புதன், 15 மார்ச், 2017

அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !



            இன்னும் கொஞ்ச நேரம்தான்  இருக்கிறது . ஒருவேளை  நான் தாமதித்தால்   இன்ஸ்பெக்டர் இந்த கோவிலுக்கே தேடிவரலாம்.நான் பையனுடன் கடைசியாகக் கோவிலுக்குப் போக மட்டுமே அனுமதி கொடுத்தார்கள் .  கை விலங்கு பூட்டிக் கைது செய்யாமல் , ஜெயிலுக்கு அழைத்துப்போக இன்ஸ்பெக்டர் ஒப்புக்கொண்டார் . யார் எனக்காக கேட்டார்கள் என்று கூடத்தெரியவில்லை.ஆனால் அது தாற்காலிக தப்பித்தல்தான். ஏற்கனவே  முடிந்து விட்டது எல்லாம். இன்னும் பத்தாண்டு காலம் ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் .வீட்டுக்குப் போனவுடன் மஹரிசியின் எல்லாப் புத்தகங்களையும் கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெயிலுக்குள் இத்தனை புத்தகம் கொண்டு செல்ல அனுமதி தருவார்களாத் தெரியவில்லை .எனக்கு ஏதோ ஒரு சோகம் மனதைக் கவ்வியது . நான் வசித்த வீடு ,பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை , எடுத்துக்கொண்டு இருக்கும் தத்துவ வகுப்புகள் எல்லாமே  இன்றோடு எனது இந்த வாழ்க்கையில்  முடியப்போகிறது . நாளைக் காலை ஜெயிலுக்குள்தான் எனக்கு விடியல்.முகம் தெரியாத யாரோடு தங்க வைக்கப் போகிறார்களோ ? ஒருவருடனா இல்லை பல பேருடனா ? தெரியவில்லை . 

          பையனும் வேடிக்கை பார்த்துக்கொண்டே  வந்து கொண்டு இருந்தான்.அப்பா உங்கள் மொபைல் தாங்க என்றான். பையனை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கிறது.அவனிடம் எப்படிச் சொல்வது ? பதினோறு வயது பையனை விட்டு விட்டு ஜெயிலுக்குப் போக எந்த அப்பாவுக்குத்தான் நிம்மதி இருக்கும் .ஒரு வேளை அவன் என் கண்டிப்பிலிருந்து விலக்குக் கிடைத்து விட்டதால் சந்தோசமாக இருப்பானா ? ரெண்டு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம்தான் அவனை அடித்தேன் . அந்தக் கோபத்தில் அப்பா ஜெயிலுக்குப் போகட்டும் என்று விட்டு விடுவானா ? தினமும் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து நான் கூட்டி வரப் போகவில்லையென்றால் அவன் ஃபிரண்டுகளுக்குத் தெரிந்துவிடும்.எல்லோரும் ப்ரணவ் அப்பா ஜெயிலுக்குப் போய் விட்டார் என்று சொல்லி அவனைக் கேளி செய்யக்கூடும் .அது எனக்கு அவமானமாகத் தோணியது ! ஆனால் வேறு வழியில்லை ! .அப்பா இல்லாத அவன், யார் பராமரிப்பில் வளர்வான் ? . பாவம் அந்தப்பையன் குற்றவாளிக்கு மகனாகப் பிறந்து விட்டோமே என்று நான் திரும்பி வந்த பிறகு பேசுவானா ? புத்தி மனதைப் பிறாண்டியது .அழுது விடுவேனோ என்று உள்ளுக்குள் பதஷ்ட்டம் தொற்றிக்கொண்டது . 

            என மனைவி அவள் தம்பி வீட்டுடன் வசித்துக் கொண்டு இருக்கும் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து பையனின் பள்ளிக்கூடத்திற்கு அருகில் வீடு பார்த்துத் தங்கச் சொல்ல வேண்டும் .ஆனால் வாடகை எப்படிக் கொடுக்க முடியும் ?  என் வங்கி வைப்பு நிதியை வைத்துக்கொண்டு ஒரு வருடம் தாக்குப் பிடிக்கலாம் .அதற்குள் கைக்குழந்தைச் சின்னவனுக்கு ஒரு வயதாகிவிடும்.அவள் அம்மாவிடம் விட்டு விட்டு எதாவது வேலைக்குச் செல்வாள்.என்னிடம் வேலைக்குப் போகவா வேண்டாமா என்று ஒப்புக்குக் கேட்பாள் .ஆனால் நிச்சயம் போவாள்.அவள் அப்பாவின் பென்சன் தொகைப் போதாது .ஒருவேளை அந்தப் பள்ளியிலிருந்து அவனை நீக்கி விட்டு வேறு எதாவது பள்ளிக்கூடம் சேர்த்து விடுவார்களா ? அப்படியானால் சென்ற வருடம் கட்டிய அந்த பெரிய டொனேசன் தொகை வீணாகப் போய் விடுமே ? என்னால் அதற்கு மீறி யோசிக்க விருப்பமில்லை .எனக்குத் தெரியும் நான் யோசித்தால் மட்டும் அது நடந்து விடாது . என் குடும்பத்தில் நான் இல்லாது போனால் யார் யாரோ முடிவெடுப்பார்கள் .தனியே இருக்கப் போவதால் அவள் இரண்டு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பைப் பொருத்து ஒத்துக்கொள்வாளோ என்னவோ ? 

                  எனக்கு என்னவோ உள்ளே பிடுங்கித் தின்னுவது போல அசூகை வந்தது .  காலெல்லாம் நடுங்கியது . கையைப் பிடித்து இருந்த பையன் கையை விடுவித்து  அந்தக் கோவிலின் வெளி வளாகத்தில் தளர்ந்து உட்கார்ந்தேன். பையன் என் மாற்றத்தைக் கவனித்தான் .என்னப்பா ? என்றான். ஒன்றுமில்லைப்பா என்றேன் .இப்போது சொல்ல வேண்டாம். வீட்டிலிருந்து கிளம்பும்போது சொல்வோம் .ஆனால் என்னால் அவனைப் பிரிவதைத் தாங்கிக் கொள்ள முடியுமா தெரியவில்லை .ஏன் இப்படி ஒரு சோதனை என்ன தவறு செய்தேன் பத்தாண்டு ஜெயிலுக்குப் போகுமளவுக்கு ? தெரியவில்லை . 

                ஜெயிலுக்குள் எனக்குத் தியானமெல்லாம் தெரியும், தத்துவச் சிந்தனையில் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறேன் என்றால் என்ன சொல்வார்கள் ? அதெல்லாம் தெரிந்து என்னய்யாப் பிரயோசனம் ? அப்படினா நீ ஜெயிலுக்கு எதுக்கு வந்தேன்னு கேளி செய்வார்களா ? இதெல்லாம் சொல்லலாமா ? நான் ஜெயிலுக்குப் போய்விட்டேன்னு தெரிந்தால் இங்கு என் தத்துவ ஆசிரியர் தகுதியை இழந்து விடுவேனா ? ஜெயிலுக்குப் போனவன் திரும்பி வந்து தத்துவ வகுப்பு எப்படி எடுக்க அனுமதிப்பார்கள் ? சொல்லாமல் விட்டாலும் தெரியாமல் தவறுதான் . ஆனால் ஒரு ஆசிரியன் ஆக வேண்டும் என்ற கனவு பறி போய் விடுமே ? இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது ? சொல்ல வேண்டாம் என்று சொல்ல வேண்டும் .அதெப்படி அதுவே தவறுதானே ? பொய் சொல்ல குரு அனுமதிப்பாரா ? பொய் சொல்பவன் தத்துவ வகுப்பெடுத்தால் மற்றவர்களுக்கு உணர்வாய் போய்ச் சேராதே .இயற்கைப் பெயரில் பொய் சொல்லுபவனை இந்த உலகத்தில் எந்த உயிரும் மன்னிக்காதே . கடவுளே என்ன பாவம் செய்தேன் .ஏன் நான் தண்டிக்கப்பட்டேன் ? 

        வீட்டுக்கு வண்டியில் வந்தோம் . பையன் வழக்கம் போல வண்டியை நிறுத்தும் முன் என் பாக்கெட்டிலிருந்த செல் ஃபோனை எடுத்துக்கொண்டு கேம் விளையாட உட்கார்ந்து விட்டான் .அவனுக்குத் தெரியாது இனிமேல் அந்தச் செல்ஃபோம் அவனுக்கே சொந்தம் .ஜெயிலுக்கு எடுத்துப் போக அனுமதியில்லை . ஆயிரம் யோசனைகள் என்னிடமிருந்து கழன்று விடுவது போலத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது . என் இந்த வண்டியைக் கூட மனைவியின் தம்பியிடம் கொடுத்து விடுவார்கள். ஜெயிலிருந்து திரும்பி வரும்போது நிச்சயமாய் எனக்கு இந்த வண்டியை ஓட்டுவதற்குப் பிடிக்கப்போவதில்லை.அதற்கு என்ன செய்வது ஓட்டாமால் ஸ்டாண்டு போட்டா வைத்து இருக்க முடியும் ? 


             உள்ளே வந்தேன் இந்தத் துணி ஸ்டாண்டில் என் பீரோவில் இருக்கும் எந்த உடையும் இனி எனக்குப் பயன் படப்போவதில்லை.ஜெயிலில் என்ன உடைத் தரப்போகிறார்களோ அதுதான் இனியெல்லாம் . நான் ஜெயிலுக்குப் போவதால் ஒரு சந்தோசம் மட்டும் லேசாய் வந்தது .எப்படியாவது நான் சேர்த்து வைத்திருக்கும் மொத்தப் புத்தக்கத்தையும் படித்து விடுவேன். எப்படியாவது மாதமோ அல்லது அனுமதிக் கிடைத்து என்னைப் பார்க்க ஜெயிலுக்கு வருபவர்களிடம் இதையெல்லாம் ஒவ்வொன்றாயாவது எடுத்து வரச் சொல்லவேண்டும் .

             இது என்ன அற்பச் சந்தோசம் .குடும்பத்தை அனாதையாய் விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போய் இந்தப் புத்தகமெல்லாம் வாசித்து முடித்து விடுலாம் என்று யோசிக்கிறேனே ? சே ! என்ன ஒரு குரூர சுயநலம் ? புத்தகம் படிக்கவா ஜெயிலிக்குப் போகிறேன் .ஆனால் என்ன செய்வது வேண்டாம் என்றால் அந்த இன்ஸ்பெக்டர் மன்னித்து விட்டு விடுவாரா ? கோர்ட் ஏன் எனக்கு இந்தத் தண்டனை கொடுத்தது ? ஓடி விடுவோமா ?  முடியாது .மனைவி குழந்தையெல்லாம் ஸ்டேசன்ல வைத்து உண்மையைச் சொல்லச் சொல்லிக் கொடுமை படுத்துவார்கள் . இப்படித்தான் கம்பெனி விசயமாக ஒரு குற்றத்தைக் கண்டறியக் காவல் துறையை நாடிய போது என்னிடமே ஒரு ஏட்டு சொல்லியிருக்கிறார். குற்றவாளியுடைய பொண்டாட்டிப் பிள்ளைகளையும் அவன் அம்மாவை ஸ்டேசன்ல வைத்து அடிக்கிற மாதிரி செய்தால் கூடக் குற்றவாளித் தன் குற்றத்தை எப்படியாவது ஒத்துக்கொள்வானாம். அது பெரிய பாவம் . அவர்கள் என்னால் ஸ்டேசனல்லாம் போக வேண்டாம் .என் மீது இன்னும் வெறுப்பு வரலாம் .நான் போய்த்தான் ஆகவேண்டும் .

          அப்பா அம்மா ஒன்றாய் இருக்கிற ஃபோட்டோவையும் , மனைவி குழந்தை குடும்பம் இருக்கிற போட்டோ ஒன்றையும் எடுத்துப் பைக்குள் வைத்தேன்.அதில் புதிதாய்ப் பிறந்த மூன்று மாதக் குழந்தை போட்டோ இல்லை .யாரையும் ஜெயிலுக்கு வந்து பார்க்க கூடாது என்று சொல்லிவிடலாம் .இவர்கள் வந்தால் என் வேதனை கூடலாம்.சினிமாவில் பார்ப்பது போல ஜெயிலின் விசிட்டர் ரூம் கம்பி அடைப்புக்குப் பின்னால் நின்று கொண்டுதான் இனி இவர்களைப் பார்க்க வேண்டுமா ? முடியாது. என்னால் தாங்க முடியாது .எனக்கு எங்கிருந்து அப்படி ஒரு அழுகை வந்தது தெரியவில்லை .கேவிக் கேவி அழத்தொடங்கினேன். 
என் உலகத்தில் நான் மட்டும் தனியாக அனாதையாக உணர்ந்தேன்.
சட்டெனே கரைந்தது போல எல்லாம் மறைந்து விட்டது 

சட்டெனெ விழிப்பு வந்தது ... 
என்ன கனவிது ? 
ஜெயிலுக்கு நான் ஏன் போக வேண்டும் ?


பக்கத்தில் பையன் அவன் தலையணையிலிருந்து விலகி வந்து என் தலையணையில் தூங்கிக் கொண்டு இருந்தான் .

அவன் முகம் அந்த இரவு வெளிச்சத்தில் லேசாய்ச் சிரித்தபடி இருந்தது.

ஒருவேளை அவனுக்கு நல்ல கனவு வந்திருக்கலாம் !

சனி, 11 மார்ச், 2017

பெண்ணியம் அப்படின்னா ? Feminism ?

 


                          முகநூலில், தோழி .சில்வியா பிளாத் ஏடா கூடமாக ’ஒரு சிறு குறிப்பு வரைக. பெண்ணியம் என்றால் என்ன? என்று ஆரம்பித்து வைத்தார் .. .எல்லோரும் உளறிக்கொட்டுபவராகத்தான் பதில் சொல்லிக்கொண்டு இருந்தோம் . நான் புத்திசாலியாக நினைத்துக்கொண்டு 'பெண்கள் பிடிக்காதுனு சொல்றவங்க ’ஹிப்போகிரிட்’ ஆகத்தான் இருப்பாங்க!’’ - என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் ஆனந்தவிகடன்.காம் கட்டுரையைப் பகிர, அதற்கும் அவர் கேள்விக் கேட்கவே நான் ஒரு நல்ல முடிவெடுத்தேன். காரணம் இது பொதுவெளி .கேள்விக் கேட்பது ஒரு பெண் தோழி. எல்லோரும் எதாவது சொல்லி இருக்கிற மானத்தையும் கப்பலேற்றக் கூடாது என்ற பாதுகாப்புணர்வு மேலோங்க ” ஆண்கள் பார்வையில் பெண்ணியம் எப்போதும் சரியாக வராது .நீங்களே சொல்லுங்கள் - Yes I surrender .” என்று நெடுஞ்சான்கிடையாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டேன். ( திருமணமாகி 11 வருசத்தில் இந்த மாதிரித் தோல்விகள் சகஜம்தானே ? ) 

                 ஆனால் உண்மையில் இந்தக் கேள்வியை என்னை நோக்கி நானே கேட்டுக் கொண்டால் மலுப்பலில்லாமல் பதில் வருமா என்றால் சத்தியமாய் இல்லை.இந்திய ஆண்களின் சாபமா இல்லை உலக அளவிலும் மொத்த ஆண்களுக்குக் கிடைத்த சாபாமாத் தெரியவில்லை மொத்த வாழ்க்கையுமே ஆண் பெண் பற்றிய புரிதல் துளியும் இல்லாமலே வாழப் பழகிக்கொண்டு விட்டான். பிறந்தது முதல் பாலூட்டிப் பெண் ஆணின் உடமைப் பொருள் போலவேதான் பார்க்கவும் நடத்தவும் படுகிறாள்.அவன் ஒரு கார் வைத்து இருந்தால் அதற்கு அவன் மட்டுமே முதலாளி.அவன் விரும்பியது போலத்தான் அது நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அசேதனப் பொருளுக்கு உள்ள மதிப்புதான் தன்னோடு இருக்கும் பெண்ணுக்கும்.என் அப்பா என் அம்மாவை நடத்தி விதமே நான் அவன் மனைவியையும் நடத்த வேண்டுமெனெ எதிர்பார்க்கிறான் . 

                  ஒரு ஆணின் பொதுப்பார்வையில் நான்கு வகைப்படுகிறாள் .ஒன்று பெண் சிறந்தவள் என்று சொல்லி எதுவுமே தெரியாமல் வரலாறுகளை உத்திரவாதம் காட்டி உயர்த்திப் பிடிக்க. இரண்டாவதாகப் பயன் படும் பொருளாய், அம்மா , தங்கை , மனைவி , மகள் , தோழி இப்படி உறவுகளின் தொங்கு பாலங்கள் பட்டியல் நீள்கின்றது . மூன்றாவதாகப் பொதுத்தளங்களில் பெண்ணுரிமை , பெண்ணியம் பேசிச் சமூகத்திடம் ஒரு வித்தைக்காரனிடம் மாட்டிய குரங்குக்கு இன்னும் போதைப் பொருள் கொடுத்து ஆட விடச் செய்யும் முயற்சி .அதாவது இந்தச் சமூகம் அதில் இருக்கும் ஆண்களும் சில பெண்களும் கூடப் பெண் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பற்ற சூழ்ச்சிக்குள் சிக்க வைக்க முயல்கிறது . ஆடு நனைகிறதே என்ற ஓநாயின் அக்கறை. 

                     ஆனால் பெண் எல்லாக் காலங்களிலும் பெண்ணாகவே இருக்கிறாள் .ஏன் பெண்களைப் பார்த்து இந்தச் சமூகம் பயப்படுகிறது என்று யாரும் அறியார்.பயப்படுவதால்தான் பெண்ணுக்கு இத்தனை நிபந்தனைகள் , இலக்கணங்கள் , விதிமுறைகள் , ஒழுக்கச் சட்டங்கள் , வரையரைகள் .இந்தனையிலுமே ஆணை விடவும் பெண் வளர்ந்துவிடுவாள் என்ற பயத்தை விட ஒட்டுமொத்த மனித குலமே சீரழிந்து விடும் என்ற பயமே தலைவிரித்தாடுகிறது .ஏன் பெண்கள் மேல் இத்தனை பயம் ? பெண்மைக்குள் வெளிப்படாத சக்தி ஏதோ ஒன்று இருக்கிறதா ? அப்படி இருப்பதில் இந்தப் பூமி உருண்டைக்கு என்ன பேராபத்துக் காத்து இருக்கிறது ? கடவுள் படைக்கும் போது முதலில் பெண்ணைப் படைக்கவில்லை என்றே பரிணாமத்திற்கு எதிராக மதங்கள் பிடிவாதம் பிடிக்க எதுவோ ஒரு காரணம் இருக்கிறதா ? ஒரு வேளை அவள் இந்தக்கிரகத்தைச் சார்ந்தவள் இல்லையா ? வந்தேறு குடியா ? 

          ஆண் சில உண்மைகள் பேச வேண்டும் .இந்த உடலைப் பெற்றவள் ஒரு பெண் . இந்த உடலின் வடிவம் அதாவது அச்சுக் கூட அவளிடம் பெற்ற இனாம் . ஆண் அவளின் தாய்ப்பாலோ , ஆட்டுப்பாலோ , மாட்டுப்பாலோ ஏன் பாக்கெட் பால் தந்தாவது இன்று இருக்கும் இந்த உடலை வளர்த்திருக்கிறாள்.பிறகு அவள் கொடுத்த உணவிலும் தொடர்ந்து மனைவி என்ற துணையால் செய்து கொடுத்த உணவாலும்தான் இந்த உடல் வளர்ந்திருக்கிறது .அப்படிப் பட்ட உடல் மேல் சத்தியம் செய்து ஒவ்வொரு ஆணும் தான் பெண்ணைப் புரிந்து கொண்டு இருக்கிறோமா ? தன்னைப் போலத்தான் அவளையும் அவள் உணர்வையும் மதிக்கிறோமா என்று சொல்ல வேண்டும் . நிச்சயமாய் இல்லை . சமூகம் இன்றும் ஆணை ஒரு மிகப்பெரிய மதிப்பாகவும் , பெண்ணை வேறு ஒரு இடத்திலும்தான் வைத்தே பார்க்கிறது . இன்றைக்கு இருக்கும் மனோதத்துவப் புத்தகங்கள் கூட ஆணை வேட்டைத் தொழில் புரியும் பொருள் அல்லது உணவு தேடிக் கொண்டு வருபவனாகவும் , பெண் வீடு ,குழந்தைகள் பெற்றுக் காப்பது , ஆணின் நலம் பேணுபவளாக மட்டுமே உரக்கப் பேசுகிறது .ஆண் காலச் சூழலில் வேட்டை என்ற இடம் தவிர்த்துப் பொறுள் சேர்ப்பவனாக மாறிவிட்டதாகச் சொல்லுகிறது .பெண் அன்றிலிருந்தே உணவு ,வீடு , குழந்தை , இப்படித்தான் விதிக்கப்பட்டதாகப் போகிறது .ஆணைப் பெற்ற பெண்ணுக்குள் மரபணு மாற்றமில்லையாம் , ஆண் மட்டும்தான் சூழலியலின் தரம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார்கள் .ஏன் ? 


          நிறைய ஏன்கள் குவிகிறது. அறிந்து கொள்ள உண்மைத் தெரிவுகளின் தொடக்கப் புள்ளி அவனவன் உள்ளத்தில் குவிந்து கிடக்கிறது .காரணம் நான் என் அப்பா என் அம்மாவை நடத்தியதை மனதில் வைத்துக்கொண்டுதான் என் மனைவியை எதிர்கொண்டு இருக்கிறேன் .பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை வளர்த்த போது சொல்லிக்கொடுத்தைதான் நானும் கிளிப் பிள்ளைப் போல எனப் பெண் குழந்தைகளுக்கும் சமூகச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருக்கிறேன்.பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் , திரைப்படங்களில் எல்லாவற்றிலும் விளம்பரங்களிலும் கதாநாயகன்கள் தங்கள் மனவியை (கதாநாயகிகளை) சென்சார் போர்டே கதறும் அளவுக்குத் தோல் உறித்து நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் போது எதுவும் சொல்லாமல் பார்த்து விட்டு அதை மட்டும் மறைத்து விட்டு விமர்சனம் பண்ணுகிறோம் .அதே பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்திக் காதலிகிறாள் என்று தெரிந்து விட்டால் ஆனவக்கொலை வரை அருவாள் தீட்டுகிறோம் .உடன் வேலை பார்க்கும் பெண் யாரிடாமாவது சிரித்து விட்டால் வேறு பெயர் வைக்கிறோம் .அதே பெண் நம்மிடம் வந்து பேசிப் பழக்கம் வைத்துக்கொண்டால் தப்பே செய்தாலும் காப்பாற்ற முன் நிற்கிறோம் வரிந்து கட்டிக்கொண்டு .சாலையில் கொஞ்சம் வேகமா ஒரு பெண் வண்டி முன் சென்று விட்டால் ஏதோ ஒரு கோபம் கௌரவம் லாரண்ஸ் முனியை விட நாக்கை விட உள்ளே கருவுகிறது .அவளிடம் ஏதோ ஒன்று குறை தேடி முத்திரைக் குத்திக்கிழிக்கிறது . 

                 வளர்ப்பால் , சமூகத்தால் , மத ஒழுக்கம் என்ற போர்வையால் , மீடியாக்கள் ,பத்திரிக்கைகளால்,பெண் எப்போதும் ஒரு சகஜீவியாக ஏன் பார்க்க முடியவில்லை .இது எங்கோ மாற வேண்டிய விசயமல்ல .இனியாவது என் வாழ்க்கைத் துணையை,மகளை,உறவை,நட்பை,தோழியை,உடன் பணி புரிபவரை ,ஏன் எதிர்படும் சகலப் பெண்ணையும் பெண்ணாகப் பார்க்க முயற்சிக்கத் தொடங்கினால் அடுத்தத் தலைமுறையாவது அவளைச் சகஜீவியாகப் பாவிக்கத் தொடங்கும் விடியல் வரலாம்.! 

இப்படிக்கு , 
மேற்படி  பாமரப் புத்தியுள்ள கூட்டத்தி  ஒருவன்தான்  ஆனால் திருந்த நினைக்கும் ஒருவன் !   

புதன், 1 மார்ச், 2017

குழந்தையை அடித்து விட்டேன் . #Kahlil Gibran's - On Children




               இது என்னப்பா உன் குழந்தையை அடித்து விட்டால் அதற்கு எங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது ? இதுக்கு ஒரு பதிவா ? அப்படி வருத்தமா இருந்தா ஓரமா உட்கார்ந்து அழுதுட்டு வந்திற வேண்டியதுதானே ? எல்லாமே சரிதான் .ஆனால் இந்தப் பதிவு பாவ மன்னிப்புப் பெறுவதற்கு இல்லை .அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை .நிச்சயமாய் எனக்குத் தண்டனை வரத்தான் செய்யும். 

           விசயம் இங்கே அது இல்லை  .ஏன் இந்த உலகத்தில் அப்பா ஸ்தானம் மட்டும் ஏன் இத்தனை பெரிய அனாதையாகத் தனித்து விடப்பட்டு இருக்கிறது என்பதுதான் ?  .அப்பா என்றால் பொறுத்துப் போக வேண்டும் அதற்கு எல்லையே இல்லை .ஏனென்றால் ஆம்பிளை .இந்த வெற்றுப் பந்தாவுக்குள் எத்தனை எரிமலைகள் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது அவனவனுக்கு மட்டும் வெளிச்சம் . 

               சொந்த அம்மா.அப்பா ஒரு பக்கம் முன் வைக்கும் விமர்சனங்கள் ,மாமனார் , மாமியார் வந்து போகும் போது கொடுக்கும் அழுத்தம் ,பக்கத்து ,எதீர் வீட்டுக்காரர்கள் கொடுக்கும் சோதனைகள் , பணிபுரியும் இடத்தில் நிருவனத்திற்குத் தவறான முடிவெடுப்பவன் முதலாளிக்கு ஜிங்,ஜக் என்றால் அதை ரெட் கார்பெட் போட்டி வரவைக்க வேண்டிய அவலம் , கேசியரா இருந்தாக் கடன் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் மாதத்தில் பாதி நாட்கள் லேட்டா வந்தாலும் சம்பளத்தில் கை வைக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்க வைக்கும் சகப்யணிகளின் கோபம் ,எத்தனை முறை ஸ்டேடஸ் கொடுத்தாலும் வாங்கிச் சீட்டுக்கடியில் போட்டுவிட்டுத் தரவேயில்லை என்று சாதிக்கும் ஆடிக்கெடுக்கும் ஆடிட்டர் அலுவலச் சித்திரக் குப்தன்கள் , நம் உடல் மன நலனுக்கென்று போகும் அமைப்புகளில் தினமும் ஒழுங்காகப் போவதால் கொடுக்கப்படும் பொறுப்புகள் என்ற தண்டனை , 

                வழக்கமாய் மாதத்திற்கு இரண்டு முறை எடுக்கும் நூலகத்தில் தானாக முன் வந்து ,உங்களைப் பார்த்தால் நல்ல வாசிப்பாளாராகத் தெரிகிறது ரெஃபரன்ஸ் புத்தகம் தருகிறோம் பத்திரமாப் படிச்சுட்டுத் தாங்கன்னு நான்கு மாதம் கொடுத்திட்டு இருக்கீற வேலையெல்லாம் ஓரம் கட்டி மொத்த ஓஷோ முடிச்சிறலான்னு ஆர்வமா அடுத்துப் போதித்தர்மரை முடித்து விடலாம்ன்னு எடுத்துட்டுப் பதிவு செய்யக் கொடுத்தால் ,இல்லைங்க இப்பெல்லாம் ரெஃப்ரன்ஸ் புத்தகம் வெளியிலக் கொடுப்பதில்லைன்னு சட்டுன்னு மூஞ்சியிலப் புத்தகத்தை வீசியது போலப் பதில் சொல்லும் கறுப்பான அழகான நூலகி , எப்பவுமே சரியான மைலேஜில் அல்லது காலத்திற்குள் வண்டிய சர்வீஸ் விட்டாலும் சந்தோசமாக எடுத்துக் கொண்டு போய்த் திரும்பி வந்து என்னப்பாப் பிக்கப் எப்படி என்றால் சூப்பரா இருக்குன்னு அதீதமாகப் பொய் மெக்கானிக் கேட்ட பணம் கொடுத்து விட்டு அப்படியும் மீறிக் கேட்டால் நான்கு வருசமாச்சு சார் அப்படியேவா இருக்கும்ன்னு சலவைக்காரி ஜோக்கைக் கண்டுபிடித்த நக்கல். சாலையில் முன்னாடி ஆயிரம் பேர்த் தவறு செய்து நாம் விட்டுச் சென்றாலும் ஒரே ஒரு முறை ஆளே வராத சந்திரமண்டல வீதியில் இண்டிக்கேட்டர்ப் போட்டுத் திரும்பாதற்குக் குறுக்கே வந்து திட்டி விட்டுப் போகும் வெகு ஜனப் பிரதிநிதிகள் 


                   நீங்களே சொல்லுங்கள் இப்படி எத்தனையோ சோதனைகளில் அடித்துச் சமாளித்து விட்டு வெந்தும் வேகாமலும் விட்டு அல்லது சமாளித்து விட்டு வீட்டுக்குள் வந்தால் - இங்க  பாருங்க  இவன் எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துகிட்டு இருக்கான் , ஹோம் ஒர்க் பண்ணவேயில்லை, ப்ராஜெக்ட் போன வாரமே கொடுத்தாங்களாம் இன்னைக்கு வந்து சொல்றான்,ட்ரெஸ் எல்லாம் அழுக்காக்கிட்டு வந்து நிற்கிறான், லாஸ்ட் மிட்டெர்ம் பேப்பர்ஸ் எனக்குக் காட்டாம உங்கள்ட்டக் கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டான் , இனி செஸ் கிளாஸ் அனுப்ப வேணாம் லேட்லாவே பொறான் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை போல, என்னங்க ஹிந்திக்கு மாசம் நாழாயிரம் ரூஃபா ஃபீஸா ? கொள்ளையடிக்கிறாங்களே இப்பயெல்லாம் வீட்டுக் குப்பையெல்லாம் நம்மீது கொட்டி விட்டு, அம்மா பாரு அம்மா பாருன்னு சின்னக் குழந்தைய கொஞ்சப் போய்விடுகிறார் . 

             அப்போது நம் இயலாமை நமக்கு முன் குதித்து நக்கலாய்ச் சிரிக்கிறது . ஆயிரம் சமாளிப்புகளையும் ஓரம் கட்டி அவமானப்படுத்துகிறது. அப்போது கலீல்ஜீப்ரானின் உங்கள் குழந்தைகள்  உங்களுடையவர்கள் அல்லர் “ என்ற வரிகள்கள் உங்கள் ஞாபகத்தில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
     அதை விட “ அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி உங்களிடமிருந்து அல்ல உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர் “ என்பது தோணாமல் போகிற இயலாமை வந்து விடுகிறது .இயலாமைப் பெருமையான விசயமல்ல. அவமானம்தான் . 
       கடந்த இரண்டு வருடமாக இனிமேல் என் மகன் அடிக்கமாட்டேன்னு குருவின் மேல் சபதமெடுத்து இந்த இயலாமைக்கு அணைக்கட்டி வைத்திருந்தேன் .இது அவனுடைய அம்மாவுக்குக் கூடத் தெரியாது .ஆனால் இன்று அந்த அணை ஒரு பக்கம் உள்ளே உருண்டு கொண்டு இருந்த  இயலாமை என்ற பலவீனத்தின் முன்  இரையாகிப்போனது . 

          அன்று அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கு அக்கறையாய்க் கிளம்பினான் . அவனை அடித்த வலி எனக்குள் காட்டேரி வெளவாலைப் போல அவமானமாய்த் தழைகீலாய்த் தொங்கிக் கொண்டு இருந்தது . எனக்கு அதைப்பற்றிப் பேச கூட மனம் வரவில்லை .வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும் போது அவனே பேசினான் . 
ஏம்ப்பா ஸ்கூல்ல டீச்சர் அடிக்கிறாங்க , வீட்ல அம்மா இல்லைன்னா நீங்க அடிக்கிறீங்க எதுக்குப்பா ? என்றான்.
 தப்புதான் ஆனா அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்திடுதே என்றேன்
 என் அவமானத்தை மறைச்சுக்கிட்டு ! 
ஆனா ஏன் அடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுதா ? 

என்னோட நல்லதுக்குத்தான்னு எல்லாரும் சொல்றீங்க .ஆனா அப்புறம் ஏன் என்னை அடிக்கிறப்ப எல்லாரும் உங்க முகத்தை அப்படிப் பார்க்க முடியாத அளவுக்குக் கோபமா வச்சுக்கிறீங்க ? 

அவனுக்கு பதில் சொல்லவில்லை .அதற்குள் ஸ்கூல் போய் விட்டோம்.இன்னும் சொல்லப்போனால் என்னிடம் பதில் இல்லை. 
அப்போது மீண்டும் #கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ யின் விட்டுப்போன மீதி  வரிகள் மண்டைக்குள் ஓடியது ...



அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று  சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப் படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழைய முடியாத
எதிர்காலக் கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை  உங்களைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை.
உயிர் கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்,
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லாத பாதையின்  இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகள்
துரிதமாகவும் , தூரமாகவும்    செல்லும் வண்ணம்
உங்களை  வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்,
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல………..
நிலைத்து நிற்கும் வில்லையும் அவர் நேசிக்கிறார். 


எத்தனை படித்தாலும் , என்ன பேசினாலும் உணர்ச்சிகள் உணர்வுகளாக மாற்றத் தெரியாவிட்டால் ஆறாவது அறிவு அவமானம்தான் ! 

வியாழன், 16 பிப்ரவரி, 2017

கிருஷ்ண மோகினிகள் ! Transgender





விதியை எழுதினேன்..

கடவுளுக்கு மனைவியாகி
ஒரே நாளில் விதவையான
ஒரு பரிசோதனை கவிதை நான்..
என் தாலியின் வாழ்வு
ஒருநாள் மட்டும்.
அறுத்த என் தாலி
எங்கோ மரத்தில் கட்டப்பட்டு
மக்கிப்போய் மண்ணாகியிருக்கும்
அந்தத் தாலி
என் விதியை நிர்ணயிப்பதில்லை
என்பதை அறிந்துகொண்டேன்
எல்லோருக்கும் ஜாதகம்
இருக்கும்.
எனக்கு இல்லை
என் விதியை
நானே எழுதிக்கொள்ள
எனக்கிருக்கிறது
வலிமை மிக்க ஒரு மனம்
தெளிவு பெற்ற என் அறிவு.
அறுத்தெறிந்த தாலிக்கு
அர்த்தமில்லை
வெறும் மஞ்சள் கயிறு
அதில் ஒன்றுமில்லை
அந்த வேதனைச்சடங்கு
எனக்கு வேண்டாம்.
சடங்குகளை மூட்டைகட்டி
சாக்கடைக்குள் போட்டபின்
புன்னகை செய்யக் கற்றுக்கொண்டேன்
பூக்களோடு பேச கற்றுக்கொண்டேன்
காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
கவிதையாகவே
வாழவும் இன்று கற்றுக்கொண்டேன்..
 - திருநங்கை கல்கி.

       நேற்று அலுவலத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி  அலைபேசி இணைப்புகளைப் பற்றி புதிய ப்ளான்களைக் காட்டி  வழக்கம் போலப் பொய் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் . இதற்கிடையே எங்கள் அக்கவுண்ட் செக்சன் பெண் ஏதோ கேட்க வந்தவர் வரவேற்பு அறைப் பக்கம் பார்த்து விட்டு நான் அப்புறம் வரேன் என்று சிரித்துக்கொண்டே அவசரமாகக் கேபினை விட்டு நகர்ந்தார் இல்லை ஏறக்குறைய ஓடினார் .நிமிர்ந்து பார்த்தால் மூன்று திரு நங்கைகள் என் கேபினை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்... 

             கூத்தாண்டவர் திருவிழாவுக்கு வருடா வருடம் அன்பளிப்புக் கேட்டு வருவார்கள்.மொத்த அலுவலகமே செய்யும் வேலையை விட்டு விட்டு வந்த திருநங்கைகள் போகும் வரை என் பக்கம் கவனித்துக்கொண்டு இருப்பது வழக்கம் .வந்தவர்களில் ஒரு திருநங்கை வழக்கமாய் வருபவர் .வந்தவுடன் சூரிய நமஸ்காரத்தின் போது அனாதகச் சக்கரத்தில் வைத்துக் கைகூப்பி வணங்குவது போல மூவரும் வணங்கினார்கள். 

              இந்த முறை நிறையத் தரணும் .உங்க தொழில் ,குடும்பம் நல்லா இருக்கும்.மறுக்காமத் தீபாவளிக்குத் தருவது கணக்கா இல்லாம ரவுண்டா இருக்கட்டும் என்று வழக்கமாய் வருபவர் துவங்கினார். எவ்வளவு தந்தாலும் சில சமயம் மேலும் மேலும் கட்டாயப்படுத்துவார்கள் என்பது எனக்கு வழக்கமாகி விட்டது .இந்த மாதிரி டொனேசன் விசயங்கள் கம்பெனி ஒரு வழிகாட்டுதலைச் சொல்லிவிட்டு நகர்ந்து கொள்ளும் .தீபாவளிக்குத் தீயணைப்புத் துறைத் துவங்கி போஸ்ட்மேன் வரை ஒரு முன் தயாரிக்கப்பட்ட பட்டியலை நீட்டிப் அனுமதி பெற்று பணம் எடுத்து வைத்துக்கொள்வேன் .அந்தப் பட்டியலிலும் இவர்கள் வருவார்கள் .அது இல்லாமல் வருடாந்திரச் சித்திரை மாதம் பௌர்ணமிக்கு  கூத்தாண்டவர் கோயில் விழாவுக்கு முன் இப்படி வருவது வழக்கம்தான். 

                 கொடுத்த  நூறு ரூபாய் நோட்டுக்களை வந்தவர்களில் ஒருவர் வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு, அந்த நோட்டுக்களைப் பஸ் கண்டக்டர் நீள வாக்கில் மடிப்பது போல மடித்து, தன் உதடுகளுக்கிடையே ஒரு முறைக் கவ்வி எடுத்து, என் தலையைச் சுற்றி என்னிடமே கொடுத்து விட்டு இரண்டாயிரத்து ஐநூறு தரணும் என்றார் .போன முறை தந்ததை விட இந்த முறை அதிகம் இது சந்தோசமாக வாங்கிக்கங்க என்றேன் .அதில் எப்போது வரும் அந்தத் தி.ந தன் கழுத்தின் அணிந்திருந்த தாலியைக் காட்டி எங்கத் திருவிழாவுக்கு மட்டும்தான் அதிகம் செலவாகும் அதான் கேட்கிறோம் என்றார். 

           சித்திரா பௌர்ணமியன்றுக் கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு அங்கேயுள்ள கோயில் அர்ச்சகர்க் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலிக் கட்டிக்கொள்வதுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன் .இது புதிதாய் இருந்தது .எழுதுகிற மனது விசாரிக்கத் தூண்டியது .ஆனால் மொத்த அலுவலக மெர்சன்டைசர்களுக்கும் நிறைய வேலையிருந்தும் அதெல்லாம் கெடுத்துக்கொண்டு அவர்கள் பார்வையும் கவனமும் சிந்தாமல் சிதறாமல் இங்கேதான் இருந்தது.எனவே கேள்வியைத் தவிர்த்து விட்டு ஒரு வழியாய் கொடுத்த தொகையை பெற்றுச் செல்ல  சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டேன். 


        திண்டுக்கல்லில் இருக்கும் போது நான் வேலை பார்த்த ஷோரூமிற்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் ஒரு திருநங்கை வருவார் .அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் சாந்தி. என்னுடன் வேலை பார்ப்பவர் ஐந்தோ பத்தோ கொடுத்து விட்டு ,அவரை உட்காரவைத்து நிறையக் கேள்விகள் கேட்பார்.அதில் சில சமயம் சென்சார்போர்டே தப்பி ஓடும் அளவுக்கு ஆபாசக் கேள்விகள் அதிகமிருக்கும்.சாந்திக்கு சொந்த ஊர் நிலக்கோட்டைப் பக்கம் .அங்கு ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் வருமானம் போதாதற்கு இப்படி வீதி வீதியாய் வசூல் செய்வதாக என்னுடன் பணியாற்றும் சாந்தியிடம் கேள்வி கேட்பவர் சொல்லியிருக்கிறார். 

         சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமத்திருந்த போது என் சகோதரரும் நானும் திண்டுக்கம் கடைவீதிப் பக்கம் டூவீலரில் போய்க் கொண்டு இருந்த போது சாலையில் ஒரு பெண் கை காட்டி வழிமறித்து நிறுத்தியது.அப்பா எப்படி இருக்கிறார் என்று அக்கறையுடன் விசாரித்துச் சென்ற பின் அண்ணன் அது யாருன்னு உனக்குத் தெரியுதா ? அண்ணிகூடத் திண்டுக்கல் ஜி.ஹெச்சில் வேலைப் பார்ப்பதாகச் சொன்னார் இதுதான் தமிழகத்தில் முதல் திருநங்கை நர்ஸ் என்றார். 

               இங்குத் திருப்பூர் வந்த போது என்னுடன் பணியாற்றும் நண்பர் தனக்கு நடந்த சம்பவம் ஒன்று சொன்னார்.ஒரு முறை ஊருக்குப் போய்விட்டு இரவு ஒன்பது மணிக்குப் பஸ் நிலைய விட்டு வெளியே வரும்போது , ஒரு தி.ந  நணபரின் கையைப் பிடித்து அழைத்து இருக்கிறார்.நண்பர் அவர்கள் மேல் கண்ணாபின்னாவென்று மதிப்பு வைத்திருப்பவர். அந்தத் திரு நங்கையின் இன்னொரு கையைப் பற்றிக்கொண்டு  உங்கள் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று சட்டெனெக் கண்கலங்கி விட்டாராம்.கையைப் பற்றிய அந்தத் தி.ந உடனே அங்கிருந்த மற்ற திருநங்கைகளையும் அழைத்துப் பக்கத்திலிருந்த கோவிலுக்கு நண்பரை அழைத்துச் சென்று அவருக்கு ஆசீர்வாதம் பண்ணி நெற்றி நிறையக் குங்குமமிட்டு ,எங்க சாமி மாதிரி நீ என்ன உதவி வேணுமின்னாலும் எங்களக் கேளுன்னு சொல்லி  அனுப்பி வைத்தார்களாம் .

             சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வாழ்ந்த போது விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீத் தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனித் தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று வரப் பல முறை முயற்சி செய்து இருக்கிறேன் .ஆனால் அங்கிருந்த நண்பர்கள் தடுத்து விட்டார்கள் .இங்கும் சிலர் அவர்களை விடுவதில்லை .பெரிய கலாட்டாவாக இருக்கும்.நம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்றார்கள் .


பாலினப் போட்டி

          பெற்ற தாயின் கருவில் உருவாகும் ஆண் பிறப்பதா பெண் பிறக்க வேண்டுமா என்ற பாலினப் போட்டி பொறாமையின் விளைவால் ஏற்படும் மரபுப்பண்புகள் மாற்றமே இந்தத் திருநங்கையாக ஒரு ஆண் பிறக்கக் காரணம் என்கிறது Bill Hamilton ஆராய்ச்சி .உடல் மட்டும் ஆணாகவும் பாலின ஈர்ப்பில் ஒரு பெண் விரும்புவது போலவே இன்னொரு ஆணை விரும்புபவர்களைத் திருநங்கை என்கிறோம் .இது கருவிலேயே உருவாகும் ஒரு குறை.இதற்கு அவர்கள் பொறுப்பில்லை .ஆண் கருவில் Minor histocompatibility antigen ஜீனால் உருவாகும் புரதக்குறைபாட்டுக்கு எத்தனையோ காரணங்கள் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளுக்கு விடைகிடைக்காத பெரிய முடிச்சாகப் போய்க் கொண்டு இருக்கிறது . Anti-Müllerian hormone கையில்தான் கருவில் ஆண் உறுப்பு வளர்வதாற்கான சாவி இருக்கிறது.இந்த ஹார்மோன் சோரம் போனால் பெண்ணாகப் பிறக்கக் கருப்பையும் ஃபோலோப்பியன் ட்யூப்பின் உருவாகி விடுகிறது.வீட்டில் மட்டுமல்ல கருவில் கூட ஆணுக்கு மதிப்பு அளந்துதான் வைக்கப்பட்டுள்ளது .பெண்தான் எப்போதும் மேல் என்பதே இயற்கைச் சட்டம் ! 

        சரி நம்ம காபாரதத்தில் சகல லட்சணமும் பொருந்தி ஆணாக அர்ஜுனனுக்கும் - இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி உலுப்பிக்கும் பிறந்ததாக அரவான் பேசப்படுகிறான்.அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுள். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். நம்மைப் பிடித்தாட்டும் நவக் கோள்களில் சுபகிரக வரிசையில் புதனும், அசுபக் கிரகத்தில் சனியும் ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம் எனப்படுகிறது (சனி மட்டும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும்) இத்தனை அந்தஸ்த்துப் பெற்ற திருநங்கைகளை மணிரத்தினம் படத்தில் மட்டுமே மதிப்பாகப் பார்க்க முடிகிறது .மற்ற படங்கள் அவர்களைக் கேளியாகவும் அருவருப்பாகவுமே காட்டி இன்னும் கீழ் நிலைக்குக் கொண்டு போய்கொண்டு இருக்கிறது . 

             நமது தேசம் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று அறிவித்து ‘இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் வழங்கும் பாதுகாப்பும் உரிமையும் மற்றவர்களைப் போல அவர்களுக்கும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்துள்ளார்கள். தீர்ப்பில் திருநங்கைகளின் வரலாற்றுச் சான்று, இன்றைய நிலை, Universal Declaration of Human Rights (UDHR) கோட்பாடுகள் சர்வதேச அளவில் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட Yogyakarta கோட்பாடுகள் போன்ற வற்றினைச் சான்று கூறி ஒரு சிறப்புமிக்கக் காலம் போற்றும் தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். 


               எழுத்தாளராகப் பிரியாபாபு , நாட்டியத் தாரகையாக நர்த்தகி நடராஜன் , சமூக ஆர்வலர் பாரதிகண்ணம்மா , இன்னும் அரசியல்  ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பலர் இருந்தும் திருநங்கைகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை , அனுபவம் ,முகம் சுளிப்பு ,அருவருப்பு இன்னும் என் நிறைய இருக்கிறது .ஆண்களும் , பெண்களும் ஒரு சேர ஒதுக்கும் போதும் வெவ்வேறு ஊர்களில் விதவிதமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் போது அவர்களின் சமூகத்தின் மிதானக் கோபம் இன்னும் வலுக்கிறது.எந்தப் பாலினத்திலும் சேராத நாங்கள் விரும்பியா பிறந்தோம் என்ற குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .சமீபத்தில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ”சதையை மீறி” என்ற குறும்படத்தில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் மூலம் சந்தோஷ் நாராயணனின் இசையில், 

''அவர்கள் பாலை அவர்கள் சொல்ல 
சர்க்கரை மட்டும் கலப்போம் 
நாம் மனிதரே!'' 

இந்தப் பாடல் கேட்கும்போது , இன்னும் நாம் பயணிக்க வேண்டிய மனிதாபிமானப் படிக்கட்டுகளைக் காண்பிக்கிறதா ? 

திங்கள், 13 பிப்ரவரி, 2017

”உங்கள் வீட்டின் இன்பம் - வானொலி “ World Radio Day



                           ”உங்கள் வீட்டின் இன்பம்” என்று தன்னுடைய அழகிய கைகளில் ஒரு மர்ஃபி வானொலிப் பெட்டியை ஏந்திக்கொண்டு நடிகை ஷர்மிளா தாகூர் தன்னுடைய 23 வயதில் வந்து நின்றால் எப்படி இருந்திருக்கும் ? அட உங்களுக்கு அவரை ஞாபகம் இல்லையா  ? பின்னாளில் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிக் கான் பட்டோடி (Mansoor Ali Khan Pataudi ) வீட்டில் விளக்கேற்றியவர்தான் அவர் . 1959–1984 ஆண்டுகளில் வாழ்ந்த அன்றைய இளம் வயதுடையவர்களின் ( கறுப்பு வெள்ளை ) சுவப்பனத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு  இருந்த சுந்தர நாயகி இப்படிச் சொல்லி ஏந்தி எதிரே நின்றால் அந்த வானொலிப் பெட்டியை யாராவது வாங்காமல் இருந்திருப்பார்களா அப்போது ? தெரியவில்லை .ஆனால் எங்கள் வீட்டில் அப்பா வாங்கிருந்தார் 1984 வரை எங்கள் உலகத்தின் ஜன்னல் அந்தக் கண்காணாத ஒலி அலைகளை உள்வாங்கிச் சுகமாகத் தந்த மர்ஃபி செல்லக் குழந்தைதான் . 

                இன்றைய டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் எனப் பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்ட தொடர்பு வாழ்க்கையை மறந்து (முடிந்தால்) சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள் .இது ஏதுமற்ற வானொலித் தொடர்பு மூலம் மட்டுமே உங்களுக்கான உலகத்துடனானத் தொடர்பை நிர்ணயித்துகொண்ட காலம் அது .அதற்காகக் கற்காலம் என்று நினைத்து விட வேண்டாம் .அதிகமில்லை 1985 முன்னால் பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த வானொலிப் பெட்டியின் மகத்துவம் தெரியும் .செய்திகள் ,பாடல்கள் , ஒலிச்சித்திரம் ,சேவைச் செய்திகள் என்று மட்டுமே கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள் புரிந்து வைத்து இருந்த காலம் .


                 அப்போது இலங்கை வானொலிக்கு இருந்த மவுசு இன்று இத்தனை பண்பலை வானொலிகள் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்தாலும் முன்னால் நிற்க முடியாது .அவ்வளவுதூரம் நிகழ்ச்சிகளை அழகாகச் சுவாரசியமாக்கி வைத்து இருந்தார்கள் .ஒலிச்சித்திரத்தில் பாரதி ராஜாவின் 1979 களில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடிகர் விஜயனின் ” மெட்ராஸ் கேர்ள் ‘ என்ற வார்த்தை இப்போது கூடச் சில சமயம் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. 

                அதிலும் விவசாயிகளின் உற்றத்தோழன் என்று வானொலிப் பெட்டியைச் சொன்னால் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஒத்துக்கொள்வார்கள் .வயல்களும் வரப்புகளும் வானொலி ஓசையை என்றுமே மறக்காது.சில மரங்களில் அடுத்த வேளை உணவு பித்தளைப் போசியில் (தூக்கு வாலியில்) தொங்கிக்கொண்டு இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு வானொலிப் பெட்டிக் காற்றிக் கையசைப்போடு பாடிக்கொண்டு .தூக்கனாங் குருவிகளாக அசைந்து கொண்டு இருக்கும். 

                   
            நாங்கள் திண்டுக்கல் நகரப்பகுதிக்குள் குடியேறிய பிறகு எங்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை டிவி ஆக்கிரமித்தது திருமதி இந்திராகாந்தி அவர்களின் இறப்புக்குப் (1984 ) பிறகுதான். அதுவரை வீட்டில் செல்லக் குழந்தை மர்ஃபி வீட்டின் பரணுக்குள் தஞ்சம் புகுந்தது .ஆனாலும் அப்போது ஒரு தீபாவளியில் அதிக விலையில் வாங்கிய ஃபிலிப்ஸ் பவர் ஹவுசில் ரேடியோவுக்குள் ரேடியோ  இருந்தது .ஆனால் நான் அதிகம் விரும்பியது நண்பர் சுகுமார் வீட்டில் இருக்கும் NATIONAL PANASONIC RADYO TEYP டூ இன் ஒன் மட்டுமே ரொம்பப் பிடிக்கும் .

               அந்த வானொலி வாசனை சில வருடங்களில் வேறு ஒரு அவதாரம் எடுத்தது .அது உலகில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆசைப் பிறந்தது . இங்கிலாந்தின் பிபிசித் தமிலோசை , சீனப் பீஜிஸ் வானொலி , அப்போதைய சோவியத் யூனியனாக இருந்த மாஸ்கோ வானொலி , வத்திக்கான் வானொலி , பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பட்டியல் நீண்டுகொண்டே போனது ..ஒரு கட்டத்தில் வானொலி மன்றங்களுக்கு நல்ல மரியாதை இருந்தது .உடனே “உலகச் சமாதானச் சகோதரர்கள் வானொலி மன்றம் “ என்று தொடங்கிப் பதிவு செய்து கொண்டோம் . சுழற்சி முறையில் தலைவர் பொருளார்ச் செயலாளர்த் தேர்வு செய்தோம் . வெளிநாட்டு வானொலியில் நல்ல மரியாதைக் கொடுத்தார்கள் . இன்னும் கூடச் சீனா வானொலி ஒரு வருடத்தில் அதிகக் கடிதம் எழுதியவர்களைச் சினாவுக்குப் பத்து நாள் இலவசச் சுற்றுப்பயணம் அழைத்துக் கௌரவப் படுத்துகிறது .எங்கள் நோக்கம் தமிழ் உலகெங்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்ததை அவர்கள் ரசித்தார்கள் . 

          முக்கியமாக அப்போது ஒரு அந்தத் தொடர்புகள் மிகப்பெரிய பந்தாவை ஏற்படுத்தியது என்று கூடச் சொல்லாம் .உங்களுக்கு உள்ளூரில் ஒரு சுப்பனோ ,குப்பனோ கூடக் கடிதம் அனுப்ப ஆள் இல்லாத போது, ரஷ்யா,சீனா, ஃபிலிப்பைன்ஸ் என்று வெளிநாடுகளிலிருந்து கடிதம் வந்தால் எப்படி இருக்கும் ? .அந்தக் கடிதங்கள் நண்பர்களின் எல்லோர் வீடுகளுக்கும் எடுத்துச் சென்று பெருமையாக வாசிக்கக் கொடுப்பார்கள் .சில விமர்சனக் கட்டுரைப் போட்டிகளில் ஆறுதல் வெற்றிப் பெற்றதற்குக் கூடப் பெரிய மரியாதைக் கிடைத்தது .நண்பர்களின் தங்கைகள் எங்களை ஆச்சர்யத்துடன் இதைப்பற்றி விசாரிப்பார்கள் . அவர்கள் கட்டுரைப் போட்டிகளுக்கு எங்களின் இலவச ஆலோசனைகள்தான் முன் நிற்கும் .அந்தக் கடிதத்தின் மேலுறைகள் மீது ஒட்டப்பட்டு வரும் ஸ்டாம்ப்கள் மிகச் சாதுர்யமாகப் பிரித்து எடுத்துச் சேகரித்து வைப்போம் . 


         பல மறக்க முடியாத சம்பவங்களை வானொலி கேட்கும் பழக்கம் வரப்பிரதமாக்கியது . மதுரையில் நடந்த பிபிசித் தமிலோசைக் கூட்டத்தில் அதுவரை எங்கள் முகம் கூடப் பார்க்காதவர் செய்தி ஒருங்கிணைப்பாளர் சங்கர் அண்ணா எங்களை வாரி அணைத்துக்கொண்டது இன்னும் நினைவிருக்கிறது .சேலத்தில் நடந்த பீஜிங் வானொலியின் கூட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட் தோள்பைகளும் , மென்மையான கைக்குட்டைகளும் இன்னும் ஞாபகத்திலும் பீரோக்களின் மூலையிலும் ஒளிந்திருக்கிறது .அப்போது இந்தியாடுடே தமிழ் இரண்டாவது புத்தத்தில்  - ’ ஜோல்னா பைகள் ‘  அணிபவர்களுக்கான மனோதத்துவம் தனித்துவம் பற்றி ஒரு கட்டுரை வந்து எங்களை இன்னும் உசுப்பேற்றியது. இன்னும் கூட ஜோல்னா பைகள் கற்றறிந்தவர்கள் அடையாளமாகவும் பேசப்படுகிறது . 

           விமர்சனங்கள் எழுதுவதன் மூலம் எழுத்து , வாசிப்பு , புதிய நட்புக்கள் கிடைத்தது. எழுத்தின் வளமை போதாத போது வாசிப்பு வலுத்தது . வானொலிகள் எங்களுக்கு எங்கள் வீட்டில் ,சுற்று வட்டத்தில் புதிய அழகையும் பெயரையும் கொடுத்தது . தபால் காரருக்கு அப்பா தீபாவளிப் பொங்களுக்கு இனாம் கூட்டினார் .எங்கள் தெருவின் மிக நீண்ட முகவரி எங்களின் சர்வதேசத் தொடர்பினால் சில வரிகளாகச் சுருக்கப்பட்டது .இதில் இன்னும் ஒரு சட்டச் சிக்கலும் ஏற்பட்டது.எங்கள் வெளிநாட்டுக் கடிதக் கவர்கள் ஓட்டையிடப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது . பயமில்லாத வயது என்பதால் நேரில் தலமைத் தபால் நிலையம் சென்று புகார் கடிதம் கொடுத்தோம்.சிலப் பாதுகாப்புக் காரணம் என்று பதில் வந்தது.அதற்குப் பிறகு அதெல்லாம் ராணுவத்தில் வழங்கப்படும் பதக்கங்கள் போலப் பெரிய விசயமாகப்பட்டது . 


                 2001 ல் திருப்பூருக்கு இடம் பெயரும் வரை எல்லாமே நன்றாகத்தான் போனது . எனக்குப் பிறகு என் உள்ளூர் நண்பர்கள் அதைத் தொடரவில்லை அதற்குப் பிறகும் சில வருடங்கள் நிகழ்ச்சிப் பட்டியல் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தது திண்டுக்கல் போகும் போதெல்லாம் எடுத்துப் பார்துக்கொள்வேன் .ஒரு பக்கம் வருத்தமாக இருக்கும் .

 நிறைய மறக்காத வரங்களை தந்த  அந்த வானொலி வாழ்கையை யாரிடமாவது சொல்லப் ஆசைப்பட்டு வெகுநாள் பதிவாக மலர ஆசைப்பட்டு இருந்தது இன்று உலக வானொலி நாள் . 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டுத் தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதைக் கண்டு பிடித்து உலகுக்கு அர்பணித்த 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனியை உங்கள் சார்பாகவும் இன்றும் வானொலியை ரசிக்கும் மக்களின் சார்பாகவும் அதன் மூலம் சினிமாவுக்குக்குள் காலெடுத்து வைக்கும் RJ க்கள் அனைவரின் சார்பாகவும் வணங்கிக்கொள்கிறேன் .

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

புத்த(க) தரிசனம் . திருப்பூர் 14 ஆவது புத்தகத் திருவிழா . Book fare



                        ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின் போதும் ஒவ்வொரு முறையும் ஒரே இடத்தில் இத்தனை நூல்கள் இன்னும் வாசிக்க இருக்கிறது என்று பார்க்கும் போதுதான் நம் ஆயுள் ரேகை மேலுள்ள நீட்சியின் அவசியம் புரிகிறது .நம் இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. ஒருவேளை புத்தர் உயிரோடு இருந்து, புத்தகம் வாசிப்பதற்காக இன்னும் வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்டு இருந்தால் அவர் மறுத்து இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! ஆமாம் அங்கு வாசிக்காமல் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் நமக்காகவே காத்திருக்கும் ஒரு புத்தன்தானே ? 

                           புத்தகத் திருவிழா இந்த முறைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது . 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தும் ஏனோ அதிகமாக விற்கும் புத்தகங்கள் மட்டும் போதும் என்ற கணக்குடன் செயல் பட்டு இருப்பதாகவே தோணுகிறது. சென்ற புத்தகத் திருவிழாவில் ஒன்றரைக்கோடிக்கு விற்பனை நடந்து இருப்பதாகச் சொன்னார்கள் .அதனாலோ என்னவோ எங்கு பார்த்தாலும் மிக அதிகமாக ஏற்கனவே விற்றப் புத்தகங்கள் மட்டுமே இருக்கிறது .வியாபாரம் மட்டுமே முதல் நோக்கம் என்பது தவறில்லை . ஆனால் மக்கள் ரசனைய நுட்பமாக அறிந்து செயல்படுவது மிக முக்கியமாகப் படுகிறது .பல ஸ்டால்களிலும் ஒரே மாதிரிக் கல்கி , பாலகுமாரன் ,சுஜாதா,ஜெயமோகன், இவர்களையே பரப்பி வைத்து இருப்பது அடுத்தத் தலைமுறை சிந்தனைக்கு வழிகாட்டுவதாகத் தோணவில்லை .மேலும் இது விஞ்ஞான வழியாகாவே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள ஆசைப்படும் காலம் .அதைப்பற்றிய படைப்புகள் இன்னும் முன்னிறுத்தப்படவேண்டும்.

                           ஒருவேளை புத்தக வெளியீட்டாளர்கள், திருப்பூர் மக்களின் ரசனை இப்படித்தான் என்ற ஒரு தவறான புரிதலில் இருக்கிறார்களா ? இது தொழில் நகரம் இங்குக் கௌரவத்திற்கு மட்டுமே புத்தகம் வாங்க வருவார்கள் என்று யோசித்து வைத்திருக்கிறார்களா ? தெரியவில்லை. சென்ற முறையை விட இந்த முறைப் புத்தகத்திருவிழாவின் உற்சாகத்தையும் வித்தியாசத்தையும் வெளிப்படுத்தும் ஃப்ளக்ஸ் விளம்பரங்கள் நகரெங்கும் இருந்தது .சென்று வர வசதியாய் விசாலமான இடத்தேர்வு எனப் பிரமிக்க வைக்கும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் - பாரதி புத்தகாலயம் அமைப்பினர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து இந்த ஒரே மாதிரிப் புத்தகக் குவியல்களைத் தவிர்க்க ஆலோசனை வழங்குவதும் கண்கானிப்பதும் நல்லது . நம் ஊருக்கு வந்து வந்து போகும் விற்பனையாளர்களும் - மக்களும் ஒரு சேரப் பயன் பெறும் போது அடுத்த முறை எப்போது நடக்கும் என்ற ஆவல் கூடும் . 

             புத்தகத் திருவிழாவில் எப்போதுமே எனக்கு இருக்கும் சங்கடம் .ஒரு ஸ்டாலில் புத்தகம் வாங்குவோம் .பில்லும் தருவார்கள் . ஆனால் அடுத்த ஸ்டாலில் நுழையும் போது ஏற்கனவே வைத்திருக்கும் புத்தகத்தை வைத்துக்கொள்ள ஒரு தர்மசங்கடம் நிலவும் .ஒருவேளை இங்கு எடுத்ததோ என்று வாங்கிப் பார்த்தால் என்ன செய்வது என்ற கூச்சம் தொற்றிக்கொள்ளும் .ஆனால் அதே சமயம் பார்க்கட்டும் காசு கொடுத்துதான் வாங்கி இருக்கிறோம் என்ற சவால் மனசில் வந்து போனாலும் அது ஒரு அழையா விருந்தாளியாகக் கூடவே மனசுக்குள் வந்து விடுகிறது .பாவம் விற்பனையாளர் எத்தனைபேரைத்தான் கவனிப்பார் ? இதிலும் சில உள்ளே நுழையும் இடத்திற்கு எதிர்பக்கம் சிலர் நுழைவார்கள் . 


                                    ஆனால் அந்தச் சங்கடத்தை நம் பெரியார் புத்தக நிலையம் தீர்த்து வைத்தது .சார் இந்தாங்க இந்தப் பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் அளித்தார் .தமிழர்களுக்குத் தந்தை பெரியார் இன்னும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார் . இதையே ஏன் உள்ளே நுழையும் போதே நம் புத்தகத் திருவிழா நடத்தும் அமைப்புத் தங்கள் விளம்பரத்துடன் இதே போல எதாவது குறைந்த விலையில் கொடுக்கலாமே ? நிச்சயமாய் வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அந்தப் பையை வாங்க மாட்டார்கள் .ஒரு வகையில் அது வந்து போனவர்கள் சென்ற பின்னும் அதை ஞாபகப்படுத்துமே ? 

                      நம் கோவில்கள் இல்லாத ஊர்களில் குடியிர்க்கலாகாது என்று சொல்வதைப் போல நல்ல விசயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும் . புத்தகத் தரிசனமும் ஒரு நல்ல விசயம்தானே ? 


திங்கள், 6 பிப்ரவரி, 2017

திருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை ! 14th Book fare Tirupur


                     நண்பர் ஆதி ஒரு முறை நெல்லை கண்ணன் அவர்களிடம் முகநூலில் தமிழ் சம்பந்தமாக ஏதோ ஒரு விளக்கம் கேட்டு இருக்கிறார் .உங்கள் பெயர் முகநூலில் ஆங்கிலத்தில் இருக்கிறது மாற்றி விட்டு வாருங்கள் என்று பதிலளித்து இருந்தார் .நண்பர் மாற்றிய பிறகே பதிலும் தந்திருக்கிறார்.அப்படிபட்ட மனிதரை முதல் முறையாக இடம் மாற்றப்பட்ட காங்கயம் சாலை பத்மினிக் கார்டனில் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் , பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும்... 14வது திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் அவர் பேச்சைக் கேட்டேன் . 

முதலில் ’இடி’ இடித்தது ! 

தமிழனுக்குத் திமிழ் பிடிக்கும் என்பதைக் காலை வாடிவாசல் ஜல்லிக்கட்டு நேரலைப் பார்த்தபோது உணர்ந்தேன் அதே மாலைத் திருக் கண்ணன் அவர்களின் அதிரும் பேச்சால் தமிழ்ப் படித்தால் திமிரும் பிடிக்கும் எனதை நேரடியாக உணர்ந்தோம்.அவர் பேசத்தொடங்கிய முதல் நிமிடத்தில் அவரருகே மேடையில் அமர்ந்து இருந்த புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் மேடையிலிருந்த படிக் கீழே வருபவர்களை வணக்கம் சொல்லி வரவேற்கச் சட்டெனெ அவர் பக்கம் திரும்பி, எனக்கு இடயூறாய் இருக்கிறது இனி அப்படிச் செய்யாதீர்கள் என்று கண்டித்தார்.அடுத்த சில வினாடிகளில் தலைவர் ஏதோ பேச வேண்டாம் என்பது போல மெல்லச் சொல்ல, மனிதன் இடியெனெ வெகுண்டெழுந்தார் .நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் இப்படி ஏதாவது இடையூறு செய்தால் நான் இத்தோடு பேச்சை முடித்துக்கொள்கிறேன் பொங்கிவிட்டார் . வின்னில் ஜெக ஜோதியாய்க் கிளம்பிய ராக்கெட் பாதை நழுவிக் கடலில் விழப் பாய்வது போலச் சில நிமிடம் மொத்த மக்கள் கூட்டமும் திக் திக்கென்று ஸ்தம்பித்து நின்றது  . பிறகு சமாதானப்படுத்திய பிறகே மீண்டும் நெல்லை ராக்கெட் தன் சுற்றுப் பாதையைத் தொட்டது ! 

மின்னலெனெச் சிலிர்த்தார் ! 

கொடுத்த தலைப்புக்குத் தனது வாசிப்பு அறிவையும் , மேடை அனுபவங்களால் அலங்கரித்த அறிஞர்கள் பேச்சை மட்டுமே இதுவரை கேட்டு இருந்த எனக்கு இப்படி ஆயிரம் வாலாவாக அரசியல் கட்சிகள் தொடங்கி ,அதிகாரிகள் ,ஆட்சியாளார்கள் நடிகர்கள் ,வியாபாரிகள் ,கோவில் சர்ச் ,மசூதி ,மக்கள் ,குடும்பம்,குழந்தைகள் என்று அவரவர் கடமைகளில் விட்டு விலகும் ஒருவரையும் விடாமல் தன் பேச்சால் பொருத்திப் வீசினார். பெரியாரைப் பார்த்துதான் எப்படி மோசடியில்லாத பக்தி என்று அறிந்து கொண்டேன் .வழிபாடுகளின் குறைகளை அநீதிகளையும் நானும் எதிர்க்கிறேன் என்றார் . 

தான் வளர்ந்தது காமராசர் அய்யா தொடங்கி ,கக்கன் ஜி, வரை பல நேர்மையானவர்களிடம் .இன்று இருக்கும் அரசியல் களவாணிப்பசங்களுக்கும் இது தெரியும்.எனக்கு இந்திராஜி ,ராஜிவ் காந்தி, ஜெயலலிதா அம்மையார்வரை எனக்குப் பழக்கம் இருந்தது .எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன் ,ஏனென்றால் நான் தமிழ்ப் படித்தவன் அறிவு மட்டுமல்ல ஒழுக்கம் இருக்கிறது .ஒழுக்கம் உள்ளவன் எவனுக்கும் பயப்பட மாட்டனுவ என்று தன்னுடைய எல்லாப் பேச்சிலும் எல்லைக் கோட்டிய தாண்டி விழும் பந்து போலச் சளைக்காமல் தூக்கியடித்தார். 


மக்களை மழையெனெக் குளிர்வித்தார். 

நெல்லைத் தமிழில் அவரின் பேச்சை மிகவும் ரசித்தார்கள் .எல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தன்னுடைய வாழ்வின் அனுபவங்களில் எடுத்து முன்வைத்தார்.முக்கியமாகக் காமராஜர் என்ற மாமனிதனின் வாழ்வில் அவரோடு பயணித்த அனுபவங்கள் கேட்க்கும் போது மிகச் சிலிர்த்துப் போக வைத்தார்.இத்தனைப் பெரிய அரசியல் ஒழுக்கசீலர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற ஆச்சர்யத்தை விதைத்தார்.முக்கியமாகச் சாதிய வெறியை விட்டொழிக்கவும் , அன்புதான் எல்லாம் என்ற போது அந்தத் தமிழ் அறிஞன் மனது எந்த மேடைப் பாசாங்கு வார்த்தைக்களற்று உதிர்த்தப் போது , பலரின் மனதில் இதுவரை வளராது நின்ற விதைகள் முளைக்கத் தொடங்கச் செய்தார் .இத்தனை காலம் இந்த மனிதன் குரலைக் கேட்காமல் இருந்து விட்டோமே என்று என்னைப்போலப் பலரையும் வருந்தச் செய்துவிட்டார் அந்த மனிதர் . 

தன் தந்தையைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் அவர் மேல் இந்த மனிதனின் பாசம் அவர் உயரத்தை விடப் பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது .சில இடங்களின் தந்தை பற்றிப் பேசும்போது கலங்கித்தவித்தார் .இப்படி ஒரு கர்ஜனைப் பேச்சுக்குப் பின்னால் அவரின் இளகிய மனம் யாருமறியாததாக இருந்தது ... 

இனி அவர் எங்குப் பேசினாலும் என்னைப்போல எல்லோரும் ஓடிச்சென்று சென்று அவர் நெல்லைத் தமிழ்க் கேட்போம் .