்டதது ! காரணம் இந்த நாவல் என்னை மிகத்தொலைவு வரை இழுத்துச்சென்றுவிட்டது.அப்படித்தேடல்களில் சேகரித்த சில விசயங்களையும் சேர்த்து இங்குக் குறிப்பிட்டதால் விமர்சனத்தின் நாகரீக எல்லைகளை மீறிப்பயணித்துவிட்டேனோ என்று கூடத்தோன்றுகிறது ! ஓர் ஆர்வத்தில் பதிவுச் செய்ததால் தவிர்க்க முடியவில்லை .நாவலாசிரியர் திரு சுதாகர் அவர்களும் மற்றும்  சிறந்த விமர்சனப் பிதாமகர்களும் ,மகள்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களாக ! 
 




(பி.கு)
திரு.சுதாகர் அவர்களின்  முதல் நாவல் 6174, வம்சி புக்ஸ் வெளியீடு. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினால் '2012ம் வருடத்தின் சிறந்த நாவல்' விருதினையும், கலகம் அமைப்பின் 'சிறந்த நாவல்-2012' விருதினையும் பெற்றது.