வியாழன், 16 பிப்ரவரி, 2017

கிருஷ்ண மோகினிகள் ! Transgender





விதியை எழுதினேன்..

கடவுளுக்கு மனைவியாகி
ஒரே நாளில் விதவையான
ஒரு பரிசோதனை கவிதை நான்..
என் தாலியின் வாழ்வு
ஒருநாள் மட்டும்.
அறுத்த என் தாலி
எங்கோ மரத்தில் கட்டப்பட்டு
மக்கிப்போய் மண்ணாகியிருக்கும்
அந்தத் தாலி
என் விதியை நிர்ணயிப்பதில்லை
என்பதை அறிந்துகொண்டேன்
எல்லோருக்கும் ஜாதகம்
இருக்கும்.
எனக்கு இல்லை
என் விதியை
நானே எழுதிக்கொள்ள
எனக்கிருக்கிறது
வலிமை மிக்க ஒரு மனம்
தெளிவு பெற்ற என் அறிவு.
அறுத்தெறிந்த தாலிக்கு
அர்த்தமில்லை
வெறும் மஞ்சள் கயிறு
அதில் ஒன்றுமில்லை
அந்த வேதனைச்சடங்கு
எனக்கு வேண்டாம்.
சடங்குகளை மூட்டைகட்டி
சாக்கடைக்குள் போட்டபின்
புன்னகை செய்யக் கற்றுக்கொண்டேன்
பூக்களோடு பேச கற்றுக்கொண்டேன்
காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
கவிதையாகவே
வாழவும் இன்று கற்றுக்கொண்டேன்..
 - திருநங்கை கல்கி.

       நேற்று அலுவலத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி  அலைபேசி இணைப்புகளைப் பற்றி புதிய ப்ளான்களைக் காட்டி  வழக்கம் போலப் பொய் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் . இதற்கிடையே எங்கள் அக்கவுண்ட் செக்சன் பெண் ஏதோ கேட்க வந்தவர் வரவேற்பு அறைப் பக்கம் பார்த்து விட்டு நான் அப்புறம் வரேன் என்று சிரித்துக்கொண்டே அவசரமாகக் கேபினை விட்டு நகர்ந்தார் இல்லை ஏறக்குறைய ஓடினார் .நிமிர்ந்து பார்த்தால் மூன்று திரு நங்கைகள் என் கேபினை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்... 

             கூத்தாண்டவர் திருவிழாவுக்கு வருடா வருடம் அன்பளிப்புக் கேட்டு வருவார்கள்.மொத்த அலுவலகமே செய்யும் வேலையை விட்டு விட்டு வந்த திருநங்கைகள் போகும் வரை என் பக்கம் கவனித்துக்கொண்டு இருப்பது வழக்கம் .வந்தவர்களில் ஒரு திருநங்கை வழக்கமாய் வருபவர் .வந்தவுடன் சூரிய நமஸ்காரத்தின் போது அனாதகச் சக்கரத்தில் வைத்துக் கைகூப்பி வணங்குவது போல மூவரும் வணங்கினார்கள். 

              இந்த முறை நிறையத் தரணும் .உங்க தொழில் ,குடும்பம் நல்லா இருக்கும்.மறுக்காமத் தீபாவளிக்குத் தருவது கணக்கா இல்லாம ரவுண்டா இருக்கட்டும் என்று வழக்கமாய் வருபவர் துவங்கினார். எவ்வளவு தந்தாலும் சில சமயம் மேலும் மேலும் கட்டாயப்படுத்துவார்கள் என்பது எனக்கு வழக்கமாகி விட்டது .இந்த மாதிரி டொனேசன் விசயங்கள் கம்பெனி ஒரு வழிகாட்டுதலைச் சொல்லிவிட்டு நகர்ந்து கொள்ளும் .தீபாவளிக்குத் தீயணைப்புத் துறைத் துவங்கி போஸ்ட்மேன் வரை ஒரு முன் தயாரிக்கப்பட்ட பட்டியலை நீட்டிப் அனுமதி பெற்று பணம் எடுத்து வைத்துக்கொள்வேன் .அந்தப் பட்டியலிலும் இவர்கள் வருவார்கள் .அது இல்லாமல் வருடாந்திரச் சித்திரை மாதம் பௌர்ணமிக்கு  கூத்தாண்டவர் கோயில் விழாவுக்கு முன் இப்படி வருவது வழக்கம்தான். 

                 கொடுத்த  நூறு ரூபாய் நோட்டுக்களை வந்தவர்களில் ஒருவர் வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு, அந்த நோட்டுக்களைப் பஸ் கண்டக்டர் நீள வாக்கில் மடிப்பது போல மடித்து, தன் உதடுகளுக்கிடையே ஒரு முறைக் கவ்வி எடுத்து, என் தலையைச் சுற்றி என்னிடமே கொடுத்து விட்டு இரண்டாயிரத்து ஐநூறு தரணும் என்றார் .போன முறை தந்ததை விட இந்த முறை அதிகம் இது சந்தோசமாக வாங்கிக்கங்க என்றேன் .அதில் எப்போது வரும் அந்தத் தி.ந தன் கழுத்தின் அணிந்திருந்த தாலியைக் காட்டி எங்கத் திருவிழாவுக்கு மட்டும்தான் அதிகம் செலவாகும் அதான் கேட்கிறோம் என்றார். 

           சித்திரா பௌர்ணமியன்றுக் கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு அங்கேயுள்ள கோயில் அர்ச்சகர்க் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலிக் கட்டிக்கொள்வதுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன் .இது புதிதாய் இருந்தது .எழுதுகிற மனது விசாரிக்கத் தூண்டியது .ஆனால் மொத்த அலுவலக மெர்சன்டைசர்களுக்கும் நிறைய வேலையிருந்தும் அதெல்லாம் கெடுத்துக்கொண்டு அவர்கள் பார்வையும் கவனமும் சிந்தாமல் சிதறாமல் இங்கேதான் இருந்தது.எனவே கேள்வியைத் தவிர்த்து விட்டு ஒரு வழியாய் கொடுத்த தொகையை பெற்றுச் செல்ல  சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டேன். 


        திண்டுக்கல்லில் இருக்கும் போது நான் வேலை பார்த்த ஷோரூமிற்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் ஒரு திருநங்கை வருவார் .அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் சாந்தி. என்னுடன் வேலை பார்ப்பவர் ஐந்தோ பத்தோ கொடுத்து விட்டு ,அவரை உட்காரவைத்து நிறையக் கேள்விகள் கேட்பார்.அதில் சில சமயம் சென்சார்போர்டே தப்பி ஓடும் அளவுக்கு ஆபாசக் கேள்விகள் அதிகமிருக்கும்.சாந்திக்கு சொந்த ஊர் நிலக்கோட்டைப் பக்கம் .அங்கு ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் வருமானம் போதாதற்கு இப்படி வீதி வீதியாய் வசூல் செய்வதாக என்னுடன் பணியாற்றும் சாந்தியிடம் கேள்வி கேட்பவர் சொல்லியிருக்கிறார். 

         சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமத்திருந்த போது என் சகோதரரும் நானும் திண்டுக்கம் கடைவீதிப் பக்கம் டூவீலரில் போய்க் கொண்டு இருந்த போது சாலையில் ஒரு பெண் கை காட்டி வழிமறித்து நிறுத்தியது.அப்பா எப்படி இருக்கிறார் என்று அக்கறையுடன் விசாரித்துச் சென்ற பின் அண்ணன் அது யாருன்னு உனக்குத் தெரியுதா ? அண்ணிகூடத் திண்டுக்கல் ஜி.ஹெச்சில் வேலைப் பார்ப்பதாகச் சொன்னார் இதுதான் தமிழகத்தில் முதல் திருநங்கை நர்ஸ் என்றார். 

               இங்குத் திருப்பூர் வந்த போது என்னுடன் பணியாற்றும் நண்பர் தனக்கு நடந்த சம்பவம் ஒன்று சொன்னார்.ஒரு முறை ஊருக்குப் போய்விட்டு இரவு ஒன்பது மணிக்குப் பஸ் நிலைய விட்டு வெளியே வரும்போது , ஒரு தி.ந  நணபரின் கையைப் பிடித்து அழைத்து இருக்கிறார்.நண்பர் அவர்கள் மேல் கண்ணாபின்னாவென்று மதிப்பு வைத்திருப்பவர். அந்தத் திரு நங்கையின் இன்னொரு கையைப் பற்றிக்கொண்டு  உங்கள் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று சட்டெனெக் கண்கலங்கி விட்டாராம்.கையைப் பற்றிய அந்தத் தி.ந உடனே அங்கிருந்த மற்ற திருநங்கைகளையும் அழைத்துப் பக்கத்திலிருந்த கோவிலுக்கு நண்பரை அழைத்துச் சென்று அவருக்கு ஆசீர்வாதம் பண்ணி நெற்றி நிறையக் குங்குமமிட்டு ,எங்க சாமி மாதிரி நீ என்ன உதவி வேணுமின்னாலும் எங்களக் கேளுன்னு சொல்லி  அனுப்பி வைத்தார்களாம் .

             சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வாழ்ந்த போது விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீத் தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனித் தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று வரப் பல முறை முயற்சி செய்து இருக்கிறேன் .ஆனால் அங்கிருந்த நண்பர்கள் தடுத்து விட்டார்கள் .இங்கும் சிலர் அவர்களை விடுவதில்லை .பெரிய கலாட்டாவாக இருக்கும்.நம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்றார்கள் .


பாலினப் போட்டி

          பெற்ற தாயின் கருவில் உருவாகும் ஆண் பிறப்பதா பெண் பிறக்க வேண்டுமா என்ற பாலினப் போட்டி பொறாமையின் விளைவால் ஏற்படும் மரபுப்பண்புகள் மாற்றமே இந்தத் திருநங்கையாக ஒரு ஆண் பிறக்கக் காரணம் என்கிறது Bill Hamilton ஆராய்ச்சி .உடல் மட்டும் ஆணாகவும் பாலின ஈர்ப்பில் ஒரு பெண் விரும்புவது போலவே இன்னொரு ஆணை விரும்புபவர்களைத் திருநங்கை என்கிறோம் .இது கருவிலேயே உருவாகும் ஒரு குறை.இதற்கு அவர்கள் பொறுப்பில்லை .ஆண் கருவில் Minor histocompatibility antigen ஜீனால் உருவாகும் புரதக்குறைபாட்டுக்கு எத்தனையோ காரணங்கள் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளுக்கு விடைகிடைக்காத பெரிய முடிச்சாகப் போய்க் கொண்டு இருக்கிறது . Anti-Müllerian hormone கையில்தான் கருவில் ஆண் உறுப்பு வளர்வதாற்கான சாவி இருக்கிறது.இந்த ஹார்மோன் சோரம் போனால் பெண்ணாகப் பிறக்கக் கருப்பையும் ஃபோலோப்பியன் ட்யூப்பின் உருவாகி விடுகிறது.வீட்டில் மட்டுமல்ல கருவில் கூட ஆணுக்கு மதிப்பு அளந்துதான் வைக்கப்பட்டுள்ளது .பெண்தான் எப்போதும் மேல் என்பதே இயற்கைச் சட்டம் ! 

        சரி நம்ம காபாரதத்தில் சகல லட்சணமும் பொருந்தி ஆணாக அர்ஜுனனுக்கும் - இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி உலுப்பிக்கும் பிறந்ததாக அரவான் பேசப்படுகிறான்.அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுள். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். நம்மைப் பிடித்தாட்டும் நவக் கோள்களில் சுபகிரக வரிசையில் புதனும், அசுபக் கிரகத்தில் சனியும் ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம் எனப்படுகிறது (சனி மட்டும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும்) இத்தனை அந்தஸ்த்துப் பெற்ற திருநங்கைகளை மணிரத்தினம் படத்தில் மட்டுமே மதிப்பாகப் பார்க்க முடிகிறது .மற்ற படங்கள் அவர்களைக் கேளியாகவும் அருவருப்பாகவுமே காட்டி இன்னும் கீழ் நிலைக்குக் கொண்டு போய்கொண்டு இருக்கிறது . 

             நமது தேசம் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று அறிவித்து ‘இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் வழங்கும் பாதுகாப்பும் உரிமையும் மற்றவர்களைப் போல அவர்களுக்கும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்துள்ளார்கள். தீர்ப்பில் திருநங்கைகளின் வரலாற்றுச் சான்று, இன்றைய நிலை, Universal Declaration of Human Rights (UDHR) கோட்பாடுகள் சர்வதேச அளவில் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட Yogyakarta கோட்பாடுகள் போன்ற வற்றினைச் சான்று கூறி ஒரு சிறப்புமிக்கக் காலம் போற்றும் தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். 


               எழுத்தாளராகப் பிரியாபாபு , நாட்டியத் தாரகையாக நர்த்தகி நடராஜன் , சமூக ஆர்வலர் பாரதிகண்ணம்மா , இன்னும் அரசியல்  ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பலர் இருந்தும் திருநங்கைகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை , அனுபவம் ,முகம் சுளிப்பு ,அருவருப்பு இன்னும் என் நிறைய இருக்கிறது .ஆண்களும் , பெண்களும் ஒரு சேர ஒதுக்கும் போதும் வெவ்வேறு ஊர்களில் விதவிதமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் போது அவர்களின் சமூகத்தின் மிதானக் கோபம் இன்னும் வலுக்கிறது.எந்தப் பாலினத்திலும் சேராத நாங்கள் விரும்பியா பிறந்தோம் என்ற குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .சமீபத்தில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ”சதையை மீறி” என்ற குறும்படத்தில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் மூலம் சந்தோஷ் நாராயணனின் இசையில், 

''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல 
சர்க்கரை மட்டும் கலப்போம் 
நாம் மனிதரே!'' 

இந்தப் பாடல் கேட்கும்போது , இன்னும் நாம் பயணிக்க வேண்டிய மனிதாபிமானப் படிக்கட்டுகளைக் காண்பிக்கிறதா ? 

திங்கள், 13 பிப்ரவரி, 2017

”உங்கள் வீட்டின் இன்பம் - வானொலி “ World Radio Day



                           ”உங்கள் வீட்டின் இன்பம்” என்று தன்னுடைய அழகிய கைகளில் ஒரு மர்ஃபி வானொலிப் பெட்டியை ஏந்திக்கொண்டு நடிகை ஷர்மிளா தாகூர் தன்னுடைய 23 வயதில் வந்து நின்றால் எப்படி இருந்திருக்கும் ? அட உங்களுக்கு அவரை ஞாபகம் இல்லையா  ? பின்னாளில் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிக் கான் பட்டோடி (Mansoor Ali Khan Pataudi ) வீட்டில் விளக்கேற்றியவர்தான் அவர் . 1959–1984 ஆண்டுகளில் வாழ்ந்த அன்றைய இளம் வயதுடையவர்களின் ( கறுப்பு வெள்ளை ) சுவப்பனத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு  இருந்த சுந்தர நாயகி இப்படிச் சொல்லி ஏந்தி எதிரே நின்றால் அந்த வானொலிப் பெட்டியை யாராவது வாங்காமல் இருந்திருப்பார்களா அப்போது ? தெரியவில்லை .ஆனால் எங்கள் வீட்டில் அப்பா வாங்கிருந்தார் 1984 வரை எங்கள் உலகத்தின் ஜன்னல் அந்தக் கண்காணாத ஒலி அலைகளை உள்வாங்கிச் சுகமாகத் தந்த மர்ஃபி செல்லக் குழந்தைதான் . 

                இன்றைய டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் எனப் பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்ட தொடர்பு வாழ்க்கையை மறந்து (முடிந்தால்) சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள் .இது ஏதுமற்ற வானொலித் தொடர்பு மூலம் மட்டுமே உங்களுக்கான உலகத்துடனானத் தொடர்பை நிர்ணயித்துகொண்ட காலம் அது .அதற்காகக் கற்காலம் என்று நினைத்து விட வேண்டாம் .அதிகமில்லை 1985 முன்னால் பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த வானொலிப் பெட்டியின் மகத்துவம் தெரியும் .செய்திகள் ,பாடல்கள் , ஒலிச்சித்திரம் ,சேவைச் செய்திகள் என்று மட்டுமே கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள் புரிந்து வைத்து இருந்த காலம் .


                 அப்போது இலங்கை வானொலிக்கு இருந்த மவுசு இன்று இத்தனை பண்பலை வானொலிகள் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்தாலும் முன்னால் நிற்க முடியாது .அவ்வளவுதூரம் நிகழ்ச்சிகளை அழகாகச் சுவாரசியமாக்கி வைத்து இருந்தார்கள் .ஒலிச்சித்திரத்தில் பாரதி ராஜாவின் 1979 களில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடிகர் விஜயனின் ” மெட்ராஸ் கேர்ள் ‘ என்ற வார்த்தை இப்போது கூடச் சில சமயம் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. 

                அதிலும் விவசாயிகளின் உற்றத்தோழன் என்று வானொலிப் பெட்டியைச் சொன்னால் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஒத்துக்கொள்வார்கள் .வயல்களும் வரப்புகளும் வானொலி ஓசையை என்றுமே மறக்காது.சில மரங்களில் அடுத்த வேளை உணவு பித்தளைப் போசியில் (தூக்கு வாலியில்) தொங்கிக்கொண்டு இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு வானொலிப் பெட்டிக் காற்றிக் கையசைப்போடு பாடிக்கொண்டு .தூக்கனாங் குருவிகளாக அசைந்து கொண்டு இருக்கும். 

                   
            நாங்கள் திண்டுக்கல் நகரப்பகுதிக்குள் குடியேறிய பிறகு எங்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை டிவி ஆக்கிரமித்தது திருமதி இந்திராகாந்தி அவர்களின் இறப்புக்குப் (1984 ) பிறகுதான். அதுவரை வீட்டில் செல்லக் குழந்தை மர்ஃபி வீட்டின் பரணுக்குள் தஞ்சம் புகுந்தது .ஆனாலும் அப்போது ஒரு தீபாவளியில் அதிக விலையில் வாங்கிய ஃபிலிப்ஸ் பவர் ஹவுசில் ரேடியோவுக்குள் ரேடியோ  இருந்தது .ஆனால் நான் அதிகம் விரும்பியது நண்பர் சுகுமார் வீட்டில் இருக்கும் NATIONAL PANASONIC RADYO TEYP டூ இன் ஒன் மட்டுமே ரொம்பப் பிடிக்கும் .

               அந்த வானொலி வாசனை சில வருடங்களில் வேறு ஒரு அவதாரம் எடுத்தது .அது உலகில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆசைப் பிறந்தது . இங்கிலாந்தின் பிபிசித் தமிலோசை , சீனப் பீஜிஸ் வானொலி , அப்போதைய சோவியத் யூனியனாக இருந்த மாஸ்கோ வானொலி , வத்திக்கான் வானொலி , பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பட்டியல் நீண்டுகொண்டே போனது ..ஒரு கட்டத்தில் வானொலி மன்றங்களுக்கு நல்ல மரியாதை இருந்தது .உடனே “உலகச் சமாதானச் சகோதரர்கள் வானொலி மன்றம் “ என்று தொடங்கிப் பதிவு செய்து கொண்டோம் . சுழற்சி முறையில் தலைவர் பொருளார்ச் செயலாளர்த் தேர்வு செய்தோம் . வெளிநாட்டு வானொலியில் நல்ல மரியாதைக் கொடுத்தார்கள் . இன்னும் கூடச் சீனா வானொலி ஒரு வருடத்தில் அதிகக் கடிதம் எழுதியவர்களைச் சினாவுக்குப் பத்து நாள் இலவசச் சுற்றுப்பயணம் அழைத்துக் கௌரவப் படுத்துகிறது .எங்கள் நோக்கம் தமிழ் உலகெங்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்ததை அவர்கள் ரசித்தார்கள் . 

          முக்கியமாக அப்போது ஒரு அந்தத் தொடர்புகள் மிகப்பெரிய பந்தாவை ஏற்படுத்தியது என்று கூடச் சொல்லாம் .உங்களுக்கு உள்ளூரில் ஒரு சுப்பனோ ,குப்பனோ கூடக் கடிதம் அனுப்ப ஆள் இல்லாத போது, ரஷ்யா,சீனா, ஃபிலிப்பைன்ஸ் என்று வெளிநாடுகளிலிருந்து கடிதம் வந்தால் எப்படி இருக்கும் ? .அந்தக் கடிதங்கள் நண்பர்களின் எல்லோர் வீடுகளுக்கும் எடுத்துச் சென்று பெருமையாக வாசிக்கக் கொடுப்பார்கள் .சில விமர்சனக் கட்டுரைப் போட்டிகளில் ஆறுதல் வெற்றிப் பெற்றதற்குக் கூடப் பெரிய மரியாதைக் கிடைத்தது .நண்பர்களின் தங்கைகள் எங்களை ஆச்சர்யத்துடன் இதைப்பற்றி விசாரிப்பார்கள் . அவர்கள் கட்டுரைப் போட்டிகளுக்கு எங்களின் இலவச ஆலோசனைகள்தான் முன் நிற்கும் .அந்தக் கடிதத்தின் மேலுறைகள் மீது ஒட்டப்பட்டு வரும் ஸ்டாம்ப்கள் மிகச் சாதுர்யமாகப் பிரித்து எடுத்துச் சேகரித்து வைப்போம் . 


         பல மறக்க முடியாத சம்பவங்களை வானொலி கேட்கும் பழக்கம் வரப்பிரதமாக்கியது . மதுரையில் நடந்த பிபிசித் தமிலோசைக் கூட்டத்தில் அதுவரை எங்கள் முகம் கூடப் பார்க்காதவர் செய்தி ஒருங்கிணைப்பாளர் சங்கர் அண்ணா எங்களை வாரி அணைத்துக்கொண்டது இன்னும் நினைவிருக்கிறது .சேலத்தில் நடந்த பீஜிங் வானொலியின் கூட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட் தோள்பைகளும் , மென்மையான கைக்குட்டைகளும் இன்னும் ஞாபகத்திலும் பீரோக்களின் மூலையிலும் ஒளிந்திருக்கிறது .அப்போது இந்தியாடுடே தமிழ் இரண்டாவது புத்தத்தில்  - ’ ஜோல்னா பைகள் ‘  அணிபவர்களுக்கான மனோதத்துவம் தனித்துவம் பற்றி ஒரு கட்டுரை வந்து எங்களை இன்னும் உசுப்பேற்றியது. இன்னும் கூட ஜோல்னா பைகள் கற்றறிந்தவர்கள் அடையாளமாகவும் பேசப்படுகிறது . 

           விமர்சனங்கள் எழுதுவதன் மூலம் எழுத்து , வாசிப்பு , புதிய நட்புக்கள் கிடைத்தது. எழுத்தின் வளமை போதாத போது வாசிப்பு வலுத்தது . வானொலிகள் எங்களுக்கு எங்கள் வீட்டில் ,சுற்று வட்டத்தில் புதிய அழகையும் பெயரையும் கொடுத்தது . தபால் காரருக்கு அப்பா தீபாவளிப் பொங்களுக்கு இனாம் கூட்டினார் .எங்கள் தெருவின் மிக நீண்ட முகவரி எங்களின் சர்வதேசத் தொடர்பினால் சில வரிகளாகச் சுருக்கப்பட்டது .இதில் இன்னும் ஒரு சட்டச் சிக்கலும் ஏற்பட்டது.எங்கள் வெளிநாட்டுக் கடிதக் கவர்கள் ஓட்டையிடப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது . பயமில்லாத வயது என்பதால் நேரில் தலமைத் தபால் நிலையம் சென்று புகார் கடிதம் கொடுத்தோம்.சிலப் பாதுகாப்புக் காரணம் என்று பதில் வந்தது.அதற்குப் பிறகு அதெல்லாம் ராணுவத்தில் வழங்கப்படும் பதக்கங்கள் போலப் பெரிய விசயமாகப்பட்டது . 


                 2001 ல் திருப்பூருக்கு இடம் பெயரும் வரை எல்லாமே நன்றாகத்தான் போனது . எனக்குப் பிறகு என் உள்ளூர் நண்பர்கள் அதைத் தொடரவில்லை அதற்குப் பிறகும் சில வருடங்கள் நிகழ்ச்சிப் பட்டியல் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தது திண்டுக்கல் போகும் போதெல்லாம் எடுத்துப் பார்துக்கொள்வேன் .ஒரு பக்கம் வருத்தமாக இருக்கும் .

 நிறைய மறக்காத வரங்களை தந்த  அந்த வானொலி வாழ்கையை யாரிடமாவது சொல்லப் ஆசைப்பட்டு வெகுநாள் பதிவாக மலர ஆசைப்பட்டு இருந்தது இன்று உலக வானொலி நாள் . 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டுத் தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதைக் கண்டு பிடித்து உலகுக்கு அர்பணித்த 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனியை உங்கள் சார்பாகவும் இன்றும் வானொலியை ரசிக்கும் மக்களின் சார்பாகவும் அதன் மூலம் சினிமாவுக்குக்குள் காலெடுத்து வைக்கும் RJ க்கள் அனைவரின் சார்பாகவும் வணங்கிக்கொள்கிறேன் .

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

புத்த(க) தரிசனம் . திருப்பூர் 14 ஆவது புத்தகத் திருவிழா . Book fare



                        ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின் போதும் ஒவ்வொரு முறையும் ஒரே இடத்தில் இத்தனை நூல்கள் இன்னும் வாசிக்க இருக்கிறது என்று பார்க்கும் போதுதான் நம் ஆயுள் ரேகை மேலுள்ள நீட்சியின் அவசியம் புரிகிறது .நம் இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. ஒருவேளை புத்தர் உயிரோடு இருந்து, புத்தகம் வாசிப்பதற்காக இன்னும் வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்டு இருந்தால் அவர் மறுத்து இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! ஆமாம் அங்கு வாசிக்காமல் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் நமக்காகவே காத்திருக்கும் ஒரு புத்தன்தானே ? 

                           புத்தகத் திருவிழா இந்த முறைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது . 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தும் ஏனோ அதிகமாக விற்கும் புத்தகங்கள் மட்டும் போதும் என்ற கணக்குடன் செயல் பட்டு இருப்பதாகவே தோணுகிறது. சென்ற புத்தகத் திருவிழாவில் ஒன்றரைக்கோடிக்கு விற்பனை நடந்து இருப்பதாகச் சொன்னார்கள் .அதனாலோ என்னவோ எங்கு பார்த்தாலும் மிக அதிகமாக ஏற்கனவே விற்றப் புத்தகங்கள் மட்டுமே இருக்கிறது .வியாபாரம் மட்டுமே முதல் நோக்கம் என்பது தவறில்லை . ஆனால் மக்கள் ரசனைய நுட்பமாக அறிந்து செயல்படுவது மிக முக்கியமாகப் படுகிறது .பல ஸ்டால்களிலும் ஒரே மாதிரிக் கல்கி , பாலகுமாரன் ,சுஜாதா,ஜெயமோகன், இவர்களையே பரப்பி வைத்து இருப்பது அடுத்தத் தலைமுறை சிந்தனைக்கு வழிகாட்டுவதாகத் தோணவில்லை .மேலும் இது விஞ்ஞான வழியாகாவே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள ஆசைப்படும் காலம் .அதைப்பற்றிய படைப்புகள் இன்னும் முன்னிறுத்தப்படவேண்டும்.

                           ஒருவேளை புத்தக வெளியீட்டாளர்கள், திருப்பூர் மக்களின் ரசனை இப்படித்தான் என்ற ஒரு தவறான புரிதலில் இருக்கிறார்களா ? இது தொழில் நகரம் இங்குக் கௌரவத்திற்கு மட்டுமே புத்தகம் வாங்க வருவார்கள் என்று யோசித்து வைத்திருக்கிறார்களா ? தெரியவில்லை. சென்ற முறையை விட இந்த முறைப் புத்தகத்திருவிழாவின் உற்சாகத்தையும் வித்தியாசத்தையும் வெளிப்படுத்தும் ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் நகரெங்கும் இருந்தது .சென்று வர வசதியாய் விசாலமான இடத்தேர்வு எனப் பிரமிக்க வைக்கும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் - பாரதி புத்தகாலயம் அமைப்பினர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து இந்த ஒரே மாதிரிப் புத்தகக் குவியல்களைத் தவிர்க்க ஆலோசனை வழங்குவதும் கண்கானிப்பதும் நல்லது . நம் ஊருக்கு வந்து வந்து போகும் விற்பனையாளர்களும் - மக்களும் ஒரு சேரப் பயன் பெறும் போது அடுத்த முறை எப்போது நடக்கும் என்ற ஆவல் கூடும் . 

             புத்தகத் திருவிழாவில் எப்போதுமே எனக்கு இருக்கும் சங்கடம் .ஒரு ஸ்டாலில் புத்தகம் வாங்குவோம் .பில்லும் தருவார்கள் . ஆனால் அடுத்த ஸ்டாலில் நுழையும் போது ஏற்கனவே வைத்திருக்கும் புத்தகத்தை வைத்துக்கொள்ள ஒரு தர்மசங்கடம் நிலவும் .ஒருவேளை இங்கு எடுத்ததோ என்று வாங்கிப் பார்த்தால் என்ன செய்வது என்ற கூச்சம் தொற்றிக்கொள்ளும் .ஆனால் அதே சமயம் பார்க்கட்டும் காசு கொடுத்துதான் வாங்கி இருக்கிறோம் என்ற சவால் மனசில் வந்து போனாலும் அது ஒரு அழையா விருந்தாளியாகக் கூடவே மனசுக்குள் வந்து விடுகிறது .பாவம் விற்பனையாளர் எத்தனைபேரைத்தான் கவனிப்பார் ? இதிலும் சில உள்ளே நுழையும் இடத்திற்கு எதிர்பக்கம் சிலர் நுழைவார்கள் . 


                                    ஆனால் அந்தச் சங்கடத்தை நம் பெரியார் புத்தக நிலையம் தீர்த்து வைத்தது .சார் இந்தாங்க இந்தப் பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் அளித்தார் .தமிழர்களுக்குத் தந்தை பெரியார் இன்னும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார் . இதையே ஏன் உள்ளே நுழையும் போதே நம் புத்தகத் திருவிழா நடத்தும் அமைப்புத் தங்கள் விளம்பரத்துடன் இதே போல எதாவது குறைந்த விலையில் கொடுக்கலாமே ? நிச்சயமாய் வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அந்தப் பையை வாங்க மாட்டார்கள் .ஒரு வகையில் அது வந்து போனவர்கள் சென்ற பின்னும் அதை ஞாபகப்படுத்துமே ? 

                      நம் கோவில்கள் இல்லாத ஊர்களில் குடியிர்க்கலாகாது என்று சொல்வதைப் போல நல்ல விசயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும் . புத்தகத் தரிசனமும் ஒரு நல்ல விசயம்தானே ? 


திங்கள், 6 பிப்ரவரி, 2017

திருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை ! 14th Book fare Tirupur


                     நண்பர் ஆதி ஒரு முறை நெல்லை கண்ணன் அவர்களிடம் முகநூலில் தமிழ் சம்பந்தமாக ஏதோ ஒரு விளக்கம் கேட்டு இருக்கிறார் .உங்கள் பெயர் முகநூலில் ஆங்கிலத்தில் இருக்கிறது மாற்றி விட்டு வாருங்கள் என்று பதிலளித்து இருந்தார் .நண்பர் மாற்றிய பிறகே பதிலும் தந்திருக்கிறார்.அப்படிபட்ட மனிதரை முதல் முறையாக இடம் மாற்றப்பட்ட காங்கயம் சாலை பத்மினிக் கார்டனில் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் , பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும்... 14வது திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் அவர் பேச்சைக் கேட்டேன் . 

முதலில் ’இடி’ இடித்தது ! 

தமிழனுக்குத் திமிழ் பிடிக்கும் என்பதைக் காலை வாடிவாசல் ஜல்லிக்கட்டு நேரலைப் பார்த்தபோது உணர்ந்தேன் அதே மாலைத் திருக் கண்ணன் அவர்களின் அதிரும் பேச்சால் தமிழ்ப் படித்தால் திமிரும் பிடிக்கும் எனதை நேரடியாக உணர்ந்தோம்.அவர் பேசத்தொடங்கிய முதல் நிமிடத்தில் அவரருகே மேடையில் அமர்ந்து இருந்த புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் மேடையிலிருந்த படிக் கீழே வருபவர்களை வணக்கம் சொல்லி வரவேற்கச் சட்டெனெ அவர் பக்கம் திரும்பி, எனக்கு இடயூறாய் இருக்கிறது இனி அப்படிச் செய்யாதீர்கள் என்று கண்டித்தார்.அடுத்த சில வினாடிகளில் தலைவர் ஏதோ பேச வேண்டாம் என்பது போல மெல்லச் சொல்ல, மனிதன் இடியெனெ வெகுண்டெழுந்தார் .நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் இப்படி ஏதாவது இடையூறு செய்தால் நான் இத்தோடு பேச்சை முடித்துக்கொள்கிறேன் பொங்கிவிட்டார் . வின்னில் ஜெக ஜோதியாய்க் கிளம்பிய ராக்கெட் பாதை நழுவிக் கடலில் விழப் பாய்வது போலச் சில நிமிடம் மொத்த மக்கள் கூட்டமும் திக் திக்கென்று ஸ்தம்பித்து நின்றது  . பிறகு சமாதானப்படுத்திய பிறகே மீண்டும் நெல்லை ராக்கெட் தன் சுற்றுப் பாதையைத் தொட்டது ! 

மின்னலெனெச் சிலிர்த்தார் ! 

கொடுத்த தலைப்புக்குத் தனது வாசிப்பு அறிவையும் , மேடை அனுபவங்களால் அலங்கரித்த அறிஞர்கள் பேச்சை மட்டுமே இதுவரை கேட்டு இருந்த எனக்கு இப்படி ஆயிரம் வாலாவாக அரசியல் கட்சிகள் தொடங்கி ,அதிகாரிகள் ,ஆட்சியாளார்கள் நடிகர்கள் ,வியாபாரிகள் ,கோவில் சர்ச் ,மசூதி ,மக்கள் ,குடும்பம்,குழந்தைகள் என்று அவரவர் கடமைகளில் விட்டு விலகும் ஒருவரையும் விடாமல் தன் பேச்சால் பொருத்திப் வீசினார். பெரியாரைப் பார்த்துதான் எப்படி மோசடியில்லாத பக்தி என்று அறிந்து கொண்டேன் .வழிபாடுகளின் குறைகளை அநீதிகளையும் நானும் எதிர்க்கிறேன் என்றார் . 

தான் வளர்ந்தது காமராசர் அய்யா தொடங்கி ,கக்கன் ஜி, வரை பல நேர்மையானவர்களிடம் .இன்று இருக்கும் அரசியல் களவாணிப்பசங்களுக்கும் இது தெரியும்.எனக்கு இந்திராஜி ,ராஜிவ் காந்தி, ஜெயலலிதா அம்மையார்வரை எனக்குப் பழக்கம் இருந்தது .எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன் ,ஏனென்றால் நான் தமிழ்ப் படித்தவன் அறிவு மட்டுமல்ல ஒழுக்கம் இருக்கிறது .ஒழுக்கம் உள்ளவன் எவனுக்கும் பயப்பட மாட்டனுவ என்று தன்னுடைய எல்லாப் பேச்சிலும் எல்லைக் கோட்டிய தாண்டி விழும் பந்து போலச் சளைக்காமல் தூக்கியடித்தார். 


மக்களை மழையெனெக் குளிர்வித்தார். 

நெல்லைத் தமிழில் அவரின் பேச்சை மிகவும் ரசித்தார்கள் .எல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தன்னுடைய வாழ்வின் அனுபவங்களில் எடுத்து முன்வைத்தார்.முக்கியமாகக் காமராஜர் என்ற மாமனிதனின் வாழ்வில் அவரோடு பயணித்த அனுபவங்கள் கேட்க்கும் போது மிகச் சிலிர்த்துப் போக வைத்தார்.இத்தனைப் பெரிய அரசியல் ஒழுக்கசீலர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற ஆச்சர்யத்தை விதைத்தார்.முக்கியமாகச் சாதிய வெறியை விட்டொழிக்கவும் , அன்புதான் எல்லாம் என்ற போது அந்தத் தமிழ் அறிஞன் மனது எந்த மேடைப் பாசாங்கு வார்த்தைக்களற்று உதிர்த்தப் போது , பலரின் மனதில் இதுவரை வளராது நின்ற விதைகள் முளைக்கத் தொடங்கச் செய்தார் .இத்தனை காலம் இந்த மனிதன் குரலைக் கேட்காமல் இருந்து விட்டோமே என்று என்னைப்போலப் பலரையும் வருந்தச் செய்துவிட்டார் அந்த மனிதர் . 

தன் தந்தையைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் அவர் மேல் இந்த மனிதனின் பாசம் அவர் உயரத்தை விடப் பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது .சில இடங்களின் தந்தை பற்றிப் பேசும்போது கலங்கித்தவித்தார் .இப்படி ஒரு கர்ஜனைப் பேச்சுக்குப் பின்னால் அவரின் இளகிய மனம் யாருமறியாததாக இருந்தது ... 

இனி அவர் எங்குப் பேசினாலும் என்னைப்போல எல்லோரும் ஓடிச்சென்று சென்று அவர் நெல்லைத் தமிழ்க் கேட்போம் .

சனி, 28 ஜனவரி, 2017

வா வர்ஷினி - Ranbir kapoor .

                 

                           ன் நண்பர் ஒருவர் விளையாட்டாய் சொல்லும்போது  திருமணம் எல்லோருக்கும் சுவர்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் பாருங்கள்  சிலர் மட்டும் நரகத்தில் வீடு வாடகைக்குப் பிடித்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பார்.

அனேகமாக அப்படிப்பட்ட சிலரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பார்க்கிறேன் .

                      ஞாயிற்றுக் கிழமை வந்தாலே எனக்கு ஒரு முன்னால் பிரபல டிவியின் சில லட்சத்தைத் தாண்டி திருமணம் நடத்திக் கொண்டு இருக்கும் நிகழ்ச்சியின் மேல் சிரிப்பும் ஒரு வசீகரமும் கலந்து வந்து விடுகிறது . 

             வசீகரத்திற்குக் காரணம் நம் வாழ்க்கை முறைகள் இவ்வளவு மாறியும் சொந்தங்களிடம் நான் இனியும் லோல் பட முடியாது என்று இன்றிருக்கும் குடும்ப மனநிலைகள் புதிய சொந்தங்களுடன் கைகோர்த்துக் கொள்ள விரும்பப் படுகிறது என்பதை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது .ஆனாலும் அங்கு வரும் ஆண்களோ ,பெண்களோ இப்படித்தான் தனக்குத் துணை வேண்டும் என்ற கற்பனை மனோ நிலைகள் மட்டும் இன்னும் துளியும் மாறவே இல்லையெனும் போது நாம் இன்னும் முற்றிலுமாகச் சொந்தங்களை வெறுக்கவில்லை புதிய சொந்தங்கள் இப்படி வேண்டும் என்ற ஆர்வம் தெரிகிறது .அது ஆறுதலாகவும் இருக்கிறது .


ஆனால் சிரிப்புக்குக் காரணம் அதை நடத்துபவர் தன் அழகான சிரிப்புடன் ஏதோ சுயம்வரத்தில் தீர்மானிக்கும் வாய்ப்பைத் தருவது போல எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று பெண்களிடம் கேட்கும்கேள்விகளுக்கு அவர்கள் வருங்காலக் கணவர் , மிகவும் நல்லவராக , அன்பானவராக, என்னைப் புரிந்துக் கொள்பவராக , நிரந்த வேலையில் இருப்பவராக வேண்டும் என்கிறார்கள்.இதெல்லாம் மொத்தமாக அயோத்தியில் கூட மட்டுமல்ல அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்காது என்பது பார்க்கும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்தான்.ஆனால் அதைக்கேட்டும் கோபப்படாமல் இன்னும் அதே சிரிப்புடன் அவர் , நீங்கள் கேட்பது மாதிரியே அப்படியே ஒரு நல்ல கணவர் கிடைப்பார்  சொல்லும் போது, கலந்து கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் கேட்கிற மாதிரியே ஒரு மணமகனை அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் திரைக்குப் பின் நிற்க வைத்திருப்பது போலவே பேசுவது ஆச்சர்யமாகத்தான்  தெரிகிறது .

               உலத்திலேயே கஷ்டமான பதில்களில் ஒன்று எனக்கு என்ன பிடிக்கும் என்பது .மிக எளிமையான பதில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று நான் தீர்மானிப்பது  என்பார்கள் .அது சரியாகத்தானே இருக்கிறது !



          வாழ்நாள் முழுதுவதும் சேர்ந்து வாழ்ந்தவர்களிடம் இந்தக் கேள்விக் கேட்டால் இது முழுமையாகச் சாத்தியம் இருக்கிறது என்று சொல்வார்களா ? தெரியவில்லை.

இதைவிட நம்மப் பசங்க சொல்லும் கண்டிசன்களைக் கேட்டால் இன்னும் சிரிப்புத் தானாக வந்து விடும். சில சமயம் என் வீட்டம்மா இருப்பது தெரியாமல் சிரித்து மாட்டிக்கொண்டு விடுவது வழக்கம் .( அப்படி எனக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சிரிக்கிறேன் என்று என் மனைவி புத்திசாலித்தனாமாகப் புரிந்து கொண்டுவிடுவார் ! ) 

                        பசங்கள் கேட்கும் போது தனக்கு வரும் மனைவி , அன்பானவராக ,படித்தவராக ,எங்கள் வீட்டில் ( பப்பி நாயிலிருந்து அவிநாசி மாமாவரை  ) எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு ( இவனுக்கே புரியாத ) தன்னையும்   புரிந்து கொள்பவராக, ( இவன் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல் ) வேலைக்குச்  செல்பவராக இருக்க வேண்டும் என்பார்கள் .

            இப்படிக் கேட்டபடிப்   பொறுத்தமாகத் தயாரிக்க, ஒரு மெசினைக் கூடக் கடவுள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒருவேளை அவருக்கே இப்படிக் கிடைப்பது மாதிரி இருந்தால், வெண்ணிலாக் கபடிக்குழு  பரோட்டா சூரி மாதிரி, முதல்ல இருந்து ஆரம்பி என்று சத்தமாகக் கத்திக் கூப்பாடுப் போட்டு இருப்பார்.பாவம் அவருக்கே அந்த யோகம் கிடைக்கலையாம் . ( ஆமாம் அதை யோகம் என்பதா தண்டனை என்பதா ? சில யோகங்கள் என்று சொல்லுவார்கள் விவரமாகப் படித்துப்பார்த்தால் அது சாபம் போலவே தெரியும் ! )

மாங்கல்யம் தந்துனானே        – இந்த மங்கல நானை 
கண்டே பத்னாமி                         – உன் கழுத்தைச் சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் ) 
சுபாகே                                            – மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 
த்வம் சஞ்சீவச் சரதச் சதம்”  – நீ நூறாண்டுக் காலம் வாழ வாழ்த்துகிறேன்! 

இப்படிச் சொல்லித்தான் ஒவ்வொரு ஆணும், திருமணித்துக் கொள்கிறான் .தன்னை நம்பியே பெண்கள் வருவதாகவுமான நம்பிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இந்த மேடையில் சொல்லப்படும் விசயங்களைக் கேட்டால் "உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்" என்ற வள்ளுவத் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை நினைத்துக் கொள்வதா இல்லை வந்து பாருங்கள் புரியும் என்று மானசீகமாக அட்சதைப் போடுவதா தெரியவில்லை .

                     என்று இவர்கள் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு போலக் கிடைத்த வரனை வைத்து நான் சந்தோசமாக வாழ்வேன் என்று பெண் தேடுபவரும் , கிடைக்கும் கணவனுடன் நான் சந்தோசமாக இருப்பேன் என்று ஒரு கியாரண்டியோ வாரண்டியோ எப்போது கொடுப்பார்களோ ? தெரியவில்லை .




ஆனால் இப்போது எனக்கு ஒரு விளம்பரம் பார்க்கும் போது ஆண்களுக்குத் திருமண வரம் Ultima Protek மூலம் கிடைத்து விட்டதாகத் தோணுகிறது . 

          ரெண்டு டின் பெயின்ட் வாங்கிக் கொண்டு ரன்பீர்க் கபூர் போல அமிர்தவர்ஷினி ராகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அதே ராகத்தில் அக்னி நட்சத்திரம் படத்தின் -  தூங்காத விழிகள் ரெண்டு உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று... என்று பாடிக்கொண்டு ஒவ்வொரு கல்யாண மண்டப வாசலில் நின்று விட்டால் போதும்.தற்போதைய தமிழ் பட அப்பாவி அப்பாக்கள் போல இருந்தால் உங்களுக்கான வர்ஷினியை எங்கிருந்தாலும் வாழ்ந்துத் தொலை என்று அனுப்பி வைக்கும் சாத்தியமிருக்கிறது !

இந்த விளம்பரத்தை ஒரு மில்லியன் வ்யூவர்ஸ் பார்த்து இருக்கிறார்களாம் .அதில் ஒரு வேளை ஒரு அழகிய வர்ஷினி வரச் சாத்தியம் இருக்கிறது . அப்படியும் இல்லையெனில் உண்மையான உங்கள் வருங்கால மனைவி வருவதற்காகவாது சொற்ப வாய்ப்பு இருக்கிறது அப்படிப்பட்டவர்கள்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும் ....

என்ற அதிசய ராகத்தில் பாடி மனதை ஆறுதல்படுத்திக் கொள்வோமே ! .

புதன், 18 ஜனவரி, 2017

”அப்புக் காளைகளின்” உணர்வுப் போராட்டம் !The struggle for Jallikattu



எங்களால் நீங்கள் எங்களுக்காக நீங்கள் !



  "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." 

ஒட்டு மொத்தத் தமிழக மக்களின் மனமாக ஜல்லிக்கட்டு நீங்கா இடம் பெற்று விட்டது .முதன் முதலாக ஒரு நல்லுணர்வை பரப்பும் பணியில் மிகப்பெரிய வளைத்தளங்கள் அற்புதம் செய்து இருக்கிறது.எந்தத் தலைமையையும் உள் நுழைக்காமல் ஓடிப்போங்கள் என்று உதறி விட்டு , யாரையும் நிர்பந்திக்காமல் உனக்கு விருப்பம் இருந்தால் வந்து கலந்து கொள் என்ற தன்னெழுச்சி உணர்வுக்குச் சிவப்புக்கம்பளம் விரிக்கும் இளைஞர்கள் குரல் உலகத்தைத் திரும்ப மட்டுமல்ல திரும்ப வைக்க மட்டும் வைக்கவில்லை ’எங்கெல்லாம் அந்த உணர்வு மேழெழுகிறதோ அங்கெல்லாம் நடத்தத் தூண்டு கோலாகிவிட்டது . 

"நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் என்ற இளைஞர்களைப் பற்றிய விவேகானந்தரின் நம்பிக்கை ஆன்மாச் சுடர் விட்டு நிற்கிறது ."என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசைக் கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலைச் செய்யுங்கள். ”

என்பதான விவேகானந்தரின் ஒரு யோகியின் ஆசை நிறைவேறும் அடையாளமாக ஜல்லிக்கட்டுத் துவக்கமாக நிற்கிறது . 

     இனச்சேர்க்கைக்கு விடப்படும் பொலிகாளை என்ற  பூச்சிக்காளையை காப்பது மட்டுமல்ல இந்த போராட்டத்தின் முன்னுரை .அதைப்பற்றிய விசயங்களை வளர்ப்பவர்களை விட அதை விரட்ட நினைக்கும் அறிவாளிகள் நிறையப் பேசி விட்டார்கள் .நமக்கு இங்கு பேச எதுவுமில்லை . 

இன்றைய இளைஞர்கள் எப்படிப்பட்ட சக்திகள் என்று காட்ட ஒரு தருணத்தைத் தனக்குத் தெரியாமல் நெருப்புச் சுடும் என்று தெரியாமல் கட்சிகளும் , நாட்டை நிர்வகிக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நாடாளும் அரசியல் தன்னலமே வாழ்வெனப் புளுகும் அரசியல் பொய் மூடைகளுக்கும் இந்த எச்சரிக்கைக் காது மடலைச் சூடாக்கியிருக்கும் .இனி வருங்காலத்தில் எப்படித் தடுக்கலாம் என்று மந்திராலோசனையில் மூழ்கியிருக்கலாம் ! ஆனால் உங்களுக்குப் புரியப் போவதில்லை ஒரு நாளும்.நீங்கள் முந்தியத் தலைமுறையை இலவசங்களிலும் , சினிமாக் கவர்ச்சி வாசத்திலும் ,திராவிடன் என்ற உணர்ச்சி முலாம் தடவி விசங்களை ஊட்டி வளர்ந்தவர்கள் .நீங்கள் திருந்த வாய்ப்பு இல்லை .உங்களுக்குள்ளும் அப்படிச் சொல்லித்தான் வளர்ந்து விட்டீர்கள் .  பாவம் என்ன செய்ய ? 


  2014 வரை மதுரை மண்ணில் நடந்த ஜல்லிக்கட்டில் 'அப்புக் காளை' ஒன்றே ஒன்றுதான் இருந்தது .ஆனால் இன்று உலகமெங்கும் அடங்காத திமிர் படைத்த அல்ல ’திமிழ்’ கொண்ட இளைஞர்கள் பட்டாளம் பொறுமைக் கடந்து சுனாமியாய்க் கரையேறி நிற்கிறது . இங்குத் தன் மண்ணை நேசிக்கும் ,தன் மரபைக் காக்கும் ,தான் உண்டு வளர்ந்த இன்னொரு தாயான பசும்பால் வீர்யம் தன் மரபில் ஊறி நிற்கும் இருக்கும் ,இந்தச் சமூகம் என் சமூகம் என் உரிமை எவனோ நிர்ணயம் செய்யக்கூடாது ,என் கலாச்சாரம் , என் அடையாளம் ,என் முகம் . அதை அழித்து விட்டு உங்கள் சட்டம் முன் மண்டியிட நாங்கள் தேசக் குற்றவாளிகள் இல்லையென்ற உரத்தக் குரலோடு அற வழியில் களம் இறங்கி இளைய சமுதாயம் தெருவில் இறங்கி இரவு பகல் பார்க்காமல் கிடக்கிறது  .முடிந்தால் சட்டத்தின் கட்டுத்தரைக் காம்புக்கயிறுகளை அவிழ்த்து விடுங்கள் .அவர்கள் காத்திருப்பது காளைகள் எதிர்காத்திற்காக மட்டுமல்ல இனி வரும் எதிர்காலத்தின் நம்  உரிமைக்காக  .

அவர்களுக்குத் தோள் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை . எங்கள் இன்றைய காவல் துறைப் போலக் கைக் கட்டி நில்லுங்கள் . ஏனெனில் முதல் முறையாகத் தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனின் குடும்பமும் அவர்கள் பின்னால் தோள் கொடுத்து நிற்கிறது .என் பையன் ,பெண் வீட்டில் பொறுப்பில்லை என்று நொந்து போயிருகிறேன் ஆனால் எனது இரண்டு தலமுறைகள் செய்யாத என் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தர வீதியில் கிடக்கிறான் .இந்தப் போராட்டம் கடந்த காலத் தலைமுறையின் அடங்காக் கோபத்தின் வலிக்கு மருத்துவத்திற்கான தேவை மட்டுமில்லை. வருங்காலத் தலைமுறையின் முள்பாதைகளைச் செப்பனிடும் பணி என்று புரிந்து வைத்து இருக்கிறார்கள் . 


2017 இளைஞன் இனி எப்போதும் பேசப்படுவான் ! என்று ஒரு வீட்டில் இளைஞன் புரிந்து கொள்ளப்பட்டானோ அன்றே அந்நாட்டின் சுதந்திரம் புதிப்பிக்கப்படும் பணித் துவங்கி விட்டது என்று பொருள் .

  1947 க்கும் முன்னும் இதுதான் நடந்தது ... 

வியாழன், 12 ஜனவரி, 2017

ஞானியின் வீட்டுத்திண்ணை - “கல்லும் கனியாகும் - Hammer on the Rock”.



 ஓஷோ தனது சீடர்களுக்காகத் தனது ஆஸ்ரமத்தில் , 31 நாட்கள் செய்தத் தொடர்ச் சொற்பொழிவில் இளம் சாதகர்கள் முதல் மூத்த சந்நியாசிகள் வரையில் உள்ளவர்களுக்கான 300க்கும் அதிகமான எவ்விதமான தயக்கமில்லாத கேள்விகளும் அதற்கான பதில்களின்  நிகழ்வாகத்தான் இந்தப் புத்தகம் மலர்ந்து இருக்கிறது . ஒரு குருவின் தரிசனத்தைப் புரிந்து கொள்ளக் கேள்விகளுக்கு அவர்தரும் பதிலில் அவரின் பக்குவத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் பொக்கிசம் . வேறு எந்த ஓஷோவின் உரைத்தொகுப்பின் வாசிப்பிலும் கிடைக்காத அவருடனான நெருக்கத்தை , அன்மையை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். ஓஷோவின் இயல்பான வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் ஒரு ஞானி விட்டுச்சென்ற போதனைப் பதிவுகள் ஏற்படுத்தும் வலிமையை விட அவர் பேச்சை நேரடியாகக் கேட்டுணரும்போது அந்தக் கதகதப்பான வார்த்தைகளில் பன்மடங்கு வலிமைப் புதைந்து இருக்கிறது என்பார்.அதைத்தான் இந்த வாசிப்பு எனக்குள் நிகழ்த்தியது .அதுதான் ஞானியின் வீட்டுத்திண்ணை என்ற பெயர் இந்த நூலுக்கு வைக்கத்தூண்டியது ! 


ஓஷோவின் பதில்களில், பன்முகத்தன்மை !

தத்துவத்தைப்பற்றிப் பேசும் போது, 100 வயதானக் கிரேக்க அறிஞர் டயோஜனீசிடம் உங்களால் எப்படி எந்த நேரமும் சந்தோசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்திற்குப் பதிலளிக்கும்போது ,ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண் விழிக்கும் போதும் என் முன்னால் இரண்டு கேள்விகள் இருப்பதை நான் அறிகிறேன்.ஒன்று மகிழ்சியாக இருப்பது இன்னொன்று சோகமாக இருப்பது .ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறேன்.அதனால்தான் எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றாராம். 

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள் அதனால்தான் அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .அதனால்தான் அவர்களால் இன்னும் அதிகமாக மாறமுடிகிறது.மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம். பாய்ந்து கொண்டே இருக்கிறது . மகிழ்ச்சி ஆற்றுவெள்ளத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.உங்கள் சக்தி ஓட்டம் ஓரிடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார் ஓஷோ ! 

அறிவியலைப்பற்றிப் பேசும் ஓஷோ மனிதனின் மூளைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது .சிலருக்கு இந்தப் பிரிக்கப்பட்டுள்ள இடைவெளிக் ஏதாவது ஒரு விபத்தினால் அதிகரித்து விடுகிறது.இதனால் இரண்டு மூளைக்கிடையேயான பாலம் துண்டிக்கப்பட்டு அவனுக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்லும் ஓஷோ அப்படிப்பட்டவர்கள் வலது கையில் சத்தியம் பண்ணியதை மட்டுமல்ல கொலை செய்ததைக் கூட அடுத்த மூளைக்குத் தெரியாது என்கிறார். 

மனதைப் பற்றிப் பேசும் ஓஷோ ஏனோ மிகவும் கோபமாக மனம் என்பது அழுகிய உறுப்பு என்று வர்ணிக்கிறார்.உங்கள் மனம் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சி நின்றுவிடும் .அதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை .மனம் என்பது ஒரு கூட்டம்.பல காலமாக ஓர் இடத்தில் சேர்த்து வைக்ப்பட்ட குப்பைக் கூளங்கள் .மனம் உங்கள் அடிமை உங்கள் எஜமானன் இல்லை என்று அழுத்தமாகப் பேசுகிறார் . 

இயற்கையுடனான மனிதத் தொடர்பைப் பற்றிப் பேசும் போது, பெண்கள் கருத்தடைச் செய்துகொள்ளுவதானால் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பேசும் ஓஷோ,ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தியைப் பெண்களுக்கு இயற்கைக் கொடுக்கிறது அந்தப் பெண் கர்பமாகவில்லை என்றால் அது சேகரிக்கப்படுகிறது.ஆக்கப்பூர்வமாக அது வெளிப்படவில்லையென்றால் அது அழிவு சக்தியாக வெளிப்படுகிறது என்கிறார். 


சந்நியாசி ஒருவர் தனது மிதமிஞ்சிய பாலுணர்வு பற்றிக் கேட்டக் கேள்விக்கு அற்புதமான அதே சமயம் எல்லோருக்குமான ஒரு சுவாச வழிமுறை மூலம் எளிய முறைப் பயிற்சி ஒன்று சொல்லிக்கொடுக்கிறார் .அந்தப்பயிற்சி மூலம் மனதில் ஆல்ஃபா அலை அதாவது நொடிக்குப் பத்து அலைகள் உருவாக்கும் நிலையை மனம் அடைகிறது . அது பூமியின் மின்காந்த அலைவரிசைக்குச் சமம். இந்த நிலை ஏற்பட்டால் நீங்களும் பூமியின் அலைச்சுழல் வேகத்திற்குச் சமமாகப் பயணிக்கத் தொடங்கி விடுவீர்கள் .அப்போது பூமியின் மின்காந்தக் களத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவீர்கள் என்கிறார்.இந்தப் பயற்சிக்குப் பின் நிகழும் அனுபவத்தை இப்படி விளக்கும் ஓஷோ இது உடலுறவுக் கொள்ளும்போதும் , தியானத்தின் போதும் , நடனத்தின் போதும் ,சில சமயம் காரணமேயின்றிக் கூட இந்த நிலை வரலாம் என்று சொல்லும் அவர் அந்த நிலை (ஆல்ஃபா மனநிலை) உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நிலை அதாவது வாழ்வையே வரப்பிரசாதமாக்கும் தருணம் என்கிறார். 

முடிக்கும் தருவாயில்... 

இன்னும் அற்புதமான பல வாழ்வியலில் நாம் அறிந்திராத முடிச்சுகளின் மர்மங்களையெல்லாம் இந்தப்புத்தகம் நெடுகிலும் அவிழ்கிறார்.அதில் இறுதியானதாக ஒன்றுடன் நிறைவாக்கலாம் .பக்கம் 322 ல் ஓர் அடிப்படையான விசயத்தப்பற்றிப் பேசும் ஒஷோ,  எந்தக்காலத்திலும் மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறித்து விட்டு ,வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விலும் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது .எல்லாம் நம் வாழ்வில் இருக்கிறது என்ற அகந்தையின் போக்கு ஒரு மாயத்தோற்றம் .எல்லாமே தன்னால் நடக்கிறது என்ற நினைவானது தவறானது . நடக்கும் நிகழ்வோடு நீங்கள் ஒத்துழைக்கலாம் இல்லை எதிர்த்துப் போராடலாம்.நீங்கள் போரிட்டாலும் நடப்பது நடந்தே தீரும் .அப்படிப் போரிட்டால் நீங்கள்தான் உங்கள் மகிழ்ச்சியை இழப்பீர்கள் அது நடப்பதற்கு நீங்கள் ஒரு காரணமில்லை.ஒத்துழைத்து அது எங்கே அழைத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டும் .அப்படிப் போகும்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் தெளிவாகும் .ஆனால் இந்த மனம் வாழ்கையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது மனம் தன் சூழ்ச்சித்திறத்தால் நிர்வகிக்கப் பார்க்கிறது .இது அகந்தையின் தேவை.நமக்கு ஒரு அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.வாழ்க்கையின் சிக்கல் இங்குதான் தொடங்குகிறது என்கிறார் ஓஷோ . 


இந்தப் புத்தகம் பற்றி ...

     கவிதாப் பப்ளிகேசனில் - வரலொட்டி - ரெங்கசாமி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .இந்தப் புத்தகத்தின் அற்புதமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரர்த் திரு.ரெங்கசாமி அவர்கள்தான் .அவர் சொல்படியே எடுத்துக்கொண்டோமானால் , ”எழுத்து "டீ' மாதிரி. அதை "ஆங்கிலக் கப்', "தமிழ்க் கப்பில்' நிரப்புகிறேன்.” என்று சொன்ன மாதியே லாவகமாகச் செய்து இருக்கிறார்.ஒருவேளை உங்களுக்கு ஆங்கில இலக்கியப்புலமை இருந்து ஓஷோவின் வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு இருந்தால் கூட இவ்வளவு ஆழமாக உணர்ந்து இருக்கும் சாத்தியம் குறைவு .மேலும் நம் மொழி வழக்கில் உள்ள - ஈரைப் பேணாக்குவதும் பேனைப் பெருமாளாக்குவதுவும் ,ஜல்லியடித்த, சொதப்புதல் ,பிணாத்திகொள்தல் போனவற்றைப் பயன்படுத்தி இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற வாசிப்புணர்வின் தயக்கத்தைத் தகர்க்கிறார்.